மார்கழி மணாளன் (2)
க. பாலசுப்பிரமணியன்
திருநீரகம் -அருள்மிகு உலகளந்த பெருமாள்
ஆலிலை அமர்ந்த அழகுடைக் கண்ணா
காலினைக் கையில் ஏந்திய குழந்தாய்
மண்ணுடை வாயில் மாயைகள் படைத்தோய்
மாலனே ! பாலனே! மார்கழி நாதனே !
பாசத்தில் வறண்ட பக்தர்கள் நெஞ்சில்
பாய்ந்து செல்லும் பரமனே பங்காளா !
பாலுடை ஆவினம் கோலுடை கோபியர்
பரவசமாகிக் கூடிடும் குழலுடை கோபாலா !
முப்பொருள் தன்னில் உட்பொருள் நீயே
மூன்றில் இரண்டும் முழுதும் நீயே
முதலுக்கும் முடிவுக்கும் முகவுரை நீயே
முகுந்தா! அரங்கா ! முன்னின்று காப்பாய் !
நீரினில் பிறந்தாய் நீரினில் கிடந்தாய்
நீரினில் கூர்மனாய் மேருவைச் சுமந்தாய்
நீரினில் மலர்ந்த அலைமகள் மணந்தாய்
நீருடை வண்ணம் ஊனுடை அணிந்தோய் !
கனியில் காயில் கவர்ந்திடும் மலரில்
கலங்கிய சுனையாய் கண்விடும் நீரில்
காவிரி நதியினில் கயிலனின் சிகையினில்
கருவறை உயிரினில் கருணையாய் நின்றாய் !
வாடிடும் பயிர்போல் வறண்டிடும் வாழ்வில்
உலர்ந்திடும் உணர்வுகள் ஒடுங்கிடும் முன்னே
மடைவிடு வெள்ளமாய் மாதவா வருவாய்
மலர்ந்திடு மனதினில் மணத்துடன் கண்ணா !