Category: படக்கவிதைப் போட்டிகள்

  • படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    அழகிய ஆட்டுக்குட்டிகளை தம் ஒளிப்படத்தில் காட்சிப்படுத்தியிருப்பவர் திருமிகு நித்தி ஆனந்த். இந்தப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்து படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருப்பவர் திருமிகு ராமலக்ஷ்மி. இவர்கள் இருவரும் என் நன்றிக்கு உரியவர்கள்!

    ஆட்டுக்குட்டிகளின் இளங்கழுத்தை இறுக்கி வதைக்கும் கயிற்றைக் காண்கையில் நம் மனம் பதைக்கின்றது. இவற்றின் எதிர்காலம் குறித்த அச்சத்தை அது விதைக்கின்றது. இலையும் தழையும் கிடைத்தாலும் தலைக்கு ஆபத்து எப்போது வருமோ எனும் அச்சத்தோடு வாழும் நிலையில்  உயிர்களுக்கு நிறைவேது? நிம்மதியேது?

    இந்தப் படம் நம் கவிஞர்களின் உளத்துள் எத்தகைய எண்ணங்களைக் கிளர்ந்தெழச் செய்திருக்கின்றது என்பதை அவர்கள் கவிதைவழி அளந்தறிவோம் வாருங்கள்!

    *****

    ”ஆட்டை வளர்த்து அதன் உயிரைப் போக்குகின்ற கேட்டைச் செய்யும் மனிதரை யார் கேள்வி கேட்பது?” என்று ஆதங்கத்தோடு வினவுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    ஆட்டுக் குட்டிகளாய்…

    ஆட்டை வளர்ப்பான் அறுத்திடவே
    அதிக விலைக்கு விற்றிடவே,
    கேட்டைத் தந்திடும் இச்செயலைக்
    கேட்க ஆளிலை அவனியிலே,
    ஆட்டுக் குட்டிகள் அறியாமல்
    அவனை நம்பி யிருக்கின்றன,
    காட்டும் இலைகளில் மயங்கிடுதல்
    காணலா மின்று மனிதரிலே…!

    *****

    ”மானுடரே! கறுப்பு ஆடு, முள் குத்திற்று என்று தம் தவற்றுக்கெல்லாம் பிறர்மேல் களங்கம் சுமத்தும் கலையை எங்குக் கற்றீர்? எம் இனத்தின்மீது சுமத்திய வீண்பழியை ஒழிப்பீர்!” என்று கலகக்குரல் எழுப்பும் ஆட்டைத் தன் முதல் கவிதையில் காட்டுகின்ற திரு. சீ. காந்திமதிநாதன், தம்முடைய மற்றொரு கவிதையில், ”மனிதர்களே! தீநுண்மித் தொற்றுநோய் முடியும் வரையிலாவது என் ஊன்மீது கொண்ட பற்றினை ஒழிக்கலாகாதா? என்று பரிதாபமாய்க் கேட்கும் ஆட்டின் குரலைப் பதிவுசெய்திருக்கின்றார்.

    கறுப்பு நிற ஆட்டின் முறையீடு:
    இள ஆடும் பயம் அறியாது
    நல விரும்பியாக நீயிரு
    குலம் செழிக்க வாழ்த்துவேன்
    பலம் பெற்ற காளிதாசன் பாட்டால்

    ஆட்டை மேய்த்தவனின் பாட்டை
    நாட்டை ஆண்டவனின் கோட்டை
    கோட்டை விடாது கொண்டதால்
    பாட்டுடைக் கவியோ நாட்டுடைமை

    ஆடென எள்ளி நகை ஆடாதே – நாங்கள்
    நாடாண்ட பரம்பரை சிந்தி!

    வணிகத்தில் புகுந்தது
    ஆங்கிலேயக் கறுப்பு ஆடு
    கணித சாஸ்திரக் கலாசாரம்
    கண்டதோ கறுப்பு ஏடு!

    மனிதநேய பாரத
    பலமே ஆனது கேடு!

    தனித்தனி பிரித்தாளும் சூழ்ச்சி
    பாரதத்தில் வெள்ளையன் ஆட்சி!

    கோட்டையைக் கோட்டைவிட்ட
    ஒற்றுமை யின்மைக்கு
    வைத்துக் கொண்டதோ
    கறுப்பு ஆடென
    என் இனப் பெயர்
    தீராத பழியப்பா

    இனத்தை அழிப்பது பாவம்
    இனத்தைப் பழிப்பதோ மகாபாவம்!

    வாயில்லா ஜீவன் என்பதால்
    வழக்காட இயலவில்லை

    உலக மனித உரிமைக்
    கழகம் இருந்தும்
    கலகம் செய்யும்
    இனப் படுகொலையைத்
    தடுக்க முடியலையே!

    களங்கம் சுமத்தும்
    கலை எங்குக் கற்றீர்?

    முள் குத்திற்று
    கள்ள ரயில்
    கல் தடுக்கிற்று
    கறுப்பு பணம்
    கறுப்பு ஆடு

    மானிடா என்று நீ
    உன்னை உன்னுள்
    தேட முயலுகிறாயோ
    அன்று தான்
    வீண்பழி சுமத்த மாட்டாய்!

    தன் பழி தாங்கிட முடியும்
    பலிகடா வாகிய என்னால்
    என் இனப்பழி முடியலை
    அதனாலே இந்த முறையீடு

    *****

    கருணை மனு….

    தேசப் பிதாவிற்குப் பால் கொடுத்தேன்
    உனக்கோ தோள் கொடுக்கிறேன்
    என் தோல் நீ உரிக்கலாமா?

    உன் நலன் என் நலன்
    உன்றனக்குத் தெரியுமா?

    நெல்லை என்றால் அல்வா
    தில்லை என்றால் நடராசர்
    முல்லை என்றால் பாரி
    எல்லை என்றால் கண்காணிப்பு

    சைவம் என்றால் காய்கறி
    அசைவம் என்றால் நானா?

    என் கொழுப்பு மனித தேகத்தில்
    அதிக நாட்கள் உறையுமாமே!
    அதிக உயிர்ப்பலி வாங்குகிற
    கொவைட்19 தீநுண்மி நோய்த்தொற்று
    அதிக பட்சம் என் ஆயுளோ
    மூவாறு ஆண்டுகள் அறிவாயோ?
    மூவிரு திங்களாவது தின்னாது
    வாயது கையது உன்னைக் கட்டாது
    கயிறது என் கழுத்தில் பாவமே

    என் படைப்பு உனதான பின்பு
    தின்பதை நிறுத்து என் ஊன்
    தீநுண்மி நோய்த்தொற்று
    மடியும் வரையில்…

    *****

    ”தழைகொடுத்து ஆட்டின் தலைகொய்யும் வஞ்சக எசமானர் போன்றோரே அன்பளிப்புத் தந்து அப்பாவி வாக்காளனை ஏமாற்றி ஓட்டு வாங்கும் அரசியலாளரும்” எனும் நடப்பியலைத் தம் படக்கவிதையில் பொருத்திக் காட்டுகின்றார் திரு. ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன்.

    வாக்காளனுக்கு?

    அன்போடு இரண்டு
    ஆடுகள் அளவளாவின!

    ஓராடு சொல்லிற்று,
    போராடும் வாழ்க்கை
    பிற உயிர்க்கெல்லாம்
    நமக்கோ வேளாவேளை
    நற்றளிர்கள், பசும்புற்கள்
    நாவூறும் இலை தழைகள்!

    நமது எசமான் இனி
    நாம் தொழும் இறை
    நினைவில் நீ கொள்
    நம்முயிர் பிரியும் வரை!

    அடுத்திருந்த ஆடு
    ஆதங்கத்தோடு
    பிதற்றிய ஆட்டின்
    பேதைச் செவியில்
    உணரும் வண்ணம்
    உரக்கச் சொன்னது!

    இரையும் புல்லும்
    இனிதாய்க் கொடுத்து
    வளர்ந்த பின்பு
    வாளால் கொல்வர்
    கழுத்தில் இருக்கும்
    கயிறே சாட்சி!

    சிரத்தைக் கொய்யும்
    சிந்தை கொண்டே
    ருசிக்கத் தருவர்
    புசிக்கப் பலவும்!

    உணர்ந்த ஆடு
    உரைத்தது மெல்ல
    உலகில் யாரும்
    உளரோ நமைப்போல்?

    ஏளனத்தோடு எள்ளி
    ஏனில்லை உலகில்
    இரண்டாம் ஆடு
    இரைந்து சொன்னது!

    அரசியல்வாதியிடம்
    அன்பளிப்புப்பணம்
    பெற்று வாக்களிக்கும்
    பேதை வாக்காளனும்
    நம்மினமே, நன்றாக
    நீ உணர்வாய்.

    வரையாட்டிற்குப் புரிந்தது
    வாக்காளனுக்கு?

    *****
    ”குளிர் காலத்தில் கம்பளியாகிறாய்; கொண்டாட்டங்களில் விருந்தாகின்றாய்” என்று ஆட்டின் அவலநிலைக்கு வருந்தும் திருமிகு சுதா மாதவன், கர்த்தர் உம்மை இரட்சிப்பார் என்று ஆடுகளுக்கு நம்பிக்கையூட்டவும் தவறவில்லை.

    ஆகாரத்தில் நீங்கள் ஓர் அங்கம்
    அசைவப் பிரியர்களுக்கு

    மிரள்கின்ற உன் பார்வை
    இப்படியானோமே என்றா?

    குளிர்காலத்தில் கம்பளியாகிறாய்
    கொண்டாட்டங்களில் விருந்தாகிறாய்

    சாணத்தை உரமாக்கினாய்
    பாலினைச் சத்தாக்கினாய்

    கன்னங்களில் அசைப்போட்டு
    மந்தையாய்ச் செல்லும் கூட்டம்

    வரிசையாய் அழகாய் செல்லும்
    உங்கள் ஆட்டு மந்தைக் கூட்டம்

    கர்த்தரின் கைகளில் நீங்களே…
    காத்து ரட்சிப்பர் அவரே
    நீர் தாழ்ச்சியடையீர்!!

    *****

    ”பலிபீடத்தில் நின்றுகொண்டு பச்சைத் தழையை இச்சையோடு உண்டுகொண்டிருக்கும் நாம் வரவிருக்கும் ஆபத்தை உணரவில்லை” என்று ஆடுகளுக்கும் ஆட்களுக்கும் சேர்த்து இரட்டுறமொழிகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்!

    பலியாடுகள்

    உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை
    பிழைப்புக்கேற்ற தொழிலும் இல்லை
    களைத்து ஒதுங்கக் குடிலும் இல்லை
    வறுமையைத் தீர்க்க வழியும் இல்லை
    போதை தீர்ந்த நேரம் இல்லை
    பாதை காணத் திறனும் இல்லை
    நாளை குறித்து திட்டம் இல்லை
    பிரரைக் குறைசொல்லி வாழ்ந்துவிட்டோம்

    ஐந்தாண்டுக்கு ஒருமுறை
    அதிகாரம் மாற்ற வாய்ப்பிருந்தும் -அதை
    ஆயிரம் ஐநூறுக்கு விற்றுவிட்டு
    எதிர்காலம் தொலைத்து விட்டோம்…

    பலிபீடத்தில் நின்றுகொண்டு
    பச்சைத்தழை இலைகள் உண்டு
    வரும் கொடுமை உணராத
    பலியாட்டு மந்தைகள் நாம்…

    *****

    ஆட்டுக்குட்டிகளை வைத்து நாட்டுமக்களுக்கு(ம்) நல்லறிவூட்டியிருக்கின்றார்கள் சிந்தனை வளம்செறிந்த வல்லமைக் கவிஞர்கள்; பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தெரிவுசெய்திருப்பது அடுத்து வருகின்றது…

    தன்னம்பிக்கை!

    அம்மாவைக் காணோமே தம்பி – அட
    அதற்காயேன் அழவேண்டும் வீணாக வெம்பி?
    எம்மா துயர் வந்த போதும் – துணிந்(து)
    இருப்போம் நாம் எப்போதும் எம்மையே நம்பி!

    கண்ணாகக் காத்திட்டாள் அம்மை – நாம்
    கவலைகள் இல்லாமல் வாழ்ந்தது உண்மை!
    எண்ணாமல் தன் நெஞ்சில் எம்மை – அவள்
    எங்கு போய் மாண்டாளோ! எவர் செய்த தீமை?

    ஆயிரம் துயர் வந்த போதும் – நாம்
    அழுவதாற் பயனில்லை கலங்காதே தம்பி!
    தாயவள் பாலினி இல்லை – நாம்
    தழைகுழை யுண்டுதான் வாழணும் தம்பி!

    காய்கின்ற வயிற்றுடன் அன்னை – வந்து
    கட்டியணைத்துப் பால் தருவாளென்றெண்ணி
    சேய்கள் நாம் இனிவாழலாமோ – இல்லை
    தேடுவோம் உணவினை முயற்சிகள் பண்ணி!

    கயிற்றினால் கட்டி வைத்துள்ளார் – நாம்
    கட்டினை அறுத்துவிட் டோடுவோம் தம்பி
    வயிற்றிலே பசியோடு வாடி – நாம்
    வாடவோ வா உடன் சேர்ந்தறுத் தெறிவோம்!

    துள்ளித் திமிறிடுவோம்நாம் – எங்கள்
    சுதந்திரம் காணத் துடித்தெழுவோம் நாம்
    அள்ளி அணைத்தவெம் அன்னை – தன்னை
    அறுத்தபா தகர்தனை நம்பிடலாமோ?

    ”அன்னை வந்து பால்தருவாளென்று காய்கின்ற வயிற்றுடன் சேய்கள் நாம் இனியும் வாழலாகாது. நாமே முயன்று உணவினைத் தேடுவோம்; அதற்கு முதலில் அன்னையை அறுத்துக் கொலைசெய்த பாதகரிடமிருந்து தப்பிச் செல்வோம்” என்று ஆட்டுக்குட்டிகள் தீட்டும் திட்டத்தைத் தம் பாடலில் அழகாய் வடித்துக் காட்டியிருக்கும் திரு. சித்தி கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 238-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 238-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    வல்லமை வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    புகைப்படக் கலைஞர் திருமிகு. நித்தி ஆனந்த் படம்பிடித்துத் தந்திருக்கும் இந்த வண்ணக் கோலத்தை, வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டி 238க்கு அளித்திருப்பவர் திருமிகு. சாந்தி மாரியப்பன். கலைஞருக்கும் தேர்வாளருக்கும் என் நன்றி!

    இல்ல வாயில்களில் பெண்கள் வரையும் மாக்கோலம் கவின்கலைகளில் சிறந்த ஒன்றாகும். எத்தகைய கணிதக் கருவிகளின் துணையுமின்றிக் கண்களையே நுண்ணிய அளவுகோலாய்க் கொண்டு வரையப்படும் கோலங்கள் கவனக்குவிப்புக்கும், பிசிறில்லாமல் துல்லியமாகக் கோடுகளும் பிற வடிவங்களும் வரைவதற்கும் நல்ல பயிற்சியாகும். வண்ணக் கோலங்களால் இல்லம் பொலிவுறுகின்றது; உள்ளம் மகிழ்வு பெறுகின்றது. அரிசி மாவில் இடப்படும் கோலம், சிற்றுயிர்களுக்கும் உணவாய் அமைவதனால் உண்டிக்கொடை அளித்த சிறப்பையும் பெண்டிருக்கு நல்குகின்றது.

    நம் முன்னோர் தொடங்கிவைத்த பல செயல்களை, எவ்வித மனச்சாய்வுமின்றி, ஆய்ந்துபார்த்தால் அவை தனிமனித மகிழ்ச்சியைத் தாண்டி பிற உயிர்களின் மகிழ்ச்சியையும் நிறைவையும் உள்ளடக்கியதாகவே அமைந்திருப்பதை அறியமுடிகின்றது.

    இனி, இந்த வண்ணக் கோலத்திற்கு இசைவான பாடல்களைப் புனைந்துதர நம் கவிஞர்கள் காத்திருக்கின்றார்கள். புத்தாண்டு வாழ்த்துக்களோடு அவர்கள் அனைவரையும் வரவேற்பதில் மகிழ்கின்றேன்.

    *****

    ”மார்கழிக் காலைகளை அலங்கரிக்கும் முழுநிலாக் கோலங்கள் மதி சூடிய ஈசனையும் அதிசயிக்க வைப்பவை” என்று பாராட்டுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கோலங்கள்…

    ஒழுங்காய் வராது ஒருநிலாவும்
    ஒருசில நாளில் மறைந்துவிடும்,
    எழுந்தன மார்கழிக் காலையிலே
    எழிலுடன் நிலத்து நிலவுகளே,
    அழுது வடியும் பனியினிலும்
    அழகுக் கோலமாய்த் தெருவினிலே,
    எழுதிய ஈசனும் அதிசயிக்க
    எழுதினர் பல்வகைக் கோலங்களே…!

    *****

    ”உழவுக்கும் உழைப்புக்கும் உயர்வளிக்கும் கோலம்; தமிழ்நாடு போற்றுகின்ற தைப்பொங்கல் கோலம்” என்று கோலத்தின்சீர் பரவுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    தைப்பொங்கல் கோலம்

    வாழும் மக்கள் வயிற்றுப்பிணித் தீர்த்துவிடும் கோலம்
    வஞ்சமில்லா நெஞ்சம்மகிழ் பச்சைப்பசுங்கோலம்
    கழனிபுகு விவசாயி கதிஉயர்த்தும் கோலம்
    உழவுக்கும் உழைப்புக்கும் உயர்வளிக்கும் கோலம்

    கதிரவனின் தேர்திரும்ப வரவேற்கும் கோலம்
    நிலமடந்தைக் கதிராடை உடுத்திநின்ற கோலம்
    பசுஞ்சோலைப் பூக்கப் பிஞ்சு மொட்டுவிடும் கோலம்
    வசந்த காலம் வருவதையே கட்டியஞ்சொல்லும் கோலம்

    காடுவளர் காளைக்கெல்லாம் கனிவளிக்கும் கோலம்
    கன்னிப்பெண்கள் குடி உயர்த்தும் கதிர்மணிக் கோலம்
    கூடி நாமும் வாழவழிச் செய்யும் சீர்க் கோலம்
    கன்னித் தமிழ்நாடு போற்றும் தைப்பொங்கல் கோலம்

    *****

    நீர்தெளித்துக் கோலமிட்டு யார் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாள் இப்பாவை? என்று வினாவெழுப்பும் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ், வேலைதேடி நகரத்துக்குச் சென்றவன் வீட்டு வாயிலை அலங்கரிப்பவையோ நெஞ்சில் ஒட்டாத ஒட்டுக்கோலங்கள் என்ற உண்மையையும் உரைக்கத் தவறவில்லை.

    வாசலிலே நீர் தெளித்து
    வண்ணக் கோலம் போட்டுவைத்து
    யார் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும்
    இத்திருப்பாவை?

    நாணயத்தைக் கோலத்தில் சேர்த்து
    நாராயணனுக்கு நாகரிகமாய் உணர்த்தியதோ
    லட்சுமி குடியிருக்கும் இவ்விடத்தை
    இத்திருப்பாவை?

    பூக்கோலம் போட்டு வைத்துப்
    பூமாலை தொடுத்து வைத்தேன்!
    பாமாலை தொடுத்து உன் திருத்தோள்களில்
    மணமாலை சூடிடக் காத்துநிற்கும்
    இத்திருப்பாவை!

    வாய்ப்புத்தேடி வாழ்க்கையைத்தேடி
    வீடு வாசல் துறந்தவன்
    வானுயர்ந்த மாளிகையில்
    வாசல் சுருங்கிட வாழ்கின்றான்!

    மார்கழி மறந்து போர்வைச் சிறைக்குள்
    விடிந்தும் உறங்குகிறான்
    இவன் வாசல் கூட அழகாய் ஜொலித்திடும்
    வண்ண வண்ண மையால் எழுதிய
    அழியாத கோல ஒட்டிகளால்!

    காலம் மாறிப்போச்சு…..
    கோலமும் மாறிப்போச்சு!

    *****

    மாக்கோலத்தை வைத்து மனிதர்களின் மனக்கோலத்தை அழகாய்ப் படம்பிடித்துக் காட்டியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டும் நன்றியும்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    நல்வரவு

    விருந்தினர் வருகையும்
    இல்லத்தின் நிறைவும்
    வாசலில் அறிவிப்போம்!

    அரிசிமாவில் கோலமிட்டுப்
    பல்லுயிர் வாழ்ந்திடவே
    தமிழ்மறையில் ஒளித்துவைத்தோம்!

    காலையும் மாலையும்
    கோலமிடும் உடற்பயிற்சியினைக்
    கலையுடன் இணைத்துவைத்தோம்!

    குடும்பத்தில் உள்ள
    நெளிவு சுளிவுகளைச்
    சிக்கல் கோலங்களில் பயிற்றுவித்தோம்!

    கூரிய சிந்தனைகளுடன்
    மனதை ஒருநிலைப்படுத்திடவே
    புள்ளிகள் இணைப்பதில் கடத்திவைத்தோம்!

    மார்கழித் திங்கள்
    (இறை)சக்தியின் வருகை
    அதிகாலை அறிந்திடுமே
    எம்மனைப் பெண்கள் நலம்பெற்றிடவே
    வாசலை அலங்கரித்துத் தொழவைத்தோம்!

    கற்பனை ஓவியங்களைக்
    கைத்திறன் நேர்த்தியின் அழகினிலே
    வீதியில் பிரதிபலித்தோம்!

    மனதின் மாசினைப் போக்கிடவும்
    பகைமை மறந்திடவும்
    எந்நாளும் நல்வரவைப் போற்றிடுவோம்
    அதைப் பறைசாற்றிடும் வகையிலே
    வாசலில் கோலமிட்டு உறுதிசெய்வோம்!

    ”குடும்பத்தின் நெளிவுசுளிவுகள் உணர்த்தும் சிக்குக் கோலங்கள்; கைத்திறன் வளர்க்கும் கற்பனைக் கோலங்கள், சிந்தனையைச் செம்மையாக்கும் புள்ளிக் கோலங்கள் என்று கோலத்தின் மூலமே மனித வாழ்வியலை விளங்க வைத்திருக்கின்றனர் நம் மக்கள்” என்று நவின்றிருக்கும் திரு. ராவணா சுந்தரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தெரிவுசெய்து பாராட்டுகின்றேன்.

    இன்றோ மாக்கோலங்கள் மக்களின் மனக்கருத்துக்களை வெளிப்படுத்தும் சாதனங்களாகவும் நூதன அவதாரம் எடுத்திருப்பது காலத்தின் கோலமே!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 219

    படக்கவிதைப் போட்டி – 219

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    PicturesQueLFS எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (07.07.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 195-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    வல்லமை வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    நீரில் கால்நனைத்து நிற்கும் கருவேழத்தைத் தன் புகைப்படக் கருவிக்குள் அடைத்து வந்திருப்பவர் திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணன். ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து இவ்வினிய படத்தைத் தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்குத் தந்தவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றி!

    ”குன்றுகளுக்கு முன்னே மற்றொரு கருங்குன்றென கம்பீரமாய்க் காட்சியளிக்கும் இக்களிற்றைக் காணும்போது, காஞ்சியை ஒரு காலாலும், வடக்கேயுள்ள உச்சயினியை மற்றொரு காலாலும் மிதித்துவிட்டுத் திரும்பி தெற்கேயுள்ள ஈழத்திலும் கால்பதித்து உறையூர் மீளும் கிள்ளியின் வெற்றிக் களிறு இதுவோ?!” என்றோர் ஐயம் மெல்ல என்னுள் எட்டிப் பார்க்கின்றது.

    கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால்
    தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப் – பிற்றையும்
    ஈழம் ஒருகால் மிதியா வருமேநங்
    கோழியர்கோக் கிள்ளி களிறு
    . (முத்தொள்ளாயிரம் – 73)

    களிற்றை வைத்துக் கவின்மிகு கவிதைகள் வடிக்கத் துடித்துக்கொண்டிருக்கும் கவிஞர் குழாத்தை வரவேற்று அமைகிறேன் இப்போது!

    *****

    ”களிறு, வேழம், ஒருத்தல், தும்பி என்று எத்தனைப் பெயர்கள் அழகு ஆனையை அழைப்பதற்கு! உரறுதல், முழங்குதல், பூசல் என்று எத்தனை ஒலிகள் அதன் ஓசையைக் குறிப்பதற்கு!” என்று எண்ணி வியக்கிறார் ஆ. செந்தில் குமார்.

    அப்பப்பா… அழகு யானை…

    பிளிறல் சத்தம் செய்வதனால்.. களிறே என்றதை அழைத்தனரோ…!
    வெள்ளைத் தந்தம் உடையதனால்.. வேழம் என்றதை விளித்தனரோ…!
    பருத்த உடலாய் இருப்பதனால்.. ஒருத்தல் என்றதைப் பகன்றனரோ…!
    கருத்த நிறமாய் உள்ளதனால்.. கரியே என்றதைக் கூவினரோ…!
    மிடுக்காய் அதுவும் நடப்பதனால்.. மத்தகயமே என்றனரோ…!
    துதிக்கை ஒன்று நீண்டதனால்.. தும்பி என்றதைப் போற்றினரோ…!
    எத்தனை.. எத்தனை.. எத்தனை.. எத்தனைப் பெயர்கள் யானைக்கு…!

    துன்பத்தில் ஒலித்தல் புலம்பல்.. அச்சத்தில் ஒலித்தல் கதறல்..
    விரைந்து ஒலித்தல் கம்பலை.. பெருங்குரல் என்பது பூசல்..
    உரறுதல் இயம்புதல் முழங்குதல்.. நரலுதல் சிலைத்தல் இசைத்தல்..
    பயிர்க்குரல் உயிர்க்கும் என்ற.. எழுப்பும் ஓசைகள் பற்பல..
    எத்தனை.. எத்தனை.. எத்தனை.. எத்தனை ஓசைகள் ஆனைக்கு…!
    அப்பப்பா.. ஆனைக்கும் மனிதனுக்கும்.. ஆண்டாண்டாய் ஒரு பிணைப்பு…!
    ஆனையை வியப்பதா…? மொழியை உருசிப்பதா…? புரிந்திடவில்லை எனக்கு…!

    *****

    ”சோற்றுவளம் மிக்க சோழநாட்டில் இப்போது சோற்றுக்குப் பஞ்சம்! அதனால் கவளச் சோற்றுக்காகக் கும்பிடு போடும் அவலம் நேர்ந்தது எம் சோதரர்க்கு. மாக்களை இரக்கமின்றித் துன்புறுத்தும் மக்களே! எமக்கு உதவுங்கள்!” என்று இறைஞ்சும் யானை உருக்கமாகக் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.

    சோழன் எங்கே?

    முறை தவறா சோழ நாட்டில்
    மூதாதையர் போர் அடித்தார்
    சோற்றுக்குப் பஞ்சமாமிப்போ
    சோழன் எங்கே? தேடுகிறேன்
    வளமான அந்நாட்டைக் காண
    வனம் விட்டு ஓடி வந்தோம்
    மதப்பேய் பிடித்த சிலர் எம்மை
    மதயானை எனப் பெயர் சூட்டி
    அடித்து அடக்கி அண்ணனை
    ஆலயத்தில் முடக்கி விட்டார்
    கவளச் சோற்றுக்காக அனைவருக்கும்
    கும்பிடு போடுகிறான் தினமும்
    இருகாலில் நின்று வித்தை காட்ட
    இரும்புச் சங்கிலி பிணைப்பு தம்பிக்கு
    தப்பி ஓடி வந்த நான்
    திசை தெரியாமல் நடந்த போது
    கண்டேன் சோழன் அம்பாரியை
    காட்சிப் பொருளாய் பெட்டகத்துள்
    நாட்டின் வளமென
    நான் செய்த கற்பனை
    நிஜ உலகில் இல்லாது
    நிழற்படத்தில் கண்ணுற்றேன்
    வையகம் ஆண்ட சோழன்
    வரலாற்றில் இடம் பிடித்தான்
    ஆற்று நீரைக் கொண்டு
    அருமையாய் உழவு செய்வீர்
    மாக்களைத் துன்புறுத்தம்
    மக்கள் தம்மைத் தண்டித்து
    நீதி வழங்க எம் சோழன் இல்லை
    நீங்களாவது உதவுங்கள்!

    *****

    ”வசிப்பிடங்களாகிவிட்ட எம் வாழ்விடங்கள்; கற்கட்டடங்களாக மாறிப்போன எம் வழித்தடங்கள்; பேராற்றுக்குச் சமாதி கட்டிவிட்டுப் பெருஞ் சிலைக்குத் திறப்புவிழா! பூவுலகு தமக்கே எனும் கேவல மனிதரின் பேராசைத் தாகம் என்று தணியும்? அன்றுதான் தீரும் எம் தாகமும்!” என்று வேதனையுறும் வேழத்தைக் காண்கிறோம் முனைவர். ம. தனப்பிரியாவின் கவிதையில்.

    தாகம் தீர்ந்திடுமோ….???

    எம் இனத்தின் வாழ்விடங்கள் இன்று மனிதனின் வசிப்பிடம்
    கால்சுவடு பதித்திட்ட வழித்தடங்களில்
    கற்சுவர்க் கட்டிடங்கள்..

    பேராற்றுச் சுவடு அழித்திட்டுப் பெருஞ்சிலைக்குத் திறப்புவிழா
    சூழலியலை மறுதலிப்புச் செய்திட்ட சுற்றுலாத்தல உருவாக்கம்…

    வழிதனை இழந்து, வலியுடன் வலம் வரும்
    எம் இனத்திற்கு நீர்த் தாகம் மட்டும் அல்லவே..

    பெருங்காட்டில் பிடியுடனே பிரியாமல்
    அலைந்திட்ட தருணங்கள் கனவாகப்
    பெரும் தொழிற்சாலைக்கு இடமானதென்ற
    தவிப்பின் தாகம்…

    கழைமூங்கில்தனைச் சுவைத்திட்ட தினம் இனிக்க
    வாழைதனை நட்டு வைத்தே மின்சார வேலியிட்டு
    எம் குருதி உறிஞ்சிடும் நிலை குறித்த
    தவிப்பின் தாகம்…

    நறுமலர் வாசனையோடு குளிர்காற்றை சுவாசித்த நாசியின்றோ
    புகைக்காற்றை நுகர்தல் எண்ணிய தவிப்பின் தாகம்..

    அறிவியல் கண்டுபிடிப்பு என்ற அறியாமைக்குள் வீழ்ந்திட்ட
    அறிவிலி மனித இனம்…

    தரணியில் பிற உயிர் வாழத் தடைவிதித்திடில்
    இயற்கைப் பேரிடர்முன் தன் இயலாமை உணரும்…

    பூலோக உயிர்சுழற்சி மறந்து பூவுலகம் தனக்கே என்ற
    பேரவா கொண்ட மனிதனின் தாகம் தீரும் நாள் எந்நாளோ…?
    எம் இனத்தின் தாகம் தீரும் நாளும் அந்நாளே!

    *****

    ”காட்டில் வாட்டமின்றித் திரிந்து பழகிய யானையைப் பிடித்துவந்து கோயிலில் அடைத்து இரந்துவாழப் பழக்க வேண்டாமே!” என்று கோரிக்கை விடுக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அது வேண்டாம்…

    காட்டி லெங்கும் அலைந்தேதான்
    கண்ட யிடத்தில் நீரருந்தி,
    வாட்ட மின்றியே வளர்ந்திருந்த
    வனத்து யானையைப் பிடித்துவந்து,
    கூட்டமாய் மனிதர் சேர்ந்துவரும்
    கோவில் தலங்களில் பழக்கியதை
    ஆட்டம் காட்டுதல் அதுபோதும்,
    அலைந்தே இரந்திட வேண்டாமே…!

    *****

    வேழத்தை வைத்துச் சமூகத்துக்குத் தேவையான நற்சிந்தனைகளைப் பேசியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    தனியொருவன்!

    இருபெரு கரு உயர்நீல(ள) வரையின்
    இரு கரைமருங்கிடை விரிதிரை புனல் நதியில்
    கருமை இருள் கலைந்த காலை வேளையில்
    கருமை மெய் கலந்த காட்டரசனின் களிப்புறு குளியல்

    இறைவன் அளித்த இயற்கைச் சீதனங்கள்
    இருபெரும் பொன் வெள்ளித் தந்தங்கள்
    இருப்பதனால் வேழம் அவன் இருந்தாலும்
    இறந்தாலும் இருக்கிறது பொன் ஆயிரம்

    தும்பிக்கைதான் அவன் நம்பிக்கை – அதில்
    தூக்கிச் சுமந்தெறிந்த பாரச்சுமைகள் ஏராளம்
    தன்னந்தனி திரிந்தாலும் நன்னம்பிக்கை என்னும்
    தன்னம்பிக்கையால் தாக்கியழித்த தடைகள் எண்ணிலா

    நிலம் அதிரும் அவன் நடந்தால்
    நீர் சிதறும் அவன் அலைந்தால் – நிழல்வனம்
    நடுங்கும் அவன் சினந்தால் – ஆயினும் பாகனின்
    நில் என்ற சொல்லுக்குப் பணிதலில் மிளிரும் அவன் குணம்

    வம்புடை வன்முறை மானுடம் தான்வாழ யானை
    வழித்தடத்தையும் வாழ்விடத்தையும் வழிமறித்தே
    வாரிச்சுருட்டி வாயிலிட்டுவிட்டு அன்புடையவனை
    வம்பன் கொம்பன் என வசைபாடுது

    நாளைய சந்ததியின் நல்வளங்களைச் சூறையாட
    நாடெல்லாம் திரியும் மணல்கொள்ளை மனிதரால்
    நாதியற்றுப் போன நதிகளின் மரணத்திற்கு
    நீதிகேட்டு வந்த நீ தனியொருவன்!

    ”இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் மதிப்புடைய வேழத்தின் வழித்தடங்களையும் வாழ்விடங்களையும் வாரிச்சுருட்டி வாயில் போட்டுக்கொண்ட மானுடம், நாதியற்றுப்போன நதிகளின் மரணத்துக்கு நீதிகேட்டுவந்த தனியொருவனான அவனை வம்பனென்றும் கொம்பனென்றும் வசைபாடுவது முறையோ?” என்று வேழத்தின் அவலநிலையினை ஆழமாய்ப் பேசும் இக்கவிதையை யாத்த திரு. யாழ் பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 190

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ஷாமினி எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (08.12.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி – 188

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    முரளிநாதன் வித்யாதரன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (24.11.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி – 185

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (03.11.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி – 177

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    கீதா மதிவாணன் எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (08.09.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி (172)

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ஜேக்ஸன் ஹெர்பி எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.08.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி (164)

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

     வனிலா பாலாஜி எடுத்த இந்தப்படத்தை திருமதி ராமலஷ்மி ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு  ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (09.06.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி (159)

     

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?


    லோகேஷ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (05.05.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 154-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    நெடிதுயர்ந்து நிற்கும் மரங்களையும் கீழே வீழ்ந்திருக்கும் அவற்றின் வரிநிழலையும் அழகாய்ப் படமெடுத்து வந்திருக்கிறார் திரு. ஆய்மன் பின் முபாரக்.  இப்படத்தை இவ்வாரக் கவிதைப் போட்டிக்காகத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் என் நன்றியறிதலுக்கு உரியோர்.

    வரிசையாய் வானளாவி நிற்கும் இம்மரங்களின் தண்டுப்பகுதியும் கிளைகளுமே பார்வைக்குக் கிடைக்கின்றன. அவற்றின் இலைகள் துல்லியமாய்த் தெரியவில்லை. எனினும் பக்கவாட்டில் காணப்படும் இலைகளின் தோற்றம் வேங்கையை ஒத்திருப்பதால் மேலிருந்து புலிகள் சில கீழே பாயக் காத்திருப்பது போன்றதோர் தோற்றமும் கிடைக்கிறது.

    வேங்கை மரம் (Pterocarpus marsupium) என்றொரு மரம் நம் பண்டைத் தமிழ்நிலத்தில் பிரசித்தம். பொன்வண்ண மலர்களைச் சுமந்திருக்கும் அம்மரங்கள் பார்ப்பதற்கு உண்மையான வேங்கையைப் போலவே தோற்றம் காட்டும் என்பதைச் சங்க இலக்கியங்கள் நமக்கு அறியத்தருகின்றன. வேங்கை மலர்களால் தொடுத்த அசைகின்ற மாலைபோலக் கிடக்கும் புலிக்குட்டிகளை ஈன்று பசித்திருந்த தாய்ப்புலியை நற்றிணைப் பாடலொன்று நமக்கு அடையாளம் காட்டுகின்றது.

    கல்அயல் கலித்த கருங்கால் வேங்கை
    அலங்கல்அம் தொடலை அன்ன குருளை
    வயப்புனிற்று இரும்பிணப் பசித்தென வயப்புலி… (நற்: 383)

    தம் கற்பனை ஊற்றைக் கவிதையாய்ப் பாய்ச்சக் கவிஞர்கள் வரலாம் இனி…!

    *****

    கவின்மிகு காடுகளை அழித்ததால் மழை பொய்த்தது; நிலம் வறண்டது; விலங்குகள் அழிந்தன; புவிவெப்பம் உயர்ந்தது. இனியேனும் இயற்கையைக் காத்து, காற்றையும் வருங்காலத்தில் விலைகொடுத்து வாங்கும் அவலத்தைத் தடுப்போம் என்கிறார் திரு. ஆ. செந்தில் குமார். 

    இயற்கைவளங்களைக் காப்போம்… !

    கிளைகள் படர்ந்த மரங்களடர்ந்த சோலை…
    சோலை நடுவேயொரு செம்மண் சாலை…
    காலங் காலமாய் இருந்த இந்நிலை…
    காலத்தின் கோலத்தால் அழிவதேநம் கவலை…

    கிளைகள் படர்ந்தது…மரங்க ளடர்ந்தது…
    சோலை விரிந்தது… நிழலைத் தந்தது…
    தென்றல் வந்தது… இதமாய் இருந்தது…
    தண்ணென் றிருந்தது.. உள்ளம் மகிழ்ந்தது…

    காடுகள் அழித்தோம்… மழையினளவு குறைந்தது…
    காடுகள் அழித்தோம்… நிலமனைத்தும் வறண்டது…
    காடுகள் அழித்தோம்… வளமிகுஇயற்கை சிதைந்தது…
    காடுகள் அழித்தோம்… உலகின்வெப்பம் உயர்ந்தது…

    காடுகள் அழித்தோம்… விலங்குகள்பலவும் அழிந்தன…
    காடுகள் அழித்தோம்… நீர்நிலைகள்பலவும் வற்றின…
    காடுகள் அழித்தோம்… காற்றில்நச்சுக்கள் மிகுந்தன…
    காடுகள் அழித்தோம்… பருவநிலைகளும் மாறின…

    இன்றைய தலைமுறை மனிதர் நாம்…
    தண்ணீரை விலைகொடுத்து வாங்குகின்றோம்…
    இனிவரும் தலைமுறை மக்கள் தமக்கு…
    இனிய காற்றுக்கும் விலைதரும் நிலைவருமே…

    இனியேனும் விழித் தெழுவோம்…
    இயற்கை வளங்களைக் காத்திடுவோம்…
    இனிவரும் தலைமுறை மக்களுக்கு…
    இயற்கையைச் சிதைக்காது விட்டுச்செல்வோம்…

    *****

    விரிந்திருக்கும் மரக்கிளைகள் தேர்ந்த ஆடலரசியின் அபிநய முத்திரைகளாய்க் காட்சியளிக்கின்றனவே என வியக்கிறார் திருமிகு. திலகவதி.

    பரதத்தின் பாவனைகளா
    வாழ்நாள் முழுவதும் 
    இதன் விரல்களில்….
    ஆடலரசியா…
    இவள்…
    அபிநயம் பிடிக்கிறாள்…

    *****

    மரங்களை வெட்டி ஈட்டும் பணம் நிம்மதி தாராத தனம்; அதுதவிர்த்துச் சாலையெங்கும் நிழல்தரு மரங்களை வளர்ப்போம்; நீண்ட ஆயுளைப் பெறுவோம் என்கிறார் திருமிகு. நாகினி.

    போற்றப்படும் மண்வாழ்வு

    நின்றுநி ழல்தொட ரும்பாதை யென்றொரு
    .. நிம்மதி இல்லாமல் சேருந்த னம்
    அன்றாட வேலையென் றாகிம ரம்வெட்டி
    .. ஆயிர மாயிரம் ஈட்டும்ப ணம்

    சங்கடம் நீக்கலா மென்றெண்ணி டும்மாந்தர்
    .. சாலையில் சூடுதாங் காமல்வீழ் தல்
    இங்கிவர் பாடுக ளென்றாகி டுந்துயர்
    ..  இற்றிட காவலா கும்மரம் நல்

    வீரிய மாகிவ ளர்கின்ற நல்வித்து
    .. விண்ணையும் முட்டிட ஆரோக்கி யம்
    ஊரிலுள் ளோரெவர்க் குந்தரும்
    .. உற்றவோர் தூணாகி மாசிலா தம்

    காற்றுட னாடிடுஞ் சோலையின் மென்மையில்
    .. காலமெல் லாம்வாழ சாலையெங் கும்
    ஊற்றாய்ம ரம்வளர்க் கும்மனி தர்பணி
    .. உன்னத ஆயுளை ஏற்றமாக் கும்

    ஆற்றலும் நல்மனதின் பேரறி வும்பெறுவோர்
    .. அன்றாடம் நிற்கநி ழல்தரும் பேர்
    நாற்றென ஓங்கும ரம்வளர்ந் தால்நிதம்
    .. போற்றுத லானவாழ் வாகுமண் வேர்! 
     
    *****

    ”சாலையை விரிவுபடுத்துகிறோமென்று சோலையை அழித்து நாட்டைப் பாலையாக்காதீர்!” என்று இயற்கையைக் காக்கமறந்த மனிதரை எச்சரிக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வெட்டாதே…

    சோலை வனத்திலே
    சொகுசாய்ச் செல்லத்தான்,
    பாதை வகுத்தனர்
    நம் முன்னோர்..

    முன்னேறிவிட்டதாகச் சொல்லும்
    மனிதா நீ,
    சாலை விரிவுபடுத்துகிறோமென்று
    சாகடித்துவிடுகிறாயே
    சாலையோர மரங்களை..

    முன்னோரெல்லாம்
    மரம் நட்டனர்,
    வெட்டுகிறாயே நீ..

    நிழலை அழித்துவிட்டு
    வெயிலில் செல்கிறாயே,
    வேகமாய்ச் செல்கிறாயே-
    அழிவுப் பாதையில்..

    வேண்டாம் இந்த
    விபரீத விளையாட்டு,
    வெட்டாதே மரத்தை..

    வெட்டுவது தேவையெனில்,
    நட்டுவிடு புதிதாய்-
    வெட்டுமுன்னே..

    மரம் வளர்ப்போம்,
    மண்ணைக் காப்போம்…!

    *****

    ”காவிரி தந்த நீர்வளமும் நிலவளமும் கானலானது!  மீதமிருக்கும் காடுகளையும் கழனிகளையும் அழித்து எண்ணெயும் எரிவாயுவும் எடுக்கின்றார். எல்லா வளங்களும் சேதமாகித் தமிழ்த்தேசமே பாலையானதே” என்று வருந்துகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    காவிரி தந்த பூவெழில் சோலை..!
    அன்று….
    தலைக்காவிரியில் தோன்றிய சிறுதுளியே பின்
    ……….தமிழகத்தைப் பெரு வளமாக்கியதாக வரலாறு *
    கலையுலகில் காவிரிக்கு என்றுமே சிறப்புண்டு
    ……….காரணப்பெயராம் பொன்னி யெனும் புகழுமுண்டு*
    குலைதள்ளும் வாழையும் வயலுமே செழிக்க
    ……….கருங்கயல் விளையாடிய காவிரியே காரணம் *
    “மலைத்தலைய கடற்காவிரியென” பட்டினப்
    ……….பாலையுமதன் மகத்துவத்தை எடுத்துரைக்கும் *

    மூன்று போகம் விளைந்தெங்கள் பூமிமுழுதும்
    ……….முத்தாகத் தவழ்ந்து வருமெங்கள் காவிரியாம் *
    அன்றெவரோர் வயல் வெளியை ஆராய்ந்தார்
    ……….அகழ்ந்துதோண்டி மண்ணை ஆய்வு செய்தார் *
    கொன்றழிக்கும் மீத்தேன் கிடைக்கும் என்றார்
    ……….கழனியும் காடுமழிக்கக் களத்தினில் இறங்கினார் *
    இன்று வற்றிய நீர்வளமும் வறண்டநிலமுமே
    ……….ஈன்றதின்று வெறும் வாயுவையும் எண்ணெயும்*

    இரைக்கும் பெருங்கடல் சூழ்ந்த நம்நாடுதான்
    ……….இறையன்புக்கு எடுத்துக் காட்டாய் விளங்கும் *
    நிறை நெஞ்சம்கொண்ட பாவலரும் புலவருமே
    ……….நிம்மதியாகப் பாவிசைக்கத் தகுந்த இடம்தான் *
    உரைக்கும்படி சொல்வேன் யாவர்க்கு முகந்த
    ……….உயர்ந்தநம் நாட்டிற்கிணை இல்லை! ஆனால்
    தரையிலின்று தன்குகின்ற தண்ணீர் இல்லை *
    ……….கரைபுரண்டு நீரோடிய ஆற்றில் மணலில்லை

    *****

    ”தலைவன் ஒருவன் தடம்பதித்து நடப்பதற்காகப் பாதைவகுத்து, மரக்குடை விரித்துக் காத்திருக்கின்றது இயற்கை. அவன் தடம்பதித்தால் பூக்கள் மாரியாய்ச் சொரிந்து அவனை வாழ்த்தும்” என்று தன் கற்பனைச் சிறகைக் கவிதையில் விரித்திருக்கின்றார் திருமிகு. சக்திப்ரபா.

    தலைவனின் தடம்

    இன்றைக்கேனும்
    ஒரு மாமனிதன்
    நடந்துவிட மாட்டானாவென
    மணல் மெத்தையிட்டு
    மரக்குடை விரித்து
    காத்திருக்கும் பாதை.

    கால்கள் பாவாத அரிய வழியிதென
    கண்டுணரும் தலைவன்,
    கோடியில் ஒருவன்,
    தடம் புரளாத எளியன்,
    தடம் பதிக்கும் தருணம்,
    பூக்களும் மலர்ந்து
    வாழ்த்துக்கள் சொரியும்.

    *****

    கனியும் நிழலும் தந்து எம்மைக் காக்கும் மரங்களே! நீங்கள் வாழவேண்டும்! நீங்கள் வீழ்ந்தாலும் மீண்டும் விதைபோட்டு உம்மை வளர்ப்போம்! மண்ணைக் காப்போம்!” என்று சூளுரைக்கிறார் திரு. சி. ஜெயபாரதன்.

    மரங்களை வளர்ப்போம்

    பச்சை மரங்களே !
    பழங்கள் தரும் மரங்களே !
    நிழல்தரும் மரங்களே !
    இளநீர் தரும் மரங்களே !
    நீரின்றிக்
    காய்ந்த மரங்களே !
    வேரறுந்து
    விழுந்த மரங்களே !
    முதிர்ந்து
    மூப்படைந்த மரங்களே !
    எரிந்துபோன
    பரிதாப மரங்களே !
    எங்கள் வீட்டு ஓடுகளைத்
    தாங்கும் மரங்களே !
    நீங்கள் வாழ வேண்டும் !
    உங்களை வெட்டினாலும்
    வீட்டுத் தூணுக்கு
    வேண்டும்!
    மீண்டும் மரம் விதைப்போம்,
    ஒன்றல்ல !
    ஆயிரம், ஆயிரம் மரங்கள்
    தாய் மண்ணிலே
    தழைக்கும் ! தழைக்கும் !
    தழைக்கும் !

    *****

    மரம் இயற்கை நமக்களித்த வரம்! மரங்களைக் கொன்றழித்ததால் நாம் சந்திக்கும் சீரழிவுகளைச் சிறப்பாகத் தம் கவிதைகளில் பதிவுசெய்திருக்கிறார்கள் கவிஞர்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது அடுத்து…

    புலியின் வரிகள் கிளை நிழலே! நெருங்கித் தருக்கள் தீட்டும் வரைபடமே!
    புலியும் தருவும் பிணையென்றே இறைமை இயற்கை காட்டுதுவே!
    புலிஉண்டாமால் தருஉண்டாமால் என வலிமரமும் வேங்கையானதுவே!
    புலி இல்லாமால் தரு இல்லாமால் இன்று புவித்தரமும் வீழல் கொண்டதுவே!

    புலியே நாட்டின் சின்னமென்பர்; புலியோ அழிந்துபடுதென்பர்
    புலியே அழிந்துபடுமென்றால் நாட்டின் பீடும் சரியுது எனலாமா?
    புலிகள் வாழக் காடில்லை; புலிகள் வழக்காடவில்லை; மறை
    புலிகள் மறைந்தது அவையாலில்லை; இவரேயவற்றின் நமனானார்!

    புலிவழிப் பாடும் புலிவழக்கோடு எம்மூதையர் வாழ்ந்த எம் தாரணியில்
    புலியின் வீரம் இலக்கியமாம்! புலியே இறைவர் வாகனமாம்!
    புலியின் தோல் நகம் புனிதமென்றே போற்றிப் பொருத்தியவர் மகிழ்ந்தனராம்!
    புலிக்காடும் நரநாடும் வேறென்றே வரையறைபோட்டும் அவர் வாழ்ந்தனராம்!

    புலிகள் ஒதுங்கா தக்கை மரம்! தேவதாருவும் தேக்கும், சந்தனமும்
    சேர்ந்தாலங்கே புலியொதுங்கும்!
    புலிகள் பிறப்பு நூதனமே! இறைவன் படைப்பிலவை உன்னதமே! காட்டில்
    மட்டும்

    புலி பிறக்கும்! கூட்டில் பிறக்கா மூடர்களே! மாக்காடில்லா புவியதனில்
    புலி வாழேனென்றே முடிவெடுத்து கருமூடி மரணித்துப் போனதுவே!

    புலியைப்படத்தில் கண்டபடி புலியைக்கதையில் கேட்டபடி போகும் போக்கு
    முற்போக்கு?
    புலியை ஒழித்து காட்டை அழித்து சுயம் வாழ்ந்திடும் வாழ்வு பகுத்தறிவு?
    புலியின் படம் உயர் சுவர் நிறையாய் உள்ளமெல்லாம் சுயவுரிமைகளாய்
    புலிப்பிழையாய் பெருத்த பிழைசெய்து ஓட்டும் உம் வாழ்க்கை வீழ்வதெப்போ?

    நான் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் புலியை ஒத்த தோற்றம் காட்டும் வேங்கை மரங்களை நம் தமிழ்ப் புலவர்கள் தம் சங்கப் பாடல்கள் பலவற்றில் சுவைபட விளக்கியுள்ளனர். வேங்கை பூத்தால், பெண்கள், ”புலி…புலி!” என்று ஆரவாரித்து அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடியுள்ளனர். வேங்கை மரத்தைக் கொண்டாடிக் குதூகலித்த தமிழ்ச் சமூகம், வேங்கை இனத்தையும் போற்றிப் புரந்தது.  அன்று காடுகள் மிக்கிருந்தன; அதனால் புலிகளின் எண்ணிக்கையும் குறையாமலிருந்தது. இன்றோ…காடுகொன்று நாடாக்கினோம்…இல்லை…சுடுகாடாக்கினோம்! அதனால் கம்பீரத்துக்கு இலக்கணம் வகுத்த புலியினமும் அழிவின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

    மரங்களை அழியாமல் காத்தால் மட்டுமே காட்டு விலங்குகளையும் நாம் அழியாமல் காக்கமுடியும் எனும் உண்மையைத் தன் கவிதையில் கவனத்தோடு பதிவுசெய்திருக்கும் திருமிகு. அவ்வைமகள் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகிறார். அவருக்கு என் பாராட்டு!

     

     

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 148-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    piegons

    சோடிப் புறாக்களைத் தேடிப்பிடித்துக் கலைநயத்தோடு படமெடுத்து வந்திருக்கின்றார் திரு. ஆய்மன் பின் முபாரக். இணையற்ற இவ்விணையர் குறித்துக் கவினோடு கவியெழுதுங்கள் என்று இக்காட்சியைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் என் நன்றிக்குரியோர்.

    ”இருநிலா  இணைந்து  பாடி
    இரையுண்ணும் செவ்வி தழ்கள்
    விரியாத தாமரை போல்
    ஓர்இணை  மெல்லி யர்கள்
    கருங்கொண்டை கட்டி  ஈயம்
    காயாம்பூக்  கொத்து மேலும்
    ஒருபக்கம் இருவா ழைப்பூ
    உயிருள்ள அழகின் மேய்சல்!” என்று புறாக்களின் எழிலைத் தன் ’அழகின் சிரிப்பில்’ அருமையாய் வடித்துத் தந்திருக்கின்றார் பாவேந்தர்.

    ஒழுக்கம் விழுப்பந் தரலான் அதனைத் தம் வாழ்வில் உயிரினும் மேலாய்க் கடைப்பிடிக்கும் புறாக்களின் நனிநாகரிகத்தை மானுடரும் பின்பற்றுதல் நன்று.

    இனி கவிஞர்களின் முறை…

    ”சாதி மதம் பாராது, சாதகத்தைச் சாராது வேசமில்லாப் பாசத்தோடு இணைந்திருக்கும் இவ்இனிய புறாக்கள் உண்மைக் காதலுக்குத் தக்கதோர் சான்றாய்த் திகழ்கின்றன” எனப் புகழ்கின்றார் திரு ஏ.ஆர். முருகன், மயிலம்பாடி. 

    இணைந்த உயிர்கள்!!

    #மாசிமாதம் ஓரிரவு…
    மகிழ்ச்சி ததும்பும் தேனிலவு!
    ஜோடி போட்ட மாடப்புறா
    சொக்கவைக்கும் காதல்நிலா!!
    #வண்ணப்பறவைகள் ரெண்டு
    வற்றாத பேரன்பு கொண்டு
    காதலின் உச்சத்தைக் கண்டு
    காட்டிடும்தோரணை கற்கண்டு!!
    #விரும்பும் துணையின் அருகிலே
    விசனம் மறந்த நிலையிலே
    விழிகள் பேசும் மொழியிலே
    விழுந்தன மனங்கள் மையலிலே!!
    #சாதி மதம் பார்க்கவில்லை
    சாதகத்தைத் தேடவில்லை
    சம்மதிக்கும் உள்ளங்களைச்
    சாய்க்கத்தடைகள் உலகிலில்லை!!
    #உண்மை அன்பு மலர்ந்துவிட்டால்
    உடைப்பதென்ன சுலபமா??
    உயிர்கள்இங்கு இணைந்துவிட்டால்
    உளிகள் கூட உறவுதான்!!
    #வேசமில்லாப் பாசத்துக்கு
    மோசமென்றும் கிடையாதே!!
    மோட்சம் பூமியில் உள்ளதெனும்
    சூட்சுமம் அறிவோர் மெய்க்காதலரே!!!

    *****

    ”கடவுள் பேதம் எமக்கில்லை; எங்கும் குடியிருப்போம்! சாதி பேதமும் எமக்கில்லை; எவரையும் காதலிப்போம்!” என்று பேதமற்ற உயர்ந்த வாழ்வின் மாட்சியைப் பேசும் உன்னதப் புறாக்களைக் காட்சிப்படுத்தியுள்ளார் திரு. செண்பக ஜெகதீசன்.

    தெரிந்திடுவீர் எம் காதல்

    கடவுள்களில் பேதமில்லை எங்கும் இருப்போம்
    கோபுரத்தில் வாழுகிறோம் குடும்பத் தோடே,
    அடுத்துள்ள தேவாலயம் மசூதியும் வீடே
    அங்கிருந்தே இரைதேடிச் செல்வோம் காடே,
    இடையில்வரும் காதலிலே இணைந்தே செல்வோம்
    இடைஞ்சலாக எவருமெங்கள் இனத்தில் இல்லை,
    நடைமுறையில் மனிதர்போல் நாங்க ளில்லை
    நாட்டுப்புறா எம்காதல் தெரியும் தானே…!

    *****

    ”ஆண் பெண் புறாக்கள் ஒன்றிணைந்து காதலர் தினம் கொண்டாடுகின்றனவோ?” என்று வேடிக்கையாய் வினவும் கவிஞர் திரு. பழ. செல்வமாணிக்கம், ”பணம் பார்த்து வருவதன்று காதல்! நல்ல குணம் பார்த்து வருவதே உண்மைக்காதல்! உயிரைத் தருவதன்று காதல்! உயிராய் வாழ்வதே காதல்” என்று காதலின் மகத்துவத்தைச் சகத்துக்கு உணர்த்துகின்றார்.

    உண்மைக் காதல்

    நெருங்கி நிற்கும் இரண்டு வண்ணப் புறாக்கள்!
    காதல் வானில் சிறகடித்துப் பறக்கும்!
    அருமைப் புறாக்கள்!
    ஆண் புறாவின் அருகில் மயங்கி நிற்கும்!
    பெண் புறா!
    இந்த பெண் புறாவின் இணையென்ற மகிழ்வில்
    ஆண் புறா!
    காதலர் தினத்தை கொண்டாடுகின்றனவோ!
    இந்தப் புறாக்கள்!
    இல்லை! இல்லை!
    உண்மை காதலருக்கு ஒவ்வொரு நாளும் காதலர் தினம் தானே!
    அழகைப் பார்த்து வருவது மனிதக் காதல்!
    மனதைப் பார்த்து வருவது உண்மைக் காதல்!
    வசதியைப் பார்த்து வருவது மனிதக் காதல்!
    குணத்தைப் பார்த்து வருவது உண்மைக் காதல்!
    அன்பின் வடிவம் காதல்!
    புரிதலின் பொருளே காதல்!
    தோழமை என்பது காதல்!
    ஒற்றுமை என்பது காதல்!
    விட்டுக் கொடுப்பது காதல்!
    “நான் “ மறைவது காதல்!
    “நாம்” என்று தெளிவது காதல்!
    சுயநலம் மறப்பது காதல்!
    உன் துயர், எனதென நினைப்பது காதல்!
    யாசித்துப் பெறுவதா காதல்!
    தானாய் மலர்வது காதல்!
    மாலையால் இணைவதா காதல்!
    மனதால் இணைவதே காதல்!
    உயிரைத் தருவதா காதல்!
    உயிராய் வாழ்வது காதல்!

    *****

    ”உண்மைக் காதலுக்கோர் உதாரணமாய், பகுத்துண்ணும் தன்னலமற்ற குணத்துக்கோர் சான்றாய் வாழும் புறாக்களை மனிதன் பந்தயத்துக்குப் பயன்படுத்துகின்றான் நேயமின்றி.  அந்தோ! மாந்தன் விளைவிக்கும் குந்தகமறியாது அந்தகனிடம் அகப்பட்டுக்கொள்கின்றதே அருமைப் புறா!” என்று வருந்துகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    மனிதனும் புறாவும்..!

    மாடத்தில் மட்டுமே கூடுகட்டி வாழும்
    ……….மனிதனோடு பழகும் பண்பு கொண்டது..!
    ஆடலுடன் பாடலும் செய்யும் அதையே
    ……….அதிசயித்து நமைப் பார்க்கத் தோன்றும்.!
    கூடயிருக்கும் குஞ்சுப் புறாவுக்குத் தன்
    ……….குரல்வளைச் சேர்த்த உணவு ஊட்டும்..!
    ஊடல் கொள்ள இணையாய் ஒன்று
    ……….உரு வானால் வேறொன்றை நாடாது..!

    துணையாய்த் தேடி வந்த சோடியுடன்
    ……….தன் தலைசாய்த்து வட்டமிட்டு ஆடும்..!
    இணையிடும் முட்டையை தன்னல மின்றி
    ……….இரவுபகல் அடை காக்கும் குணமாம்..!
    பிணைக் கைதி போலதனை அடைத்து
    ……….பின்னர்ச் சோடி பிரித்து பறக்கவிடுவார்.!
    கிணற்றுத் தவளைபோல வாழு மதற்குக்
    ……….கிட்டுமா இனியும் சுதந்திர வாழ்க்கை..!

    பந்தயத்தில் பறக்கவிட புறா வளர்ப்போர்
    ……….பாங்கா யதனைக் காப்பார் பணமாக்க..!
    பந்தமென வரும்போது ஒன்றாகக் கூடியே
    ……….பாங்காகப் பிரித் துண்ணும் தானியத்தை.!
    குந்தகமும் ஆபத்தும் நிறைந்த வாழ்வில்
    ……….குணமுள்ள பறவை யெனப் புகழுண்டு..!
    அந்தகனை அடையாளம் காணத் தெரியா
    ……….அகப்பட்டுக் கொள்வ ததன் விதியோ..!

    *****

    மாமிசம் உண்டு வந்ததோ பெண்புறா என்று அதன்மீது காதல்கொண்ட ஆண்புறா அதனை ஐயுற்றுக் கடிந்துகொள்வதை அழகிய கவிதையாக்கியிருக்கின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா.

    சேவல்-
    என்னடி ஹப் அடிக்குது? எதைத் திண்டு தொலைச்சே
    கீழ் மாடி மேசையிலே கெடக்குதே பழங்களெல்லாம்
    கூடத்துக் கோணியெல்லாம் குவிஞ்சிருக்கே தானியங்க
    அதையெடுத்துத் தின்னாம ஆட்டுக்கறி தின்னியா?
    குவிச்சிருந்த விதவிதமாப் பழத்தையெல்லாம் விட்டுப்பிட்டு
    கவுச்சியில ஆசப்பட்ட போக்கத்த புழுப் பொறுக்கி

    அடச்சே! உன்னால பெரிய பேஜாராப் போச்சு
    இந்த நாத்தத்தோட எப்படியுன்னை
    நான் பக்கத்தில வச்சுக்கிறது.
    ஓடு போ சீக்கிரம் சொண்டைக் கழுவிட்டு வா!

    பேடு-
    எதுக்காம்?

    சேவல்-
    ஏன் உனக்குத் தெரியாதா
    புதுசாக் கேக்கிறியே! அதுக்குத்தான்.
    பழம் மணக்கும் சொண்டோட
    பக்கத்த வந்து நில்லு.
    இழவுக் கவுச்சி மணம் எனக்குச் சகிக்காது
    ஓடு போய் வாய ஒடனே கழுவிட்டுவா
    ஒட்டி உரசிக்கலாம் உயிரைக் கலந்துக்கலாம்.

    *****

    புறவின் சிறப்புக்களைப் படிப்போர் இரசிக்கும்வண்ணம் துடிப்போடு கவி வடித்துத் தந்திருக்கும் கவிஞர்கள் அனைவருக்கும் என் பாராட்டும் நன்றியும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவு பெற்றிருக்கும் கவிதை அடுத்து..

    புறாக்கள் சொல்லும் பாடம்

    பிறன்மனை நோக்காமை பேராண்மை!
    பகன்றது வள்ளுவன் சொல்லாண்மை!
    தன்னிணை மண்ணில் வாழும்வரை
    தரங்கெட் டடுத்ததை நாடாமல்
    உயரிய வாழ்க்கை வாழ்ந்திடுதே
    உலகில் உள்ள புறாக்கூட்டம்!
    மனிதா உனக்கு உரைக்கிறதா?
    மனதில் ஏதேனும் பதிகிறதா?

    கூட்டங்கூட்டமாய் வாழ்ந்திடுமே! புறாக்கள்…
    கூடி உண்டு களித்திடுமே!
    காக்கை குருவி எங்கள் சாதி!
    கவி பாடினான் பாரதி!
    மனிதா… மனிதா… நீ…
    சகமனிதனுடன் மோதி…
    சுடுகாட்டிலும் சாதி!
    சுட்டிக்காட்டுவதென்ன நீதி???

    கீழ்மேல் என்றெல்லாம் பாராது
    காழ்ப்புணர்ச்சி தம்முள் இருக்காது
    சமாதானத் தூதுவன் நம்
    சமுதாயத்திற்குச் சொல்லிடும் பாடமிது!
    தன்னலம் கொண்ட மனிதரெல்லாம்…
    தரணியில் படைத்த சாதிமதங்கள்…
    கூட்ட உணர்வைக் கொண்டுளது!
    கூட்டு உணர்வைக் கொண்டுளதா???

    கூட்டங்கூட்டமாய் ஒற்றுமைபேணி வாழ்கின்றன புறாக்கள். மனிதனோ ஒற்றுமையில் நாட்டமின்றிச் சக மனிதனோடு எப்போதும் மோதி, சுடுகாட்டிலும் பார்க்கின்றான் சாதி! இஃதென்ன நீதி?

    வள்ளுவன் மாந்தருக்குரைத்த ஒழுக்கத்தையும், பிறன்மனை நோக்காப் பேராண்மையையும் பின்பற்றி நடப்பதென்னவோ பறவையினத்தைச் சேர்ந்த புறாக்களே! என்று புறவினத்தின் பெருமையினைப் பரக்கப்பேசும் – உரக்கப்பேசும் இக்கவிதையினை யாத்த திரு. ஆ. செந்தில்குமார் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்வுசெய்யப்படுகின்றார். அவருக்கு என் பாராட்டு!

    Share
  • படக்கவிதைப் போட்டி 147-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    flower merchant

    மலர்களை விற்பனைக்குக் கொட்டிவைத்துவிட்டுக் கடைக்காரர் வேறேதோ கற்பனையில் இருப்பதை அவர் முகக்குறிப்பு அறிவிக்கின்றது. திருமிகு ஷாமினியின் கைவண்ணத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி மலர்களைக் காணிக்கையாக்குகின்றேன்.

    மனங்கவரும்வண்ணம் மணம் பரப்புபவை மலர்கள். எனினும் அவற்றை விற்பனை செய்யும் தொழிலாளரின் வாழ்வு மணத்தோடும், அவரை நம்பியிருக்கும் குடும்பம் வாழ்க்கை நடத்தத் தேவையான பணத்தோடும் இருக்கின்றதா என்பது கேள்விக்குறியே!

    மலரும் மனிதரும் இணைந்திருக்கும் இக்காட்சிக்கு மலர்ச்சியாய்க் கவிதையெழுத கவிஞர்களை அழைக்கின்றேன். (நண்பர்களே… இனிவரும் வாரங்களில் நீங்கள் எழுதும் கவிதைகள் 24 அடிகளுக்கு மிகாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.)

    *****

    ”புதிதாய் மணம்புரிந்த இந்த இளைஞர், மணம்வீசும் மலர்களை விரைந்து விற்றுவிட்டுக் காதல் மனையாளோடு மகிழ்ந்திருக்க எண்ணுகின்றார் என்பதே இவரின் முகம் உணர்த்தும் அகக்குறிப்பு” என்கிறார் திரு. ஏ.ஆர்.முருகன்.

     பூவாக வாழ..பூவையைத்தாங்கு!! 
    #விற்பனைக்குக்காத்திருக்கும்
    விடுமலர்கள்!! _ தொடுக்காமல்
    விற்றுவிட்டால் சரமாக்க இரவு
    விழித்திருக்கத்தேவையில்லை!
    #நூலெடுத்து வேலைக்கு எத்தனித்தால்
    நூலிடையாள் ஞாபகம்! _ கட்டி வந்து
    நூறுநாள் தாண்டவில்லை.. உள்ளத்தில்
    நூலிலையாய்ப்பின்னிபுதுமணப்பெண்!!
    #இரண்டொருநாள் தாண்டிவிட்டால்
    இதழ் அழுகும்!! _ தாம்பத்தியம்
    இல்லறத்தின் அழகு..நல்லறமாய் ஆக
    இல்லாளை எந்நாளும் நேசிக்கணும்!!
    #முன்வருவதைவிட மிகச்சிறப்பு
    பின்வருவதே _ காதல்
    பண்ணுவது மனைவியெனில்
    மின்னும் இல்வாழ்வு!!!
    #உதிரம்நனைந்த வெள்ளைரோஜா
    உருவாகும்சிவப்பு _ கிளிக்காதல்
    உவமானமல்ல ஈருயிர்பந்தத்தின்
    உண்மையான பாசப் பரிணமிப்பு!!
    #வியாபாரம் செழிக்கத்துணையாக
    வீட்டுக்காரி வரவேணும் _ மாலைகட்டி
    விரைவிலே முடித்து,இல்லம்திரும்பி
    விரும்பும்தம்பதியாய்வாழவேண்டும்!!!

    *****

    ”அரும்பு நனை முகை மொக்கு என்று ஒவ்வொரு பருவத்தையும் கடந்துவரும் மலர், வீயாகி விழுமுன் வாடிக்கையாளர் வாங்கிவிட்டால் மனையாள் மகிழ்வாள்” என்று பூக்களின் பருவங்களையும், வணிகரின் மனவோட்டத்தையும் தன் பாவில் சுவைபடப் பட்டியலிட்டுள்ளார் திரு. ஆ. செந்தில்குமார்.

    மலர் வணிகனின்  மனவோட்டம்
    அரும்பாகி…
    அதுமுற்றி நனையாகி…
    முகையாகி… மொக்காகி…
    முகிழாகி… மொட்டாகி…
    மலராகி… பூவாகி…
    விற்பனைக்கு கடையடைந்து…
    வீயாகி… உதிர்ந்து வீழுமுன்னே…
    விற்றுத் தீர்ந்துவிட்டால்…
    வீட்டில் காத்திருக்கும்
    பொறுப்பான மனையாளும்
    பொதும்பராகி மகிழ்வாளே…
    பொம்மலாகி… செம்மலாகி…
    வீணில் போகுமுன்னே…
    வாடிக்கையாளர் எவரேனும்
    வந்து வாங்கிவிட்டால் – என்
    வாடும் மனம் மலர்ந்திடுமே…!

    *****

    ”இறைவனிடம் சேர்ந்தால் திருமாலை, அரசியல்வாதியிடம் சேர்ந்தால் மலர்மாலை. ஆனால்… என்று கூடும் எனக்கு மணமாலை?” என்று மலர் வணிகர் தம் மனத்துள் மருகுவதைப் பாமாலை ஆக்கியிருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அவன் கவலை…
    மலர்கள் விற்கிறான் உதிரியாக
    மாலை யாகிடும் உறுதியாக,
    பலவகைப் பயன்கள் அதற்குண்டு
    பள்ளியில் சேர்த்திடும் மணமாலை,
    சிலையில் இறைவன் திருமாலை
    சீரிலா அரசியல் பூமாலை,
    நிலவிடும் அவனிடம் ஒருகவலை
    நம்மிடம் வருமா மணமாலையே…!

    *****

    மனித வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வோடும் மலர்கள் பின்னிப் பிணைந்திருக்கும் மாண்பை அழகாய் வகைப்படுத்தி, கண்ணுக்கு மட்டுமன்று கவிதைக்கும் கருவாய்த் திகழ்பவை இவை என்று பூக்களைப் புகழ்ந்திருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    பூவே உன்னைப் புகழ-வா..!

    பூவென்றாலே அதனுடன் மணமும் சேர்ந்ததுதானே..
    ……….பூவோடு சேர்ந்தநாரும் கூடமணக்கும் என்பார்கள்.!
    பூவெல்லாம் ஒன்றுசேர்ந்து மணக்கின்ற இடத்தில்..
    ……….புதிதாயங்கே மலருமாமொரு விழாவோ நிகழ்ச்சியோ.!
    ஆவென்றே அதிசயிக்கும் ஆளுயரப் பூமாலையென..
    ……….அன்பிற்கே அடையாளமாய் திகழுமிந்தப் பூக்களாம்.!
    வாவென் அன்பேயென அழைக்கவும் ஓவென்றழவும்..
    ……….வாங்குகின்ற ஒருபொருளாகத் தானுனைப் பார்ப்பார்.!
    பெண்ணவள் மலரும் தன்மைக்கு வந்துவிட்டாளென..

    ……….பூக்கள்பலச் சூடித்தான் சூசகமாகத் தெரிவிப்பாரன்று.!
    பெண்ணுக்கும் மலருக்கும் அதிகத் தொடர்புண்டாம்..
    ……….பூச்சூட்டலெனும் நிகழ்ச்சியே அதற்குத் தகும்சான்று.!
    எண்ணெய் வைத்துக் குளிப்பாட்டிய பாவைக்கு..
    ……….எண்ணற்ற வளையலும் பூக்களும் பரிசளிப்பாரன்று.!
    கண்ணான மருமகளின் தலையில் மொட்டுப்பூச்சூடும்..
    ……….காட்சியாக மாமியாரே மருமகளுக்குச் சூட்டுவாராம்.!
    பெண்களை மலரென்பார் கவிஞரும் பாவலரும்..
    ……….போற்றும் குண மிருவருக்கும் உண்டென்பதாலோ.!
    பெண்ணைத் தெய்வமாக மதிக்க வேண்டுமெனவே..
    ……….பெண்தெய்வம் விழாக் கொண்டது பூச்சொரிதலாலே.!
    ஆண்டகையொருவன் போரில் வெற்றி பெற்றால்..
    ……….அந்நாளில் அவன்தலையில் பூவால் வாகைசூடுவார்.!
    கண்ணுக்கு விருந்தாகும்!..கவிதைக்குக் கருவாகும்!..
    ……….காதலர்களுக்குப் பரிசாகும்!.வண்ணமிகு பூக்களாம்.!

