நான் அறிந்த சிலம்பு – 206
மலர்சபா
மதுரைக் காண்டம் – 09. ஊர் சூழ் வரி
துணைக்கு யாரும் இல்லாமல்
மயக்கத்தைத் தருகின்ற இம்மாலை நேரத்தில்
துயரத்துடன் தனித்திருக்கும் என் முன்
மாலையணிகின்ற உன் மணிமார்பு
தரையிலே வீழ்ந்து கிடப்பது தகுமோ..
உலகத்தார் அனைவரும் பழித்துக் கூறும் வண்ணம்
பாண்டியன் தவறு செய்ததால்
இந்தக் கொலை நிகழ்ந்தது.
இது உன்னுடைய தீவினையால்தான் என்று
எவரேனும் என்னிடம் சொல்லாரோ–
கண்களில் பொங்கும் நீர் வழிந்துநிற்க,
தீவினையுடையவளாகிய என் கண் முன்னால்
புண்ணிலிருந்து வழிகின்ற இரத்தம்
உடல் முழுதும் நனைத்திருக்க
நீங்கள் புழுதியில் படிந்து கிடப்பது தகுமோ..
உலகம் முழுதும் பழிதூற்றும் வண்ணம்
மன்னவன் இங்ஙனம் தவறு செய்யக் காரணம்
உனது ஊழ்வினைதான் என்று
இங்கு எவரும் சொல்லாரோ..
இவ்வூரில் கற்புடைய பெண்களும் உள்ளாரோ
கற்புடைய பெண்களும் உள்ளாரோ
தம்மை மணந்த கணவனுக்கு நிகழ்ந்த
துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும்
பெண்களும் உள்ளாரோ..
சான்றோரும் உள்ளாரோ
சான்றோரும் உள்ளாரோ
பிறர் பெற்ற பிள்ளையைக் காப்பாற்றி வளர்க்கும்
சான்றோரும் உள்ளாரோ..
தெய்வமும் உள்ளதோ
தெய்வமும் உள்ளதோ
கூர்மையான வாளால் என் கணவனைக் கொன்று
தவறு செய்த பாண்டிய மன்னனின்
இம்மதுரை மாநகரில் தெய்வமும் உள்ளதோ..
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html–
படத்துக்கு நன்றி:
கூகுள்