திருச்சித்ரக்கூடம் (சிதம்பரம்) – அருள்மிகு கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோவில்

 ag

கண்களில் மகிழ்வும் கழுத்தினில் மாலையும்

கைகளில் சூலமும் கால்களில் சலங்கையும்

மார்பினில் சாம்பலும் மனத்தில் வேகமும்

அகத்தில் சக்தியும்  ஆனந்தத் தாண்டவமே !

 

தாண்டவமாடும் தாள்கள்கூடத் தமனிகள் ஆடும்

தாளங்கள்போட்டு நாளங்களுள்ளே நினைவுகள் ஆடும் 

கோளங்களாடக் குவலயமாடக் கோவிந்தன் பார்வையிலே

கூத்தவனாடும் காட்சிகள் காண்பது தில்லையிலே!

 

போட்டியிலாடிய  பூவை தில்லை போற்றிடவே 

பார்த்தனின் சாரதி பார்வையிலங்கே பேரருளே!

சேடனின் ஆசையும் சடுதியில் நிறைந்திட 

கயிலையும்  வைகுந்தமும் காணக்  கிடைத்ததுவே !

 

அரவணை மேலுறை அரங்கன் ஆனந்தன்

வருவினை தீர்த்திடும் வாமனன் விக்ரமன்

அஞ்சனை புதல்வனை அன்புடன் அணைத்தவன்

தஞ்சம் கொண்டவர் நெஞ்சம்  நிலைப்பவன்

 

குறையெல்லாம் தீர்ப்பான் குணசீலன் கோபாலன்

நிறைவான மனம்கொண்ட நிர்மாலன் நீர்வண்ணன்

மலைவாழும் கோவிந்தன் மனமிறங்கி வந்திடுவான்

இணையாகத் தெய்வமில்லை இதயத்தில் அவனிருக்க!

 

எழுவாய் எழுவாய் எழுத்துக்குள் அடங்காதவனே

எழுகடல் அலைகளென எண்ணில்லாத் துயரங்கள்

ஏக்கத்துடன் விழியிறங்கி நின்பாதம் தேடுகையில்

ஏளனம் தேவையில்லை ஏதுவாய் வந்திடுவாயே !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.