நவராத்திரி நாயகியர் (5)
க. பாலசுப்பிரமணியன்
புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி
மூத்தவளே ! மூவுலகும் முக்கண்ணால் அறிந்தவளே !
முழுமதியின் அமுதெடுத்து முக்காலம் தருபவளே !
மூவுலகின் உயிரினங்கள் முன்னின்று காப்பவளே !
மூடமதியன் மகிடனுக்கு முடிவினைத் தந்தவளே !
புதிதாய் நித்தம் புதுவையில் பூப்பவளே !
பொழுதும் மதியாய் புலனில் நிற்பவளே !
விதியை கதியாய் வாழ்வினில் வடித்தவளே!
விழுதாய் நின்று வினைகள் தீர்ப்பவளே !
கடலில் நதியில் கனிவுடைக்காற்றில் கண்டேன் !
கதிரில் கனியில் களிப்புறுமலரில் கண்டேன்
தேனில் பாலில் தெவிட்டாத்தமிழில் கண்டேன்
விண்ணுள் மண்ணுள் என்னுளுன்னைக் கண்டேன் !
அண்டங்கள் படைத்து அகிலத்தை வடித்தாய் !
அசையாப் பொருளையும் அன்பினில் அசைத்தாய்
அகத்தையும் புறத்தையும் அறிவினில் வைத்தாய்
அன்னையே ! ஆதியே ! அமைதியின் ஆழியே !
பொன்னும் பொருளும் புவிக்கென வைத்தாய்
அன்பில் அருளில் அடைக்கலம் கொடுத்தாய்
கண்ணில் மனத்தில் கருத்தில் நிறுத்த
காட்சிகள் அனைத்திலும் கருவாய் வந்தாய் !
நல்லவை தேடிடும் நெஞ்சமே தருவாய்!
அல்லவை நாடிடும் ஆசையை அறுப்பாய் !
உள்ளவை அனைத்தையும் உலகுடன் பகிர்ந்திட
மங்கள வடிவே, மனதினில் அமர்வாய் !