மார்கழி மணாளன் 27
திரு துவாரகை – அருள்மிகு கல்யாண நாராயணன் திருக்கோயில்
குழலொன்றைக் கையேந்தி கோதையினை மனமேந்தி
கோபியர்கள் நினைவேந்திக் கோவர்தனம் காத்தவனே!!
கோலாட்டம் பார்த்திடவே கோவினங்கள் கூடிவர
குலம்காத்த யாதவனே ! கோபாலா கண்மலர்வாய் !
மந்தாரப் புன்சிரிப்பால் மங்கையர்கள் உளம்தொட்டு
மாயைகள் செய்தவனே மதுராவை வாடவிட்டாய் !
மாளாத துயர்கொண்ட மங்கையர்கள் மனம்தேடி
மாதவனே! ஆதவனே! மனம்கொண்டார் துவாரகையில் !
தூவானம் தாலாட்ட துளிர்மலர்கள் கால்போற்ற
பூங்காற்றுப் போர்வையில் புன்னகை படைப்பவனே!
தூங்காமல் துவாரகையில் துயர்நீக்கி நிற்பவனே
மூவுலகும் காத்திடவே முடிகொண்டாய் துவாரகையில் !
சூதாடும் மன்னவர்களின் அவையடக்கம் நீங்கிடவே
சதிராடும் சபைதன்னில் விதிமுடிக்க வந்தவனே !
மதிகெட்டுப் பாண்டவர்கள் பாஞ்சாலியைப் பகடையிட
கதியென்று வந்தவளுக்குக் கைகொடுத்த காவலனே !
உறியடித் தோழனின் உளமறிந்த கண்ணா
உவமைக்கு நிகரில்லா உலகாண்ட மன்னா
ஒருபிடி அவலுக்குப் பொன்னையே தந்தாய்
ஒருபிணி இல்லாத மனமென்று தருவாய் ?
வருவினை அறிந்தும் வாதிடும் எண்ணங்கள்
தருவினை அறிந்தும் தள்ளாடும் செயல்கள்
கருவினில் அழித்தே காத்திடு கமலனே !
கருடனில் வந்தே காத்திடும் கண்ணனே!

