நாகேஸ்வரி அண்ணாமலை

தமிழ்நாட்டில் ஒரு அரசியல் தலைவர் மறைந்ததும் ஒரு தமிழ்ப் பத்திரிக்கை வெளியிட்ட செய்திகள்.

jeya

“அணைந்தது தமிழகத்தின் ‘ஒளிவிளக்கு’”

“அஸ்தமித்தது அ.தி.மு.க.வின் ‘விடிவெள்ளி’”

“தாயை இழந்து தவிக்கிறது தமிழகம்”

அ.தி.மு.க. பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தனது 68-வது வயதில் நேற்று இரவு 11;30 மணிக்குக் அமரரானார்.  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலன் அளிக்கவில்லை.  கண்ணீர் கடலில் தொண்டர்களைத் தவிக்கவிட்டுவிட்டு அ.தி.மு.க.வின் விடிவெள்ளி அஸ்தமித்தது.  தாயை இழந்து தவிக்கிறது தமிழகம்.

“அம்மா என்றழைக்க உயிரில்லையே”

“சாதனைகளின் சரித்திர நாயகி”

“ஜெயித்துக் காட்டிய ‘ஜெ’”

“அச்சமில்லை, அச்சமில்லை

அச்சமென்பதில்லையே

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதினும்

அச்சமில்லை, அச்சமில்லை

அச்சமென்பதில்லையே”

என்ற பாரதியார் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர்தான் ஜெயலலிதா.  அசாத்திய துணிச்சலுடன் சினிமா, அரசியல் என பல துறைகளிலும் தடம் பதித்தார்.  காலத்தை வென்று காவியம் படைத்த இவர், தமிழக வரலாற்றில் தனக்கென இடம் பிடித்தார்.

தமிழக முதல்வராக ஆறு முறை பதவி வகித்தவர்; இந்தியாவில் நீண்ட காலம் பதவி வகித்த பெண் முதல்வர்களுள் 2வது நபர்; 29 ஆண்டுகளாக அ.து.மு.க.வின் பொதுச்செயலர்; தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர்; சினிமாவிலும் வெற்றிக்கொடி நாட்டியவர்; ஏழு மொழிகளில் சரளமாகப் பேசத் தெரிந்தவர்; திருமணமாகாத பெண் தலைவர்; தைரியமான பெண்மணி; ‘அம்மா’ என அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுபவர் என பல சாதனைகளைக் கொண்டிருந்தவர் முதல்வர் ஜெயலலிதா.

இந்தியாவுக்கு இந்திரா, தமிழகத்திற்கு ‘ஜெ’

ஜெயலலிதா 16 ஆண்டுகளாக தமிழக முதல்வராக இருந்துள்ளார்.  இவர் நிறைவேற்றிய திட்டங்கள் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களைச் சென்றடைந்துள்ளது.  அதுவும் கடந்த 6 ஆண்டுகளாக சிறந்த ஆட்சியை நடத்தினார்.

காலத்தை வென்றவர்…..காவியமானவர்.

விவசாயிகளின் ஜீவாதார பிரச்சினைகளான முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா நிலைநாட்டியது பூமி உள்ளவரை ‘ஜெ’, புகழே நிலைத்திருக்கும் என்கின்றனர் விவசாயிகள்.

இதே தலைவரைப் பற்றி அமெரிக்கப் பத்திரிக்கையான நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி இதோ.

அதன் தலைப்பு: தமிழ்நாட்டின் முதல்வர் இறந்ததால் அம்மாநிலத்தில் ஒரு வெற்றிடம் உருவாகியிருக்கிறது.

இந்தியாவின் தென்மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு முன்னாள் நடிகையும், இப்போது பல ஆண்டுகளாக அரசியல் தலைவராகவும் விளங்கும், ‘அம்மா’ என்று அவருடைய தொண்டர்களால் அழைக்கப்படும் அதிகாரத் தோரணையுள்ள, கர்வமிக்க தலைவர் இறந்துவிட்ட செய்தி அறிவிக்கப்பட்டதும் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது.

68 வயதான தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிறன்று மாரடைப்பு ஏற்பட்டது.

தங்கள் மன உணர்வுகளை நாடகத்தனமாக மக்கள் வெளிப்படுத்துவது தென்னிந்திய அரசியலில் அப்படியொன்றும் புதிதல்ல.  அதிகாரத் தோரணையுள்ள ஜெயலலிதா ஏழை மக்களுக்குப் பல இலவசங்களைக் கொடுத்து உணர்ச்சிகளைத் தீவிரமாக வெளிப்படுத்தும் தொண்டர்களை உருவாக்கியிருந்தார்.

பலர் வன்முறைகள் நிகழலாம் என்று அத்தியாவசியப் பொருட்களை வாங்கி சேமிக்கத் தொடங்கினர்; சிலர் சென்னையை விட்டே வெளியேறினர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்ததாக வதந்திகள் வெளியானவுடன் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த மருத்துவமனையின் முன்னே கூடியிருந்த தொண்டர்கள் மருத்துவமனையின் கேட்டுகளை உடைத்துக்கொண்டு முன்னேறினர்.

சுமார் எட்டு கோடி ஜனத்தொகை கொண்ட தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் இறப்பு ஒரு உறுதியற்ற நிலையை உருவாகியிருக்கிறது.  அவருக்குப் பிறகு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பதவிக்கு யார் வருவார்கள் என்பது உறுதியில்லாததும் இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதற்கு ஒரு காரணம்.

ஜெயலலிதாவின் நெடுநாளைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும் அவருடைய விசுவாசியுமான ஒ. பன்னீர்செல்வம் முதல்வராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.  இதற்கு முன்னால் இரண்டு முறை ஜெயலலிதாவிற்குப் பதிலாக முதல்வர் பதவியைத் தற்காலிகமாக ஏற்றுக்கொண்ட இவர் ஜெயலலிதாவின் முதல்வர் நாற்காலியில்கூட உட்காராமல் ஜெயலலிதாவிற்குத் தன்னுடைய பணிவைக் காட்டியுள்ளார்.

யாரையும் தனக்கு எதிராக வளர்ந்துவிடாமல் ஜெயலலிதா பார்த்துக்கொண்டார் என்பதைக் குறிக்க சரித்திர ஆய்வாளர் ஒருவர் ஒரு கிரேக்க கதையை மேற்கோள் காட்டினாராம்.  அந்தக் கதையில் வரும் அரசன் ஒருவன் தன் மக்களுக்குப் பாடம் போதிப்பதற்காக, மற்றச் செடிகளைவிட அதிக உயரமாக வளரும் செடிகளை வெட்டிவிடுவானாம்.  கடந்த 25 ஆண்டுகளாக தன்னைச் சார்ந்து, தன்னை மட்டுமே சார்ந்து இருக்கும், தங்களுக்கென்று ஒரு ஆதரவாளர் கூட்டத்தை வளர்த்துக்கொள்ளாத, ஒரு கூட்டம் அடங்கிய ஒரு அரசியல் கட்சியைக் கவனமாக உருவாக்கியிருக்கிறார்..

ஜெயலலிதாவின் எதேச்சதிகாரம் அவருக்கு மக்களிடம், குறிப்பாக ஏழைகள், கீழ் மட்டத்தைச் சேர்ந்தவர்களிடம், செல்வாக்கையும் ஆதரவையும் பெருக்கியதேயொழிய அவற்றைக் குறைக்கவில்லை.  தன்னுடைய கட்சிக்காரர்களும் அரசு அதிகாரிகளும் தன்னிடம் வெளியிடங்களிலும் பணிவைக் காட்ட வேண்டுமென்று எதிர்பார்த்தார்.  அவர்கள் அவர் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து தரையில் தங்கள் தலையை வைப்பதைப் பார்த்து ரசித்தார்.  ஆண்களை இப்படித் தன்னுடைய கால்களில் விழவைத்ததுமல்லாமல் அதைப் பெரிய காட்சியாகவும் ஆக்கினார்.  இப்படி ஆண்கள் அவர் கால்களில் விழுந்ததைப் பெண்கள் வெகுவாக ரசித்தனர்.

அவரை அரசியலுக்கு அறிமுகம் செய்த, அவரோடு பல திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ராமச்சந்திரனின் இறப்பிற்குப் பிறகு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பதவியை எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டுத் தன் திறமையினால் கைப்பற்றினார்.  இறக்கும்வரை அந்தப் பதவியை வகித்தார்.

தமிழ்நாட்டில் ஏழைகளுக்காகப் பல இலவசத் திட்டங்களைக் கொண்டுவந்தார்.  மிகவும் குறைந்த விலையில் உணவுகள் கிடைக்கும் உணவகங்களையும் மருந்தகங்களையும் தன் பெயரில் நிறுவினார்.

1991-இல் முதல்வரகப் பதவியேற்றவுடனே ஒரு ரூபாய் சம்பளம் மட்டுமே பெறப் போவதாக அறிவித்தார்.  ஆனால் பல வழிகளில் தன் செல்வத்தைப் பெருக்கிக்கொண்டார்.  1995-இல் தன் வளர்ப்பு மகனுக்கு மிக ஆடம்பரமாகத் திருமணம் நடத்திவைத்தார்.  சுமார் 40,000 விருந்தினர்கள் கலந்துகொண்டனர். 2014-இல் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக நீதிபதியொருவர் இவர் மீது தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.  1996-லும் 2014-லும் ஊழல் செய்ததற்காக சில நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.  இருப்பினும் இவருடைய ஆதரவாளர்கள் ‘கடவுளை எப்படி ஒரு மனிதன் தண்டிக்க முடியும்?’ என்ற வாசகங்களைத் தாங்கிய போஸ்டர்களை ஒட்டினர்.  இவரை அவர்கள் கடவுளாகவே பாவித்தனர்.

2009-இல் அமெரிக்கத் தூதரகம் அமெரிக்க அரசுக்கு அனுப்பிய ரகசிய அறிக்கை ஒன்றில் (இது விக்கிலீக்ஸ் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது) தன்னுடைய குறிக்கோளை அடைய எந்த வித வன்முறையையும் ஜெயலலிதா கையாளுவார்; இது பெண்களும் ஆண்களுக்குச் சமமாக ஈவிரக்கமற்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்ற கருத்தை நிலைநாட்டுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது ஜெயலலிதாவிற்கு துணிச்சலானவர் (அவருடைய தொண்டர்களுக்குப் புரட்சித் தலைவி) என்ற பெயரையும் பெற்றுக் கொடுத்தது.  அவருக்குத் தங்கள் கீழ்ப்படியும் விசுவாசத்தைக் காட்ட அவருடைய கட்சியைச் சேர்ந்த ஆண்கள் ஒருவடொருவர் போட்டி போட்டனர்.    இதைப் பெண்கள் மிகவும் ரசித்தனர்.

ஒரு தலைவர், ஒரு மரணம். இந்தியச் செய்தியாளர்களும் அமெரிக்கச் செய்தியாளர்களும் பார்க்கும் விதம் வேறு. முன்னவர்கள் சாதாரண மக்களைப் போலவே புகழையே பாடுகிறார்கள். பின்னவர்கள் விலகி நின்று பார்த்து எதிர்மறை உண்மைகளையும் சொல்கிறார்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *