எம். ஜெயராமசர்மாமெல்பேண், அவுஸ்திரேலியா

உள்ளத்து உணர்வுகளை உலகினுக்கு எடுத்துரைக்கும்
கள்ளமில்லா மனமுடயார் கவிதைகள்தாம்
வாழ்கிறது
வள்ளுவரின் கவிதையின்று வையகத்தில்
நிலைப்பதற்குக் கள்ளமில்லா அவர்மனமே காரணமாய் ஆகியதே!

எல்லோரும் வள்ளுவராய் இருந்துவிட முடிவதில்லை
என்றாலும் இயன்றவரை ஏற்றதையே எடுத்துரைப்பார்
நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து நாளுமவர் தந்துவிடின்
நாட்டிலுள்ளார் மனங்களிலே நன்மதிப்பைப் பெற்றிடுவார்!

சங்ககாலக் கவிதையெலாம் நாம்படித்துப் பார்த்துவிடின்
இங்கிதமாய்ப் பலகருக்கள் இருப்பதையும் உணர்ந்திடலாம்
எங்களது தமிழ்மொழியின் மங்காத செல்வங்களாய்
இருக்குமந்த அருமையினை எல்லோரும் அறிந்திடலாம்!

சொற்சுருக்கம் சுவைநுணுக்கம் அத்தனையும்
அரவணைத்துச் சுந்தரத்தமிழ் கொண்டு செப்பிநின்ற கவிதையது
இப்பொழுது அவையாவும் எல்லோரும் படிக்காமல்
எம்மேக்கும் பீயேக்கும் எடுக்கின்றார் படிப்பதற்கே!

பல்கலைக் கழகத்தில் படிக்கின்ற பாடமாய்ப்
பண்டிதர்க்கும் புலவர்க்கும் பரீட்சிக்கும் புத்தகமாய்ப் பண்டைத் தமிழிலக்கியங்கள் இருக்கின்ற
பாங்கினையே
பார்க்கின்றோம் எனநினைக்கில் பரிதாபம் எழுகிறது!

சங்கத் தமிழ்படித்தால் சரியான கவிதைவரும்
பொங்கிவரும் தமிழுணர்வைப் புதுவழியில் செலுத்திடலாம்
கவிதையெனும் பெயர்சூடி வருகின்ற கவிதையெலாம்
காலமென்னும் வரலாற்றில் காணாமல் போய்விடுமே!சாகாத இலக்கியங்கள் நாம்படைக்கத் தேவையில்லை

மனம்நோவாத இலக்கியங்கள் படைத்துவிட
நினைத்திடுவோம்
வாழ்நாளை வளமாக்கும் வகையிலே படைத்துவிடின்
வரவேற்று அனைவருமே வாரியே அணைத்திடுவார்!

புழுதியிலே புரளுகின்ற இலக்கியங்கள் புறந்தள்ளிப்
பழுதில்லா வகையான இலக்கியங்கள் படைத்தளிப்போம்
நிலவுலகில் யாவருமே நினைந்துநிற்கும் வகையினிலே
நலமுடைய இலக்கியங்கள் படைதளிக்க
நாம் நினைப்போம்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.