க.பாலசுப்பிரமணியன்      

 

இரண்டாம்  பத்து          

12938256_10206189995525673_3878937499269568556_n            

வெள்ளை யுள்ளம் கொண்டவனே வேதவித்தே

பிள்ளை யெந்தன் அஞ்ஞானம் நீக்கிடுவாய்

வெண்ணையுடை கொண்ட மெய்ஞான மாமேரு

விரைந்திடுவாய் நகர்ந்திடவே வாழ்க்கைத் தேரே!

 

அடியாருக்கு அடியவனாய்  ஆனவனே அமரா

ஆனந்தநிலை தவறா அதிசயனே அனுமந்தா

அறிவுக்குப் பொருளாய் விளங்கும் ஆஞ்சநேயா

அன்பும் அருளும் அளிப்பாய் ஆகாயவீரா  !

 

சமயத்தில் உதவிடும் சஞ்சீவி நீயே

சரணம் அடைந்தோருக்கு சாரதி நீயே

சாகாத வரம் கொண்ட சிரஞ்சீவி நீயே

சரணம் தருவாய் சங்கடம் அகற்றி  !

 

சொல்லாமல் புரிந்துகொள்ளும் சூட்சுமம் உனக்கு

சொல்லியும் அறியாத பேதைமை எனக்கு

செக்கிழுக்கும் மாடாய் சுழலும் வாழ்வை

சீக்கிரம் மாற்றிவிடு ஸ்ரீராமன் காட்டிவிடு !

 

இருப்பது எதுவும் போதாத மனமெனக்கு

இருப்பதுவும் சென்றுவிடும் பயத்தில் தவிப்பு

இருப்பது என்றும் இறைவன் வழித்துணையே

இசைவாய் நீயிருக்கும் இறைவன் காலடியே !

 

கொடியினிலே அமர்ந்தே குருசேத்திரம் கண்டவனே

கோகுலனின் தேரமர்ந்து குலம்காக்க அருளியவனே

கோடியுள்ளம் தேடிவரும் குறைசொல்ல நாடிவரும்

கோமகனே!  குறையில்லா வானரனே ! வாழ்த்திடுவாய் !

 

கணையாழி கொண்டுவந்து கவலைகள் தீர்த்தவனே

கலையாத மனம்கொண்டு கடமைகள் செய்தவனே

கடல்மீது கால்நடக்கப் பாலங்கள் படைத்தவனே

காமத்தை வென்று நாமத்தில் நெகிழ்ந்தவனே !

 

தூதனுக்கு இலக்கணம் இலங்கயில் படைத்தாய்

தூற்றாமல் நல்லறிவைத் துணிந்தே சொன்னாய் !

தூங்காத விழிகொண்டு துயர்தீர்க்கும் தூயவனே

தூயமனத்திற்குத்  துணை நிற்கும் பேரொளியே !

 

நீருண்ட மேகமென வானில் நீபறக்க

நிழலுண்ட நீர்த்துளிகள் உன்னைத் துதிக்க

வானின்ற வேதவரும் எழில்கண்டு வியக்க

நானறிந்த ஐம்பொறியின் சாரதியே சரணம் !

 

ஊழ்வினைகள் உனைநினைத்தால் ஓடி விடும்

நிகழ்வினைகள் உன்னருளால் அமைதி பெரும்

வருவினைகள் விதியறிந்து வளம் பெருக்கும்

மூவுலகும் போற்றிவிடும்  மூப்பறியா மாமருந்தே !

 

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *