தமிழ்த்தேனீ

புழுவாயிருந்த  என்னை  என் தாயாரும் தந்தையாரும்  கொட்டிக் கொட்டியே  தேனியாக்கினார்கள் அப்படிப்பட்ட என்னை  அதன் பின்னர் தமிழைக் கொட்டி  தமிழ்த்தேனைக் கொட்டி தமிழ்த்தேனியாக்கிய  என் ஆசிரியர்கள்  மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கம்.

ஆசிரியருக்கும்  குருவுக்கும் வித்யாசம் என்ன   என்று ஆராய்ந்தால்  கற்றுக்கொள்ள விழைபவனுக்கு  உலகத்தில் அத்தனைபேருமே குருவாகிறார்கள். ஆனால் ஒவ்வொரு  குறிப்பிட்ட  நூலையும் கற்க ஒவ்வொரு ஆசிரியர் தேவைப்படுகிறார்.  கணக்குக்கு ஒரு ஆசிரியர், தமிழுக்கு ஒரு ஆசிரியர்  என்று. ஆனால் குரு என்பவர் தனக்குத் தெரிந்த  அத்தனையையுமே கற்பிக்கிறார்   தன்னிடம் சீடனாய் இருப்பவருக்கு, அதனால்தான் முற்காலங்களில்  குருகுலம் என்னும் முறை இருந்தது.   மாதா  பிதா குரு அதன் பிறகுதான் தெய்வத்தையே வைத்தோம்  நாம் ஆமாம் பிறந்தது முதல்  தாய், அதன் பின்னர் தாயும் தந்தையும், அதன் பின்னர்  தாயும் தந்தையும் குருவும்,  இறைவனும்.

வாழ்க்கை முழுவதும்  நமக்கு கற்றுத் தரும்  குரு அல்லது ஆசிரியர் யார் தெரியுமா  ‘அனுபவம்’  .

நான் அடிக்கடி சொல்வேன்  அனுபவம் கற்றுக் கொடுக்கின்ற பாடத்தை ஆன்டவனால் கூட அளிக்க முடியாது  என்று.  ஆனால் ஒவ்வொரு உயிர்க்கும்  ஆண்டவன் தான்  விதி என்கின்ற பெயரிலே  அனுபவங்களைக் கொடுக்கிறான் என்பது  உண்மையே. ஆயினும்  அனுபவம் நம்மை நேரிடையாகச் சந்திக்கிறது, பாடத்தை  அறிவை வழங்குகிறது. என்னுடைய  எட்டாம் வகுப்பு  ஆசிரியர்கள்  திரு. கம்பீர நாயனார் அவர்களும்   கிருஷ்ணமாச்சாரி என்கிற ஆசிரியரும்  எனக்கு தமிழ் போதித்தவர்கள். அப்போதெல்லாம்  தமிழ்  1  தமிழ் 2  என்று  இரு பிரிவாக வகுப்பெடுப்பார்கள்.

அன்று அவர்கள் விதைத்த  தமிழ்தான் இன்றும் எனக்கு  உதவுகிறது.  நடிக்க, மேடையில் பேச, கதைகள் கட்டுரைகள்  கவிதைகள்  எழுத, நாடகம் எழுத இயக்க, மிக முக்கியமாக  மிகச் சரியான முறையிலே  தமிழை உச்சரிக்க. ஆகவே ஆசிரியர் தினமாகிய  இன்று நாம் தாயையும், தந்தையையும், ஆசிரியரையும், குருவையும், அனுபவங்களையும் சேர்த்தே இறைவனாகப் பார்க்கும் மனப்பான்மையை  வளர்த்துக் கொள்ளுதல்  நலம் பயக்கும்.  அனைவரையுமே  வணங்குவோமே.

 

Tamil

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆசிரியர் தினம்

ஆசிரியன் எனைக் கடைத்தேற்ற

அவரெடுத்த முயற்சிகள் எத்தனை

பாசிறிய திருக்குறளும்

ஆச்சரிய நாலடியும் நூற் சிறிய நன்னூலும்

ஆல் போன்ற  கலித்தொகையும்

அரண் போன்ற  பாரதமும்,வாழ்வுதாரணமாய் 

ராமாயணமும் பூப்போன்ற மனம் கொண்ட

பெரியோர்கள் ஆசான்கள் தேவதைகள்

தெய்வங்கள் அல்லா ஏசு  ராமனையும்

அறிமுகம் செய்து வைக்க எத்தனை பயிற்சிகள்

திருமுகம் போல் ஒளிரும் ஆசிரியர்

அறிமுகம் ஆன அந்நாள் வாழ்வின்

 மறுமுகம் காட்டிய பொன்னாள்

இன்முகம் காட்டி இலக்கணம் மூட்டி

தமிழ்ச்சுவை இனிதே ஊட்டி

கனிமுகம் காட்டி கணிதம் ஊட்டி

அஞ்ஞானம் அகற்ற மெய்ஞ்ஞானம் ,விஞ்ஞானம் ஊட்டி

நண்பராய் பண்பிலே தெய்வமாய் பழகுதற்கு இன்பராய்

வாழ வழிகாட்டி அருளோடு ஆன்மீகம் ஊட்டி

அருள்கின்ற ஆசிரியர்க்கு பெரு நன்றி காட்ட

 நாம் பெற்ற  ஒரு தினம்  ஆசிரியர் தினம்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.