எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

barathidasan
 பாரதியைப் பின்பற்றி பாட்டெழுதிக் குவித்தவரே
 பாரதிரத் தமிழ்மொழியை பார்த்துவிட நினைத்தவரே
 தூரநோக்குப் பார்வையுடன் துணிவுகொண்டு உரைத்தவரே
 பாரதியால் வாழ்த்துப்பெற்ற பாவலரே வாழ்த்துகின்றேன்.!

  சீர்திருத்தம் பலசொல்ல சிறப்பான உவமைகண்டாய்
  ஆருக்கும் அஞ்சாமல் அற்புதமாய் கவிபடைத்தாய்
  போரொக்கும் சொற்கொண்டு புத்துணர்வுக் கவிதந்தாய்
  புதுவைநகர் கொடையாக புறப்பட்டு வந்தனையே !

                   சுப்பு      ரத்தினமாய்
                   சுந்தரத்   தமிழ்பாடி
                   பாரதி       தாசனாய்
                   பரிணாமம் பெற்றாயே
                   எப்பவுமே நாம்படிக்க
                   இங்கிதமாய் கவிதந்த
                   எங்களது கவிமன்னா
                   என்றுமே வாழுகிறாய் !

                     பாரதியின் வாரிசாய்
                     பலகவிஞர் வந்தாலும்
                     பாரதி தாசனாய்
                     நீமட்டும் விளங்குகிறாய்
                     பாரதியால் ஆசிபெற்ற
                     பைந்தமிழின் காவலனே
                     ஊரெல்லாம் உன்பாட்டை
                     உணர்ச்சியுடன் படிக்கின்றார் !

                     தமிழை உயிரென்றாய்
                     தமிழை அமுதென்றாய்
                     தமிழை இனிதென்றாய்
                     தமிழே நிகரென்றாய்
                     தமிழைப் படிப்போர்க்கு
                     தரமான கவிதந்தாய்
                     அமுதான தமிழ்க்கவியே
                     அழிவென்றும் உனைக்கில்லை !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.