எம்.ரிஷான் ஷெரீப்

 

 

பக்கவாதப் புருஷனுக்கென முதலில்

வீட்டுத் தென்னையில் கள்ளெடுத்தவளின்

தோப்பு மரங்கள்

அத் தடவை காய்த்துக் குலுங்கியது கண்டு

தொடக்கத்தில் ஊர் முழுவதும்

வியப்பாகக் கிசுகிசுத்துக் கொண்டார்கள்

பெண்ணேறும் தென்னைகள்

அதிகமாகக் காய்க்கிறதென

விடியலிலும், இரவிலுமென

எக் காலத்திலும் மரமேறுபவள்

எல்லாத் தென்னைகளினதும் உச்சிகளைத் தொடுத்து

நீண்ட கயிற்றினால் முடிச்சிட்டுக் கட்டினாள்

ஓரோர் மரத்துக்கும்

கயிற்றின் வழியே நடந்து சென்று

மண்பானைகளைப் பொருத்தியும், எடுத்தும் வரும்

கள்ளெடுக்கும் செம்பருத்தி

தென்னை ஓலைகளினூடே தொலைவில்

கடல் மின்னுவதை

எப்போதும் பார்த்திருப்பாள்

தென்னந் தோட்டங்களை வைத்திருப்பவர்கள்

அவளைக் காண வரும் பின் மதியங்களில்

தம் தோப்புக்களைச் செழிக்கச் செய்ய வேண்டுமென்ற

அவர்களது வேண்டுகோள்களோடு பணத்தையும் வாங்கி

பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வாள்

ஒரு தொகை பணம் சேர்த்த பின்

கடலின் அப்புறம் தெரியும் தீவுத் தென்னைக்கு

கயிறெரிந்து முடிச்சிட்டு

கணவனோடு தப்பித்துச் செல்லும் வீரியம்

அவள் கண்களில் மின்னும்

அப்போதெல்லாம்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *