-மீ.விசுவநாதன்

ஓடியோடிப் போகின்றேன் – உயிர்
ஓட்டப் பந்தய வீதியிலே!
ஆடியாடிக் களிக்கின்றேன் – அதில்
ஆசை பொங்கிட வேர்க்கின்றேன்!

வாசலிலே கோலத்தில் – கலை
வாசம் செய்வதை ரசிக்கின்றேன்!
நேசமிகு சேய்களுடன் – தினம்
நெகிழ்ந்து கரைவதை உணர்கின்றேன்!

கற்றகல்வி கர்வமெலாம் – சல்லிக்
காசுக் கீடிலை அறிகின்றேன்!
உற்றதுணை சுற்றமுடன் – மனம்
ஒத்து வாழ்ந்திட நினைக்கின்றேன்!

ஆடுமாடு பறவையுடன் – என்
ஆத்ம ஈர்ப்பிலே பழகுகிறேன்!
கூடுவிட்டுக் கூடுபாய்ந்து – கவி
கொஞ்சிக் கூத்திட உருகுகிறேன்!

நல்லிசையைக் கேட்டபடி – செவி
நரம்பு ஆழ்ந்திட விரும்புகிறேன்!
மல்லிகைப்பூ வாசமென – நான்
மற்றவர் மகிழ்ந்திட அரும்புகிறேன்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வாக்குமூலம்

  1. ஒரு பக்குவமடைந்த இதயத்தின் நேர்மையான வாக்குமூலம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *