ஆறுபடை வீடு (2)
க. பாலசுப்பிரமணியன்
திருவேரகம் (சுவாமிமலை)
பிரணவத்தின் பொருளை அறியாது நிற்கும்
பிரம்மனின் புகழுக்குப் பழியும் வந்திடுமோ?
பிரியாது இமைகளைச் செதுக்கிய தேவரும்
புரியாது புதுப் பொருளை நாடினாரோ?
அலைமகளும், கலைமகளும், மலைமகளும் அணிசேர
அரங்கனோடு அரனும் ஆறுமுகன் அரங்கத்தில் !
அறிவுச்சுடரோ? எழுந்தது அருள்ஞானக் கடலோ?
அதிசயமே! அண்டங்கள் அறியாத தரிசனமே !
அப்பன் சாமியே !அன்னையின் சக்தியே !
தப்பெல்லாம் களைந்து தருமத்தை காப்பாய் !
செப்பிடக் குறைகள் ஆயிரம் இருந்தும்
சிந்தையில் வைத்தால் விந்தையாய் விலகிடும் !
ஆறுமுகம் கண்டு அகிலமே வியந்திட
ஒருமுகம் கொண்டே உலகினை வென்றாய்
நறுமணம் கமழும் பெயரினைச் சொன்னால்
நானிலம் அனைத்தும் நன்மையே பெருகும் !
திருவேரகத்தை நாடிவிட்டால் நித்தம் திருநாளே
வேறகத்தைத் தேடவேண்டாம் வேதனைகள் நீங்கிவிடும்
வானகத்தைத் தொடுகின்ற சாதனைகள் செய்திடலாம்
மாதவத்தின் பலன்தருவான் மனதினில் வைத்தவுடன் !
இருள்நீக்கி ஒளிபெருக்க இன்றே வருவாய்
மருளில்லா மனம்கொண்டு மதியாள அருள்வாய்
குறைவின்றிக் கொடுக்கின்ற மதியென்றும் தருவாய்
குமரா! உறவாக என்றென்றும் உள்ளிருப்பாய் !