மறுமலர்ச்சி!
பவள சங்கரி
1904 ஆம் ஆண்டின் இறுதியில் சகோதரி நிவேதிதா பெண்கள் கல்வி நலனில் பெரும் அக்கறை கொண்டு தனிப்பட்ட கல்விக்கூடங்கள் அமைத்து சேவை புரிந்து கொண்டிருந்தபோது,, தன்னுடைய Web of Indian Life’ என்ற நூலில் கூறியுள்ளது போன்று, வீட்டில் சமையல் வேலையும் மற்ற வீட்டு வேலைகளும் முடிந்த பின்பு பெண்கள் கிசு கிசுச் செய்திகளை பத்திரமாகப் பகிர்ந்து கொண்டும், சுலோகங்கள் சொல்லிக்கொண்டும் பொழுதைக் கழிக்கிறார்கள் என்ற நிலை மாறி, இன்று வசதியான வீட்டுப் பெண்கள்கூட வேலை இல்லாமல் பொழுதைக் கழிப்பது சுயமரியாதையை பாதித்துவிடும் என்பதைப் புரிந்துகொண்டார்கள். போட்டியில் பங்கு பெறத் தயாராக இருக்கும் பெண்களுக்கு இன்று பல பயிற்சிக் கூடங்களும், பலவிதமான கல்வித் திட்டங்களும், அதற்குரிய வேலை வாய்ப்புகளும் பல்கிப் பெருகியுள்ளது. இன்று பெண் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியியலாளர்கள், அலுவலக நிர்வாகிகள், கணக்கர்கள், இசைக்கலைஞர்கள், நடிகைகள், உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், இவையனைத்திற்கும் மேலாக நாட்டின் குடியரசுத் தலைவராகவும் தம் உழைப்பால் உயர்ந்து சாதித்துக் கொண்டிருப்பவர்கள் பெரும் அளவில் இருக்கத்தான் செய்கிறார்கள். வெளிநாடுகளில் சென்று பயிற்சி பெற்று வரவும், பணிபுரியச் செல்பவர்களும் அதிகரித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் மற்றும் வங்காளத்திலிருந்து ஆயிரக்கணக்கானப் பெண்கள் , வசதியான மத்திய தர குடும்பத்தின் விதவைகள், வருமானம் குறைவாக இருப்பவரின் மனைவிகள் என பலர், கல்வியறிவில் மிகவும் குறைந்திருந்தாலும், உதவியாளர்களாகவும், வீட்டுப் பணிப் பெண்களாகவும், கட்டிடத் தொழிலாளர்கள், கைவினைப் பொருட்கள் தயாரித்து விற்பவர்கள் என ஏதோவொரு வேலை செய்யக் கிளம்பிவிட்டனர். கூலித்தொழிலாளர்கள், சுரங்கத்தில் பணிபுரிபவர்கள், தொழிற்சாலைகள் மற்றும் வயல்களில் பணிபுரிபவர்கள் என கீழ்மட்ட தொழிலாளர்கள் எந்த பழைய பகட்டையும் காப்பாற்றிக் கொள்ளும் தேவையில்லாமல் வேலை கிடைத்தால் போதும் என்ற நிலையில் மிகவும் சிரமப்பட்டே வாழ்க்கையை நடத்துகிறார்கள். இதுவே இன்றைய மத்திய தர பெண்களின் நிலையாக உள்ளது.
இது நிதர்சனமான உண்மை. மனமிருந்தால், மாற்றியமைக்க மார்க்கமுண்டு.