க. பாலசுப்பிரமணியன்

 

புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி

bhuvaneshwari

மூத்தவளே ! மூவுலகும் முக்கண்ணால் அறிந்தவளே !

முழுமதியின் அமுதெடுத்து முக்காலம் தருபவளே !

மூவுலகின் உயிரினங்கள் முன்னின்று காப்பவளே !

மூடமதியன் மகிடனுக்கு முடிவினைத் தந்தவளே !

 

புதிதாய் நித்தம் புதுவையில் பூப்பவளே !

பொழுதும் மதியாய் புலனில் நிற்பவளே !

விதியை கதியாய் வாழ்வினில் வடித்தவளே!

விழுதாய் நின்று வினைகள் தீர்ப்பவளே !

 

கடலில் நதியில் கனிவுடைக்காற்றில் கண்டேன் !

கதிரில் கனியில் களிப்புறுமலரில் கண்டேன்

தேனில் பாலில் தெவிட்டாத்தமிழில் கண்டேன்

விண்ணுள் மண்ணுள் என்னுளுன்னைக் கண்டேன்  !

 

அண்டங்கள் படைத்து அகிலத்தை வடித்தாய் !

அசையாப் பொருளையும் அன்பினில் அசைத்தாய்

அகத்தையும் புறத்தையும் அறிவினில் வைத்தாய்

அன்னையே ! ஆதியே ! அமைதியின் ஆழியே !

 

பொன்னும் பொருளும் புவிக்கென வைத்தாய்

அன்பில் அருளில் அடைக்கலம் கொடுத்தாய்

கண்ணில் மனத்தில் கருத்தில் நிறுத்த

காட்சிகள் அனைத்திலும் கருவாய் வந்தாய் !

 

நல்லவை தேடிடும் நெஞ்சமே தருவாய்!

அல்லவை நாடிடும் ஆசையை அறுப்பாய் !

உள்ளவை அனைத்தையும் உலகுடன் பகிர்ந்திட

மங்கள வடிவே, மனதினில் அமர்வாய் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *