எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

 

image3

புத்துணர்வு புதுக்கருத்து

புறப்பட்டு வந்திடட்டும்

பொங்கலிட்டு மனம்மகிழ்ந்து

புதுப்பொலிவு பெற்றிடுவோம்

பொறுமையெனும் நகையணிந்து

பொங்கிநின்று மகிழ்ந்திடுவோம்

இறைநினைப்பை மனமிருத்தி

எல்லோரும் பொங்கிநிற்போம் !

 

குறையகன்று ஓடிவிட

இறைவனைநாம் வேண்டிடுவோம்

நிறைவான மனதுவரும்

நினைப்புடனே பொங்கிடுவோம்

துறைதோறும் வளர்ச்சிவர

துடிப்புடனே உழைப்பதென

மனமெண்ணி யாவருமே

மகிழ்வுடனே பொங்கிநிற்போம் !

 

சாந்தியொடு சமாதானம்

சகலருமே பெற்றுவிட

சந்தோஷம் வாழ்வினிலே

சகலர்க்கும் நிலைத்துவிட

மழைபொழிந்து பூமியெங்கும்

பயிர்செழித்து வளர்ந்துவிட

வழிவகுக்க இப்பொங்கல்

வாய்துவிட பொங்கிநிற்போம் !

 

பால்பொங்கி வருவதுபோல் பண்புபொங்கி வரவேண்டும்

பச்சரிசி சிரிப்பதுபோல் பலமனங்கள் விரியவேண்டும்

சுவைபயக்கும் சர்க்கரையாய் சுகங்கள்பல வரவேண்டும்

இவையாவும் வாழ்வினிலே இருக்கவெண்ணிப் பொங்கிடுவோம் !

 

புலம் பெயர்ந்த நாட்டினிலும்

பொங்கல் பொங்கி மகிழ்ந்திடுவோம்

நலந்திகழும் நாளாக நாமெண்ணிபொங்கிடுவோம்

நிலம் பெயர்ந்து போனாலும்

நெஞ்சில் பொங்கல் நிறைத்துவைத்து

உளம் மகிழக் கூடிநின்று

உவகைபொங்கப் பொங்கி நிற்போம் !

 

எல்லோரும் இன்பமுற இப்பொங்கல் அமைகவென

நல்லெண்ணம் மனமிருத்தி நாம்பொங்கல் பொங்கிடுவோம்

பொல்லாத குணமெல்லாம் போயகல வேண்டுமென்று

எல்லாமாய் இருக்கின்ற இறைவனைநாம் வேண்டிநிற்போம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *