தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 18

6

இன்னம்பூரான்

 

எண்ணெய் காய்கிறது!


செப்டம்பர் 9, 2011: காலை 2 00 மணி:

வாணலியில் எண்ணைய் காய்ந்தால், தீ பற்றி எரியும். சமையலறை எரியும். தீ பரவும், வீடு, அடுத்த வீடு, தெரு, பேட்டை எல்லாம் எரியக்கூடும். இப்போ அப்படித்தான் இருக்கு.

ஊர்திகள் விரைகின்றன. விமானங்கள் பறக்கின்றன. தோசை வார்க்கிறோம். ராணுவம் தயார் நிலையில். இதற்கெல்லாம் கச்சா பெட்ரோலியம் எண்ணைய் வேண்டும். இந்தியா விடுதலை அடைந்த போது, எண்ணெய் கம்பெனிகள் எல்லாம் அன்னியர் கையில். ஒரு பாடாக, நேருவின் பொருளியல் கொள்கைக்கேற்ப அரசின் ஆளுமை, இத்துறையில் வலுத்தது, கே.டி. மாளவியா எந்த அமைச்சரின் துரித நடவடிக்கைகளால். இதை எல்லாம் குறை கூறுபவர்கள் உண்டு. ஆனால், இந்தியாவின் ஆளுமை அதன் வலிமையைக் கூட்டியது. அது எண்ணெய் வல்லரசுகளின் பொறாமையை கிளப்பியது. கச்சா எண்ணெய் ராசாதி ராசர்களுடனும் இந்தியா இணக்கமாக இருந்தது. இது எல்லாம் சூடு ஆறின கதை.

இந்திய பொருளாதாரக் கொள்கைகள் தாராளமயமானது (யாருக்காக?) 1991ல். கடந்த இருபது வருடங்களில் தனியாரின் தொனி கூடி வருகிறது. இத்தனைக்கும், ஆடிட் ரிப்போர்ட்டில் சொல்றமாதிரி, கன்ட்ரோல், அரசு கையில் இருக்க வேண்டும். எண்ணெய் ராசா ரிலையன்ஸ் காலின் மேல் கால் போட்டுக்கொண்டு நைச்சியமாக பேசுகிறது, 2011ல். இந்தியாவிலேயே பெரிய கம்பெனி. பங்குச்சந்தை கண்காணிப்பாளர், முதலீடு செய்து கையை சுட்டுக்கொண்டவர்கள் (உங்களில் சிலர் இருப்பார்கள்; நான் ஓடி வந்து விட்டேன்.), ஆய்வாளர்கள் எல்லாருமே, ‘ரிலையன்ஸ்! ரிலை பண்ணமுடியல்லையே’ என்று அலறுகிறார்கள். பங்குச்சந்தையில் ஏண்டாப்பா விழுகிறாய் என்றால், இது கரடி வித்தை என்கிறது, இந்த அடுக்கு மாடி கம்பேனி.

சற்றே விசாரிப்போம், வாசகர்களில்லாமல், இத்தொடர் அறுந்து போயிருந்தாலும்.

மத்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்கி, இந்திய தணிக்கைத்துறை, இத்துறையின் அரசு-தனியார் கூட்டுப்பணிகளை அலசி, ஆகஸ்ட் 24, 2011 அன்று தன் 203 பக்க அறிக்கையை நம் ஜனாதிபதியிடமும், கச்சா எண்ணெய் அமைச்சரகத்திடமும் சமர்ப்பித்தது. மத்திய அரசு மனமுவந்து அதையும், கிட்டத்தட்ட பூண்டி ஆகிவிட்ட நமது ஏர் இந்தியா கம்பெனி ஆடிட் ரிப்போர்ட்டையும், சில மணி நேரம் முன்னால், நம் நாடாளுமன்றத்தில் (கதவு பாதி மூடின பிறகு) தாக்கல் செய்தது. கேள்வி கேட்க முடியாது பாருங்கள். எனினும், துரிதம் என்று தான் சொல்லவேண்டும். கர்நாடகாவுக்குத் தான் உலகளவில் கின்னெஸ் ரிக்கார்ட்! பெங்களூரு நகர மையம் 53 வருடங்களாக ஆடிட் ரிப்போர்ட்டை தாக்கல் செய்யவில்லை என்று மார் தட்டிக்கொள்கிறது. அது ஒழிந்து போகட்டும்.

இந்த ஆடிட் ரிப்போர்ட் என்ன சொல்றதாம். அரச மரத்தை சுற்றி வந்து வயற்றை தொட்டுப்பார்த்தாளாம், மாதொருத்தி! அந்த மாதிரி நம் ஊடகங்கள் சில மாதங்களாகவே ஊகமும், ஹேஷ்யமும், கசிவுகளாகவும், இல்லாததையும், பொல்லாததையும் சொல்லிக்கொண்டு, அடித்துக்கொண்டன. ரிலையன்ஸ் புலம்பலை விளம்பரப்படுத்தின. நானும் அப்பப்போ ‘வல்லமையில்’ சங்கு ஊதினேன். செவி சாய்த்தீர்களோ, இல்லையோ? அதை விடுங்கள்.

அதிகாரப்பூர்வமான ரிப்போர்ட் கையில். ஆடிட் ரிப்போர்ட்டின் புருஷலக்ஷணம் சுருக்கம். நான் மேலும் சுருக்கினால், ‘சுக்குமி, ளகுதி இப்புலி’ என்று இருக்கும். முக்கியமானவற்றை பட்டியலிடத்தான் முடியும். முழுதாக, ஆடிட் ரிப்போர்ட்டை ஆங்கிலத்திலோ, ஹிந்தியிலோ, இலவசமாகப் படிக்கலாமே.

‘சுருக்’ என தைத்த ‘சுருக்’ ரிப்போர்ட்:

பாரா 3.5: எங்கள் வேலை பலவிதங்களில் தடை பட்டது. காலம் கடந்து, அமைச்சரகம் ‘ஒத்துழைக்க’, ஒரு பாடா ஒப்பேத்தினோம். (நமக்குள்: போன வருடமே ரெடியாக இருந்தது.)

பாரா 4.2.1: ரிலையன்ஸ் ‘மணலை கயிறாகத் திரித்து’ (என் சொல். ஆடிட் ரிப்போர்ட் இத்தனை  வக்கணையா பேசாது. அதுவும் சரி தான்.) ஆடிட் செய்வதையே ‘ஒப்பந்த விரோதம்’ என்று காச்சுமூச்சினர். இத்தனைக்கும் அமைச்சரகம், எங்கள் ஆடிட்டை வேண்டியது மட்டுமல்ல;  மட்டுமல்ல; எங்கள் ஆளுமையை உறுதிப் படுத்தியது.

எக்கச்சக்கமான கேஸ்களில் அரசின் மேற்பார்வை மிகக்குறைவு; பத்துக்கேஸ்களில் ரிலையன்ஸ் அகேர் என்ற கம்பெனிக்கு டெண்டர் இல்லாமல் ‘கேட்டதைக் கொடுத்த’ ஒப்பந்தங்கள்; அரசின் பணம் மாட்டிக்கொண்டிருந்தாலும், கவர்ன்மெண்ட் விதிப்படி தனியார் துறை செய்யவேண்டும் என்று சொல்லவே மாட்டோம். எனினும், விவேகம் என்று ஒன்று எல்லாருக்கும் பொது;

ஹைட்ரோகார்பன் இலாக்கா கடமை தவறியது.. கே.ஜீ. பேஸின் பகுதிகளில், ஒப்பந்தப்படி, 25% பாகத்தை சரண் செய்து, இரண்டாவது (7645 சதுர. கிலோமீட்டர்கள்), மூன்றாவது பகுதிகளுக்கு செல்லலாம். அதை ஏன் விட்டுக்கொடுத்தார்கள் என்பது மர்மம்; விட்டுக்கொடுத்த அதிகாரியின் மீது ஏற்கனவே புலனாய்வு விசாரணை இருந்தது குறிப்பிடத்தக்கது. இனியாவது நல்லதொரு தீர்மானம் வேண்டும்;

ஏப்ரல் -மே 2005 லியே தனது இலாக்காவின் விதிகளை மீறியது, ஹைட்ரோ கார்பன் இலாக்கா. எதற்கு? ரிலையன்ஸுக்கு அதீத சலுகைகள் அளிக்க.

பர்மார், பன்னா-முக்தி பகுதிகளில் கைர்ன், ஓ.என்.ஜீ.ஸி, ப்ரிட்டீஷ் காஸ் + ரிலையன்ஸ் ஒப்பந்தங்களில் ஏற்பட்ட ராயல்டி நஷ்டம்  கணிசமானது என்ற ஆடிட் ரிப்போர்ட், அதை கணிக்கவில்லை. 2ஜி படிப்பினையா? எனக்கு அது பிடிக்கவில்லை. ஆனால், ரிப்போர்ட்டை ஊன்றிப் படிக்க வேண்டும்.

அதே மாதிரி ,கே.ஜி-டி6 பகுதியில் செலவை 2.4 பில்லியன் டாலரிலிருந்து, ரிலையன்ஸ் 8.8. பில்லியனுக்கு தூக்கிப்பிடித்ததை பற்றி விமரிசிக்கவில்லை. எனக்கு அது சரியாகப்படுகிறது. ரிலையன்ஸின் பதிலை தன் ஆய்வில் எடுத்துக்கொண்டதாகத் தோற்றம். போகிறப்போக்கு நல்லாயில்லை. ரிப்போர்ட்டை ஊன்றிப் படிக்க வேண்டும். செலவு ஆன பிறகு தணிக்கை செய்யத்தான் வேண்டும். வரிப்பணம், ஐயா.

ஈற்றடி: தனியார் கம்பெனிகள், நாங்கள் ஏதோ அநாவசியமாகத் தலையிட்டு காரியத்தை கெடுக்கிறோம் என்று சொன்னால், வரிப்பணம் வீணாவதை பார்த்துக்கொண்டு, நாங்கள் வாளாவிருக்க முடியுமா? என்ன?;

பாரா 7.1: ஆக மொத்தம், அமைச்சரகம், எழுத்து மூலமாக, ஆடிட் முடிவுகளை ஒத்துக்கொண்டு, ஆவன செய்வதாக, வாக்கு அளித்திருக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 18

  1. ஆடிட் ரிப்போர்ட்டை அரசு மதிப்பது போல் இல்லையே , ட்ராய் , ரெண்டு ஜி விவகாரத்தில் அரசுக்கு இழப்பில்லை என்று சொல்லி இருக்கிறதே ???

  2. வினா/விடை

    ~மக்களாகிய நீங்கள் மதித்தால் பயன் உண்டு. அரசு தரப்பு சொல்வது சரியா, இல்லையா என்பது உங்கள் தேடுதலை பொறுத்து. கட்டுரையை படிக்காமல் இருக்க, உமக்கும், அரசு தரப்புக்கும் உரிமை உண்டல்லவா!

    எல்கே: நான் படித்துக் கொண்டுதான் இருக்கேன். நேரம் கிடைப்பதை பொறுத்து பின்னூட்டம் வரும் 🙂

    ~நல்லது. நானும் பலரிடமிருந்து பின்னூட்டம், குறை காணல், மாற்றுக்கருத்து எல்லாவற்றையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
    நன்றி.

  3. /வாசகர்களில்லாமல், இத்தொடர் அறுந்து போயிருந்தாலும்./

    பின்னூட்டம் இல்லையென்றால் ’யாரும் படிக்கவில்லை; வாசகர்கள் இல்லை’ என நினைப்பது, சரியான கருத்து இல்லை. பின்னூட்டம் இட வேண்டும் என்று வாசகர்களை நாம் கட்டாயப்படுத்த முடியாது. இடுவதும் இடாததும் அவரவர் விருப்பம்; அதே போல் எழுதுவதும் எழுதாததும் எழுத்தாளரின் விருப்பம்.

    ’தணிக்கை என்ற முட்டுக்கட்டை’ எனும் இந்தத் தொடரின் முக்கியத்துவத்தை நாம் அறிவோம். இதில் பின்னூட்டம் இடும் அளவுக்கு அனைவருக்கும் நேரம் இருக்கிறதோ, இல்லையோ; இது குறித்தான அடிப்படைகள் தெரிந்திருக்க வேண்டும். இப்போது நீங்கள் செய்வது, அடிப்படை அறிமுகம். அந்த அளவில் பின்னூட்டம் குறித்துக் கவலையின்றி எழுதுங்கள்.

    சரி, இந்தக் கட்டுரைக்கு வருவோம்:

    /கே.ஜி-டி6 பகுதியில் செலவை 2.4 பில்லியன் டாலரிலிருந்து, ரிலையன்ஸ் 8.8. பில்லியனுக்கு தூக்கிப்பிடித்ததை பற்றி விமரிசிக்கவில்லை. எனக்கு அது சரியாகப்படுகிறது. ரிலையன்ஸின் பதிலை தன் ஆய்வில் எடுத்துக்கொண்டதாகத் தோற்றம்./

    எனக்கு இது சரியாகப் படவில்லை. இங்கு இன்னும் ஆழமாக ஆராய்ந்தார்களா? முட்டுக்கட்டையைச் சரியாகப் போட்டார்களா என்பது என் ஐயம்.

  4. //ஈற்றடி: தனியார் கம்பெனிகள், நாங்கள் ஏதோ அநாவசியமாகத் தலையிட்டு காரியத்தை கெடுக்கிறோம் என்று சொன்னால், வரிப்பணம் வீணாவதை பார்த்துக்கொண்டு, நாங்கள் வாளாவிருக்க முடியுமா? என்ன?//

    அருமை!

  5. படிக்கையிலேயே மனம் கொதிக்கிறது ஐயா. ஆனாலும் அரசாங்கம் ஆடிட் ரிப்போர்ட்டை எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதைத் தான் 2G வழக்குகளிலிருந்து தெள்ளத் தெளிவாகி விட்டதே. ஊழலுக்குத் துணை போகும் இந்த அரசு தன் அமைச்சரவை மந்திரிகள் மட்டுமே வாழ்ந்தால் போதும் என நினைக்கிறது. இதுவரை காணா ஊழலும், இதுவரை இவ்வளவு மோசமான பிரதமரைக் காணமுடிந்ததில்லை என்னும்படி ஒரு கோழையான பிரதமரையும் வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்?? புரட்சி ஒன்று தான் ஒரே தீர்வு எனச் சில சமயம்/பல சமயம் தோன்றுகிறது.

  6. இதில் ஒன்றும் வியப்பு இல்லை கீதா அவர்களே!

    இந்த பிரதமரை செயலற்றவராக, திறமையற்றவராக காட்டினால் தான் ”அடுத்த வாரிசு” காந்தி பிரதமராக முடியும்! அனைத்தும் சரியாக திட்டமிடப்பட்டு சரியான திசையில் நகர்ந்து கொண்டிருக்கின்றன! வாரிசு காந்தி வந்து பாரதத்தையே அடமானம் வைக்கும் வரை இது தொடரும்!

    தவறாக எண்ண வேண்டாம். நான் அரசியல் கலப்பற்றவன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *