தமிழ்த்தேனீ

உள்ளே  நுழைந்த ரமேஷைப் பார்த்து  சதாசிவம்  ஒரு புன்னகை  சிந்தி  உட்காருமாறு சைகை செய்தார்.     தொலைபேசியில்  யாரிடமோ  உத்தரவுகள் போட்டுக்கொண்டிருந்தார் . ஆமாம்   இன்னும் ஒருமணிநேரத்துலே  தக்காளி கேரட்டு மொத்தத்தையும் அறுவடை பண்ணிடணும் இல்லேன்னா காஞ்சு போயிடும் .அதுக்கு அப்புறம்  அந்த நெல்லு அதையும் இன்னும் அரைமணி நேரத்துக்குள்ள அறுவடை ஆரம்பிக்கணும்.  சேகர் கிட்ட சொல்லி உடனே மொத்த வயலையும்  உழுது  இன்னிக்கு  4 மணிக்குள்ளே திருப்பியும் மொத்த வயல்லேயும் நெல் போடச் சொல்லு  கொஞ்சம் ரூபா சேக்கணும்,  அமாம் ஆமாம்  மல்டிபில் டூல் யூஸ் பண்ணச் சொல்லு  டீசல் தீந்து போச்சுன்னா  ஆளைவிட்டாவது இன்னிக்கு அறுவடை பண்ணியே ஆகணும் . அப்புறம் ப்ரியாகிட்ட சொல்லு  அவளோட வயல்லயும், இன்னிக்கு பதினோரு மணிக்கு  மொத்தம் அறுவடை பண்ணனும், அப்போதான்  சரியா 12 மணிக்கு உழுது  திருப்பியும்   கேரட்டு போட நேரம் சரியா இருக்கும் .

நான் இன்னிக்கு ஒரு மணி நேரம் சீக்கிரம் வந்துடுவேன்,  நானும் வந்தவுடனே  என்னோட  வயல்ல  மொத்தத்தையும் அறுவடை பண்ணிட்டு  சன்ப்ளவர் போட்ருவேன் என்று கூறிக்கொண்டே  அந்த முக்கியமான பைலில் கையெழுத்திட்டார் .

ரமேஷ்  அந்த பைலை வாங்கிக்கொண்டே    “நாங்க கூட விவசாயக் குடும்பம்தான் சார்,   நாட்டுலே தண்ணி இல்லே, உரமெல்லாம் சரியா கிடைக்க மாட்டேங்குது, மின்சாரம் கிடைக்கலே,இனிமே  விவசாயிக்கெல்லாம்  மதிப்பில்லைடா, விவசாயம் செய்யறதே இனிமே கஷ்டம்தான், அதுனாலே நீயாவது ஒரு நல்ல வேலைக்குப் போயி குடும்பத்தைக் காப்பாத்துன்னு சொல்லி ,எங்க அப்பா  என்னை ரொம்பக் கஷ்டப் பட்டு படிக்க வெச்சார் சார். . ஆனா   விவசாயம் செஞ்ச நெலத்திலே  தண்ணி இல்லாமே   எல்லாம் க்ருகிப் போச்சுன்னு  மனசொடிஞ்சு அதே நெலத்திலே    தற்கொலை பண்ணிகிட்டாரு”  சார்  என்றான்

சார் .   இந்த மாதிரி  ஒரு இன்டெர் நேஷனல் லெவெல்ல இருக்கிற  ஒரு அலுவலகத்துலே  இவ்ளோ பெரிய மேனேஜரா இருந்தாலும்  உங்க குடும்பத்தோட  விவசாயத்திலெ இவ்வளவு ஆர்வமா இருக்கீங்களே  உங்களை நெனைச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு,  இன்னிக்கும் நம்ப நாடு ஓரளவாவது விவசாயத்துறையிலே முன்னணிலே இருக்குன்னா  அதுக்கு உங்களை மாதிரி நல்லவங்கதான் காரணம் என்றான்.

அவனை  ஒரு முறை நிமிர்ந்து பார்த்துவிட்டு விலாப்புடைக்க சிரிக்க ஆரம்பித்தார் அவர். அவர் இவ்வளவு சிரிக்கும்படி என்ன சொல்லிட்டோம்னே புரியாம  திரு திருன்னு முழிச்சிண்டு உக்காந்திருந்தான் ரமேஷ்.

அவர் சிரித்து முடித்து விட்டு  ரமேஷ்  நாங்க  இந்த கம்யூட்டர்லே  இணைய தளத்திலே  பேஸ்புக்குலே  ஃபார்ம் வில்லா  ன்னு   ஒரு விளையாட்டு இருக்கு , அதுலே இந்த விளையாட்டு விளையாடிண்டு இருக்கோம்,  அப்பிடியே  வயல், அதுலே எல்லாக் காய்கறிகளும், நெல்லு எல்லாமே  எப்பிடி விளையுதுன்னு  அருமையாப் பண்ணி இருக்கான். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்லே   கலக்கறான், வெரி இன்ட்ரெஸ்டிங் கேம். ப்ளாஷ் ப்ளேயர்ன்னு ஒரு  சாஃப்ட்வேர்லே செஞ்சிருக்காங்க . அதுலே  என்னமா டிசைன் பண்ணி இருக்கான் தெரியுமா. நாங்க அதைப்பத்தி  பேசிகிட்டு இருக்கோம்.  நீ என்னடான்னா  உண்மைக் கதையெல்லாம் சொல்றே    என்று சொல்லிவிட்டு  மீண்டும் சிரிக்க ஆரம்பித்தார் மேனேஜிங் டைரைக்டர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.