குடியரசுதின நல்வாழ்த்துகள்!

4

Happy-republic-day

பவள சங்கரி

சுக்கா, மிளகா சும்மாவா வந்ததிந்த சுதந்திரம்? இதற்கு எத்துணை போராட்டங்கள், எத்துணை உயிர்த் தியாகங்கள். அனைத்தும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வரலாறுகள்!

1930 ஆம் ஆண்டு, அதாவது 1947 ஆம் ஆண்டான, நம் இந்தியத் திருநாடு சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே, பூரண சுதந்திரம் பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சனவரி 26ஆம் நாளில் சுதந்திர தினம் கொண்டாடி விட்டோம். அது எப்படி நடந்தது ?

வியாபாரம் செய்யவந்த கிழக்கிந்தியக் கம்பெனி கபடதாரிகள் நம் இந்திய அன்னையை மெல்ல மெல்ல அடிமைச் சங்கிலி பூட்டி மக்களையும், சுதந்திரப் போராட்டத் தலைவர்களையும் வேட்டையாடிக் கொன்றுகுவித்த காலங்களில் நம் இந்தியத் திருநாடு அடிமைத் தளையிலிருந்து விடுபடும் முன்னரே நம் தேசத்தந்தை காந்தியடிகள் 1930 ஆம் ஆண்டு, சனவரி 26ஆம் நாளன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என்று அறிவிப்பு செய்தார்.

ஏன் அப்படி செய்தார்?

பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டு நம் இந்தியா வறுமையின் பிடியில் சிக்கி உழன்றுகொண்டிருந்த காலகட்டமான, 1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்தான் லாகூரில் அகில இந்திய மாநாடு கூடியது. அதில் ‘பூரண சுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை செயல்படுத்துவதற்கான திட்டம் குறித்து காந்தியண்ணல் முடிவு செய்து அறிவிப்பார் என்று மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. சுதந்திர எழுச்சி தீவிரமாகக் கனன்றுகொண்டிருந்த காலகட்டமும் இதுதான். இதன் விளைவாகப் பல வன்முறைப் போராட்டங்களும் நடந்துகொண்டிருந்தன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று காந்தி எண்ணினார். அதனால் சட்ட மறுப்பு இயக்கம் தொடங்குவதை கைவிட்டார். தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதன் முதற்கட்ட நடவடிக்கையாகத்தான் நாடு முழுவதும், 1930, சனவரி 26ஆம் தேதியன்று அமைதியான முறையில் சுதந்திர தினம் கொண்டாடலாம் என வேண்டுகோள் விடுத்தார். உள்ளூரில் இருந்த மற்ற காங்கிரசு தலைவர்கள் நகர்ப்புற மற்றும் கிராமங்களிலும் கூட்டம் கூட்டி காந்தியடிகளின் சுதந்திர தின உறுதி மொழி பற்றி எடுத்துரைத்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி இந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இதன் வாசகம் இதுதான்:

“நமது தாய்த்திரு நாட்டிற்கு, பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் என்ற நான்கு விதங்களிலும் துன்பம் விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது என்பது மனிதர்களுக்கும் ஆண்டவனுக்கும் செய்யும் துரோகம்” .

ஆக, சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே குடியரசு தினம் நம்பிக்கையாகக் கொண்டாடிய காந்தியடிகள் ஏற்படுத்திய அந்த சுதந்திர தின நாள்தான் சனவரி 26. சுதந்திரம் பெற்றபின் அந்த நாளையே குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம். மக்களாட்சி மலர்ந்த அந்நாளையே குடியரசு தினமாகக் கொண்டாட, 26 நவம்பர் 1949இல் நேரு அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி 1950ஆம் ஆண்டு முதல் இந்த நாள் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

வாழ்க சனநாயகம்!

ஓங்குக இந்திய குடியரசின் புகழ் !!

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on "குடியரசுதின நல்வாழ்த்துகள்!"

  1. அக்கா, அக்கா என்றாய்
    அக்கா வந்து கொடுக்க
    சுக்கா, மிளகா சுதந்திரம் கிளியே !

    என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடியது ! பாரதியாரின் தாசனாகக் கூறிப் பெயரைக் கூடப் பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டவர். பாரதியார் “ஆனந்த சுதந்திரம் அடைத்து விட்டோம்”, என்று சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பாடியவர். ஆனால் பாரதிதாசன் சுதந்திரப் போராட்டத்தைக் கிண்டல் செய்தவர்.

    ‘ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் ‘ என்று பாரதியார் தீர்க்க தெரிசியாய் 1908 இல் கனவு காணும் போது, விடுதலை இயக்கத்தைப் பாரதிதாசன் ஒரு பாட்டில் நக்கல் புரிந்து கேலி செய்வதைப் பலர் அறிய மாட்டார்கள்! கூண்டுக் கிளியைப் பற்றி எழுதும் போது பாரதிதாசன், ‘அக்கா! அக்கா! என்றாய், அக்கா வந்து கொடுக்க சுக்கா, மிளகா, சுதந்திரம் கிளியே ? ‘ என்று எள்ளி நகையாடுகிறார்!

    இந்த முரண்பாட்டைக் காட்டிய திருமிகு பவள சங்கரிக்கு எனது பாராட்டுகள்.

    சி. ஜெயபாரதன்.

  2. ஐயா, ”சுக்கா, மிளகா சுதந்திரம் கிளியே !” என்ற இந்த வரிகள் எத்துணை ஆழ்ந்த கருத்துகள் கொண்டவை என்பது தாங்கள் அறியாததல்ல என்பதை நானும் அறிவேன். ஆனால் முரண்பாடு பாரதியின் தாசனிடமா? பொருளாதாரம் முதற்கொண்டு சமூக நலம் வரை அத்துணையும் இந்த ஒற்றை வரியில் அடங்கும் என்பது நாம் அறிந்ததேயன்றோ! உலகில் எதுவும் சும்மா கிடைப்பதில்லை. உழைத்தும், முனைந்தும், போராடியும் தானே பெறக்கூடும். மாளாத சொத்து குவிந்து கிடக்கும் குடும்பத்திலும் குந்தித் தின்றால் மூன்று தலை முறைகளுக்கு மேல் எதுவும் நிலைக்காது என்பதும் நடைமுறைதானே. சுதந்திரமும் அதுபோலத்தான். நாம்தான் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் தாங்களும் சொல்ல வருகிறீர்கள் என்றே எண்ணுகிறேன். நன்றி ஐயா.
    பவள சங்கரி

  3. கூண்டுக்கிளியைப் பார்த்து பாரதிதாசன், “உள்ளிருந்து நீ விடுதலை கேட்டால் எளிதில் கிடைக்காது,” என்று ஊக்குவிக்காமல் எதிராக அறிவுரை கூறுகிறார். இந்தியாவுக்கு சுதந்திரம் வருமென்று பாரதிதாசன் நம்பவில்லை.

    இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த பிறகு, அதைக் கொண்டாடவில்லை அவர். விடுதலைப் பிதாவை வாழ்த்தவுமில்லை. காந்திஜி சுடப்பட்டு மரித்த போது ஓர் இரங்கற்பா பாடவில்லை.

    சி. ஜெயபாரதன்

  4. மேலும் ஒரு குறிப்பு.

    புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சுதந்திரப் போராட்ட காலத்திலே பிறந்து, ஒன்றாய்ப் புதுச்சேரியில் பாரதியாருடன் விடுதலைப் போராட்ட உணர்ச்சியோடு வாழ்ந்து, சுதந்திரம் கிடைத்த போது அதைப் பற்றிப் பாடித் தேசீயக் கவிஞராய்ப் புகழ் பெறும் வாய்ப்பை இழந்து, பகுத்தறிவுப் பாதையில் போய்த் திராவிடக் கவிஞராய்ப் புகழ் பெற்றது வருந்தற்குரியது.

    சி. ஜெயபாரதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.