படக்கவிதைப் போட்டி (117)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
சாந்தி மாரியப்பன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (01.07.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையுமபெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.
எது சிறைப் புறா ?
சி. ஜெயபாரதன், கனடா.
நான்கு வேலிக்குள் அடைபட்ட
ஆண் புறாவுக்கு
கழுகுப் பகையில்லை !
உணவுப் பஞ்சம்
எப்போதும் கிடையாது !
குடி இருக்க
கூடு தேவை யில்லை !
புயல், பேய் மழை,
இடி மின்னல்
அடிப்பு எதுவு மில்லை !
தனிமையில் நொந்து துடிப்பது
ஆண் புறா !
விடுதலையாய்
வெளியில் சுற்றும் பெண் புறா வந்து
வாசலில் நின்றது.
கடுமையான வாழ்வு எனக்கு !
கூடு கட்ட மரமில்லை !
குஞ்சு பொரிக்க
அஞ்சுகிறேன் தனித்து !
உறவு கொள்ள
ஆண் துணை இல்லை !
ஊர்ப் பஞ்சத்தில்
உணவில்லை !
கழுகுக் கிரை ஆவேனோ ?
இல்லை புயல் காற்றில்
மரிப்பேனோ ?
கூட்டில் அடை பட்டாய் நீ !
நாட்டில் அடைபட்டேன் நான் !
இப்பிறப்பில் நாமினி
இணையோம் !
கூட்டுக்குள் நுழையத்
துடிப்பது நான் !
விடுதலைப் பெற
விழித்தி ருப்பது, நீ காத்திருப்பது நீ.
எது நடக்கும் ?
வெளியே நீ வருவாயா ?
இல்லை
உள்ளே நான்
அடைபடு வேனா ?
நம்முறவில்
விதி என்ன
விளையாடுகிறதா ?
++++++++++++
உண்மைக்காதல் : மனிதக் காதலுக்கு தூது சென்றோம் பெண் புறாவே !
மனித குலம் ,நம்மை பிரித்து வைத்து பார்ப்பதென்ன
பெண் புறாவே!
காதலெனும் வானத்தில் பெண் புறாவே!
சிறகடித்துப் பறந்திருந்தோம் பெண் புறாவே!
உன்னைக் கூண்டில் அடைத்தது ஏன்
பெண் புறாவே!
உயிரும், உடலும் ஒன்றிணைந்து வாழ்வது போல்
பெண் புறாவே!
மகிழ்வோடு வாழ்ந்திருந்தோம் பெண் புறாவே
உயிரையும், உடலையும் பிரித்ததென்ன
பெண் புறாவே!
காதலெனும் அமுதைப் பருகி மீண்டும்
உயிர்த்தெழுவேன் பெண் புறாவே!
காதல் கதை என்றால் பெண் புறாவே!
பல தடவை படித்திடுவார் பெண் புறாவே!
பிள்ளைகள் காதல் செய்து விட்டால் பெண் புறாவே!
வெகுண்டெழுந்திடுவார் பெண் புறாவே!
திரைப்படத்தில் காதல் என்றால் பெண் புறாவே!
கண் இமைக்காமல் பார்த்திடுவார் பெண் புறாவே!
பிள்ளைகள் காதல் திருமணம் செய்து கொண்டால்
பெண் புறாவே!
கௌரவ கொலை செய்து சாதியை வாழ வைப்பார்
பெண் புறாவே!
மனிதர்கள் போல் நாம் இல்லை பெண் புறாவே!
இறைவனைப் போல் பறவைக்கும்
சாதி இல்லை பெண் புறாவே!
தடைகள் உடைத்து பெண் புறாவே!
உன்னைச் சேர்ந்திடுவேன் பெண் புறாவே!
ஆண்-
அன்பே! ஏனடி எட்டத்தில் நிற்கிறாய்
அருகில் வா உனைக் கோதி விடுகிறேன்
உன் பயிர்ப்பினைத் தூர எறியடி
உரசி இன்புற உள்ளம் துடிக்குது
அண்டை வந்தெனதாருயிர் உன்னெழிற்
சொண்டை நீட்டடி சொர்க்கத்தைக் காணுவோம்
தண்டியாதெனைத் தத்தியருகில்வா
தாபம் தீர்க்கலாம் கோபமெதற்கடி
பேடு-
போங்களிந்தப் பொல்லாத சிறையினில்
ஏங்கும் போதிலும் உங்களுக் கெப்பவும்
தாங்கொணாதொரு தாபமும் கேடதோ
தனித்த வாழ்வு முடியட்டும் பார்க்கலாம்.
இருவரும்-
அன்பிலாதவர் எம்மைப் பிரித்தனர்
அடைபட்டிங்கு சிறையில் தவிக்கிறோம்
இன்ப வாழ்வை இழந்து தவிக்கினும்
இணைந்த எங்களின் காதலழியுமா
எம்மைப் போன்று பல் மாந்தரும் தங்களின்
இனிய காதலை, வாழ்வை இழந்தொரு
பொய்மையான திரைத் தொடர்போடு தம்
போலி வாழ்வைக் கடத்துகின்றாரதால்
எம்மையும் பிரித்துச் சிறை தன்னிலே
இடுவதால் வரும் துன்பமறிகிலார்
அம்ம! இந்த நிலையினில் எங்களை
அடைத்தனர் அதை என்னென்று சொல்லுவோம்.
மங்காத்தா
விட்டு விடுதலையாகி
தடைகளை உடைத்து
கட்டுக்கள் நீக்கி
பறந்திட நினைக்கும் ஒருகணம்
மறுகணம்…
சாவுவீட்டு வைராக்கியம் போல்
உலகவாழ்வில்
கட்டுண்டு வீழ்ந்து
காண்பதெலாம் விரும்பி
சிக்கலில் சேர்ந்து
உழன்றிங்கு நிற்கும் மனம்.
பெண்ணே தாய்
அவளேத் தெய்வம்
பெண்ணுரிமை பெண்ணியம் – என
பெரும் பெரும் வார்த்தைகள்
சொல்லி நிற்கும் ஒரு புறம்.
மறுபுறம்….
பெண்ணடிமைச் செயல் புரிந்து
மாதர்தம்மை இழித்துரைக்கும்
மடமைகள் பலசெய்து
ஆணாதிக்க அதிகார
அழிச்சாட்டியம் தலைத்தூக்கும்
ஒருபொழுது
பிறர் நலம் விரும்பி
நன்மை பல நாடிச்
செயும் செயல்கள் நூறு
மறுபொழுது…
சுயநலம் தலைத்தூக்கி
சுற்றத்தின் நலம் மறந்து
அழுக்காறுற்று அவ்வியம் பேசி
பிறர் நலம் கெடுக்கச்
செய்திடும் பல்லாயிரம்.
உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசி
உள்ளே வெளியே என்று
மனம் காத்தில் ஆடி
நிலைமாறி அலைபாயும் – நான்
நிதமிங்கு வாழும் இவ்வாழ்க்கை.
நடக்குமா நல்லது…
இணையைப் பிரிப்பது இவன்வேலை
ஈவு இரக்கம் இலாமனிதன்,
துணையா யிருக்கும் உறவுகளைத்
துண்டாய் ஆக்குதல் இவன்குணமே,
உணவு தேடி வெளிவந்த
ஒற்றைப் புறாவைப் பிடித்தடைத்தான்,
துணைப்புறா தேடிக் கண்டதிங்கே
தீர்வு நல்லதாய்க் கிடைத்திடுமோ…!
-செண்பக ஜெகதீசன்…
கோயில் மாட புறாவாய் சுற்றிய என்னை சிறையில் அடைத்தாய்
எனது காதலனை பிரித்து என்னை தவிக்க வைக்கிறாய்
காதலனின் அழைப்பு என் மனதை அலைக்கழிக்கிறது
எங்கள் சேர விடாமல் தடுப்புகள் இருக்கின்றதே
தூர இருந்தாலும் , எனது மனம், இரு மனம் கொண்ட ஒரு மனம்!
மனமிறங்கி என் காதலனுடன் சேர விடை கொடுப்பாயா மனிதா.!
ரா. பார்த்தசாரதி
பறவைகளின் பிரார்த்தனை..!
==========================
சுதந்திரமென்ப தனைவருக்கும் பொதுவானா லது
—-சுதந்திரமாய்த் திரியும் பறவையின மதில்சேராதோ.?
அகத்தில் மனிதனை அடைத்தாலது பாவமெனில்
—-ஜகத்தில் பறவைக்கது பரவலாய்ப் பொருந்தாதோ.?
பகையின்றி வாழ்ந்தோம் பகட்டாகப் பறந்தோம்.!
—-பூவெழில் வனப்புடன் வட்டமாய்த் திரிந்தோம்.!
வகையாயெமைக் கூண்டிற்குள் அடைத்து விட்டான்.!
—-பகையானான் பரந்த மனம்கொண்ட பறவைக்கே.!
அனைத் துயிருக்குமொரே நீதியெனில் பறவையை
—-அடைத்து வைக்கும் செயலுக்கென தனிநீதியா.!
அநியாயமாய் கூண்டுளடைத்தது? ஏனெனக் கேட்டால்
—-அன்பு பாசமென்பார் அனைத்துமே பொய்யாகும்.!
கனியைப்பறித்தீர் காடுகளை கருணையின்றி அழித்தீர்.!
—-கட்டுக்கடங்கா யெம்சுதந்திர மதைநீர் தட்டிப்பறித்தீர்.!
குற்றம்கண்டா? கூண்டிலே அடைத்தீர்? எனக்கேட்டால்
—-பற்றுகொண்டே அடைத்து வளர்க்கிறே னென்பார்..!
பறவைகள் பூமிக்குக் கிடைத்ததோர் புண்ணியஜீவன்.!
—-இயற்கையைக் காக்குமுயருளம் கொண்ட உயிரினம்.!
எம்மைச் சொந்தமாக்க கூண்டுக்குள் அடைத்தசெயலை..
—-எந்தமன்றத்தில் வழக்காடியாம் விடுதலை பெறுவோம்.!
யாரிடம் கேட்பது பாவத்துக்கு மோட்சமுண்டாவென
—-ஆரூடம் சொல்லென கூண்டுக்கிளியிடம் கேட்டேன்,?
பந்தயம் வைத்து ஆரூடம் சொல்லி நம்மால் பிழைக்கும்
—-பாவமனிதரும் பிழைக்கட்டுமெ யென்றான் சகோதரன்.!
வளமுடன் வாழ்கவென்பான் ஆரைப் பார்த்தாலும்.!
—-வானிலே பறந்த எங்களை வலைவைத்துப் பிடிக்க..
அனுதினமும் வருவான் அருமையாய் பேசுவானவன்.!
—-அடிமை வாழ்வு கொடிதென சற்றும் உணராதவன்.!
சிறுஅறையைச் சுத்தம்செய்ய நித்தமவன் வருவான்.!
—-கறுப்புள்ளக் கயவனைக் கண்டுகொள்ள மாட்டோம்!
மிரண்டகண்ணுடன் மீளாத்துயரோடு வானை நோக்கிய
—-இருண்ட வாழ்வெனும் பறக்கமுடியா பரிதாபநிலையுடன்.!
இறகோடுபிறந்து இரும்புச் சிறையில் வாழுமெமக்கு..
—-சிறகையேன் படைத்தாய்?சிந்திக்கிறோம் பலநாளும்!
கூண்டுக்குள் குடும்பம்செய்தே குறையிலா வாழ்வுபெற..
—-குஞ்சொன்று வேண்டும் சிறகில்லாமல் அருள்வாயா.!
இறைவா…