அழகிய முரண்!
-மீ.விசுவநாதன்
இன்னுமின்னும் கேட்கின்றேன் இன்பமே – வந்த
எளிமையான இன்பத்தில் தவிக்கின்றேன்!
மின்னுகின்ற தகரத்தின் தன்மையை – ஒரு
வெள்ளிமீன் தகடென்றே எடுக்கின்றேன்!
தொன்னையிலே நெய்மணக்க ருசித்திட – நாவு
தொந்தரவின் சூழ்ச்சியென நகைக்கின்றேன்!
அன்னையிடம் பால்குடித்த அற்புதம் – பின்
ஆளான போதவளைப் பகைக்கின்றேன்!
மெல்லமெல்ல வான்நிலவைப் பிடித்திட – என்
பிஞ்சுக்கை விரல்களையே அனுப்புகின்றேன்!
மெல்லவந்த வார்த்தைகளோ மறந்திட – என்|
சொந்தங்கள் சிரித்திடவே வாழுகின்றேன்!
கல்லெடுத்துச் சிற்பமொன்று செய்திட – நான்
கற்கையிலே கற்பனைத்தேர் ஏறுகின்றேன்!
சொல்லெடுத்துக் கவிபொழியும் போதிலே – செடி
பூமலர நறுமணத்தில் புதை(யு)கின்றேன்!