துர்முகியே.. அருள்வாயே !
க. பாலசுப்பிரமணியன்
நீரோடு நிலமும் வானும் நல்காற்றும்
கதிரும் மதியும் காலத்தில் மழையும்
கனியும் காயும் கண்நிறை பசுமையும்
களிப்புடன் தருவாய் துர்முகியே !
ஊர்கூடி ஒன்றாய் உலகினில் வாழ்ந்திட
தேன்கூடாய் உழைப்பின் பலன் சேர்ந்திட
நாகூடும் சொல்லென்றும் நலமாய் வந்திட
நாளெல்லாம் அருள்வாய் துர்முகியே !
தாயோடு சேயும் தந்தையும் உறவும்
தரணி போற்றும் கூட்டுக் குடும்பம்
ஊனோடு சதையும் உதிரம் போல்
ஒன்றாக உறவாட அருள்வாயே !
நான்முகனும் அறுமுகனும் களி முகத்தொடு
ஆனைமுகன் அப்பனுடன் அன்னை சக்தியோடு
வேறுமுகம் காட்டாது துர்முகியே ! நல்மனத்தோடு
நேர்முகமாய் காத்திடவே அருள்வாயே !