-மேகலா இராமமூர்த்தி

அடடா! இந்த மழலையின் மகிழ்ச்சிக்குளியலைக் காணக் கண்கோடி வேண்டாமோ? குட்டிநிலவின் பட்டுமேனியை ஆசையோடு தொட்டுவிளையாடுகின்றன பொங்கிவரும் நீரலைகள்!

சின்னஞ்சிறு கைப்பேசியில் கைதுசெய்துவிடமுடியுமா இந்த வண்ணநிலவின் வடிவழகை?

baby's bath

 

 

 

 

 

 

 

 

அழகோவியத்தைத் தன் படக்கருவியில் அள்ளிவந்திருக்கும் புகைப்படக்கலைஞர் திரு. பிரேம்நாத் திருமலைசாமிக்கும், இப்படத்தைக் கவிதைப்போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கும் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் எம் நன்றி!

இனி கவிதைகளுக்குச் செல்வோம்!

***

துள்ளிவரும் வெள்ளிநீரில் வெண்தாமரையாய் மின்னும் இம்மழலையின் அழகைக் கண்டு இரசிக்கவா? இல்லை அள்ளி எடுக்கவா? என்று ஆசையாய்க்  கேட்கின்றார் திரு. ஹரிஹரன்.

வைரமேனியின் மேல் வைரத் துளிகள் பாய,
மொட்டு சாய்வது போல் தலைசாய ,
வெண்தாமரையாய் உம்மேனி நீரினுள் தெரிய ,
பூங்காற்றும் உம்அழகுடன் போட்டியிட விச,
அழகே,
இயற்கையில் இயற்கை நீராடுகிறது.
உன்னை,
நீர்க்குமிழிகள் சுடுமோ? குளிருமோ?
நீரின் வேகம் உம்மை அச்சுறுத்துமோ?
என் நெஞ்சம் தேடுகிறது.
உம் அழகைக் கண்டு ரசிக்கவா?
உன் ஆனந்தம் கண்டு நெகிழவா?
உம்  மேனியை அள்ளி எடுக்கவா?
சொல்லடா என் செல்வமே!, சொல் ,

உன் மொழி எனக்குத் தெரியாது ,
என் மொழி உனக்குத் தெரியாது .
அதனாலே,
உன் உயிரை நானே படமெடுக்கிறேனடா!…

***

கொட்டும்நீரில் குதித்துவிளையாடும் பட்டுத்தளிரின் பரவச அனுபவத்தைக் கவிதையாக்கியிருக்கின்றார் திரு. மதிபாலன். 

கொட்டிடும் நீரில் குதித்து  விளையாடும் 
பட்டுத் தளிரே பரவசமோஒட்டி 
உறவாடும் நீரலை உன்னால் இனிக்கும் 
மறக்குமோ அந்த சுகம் ?

***

சித்திரக்குளியல் செய்யும் பத்தரைப் பசும்பொன்னின் ‘சூரியத் திருமேனி’யைப் போற்றிப் பாடியிருக்கின்றார் திரு. இளவல் ஹரிஹரன்.

சின்னச் சூரியத் திருமேனி யொன்று
சித்திரக் குளியல் செய்கிறது
எண்ணத் தொலையா நீர்ப்பூக்களதன்
எழில்மேனியில் பெய்கிறது

கண்ணும் கருத்தும் கவரும் வகையிலதைக்
கைகளில் படத்தைப் பிடிக்கிறதுஇந்த
மண்ணில் வந்த வான நிலவென்
மகிழ்வாய்க் குழந்தை நடிக்கிறது.

[…]

சிகரம் வைத்த காட்சி எனவே
சித்திர மாக்கிப் பார்க்கிறதுநல்ல
மகவின் குளியல் ஆனந்தந் தன்னை
பெற்றோர் பார்க்கச் சேர்க்கிறது.

இதுபோல இன்பம் உலகில் இல்லை
இனிதே வாழக் கற்பிக்கும்….இங்கு
இழந்த வாழ்வின் இன்பம் அதிகம்
இதனை மீட்டுப் புதுப்பிப்போம்.

***

”நீர்கண்டு பதறும் குழந்தையல்லன் இவன்! எதிர்காலத்தில் நீரையே ஆளும் வல்லமை மிக்கோன்!” எனக்குழந்தையை வியந்து போற்றுகின்றார் திருமிகு. வேதா. இலங்காதிலகம். 

வெள்ளிச் சாரலில் உள்ளம் குளிர
துள்ளி வரும் நிரிலுடல் குளிர
கொள்ளை இன்பக் காட்சியில் மழலை
அள்ளும் அழகுக் காட்சியை அப்படியே
கொள்ளும் கருவியுடன் தந்தை போலவன்.
வெள்ளத்தில் பிள்ளைக்குப் பாதுகாப்பாய் அம்மா.
கோடையின் ஆனந்த ரசனையின் அனுபவத்தில்
ஆடையற்ற மேனியின் ஆனந்தப் பரவசம்.

நீர் கண்டு பதறும் குழந்தையல்ல
நீரையே ஆளுவான் இவன் எதிர்காலத்தில்
ஆகா! என்ன இன்பக் காட்சி!
வாகாக மூலிகை கழுவிய நீர்ப்
போர்வை குழந்தையைத் தழுவ அனுபவச்
சார்பில் ஆனந்த ரசனை முகம்.
கிளர்ச்சி அனுபவத்தால் குழந்தை மன
வளர்ச்சிக்கு ஆதரவு தரும் பெற்றோர்!
***

”மறந்துபோன மரபுகளில் ஒன்று களியூட்டும் வயல்வெளிக் குளியல்; அதனை மீண்டும்  நினைவூட்டுகின்றது இந்தப் பட்டுத்தாமரையின் ஒய்யாரக் குளியல்” என்கிறார் திரு. க. கமலகண்ணன்.

மறந்து போன பாரம்பரிங்களில்
    இதுவும் ஒன்று
வயல்வெளி குளியல் மகிழ்ச்சிகளில்
    நம்மை வென்று
வாழ்வில் இன்றியமையா பல
    இழந்தது நின்று
சிலிர்க்கும் தருணங்கள் அது
    கிடைக்குமா இன்று
என மனது ஏங்குகிறது
    வெட்கத்தை தின்று
கொடுத்து வைத்த குழந்தையடா
    வளருவாய் நீ நன்று

***

இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைச் சந்திப்போம்!

எடுக்கப்படும் புகைப்படம் ஒவ்வொன்றும் சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்துச் சங்கமமாகும் காலமிது! அந்த உண்மையைச் சின்னக்குழந்தை செப்புவதாய் அமைத்திருக்கும் ஒரு கவிதை மனங்கவர்கின்றது.

பாய்ஞ்சு வந்தத் தண்ணியில் 
****பயமில் லாமக் குளிக்கிறேன்
தேய்ச்சுக் குளிக்க வில்லைநான்
****
தேகம் குளிரக் குளிக்கிறேன்

ஆச தீரக் குளிக்கிறேன்
****
அழாம நானே குளிக்கிறேன்
பேசக் கூட முடியல
****
பின்னால் தண்ணி முட்டுது

ஆடை யின்றிக் குளிக்கிறேன்
****
அமர்ந்துக் கொண்டே குளிக்கிறேன்
கோடை வெயிலும் தெரியல
****
கொஞ்சங் கூட சலிக்கல

அம்மா துணையா நிக்குறா
****
அப்பா போட்டோ எடுக்குறார்
சும்மா விடவாப் போகிறார்
****
சுற்றி வாட்ஸ்அப் பண்ணுவார்

நாளை உமக்கும் வந்திடும்
****
நல்லா என்னப் பாக்கணும்
தோளைக் குலுக்கி ரசிச்சதும்
****
சூடா லைக்கும் பண்ணணும் ….!!!

பாய்ந்துவரும் தண்ணீரில் பயமில்லாமல் குளிக்கும் இந்தக்குழந்தை, தன்னைப் புகைப்படமெடுக்கும் தந்தை அடுத்து அதனை எங்கெல்லாம் ’வலையேற்றுவார்’ என்பதைச் சுவையோடு விவரிப்பது, நம்மை இரசிக்கவும் சிரிக்கவும் வைக்கின்றது! இக்கவிதையை இயற்றியிருக்கும் திருமிகு. சியாமளா ராஜசேகர் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகிறார்.

***

நகரங்களை நோக்கிய மக்களின் இடைவிடாப் படையெடுப்பால், இயற்கையோடு இயைந்த கிராமவாழ்க்கை இன்று கனவாய், பழங்கதையாய் மாறிவருகின்றது.

’கூட்டுப்பறவையாய் நகரில்வாழும் குழந்தைக்கு, நாட்டுப்புற வாழ்வும், வனப்பும் குதூகலமே’ என்று கூறும் கவிதை நம்மைச் சிந்திக்க வைக்கிறது.

நாட்டுப் புறத்தை மறந்தேதான்
நகர வாழ்க்கை வந்தோர்தம்
கூட்டுப் பறவைக் குழந்தைக்குக்
கிராமம் கண்டதும் குதூகலம்தான்,
தோட்ட நீரில் புகுந்தேதான்
துள்ளிக் குதித்தே ஆடுதல்பார்,
ஆட்டம் பார்க்கும் பெற்றோரும்
அந்தநாள் நினைவில் குளித்தாரே…!

நாட்டுப்புற வாழ்வின் இனிமையை எளிமையாய்ச் சொல்லியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனுக்கு என் பாராட்டுக்கள்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “படக்கவிதைப் போட்டி 55-இன் முடிவுகள்

  1. என்னை சிறந்த கவிஞராய் தேர்ந்தெடுத்த திருமிகு . மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும் , வாழ்த்து சொன்ன திரு. கமலக்கண்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி .

  2. வாழ்த்துக்கள் அம்மா ! மிகவும் நன்றான கவிதை  ! பாராட்டுக்கள் ! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *