–நாகேஸ்வரி அண்ணாமலை.

கியூபா (இந்த நாட்டு மக்கள் தங்கள் நாட்டை கூபா என்று உச்சரிக்கிறார்கள்) என்ற சிறிய நாடு எங்கிருக்கிறது என்றே பலருக்குத் தெரியாது. ஆனால் அமெரிக்காவில் வாழும் பலருக்கும் அமெரிக்கா அந்த நாட்டைப் படுத்திய பாட்டால் அதைப் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். அமெரிக்காவைப் பற்றி எழுத ஆரம்பித்தபோதுதான் நானும் முழுமையாக கியூபா பற்றித் தெரிந்துகொண்டேன். பல தென்னமெரிக்க நாடுகள் ஸ்பெயின் நாட்டின் காலனி ஆதிக்கத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம்வரை இருந்தன. கியூபாவோ அந்நூற்றாண்டின் கடைசிவரை இருந்தது. தென்னமெரிக்க நாடுகள் ஒவ்வொன்றாக ஸ்பெயினின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திரம் அடைந்ததைப்போல கியூபாவும் தன்னுடைய சுதந்திரத்திற்காகப் போராடிச் சுதந்திரம் பெற்றது. வட அமெரிக்கக் கண்டத்தின் பெரும் பகுதியைப் பிடித்துக்கொண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட அமெரிக்காவுக்கும் எப்போதும் கியூபாவின் மேல் ஒரு கண் இருந்தது. எப்படியாவது அதைத் தன் வசமாக்கிக்கொள்ள வேண்டும் என்று சமயம் பார்த்துக் காத்துக்கொண்டிருந்தது. தன் கப்பலைத் தாக்கியதாகப் பொய்ச் சாக்குச் சொல்லி ஸ்பெயினிடமிருந்து கியூபாவைப் பறித்துக்கொண்டு, அதற்கு சுயாட்சி கொடுப்பதாக மக்களுக்கு வாக்குக் கொடுத்துவிட்டு, பின் தனக்கு வேண்டியவர்களை, தன் சொல்படி நடப்பவர்களைப் பதவியில் அமர்த்தித் தன் நலன்களைப் பாதுகாத்துக்கொண்டது. இதைத்தான் ஃபிடல் காஸ்ட்ரோவும் அவரோடு சேர்ந்து புரட்சி செய்தவர்களும் எதிர்த்தனர். கியூபாவை ஒரு ஜனநாயக நாடாக மாற்றித் தாங்களே ஆண்டுகொள்ள வேண்டும் என்றனர். உலகம் முழுவதும் ஜனநாயகத்தைப் பரப்புவதாகப் பறைசாற்றிக்கொள்ளும் அமெரிக்கா தன் நலன்களுக்குப் பாதகம் வந்தால் எந்த நாட்டிலும் ஜனநாயகம் தழைக்காமல் பார்த்துக்கொள்ளும் என்பதற்கு கியூபா ஒரு நல்ல உதாரணம். உலகில் உள்ள ஜனநாயக நாடுகளுள் உண்மையான ஜனநாயகத்தைப் பின்பற்றும் அமெரிக்காவின் ஜனநாயகக் கொள்கைகள் எல்லாம் உள்நாட்டைப் பொறுத்தவரைதான். மற்ற நாடுகள் என்று வரும்போது அந்த நாட்டின் ஜனநாயகத்தைவிட அமெரிக்காவின் நலன்தான் அமெரிக்காவிற்கு முக்கியம்.

President Obama's trip to Cuba is the first time a sitting U.S. President has visited the island nation since Calvin Coolidge in 1928.

அமெரிக்காவின் இந்தக் கொள்கைக்கு கியூபாவும் விலக்கல்ல. காஸ்ட்ரோவும் அவருடைய தோழர்களும் கியூபா அமெரிக்க ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியபோது அமெரிக்கா அதை விரும்பவில்லை. ‘ஒரு சிறிய நாடு தன்னை எதிர்ப்பதா?’ என்று வெகுண்டெழுந்தது. அப்போது அமெரிக்காவின் கைப்பாவையாக விளங்கிய பதீட்ஸா கியூபாவின் ஜனாதிபதியாக இருந்தார். அவரை எதிர்த்துப் போராடி ஒரு முறை சிறையில் அடைக்கப்பட்டு, பின் பொதுமக்களின் கிளர்ச்சியை அடக்கமுடியாமல் விடுவிக்கப்பட்டு, கடைசியாக நாட்டின் ஆட்சியை ஆயுதப் புரட்சி மூலம் 1959 ஜனவரி ஒன்றாம் தேதி கைப்பற்றிய காஸ்ட்ரோவை அன்று முதல் தன் முழு எதிரியாகப் பாவிக்கத் தொடங்கியது அமெரிக்கா. ஒரு சிலரைப் பணக்காரர்களாக உருவாக்கி நாட்டில் சமத்துவமின்மையை உண்டாக்கும் முதலாளித்துவப் பொருளாதாரத்தைத் தவிர்த்து எல்லோருக்கும் அடிப்படைத் தேவைகள் கிடைப்பதற்காக கம்யூனிசக் கொள்கையைப் பின்பற்றிய காஸ்ட்ரோவை 600 தடவைகளுக்கு மேல் கொலைசெய்ய முயன்று தோற்றது அமெரிக்கா. கியூபா மீது தன் பழிவாங்கும் படலத்தைப் பத்து அமெரிக்க ஜனாதிபதிகளின் கீழ் தொடர்ந்தது. கியூபா மீது பல வணிகத் தடைகளைப் போட்டதோடு தன்னோடு வணிகத் தொடர்புகள் வைத்துக்கொள்ளும் எந்த நாடும் கியூபாவோடு வணிகத் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது. உலகிலேயே பணக்கார நாடாகவும் பலம் பொருந்திய நாடாகவும் விளங்கும் அமெரிக்காவை எதிர்க்க அமெரிக்காவின் எதிரியான சோவியத் யூனியனைத் தவிர எந்த நாடும் முயலவில்லை. சோவியத் யூனியனின் உதவியை நாடுவதைத் தவிர காஸ்ட்ரோவிற்கு வேறு வழி இருக்கவில்லை. அதுவும் அமெரிக்காவிற்குப் பிடிக்கவில்லை. தனக்கு மிக அருகில் இருக்கும் (அமெரிக்க தென் கிழக்கு மாநிலமான ஃப்ளோரிடாவிற்கும் கியூபாவிற்கும் இடையில் 90 மைல்கள்தான்) ஒரு சிறிய நாட்டில் தன் எதிரியின் செல்வாக்கும் தாக்கமும் இருப்பதை அமெரிக்காவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் பனிப் போர் நடந்துகொண்டிருந்த காலம் அது. 1962-இல் கியூபாவில் சோவியத் ஏவுகணைகளை வைத்து இரு நாடுகளும் மோதிக்கொள்ளவிருந்தது தவிர்க்கப்பட்டு உலகமும் மூன்றாம் உலகப் போர் மூளாமல் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

அமெரிக்காவும் அமெரிக்காவைச் சார்ந்திருந்த மற்ற நாடுகளும் கியூபா மீது வர்த்தகத் தடைகளை விதித்தபோதிலும் காஸ்ட்ரோ தைரியமாக கியூபாவை வழிநடத்திச் சென்றார். தன்னுடைய சோஷலிஸக் கொள்கையிலிருந்து மாறவும் இல்லை. இன, வர்க்க பேதங்களை நாட்டிலிருந்து களைய முற்பட்ட காஸ்ட்ரோவிற்கு 1990-இல் சோவியத் யூனியன் உடைந்தது ஒரு சோதனையாக அமைந்தது. கியூபாவிற்குத் தேவையான மூலப்பொருள்களும் இயந்திரங்களும் கிடைக்காததால் கியூபா மக்கள் பழைய முறைப்படி வேளாண்மை செய்ய வேண்டியதாயிற்று. தேவையான ரசாயன உரங்கள் இல்லாமல் விளைச்சல் பாதிக்கப்பட்டது. உணவுப் பண்டங்களுக்கு ரேஷன் கொண்டுவரப்பட்டது.

காஸ்ட்ரோ ஆட்சியைப் பிடித்ததும் நிலங்கள் யாவற்றையும் தேசிய உடைமையாக்கினார். தன் குடும்பத்திற்குச் சொந்தமான நிலங்களையும் அரசிடம் ஒப்படைத்ததற்கு இவருடைய தாய் கடைசிவரை இவரை மன்னிக்கவில்லை என்பார்கள். தென்னமெரிக்க நாடுகளிலும் கியூபாவிலும் கம்யூனிஸம் பரவி அமெரிக்காவிற்கும் வந்துவிடுமோ என்று அமெரிக்கா பயந்தது. கியூபாவின் மீதான கிடுக்கிப் பிடியைக் கொஞ்சமும் தளர்த்தவில்லை. ஐ.நா.வில் கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளைத் தளர்த்தும்படி தீர்மானம் வரும்போதெல்லாம் அமெரிக்கா தன் வீட்டோ சக்தியால் அதை முறியடித்து வருகிறது. அமெரிக்கா விதித்த தடைகளால் கியூபாவின் பொருளாதாரம் மிகவும் நசித்துப் போயிருக்கிறது.

அமெரிக்கா பல நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டு அந்நாடுகளின் அரசுகளைக் கவிழ்த்ததாலும், ஜனநாயகம் பற்றிப் பேசிக்கொண்டு பல சர்வாதிகாரர்களின் நண்பனாக விளங்கியதாலும் உலக நாடுகளிடையே அமெரிக்காவின் படிமம் மிகவும் தாழ்ந்துபோயிருக்கிறது. 2009-இல் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பாரக் ஒபாமா அமெரிக்காவின் இந்தப் படிமத்தை மாற்ற நினைத்தார். அமெரிக்காவின் எதிரிகளாகக் கருதப்பட்ட ஈரான், கியூபா ஆகிய இரண்டு நாடுகளோடும் அமெரிக்காவின் உறவைப் புதுப்பித்துக்கொள்ள ஒபாமா முயன்றார். ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தி அணு ஆயுதங்கள் தயாரித்தால் அது இஸ்ரேலை அழித்துவிடும் என்று பயந்து இஸ்ரேலுக்கு உதவுவதற்காக ஈரான் மீது அமெரிக்கா படையெடுக்க வேண்டும் என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்கள் தீவிரமாக வாதிட்டபோதிலும் ஒபாமா ஈரானோடு பேச்சுவார்த்தை நடத்தி ஈரான் அணு ஆயுத சோதனை நடத்துவதை நிறுத்த ஏற்பாடு செய்தார்.

அதன் பிறகு அவருடைய கவனம் கியூபா மீது திரும்பியது. போப் பிரான்ஸிஸ் போன்ற நடுவர்கள் மூலம் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்தி கியூபாவுடன் தூதரகத் தொடர்பு ஏற்படுத்தினார். 2014 டிசம்பரில் வாஷிங்டனில் கியூபாவின் தூதரகமும் கியூபாவின் தலைநகரான ஹவானாவில் அமெரிக்கத் தூதரகமும் தொடங்கப்பட்டன. கியூபாவிற்கு ஒரு முறை நேரில் சென்று அந்நாட்டு மக்களையும் ஜனாதிபதியாக இருக்கும் ஃபிடல் காஸ்ட்ரோவின் தம்பி ராவுல் காஸ்ட்ரோவையும் (இவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் தம்பி மட்டுமல்ல; அவரோடு தோளோடு தோள் நின்று புரட்சியில் பங்குகொண்டவரும் கூட) சந்தித்து அமெரிக்காவிற்கு கியூபாவுடனான உறவைச் செம்மைப்படுத்த விரும்பினார். 1928-க்குப் பிறகு – அதாவது 88 வருடங்களுக்குப் பிறகு – அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் கியூபாவிற்கு விஜயம் செய்கிறார். ஒபாமாவும் ராவுல் காஸ்ட்ரோவும் நடத்திய பேச்சுவார்த்தையில் (ஒபாமாவும் ஃபிடல் காஸ்ட்ரோவும் சந்தித்துக்கொள்ளவில்லை) கியூபாவில் மனித உரிமைகளுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஒபாமாவும் கியூபா மீதான வர்த்தகத் தடைகளை நீக்கவேண்டும் என்று காஸ்ட்ரோவும் வற்புறுத்தினர். அமெரிக்க செனட் உறுப்பினர்கள், குறிப்பாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கியூபா மீதான வர்த்தகத் தடைகளை நீக்குவதற்கு தங்கள் பங்கிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். ஆனாலும் ஒபாமா எடுத்திருக்கும் இத்தனை முயற்சிகளுக்குப் பிறகு அவருடைய முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கும். 2009-இல் வெளிவந்த என்னுடைய ‘அமெரிக்காவின் மறு பக்கம்’ என்ற நூலில், ‘2009, ஜனவரி 1ஆம் தேதியன்று கியூபாவில் புரட்சி ஏற்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆயின, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பிறப்பதற்கு முன்பே கியூபா மீது அமெரிக்கா விதித்த தடைகள் இவர் காலத்திலாவது நீங்கும் என்று நம்புவோம்’ என்று எழுதியிருந்தேன். அந்த நம்பிக்கை நிறைவேறும் என்பதற்கு இப்போது அறிகுறிகள் தோன்றியிருக்கின்றன.

(தொடரும் … )

படம் உதவி: http://www.haaretz.com/world-news/1.709928

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.