    *****

    மலர்களின் அரசியாய்த் திகழும் ரோஜாவின் சிறப்பையும், வாழும்வரைப் பிறர்க்குப் பயன்தரும் அதன் உயர்பண்பையும் சிறப்பாய்ச் சொல்லியிருக்கிறார் திரு. பழ.செல்வமாணிக்கம். 

    புண்ணியப் பூக்கள்:
    ரோஜாப் பூவே நீ தானே பூக்களுக்கெல்லாம் அரசி!
    ஒற்றை ரோஜாவாய் நீ வந்தாலே மனதிலே மகிழ்ச்சி!

    கூட்டமாய் கூடையில் கொலுவிருப்பது!
    கண் கொள்ளாக் காட்சி!
    மென்மை எனும் வார்த்தைக்கு நீ தானே அத்தாட்சி!
    நீ முள்ளோடு வளர்ந்தாலும் மென்மையாய் இருப்பது
    உன் தனிச் சிறப்பு!
    பிறருக்கென வாழ்வதால், நீ இறைவனின்!
    அற்புதப் படைப்பு!
    முருகு என்றால் அழகு என்பதாம் தமிழ் மொழியில்!
    ரோஜா என்றாலும் அழகு என்பதாம் புது மொழியில்!
    அரும்பிலும் நீ அழகு!
    மொட்டிலும் நீ அழகு!
    மலரிலும் நீ அழகு!
    ஆண்டவன் படைப்பிலே நீ தான் பேரழகு!
    இப்புவியில் நீ வாழ்வது சில காலம்!
    உன்னால் விளையும் பயன்கள் பலவாகும்!
    வண்டிற்குத் தேனை நீ தருவாய்!
    மங்கையின் கூந்தலில் வீற்றிருப்பாய்!
    தெய்வத்தோடு கொலுவிருப்பாய்!
    மணமக்கள் கழுத்தை அலங்கரிப்பாய்!
    காதல் தூதாய் நீ இருப்பாய்!
    இறுதி யாத்திரையிலும் துணை வருவாய்!
    ரோஜா மலராய் நாம் இருப்போம்!
    இயன்ற வரையில் பயன் தருவோம்!

    *****

    கடையில் குவிந்திருக்கும் இவ்வண்ண மலர்கள் கோரிக்கையற்றுக் கிடப்பதுபோல், மணம்புரிந்து மணம்பரப்ப வழியின்றி வரதட்சணை எனும் தீயில் கருகும் பெண்மலர்கள், மலர்சூடி மங்கலவாழ்வு காண்பது எந்நாளோ?” எனும் ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றது திரு. சி. ஜெயபாரதனின் கவிதை.

    சூடா மலர்கள்!
    கொட்டிக் கிடக்குது தரையில்
    கோடிப் பூக்கள் !
    வாடிக் கிடக்கும் வாசனைப் பூக்களைச்
    சூடிக் கொள்ள
    மங்கையர் இல்லை!
    சூடிக் கொடுத்த பூமகள்
    சுடர்க் கொடியின்
    துகிலை உரித்து அவைதனில்
    மகிழ்ந்தோரை மறித்து
    புடவை அளிக்க,
    கண்ணபிரான் வந்திலன் !

    வாடாமல், வதங்காமல் இன்னும்
    வனப்பு மங்காது
    சூடாமலர்கள் வீடுகளில்
    தொடுப்பா ரற்று,
    திருப்பாவை
    பாடிக் கொண்டுள்ளன !
    வாடி உதிரும் முன் மாலையாய்ச்
    சூட வந்த ஆடவன்
    வாரான் மீண்டும்,
    காரணம்
    கறுப்பி மங்கை அப்பன்
    தர முடிய வில்லை
    வரதட்சணை !

    *****

    பூக்களையும், பூவிற்பவரையும் பின்னணியாகக் கொண்டு பொருள்செறிந்த பாக்களை அள்ளித் தந்திருக்கின்ற கவிஞர் குழாத்துக்குப் பாராட்டு!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வு பெற்றிருப்பது அடுத்து… 

    பூ வித்த காசு பூத்துக் குலுங்கிடுமோ!

    பறித்தெடுத்த செம் பூக்க பரவிக் கிடக்கையிலே
    வெறித்தவொரு பார்வையுடன் வீற்றிருக்கும் தம்பி
    போணி நல்லா ஆகலியோ பொறுமை காத்து இருக்கீங்க
    காணி நிலமெடுக்கக் கடைய விட்டு வாரிகளா
    பொழைக்கலாமெண்ணு பூ விக்க வந்தீகளே
    உழைப்பெதுவும் சேராம உட்காந்திருக்கிகளோ!
    பொம்பளைய்ங்க எல்லோரும் போலிப் பூ சூடிக்கிட்டு
    எம்புட்டுக் காலத்துக்கும் இதழுதிர்ந்து வாடாம
    கலியாணம் கச்சேரி கடவுளுங்க கோயிலென்று
    மலிவான பூச் சூடி வருவதனைக் காணலியோ
    நாய்வித்த காசு கொலைக்காது எம்பாங்க
    பூ வித்த காசு பூத்துக் குலுங்கிடுமோ!
    காஞ்ச பூப் போக, கட்டவிழ்ந்த மொட்டுதிர
    பாஞ்சு பொறுக்கி பழையபடி கோத்தெடுத்தா
    வாறவுக எல்லாரும் வகைபிரிச்சுப் பார்ப்பாக.
    ஆஞ்செடுத்ததா மரத்(து) அடியில் பொறுக்கியதா,
    பூமியில விழுந்திருந்தா பூச்சூடக் கூடாது
    சாமி குத்தமெம்பாக தரங்குறைச்சிப் பார்ப்பாக
    என்ன விலையெம்பாக ஏற்ற விலை குடுக்காக
    சொன்ன விலைக்கு வித்துச் சொகம் பெறவே முடியாது
    ஏற்ற விலை கொடுக்க எவர் வருவார் இக்காலம்.
    காற்றுதிர்த்த பூவுக்குக் கனக்க விலை தேறாது
    கல்லா நெறையாமக் கடைய இழுத்து மூடிப்பிட்டு
    பொல்லாத யாவாரம் போதுமிண்ணு போறதிண்ணா
    நல்ல தொழிலிருக்கு நாட்டில் வளமிருக்கு
    பொல்லாத இத்தொழில பொமபளய்ங்க கைகுடுத்து
    காணி நிலமெடுங்க களனி விளைஞ்சிடட்டும்!

    போலிப் பூக்களைப் பூவையர் சுமந்துதிரிவது பரவலாகிவிட்ட இந்நாளில், உண்மைப் பூக்கள் தம் மதிப்பை இழந்துவிட்டன. அப்படியும் தப்பித்தவறிக் கடைக்குப் பூவாங்க வருவோரோ, பூக்களை வகைப்பிரிப்பது, கசக்குவது என்று ஆயிரம் விஷமத்தனங்களில் ஈடுபடுகின்றனர். எனவே பூ வித்த காசு வியாபாரியின் வாழ்வைப் பூத்துக் குலுங்க வைக்குமா? குலுங்கி அழ வைக்குமா? என்று யோசிக்கவேண்டி இருக்கின்றது.

    ”விலைபோகாப் பூக்களுடன் மலைத்துப்போய் அமர்ந்திருப்பதினும், காணிநிலம் வாங்கி விவரமாய் விவசாயம் செய்தால் இல்லாமை நில்லாது ஓடும்; வாழ்விலே இனிமை கூடும்” என்று பூ வணிகருக்கு யோசனை சொல்லும் இந்தப் பாடலின் ஆசிரியர் திரு. எஸ். கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.  

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 146-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    bulls

    கம்பீர நடைபயிலும் காளைகளைப் படமெடுத்து வந்திருக்கின்றார்  திரு. நித்தி ஆனந்த். படக்கவிதைப் போட்டிக்கு இதனைத் தேர்வு செய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். படமெடுத்தவர், அதனைத் தேர்ந்தெடுத்தவர் இருவருக்கும் என் நன்றி உரித்தாகுக!

    மாடே செல்வமென்று மக்கள் வாழ்ந்த காலம் இன்று மலையேறிவிட்டது. அதனால் மாடுகளோடு கூடிவாழ்வோரும் குறைந்துவிட்டனர். இத்தகு சூழலில் சாலையில் மாடுகளை ஓட்டிச் செல்வோரைக் காண்கையில் இவை எங்கே செல்கின்றன…உழுதற்கா… இல்லை…அடிமாடாய் அழிதற்கா எனும் கவலையும் எழவே செய்கின்றது.

    விடைகள் (காளைகள்) நகரும் பாதைகுறித்து விடைபகரும் பொறுப்பை நம் கவிஞர்களிடம் விட்டுவிடுவோம்!

    ***** 

    சீமை மாடுகள் வந்தபிறகு நாட்டுமாடுகள் மீது நம் மக்களுக்கு நாட்டங்குறைந்துவிட்டது; அழிவைநோக்கிச் செல்லும் நாட்டு மாட்டினத்தை உடன் காப்பது நம் கடன் என்கிறார் திரு. ஏ.ஆர். முருகன். 

    மாடுகளின் மாண்பு!!

    செவலை மயிலையுன்னு
    எவ்வளவோ மாட்டினங்கள்
    அவ்வளவும் இன்னிக்கு
    அதிசயமாய் ஆயிடுச்சு
    நாட்டுப்பசும்பால் காயவச்சு
    புரை போட்ட தயிரு கடஞ்ச
    வெண்ணெயில நெய் எடுத்து
    வச்ச கையின் வாசம்
    வீதியிலும் மணமணக்கும்!!
    சீமையில இருந்து
    ஜெர்சி…சிந்துனு
    வந்ததுக்குப்பின்னால
    நாட்டுக்கன்னுக மேல
    நாட்டங்கொறஞ்சுபோச்சு!!
    இருக்கும் ஒண்ணு ரெண்டும்
    இப்பொவோ அப்பொவோனு
    அழிவ நோக்கிப்போயிட்டிருக்கு!
    கெடாரி நாலு பாதையில போறத
    பாக்கிறதில் மகிழ்ச்சி!!
    கட்டுத்தறி தவறாம
    நாட்டு மாடு வளர்க்க
    விவசாயிகள் அனைவருக்கும்
    விழிப்புணர்ச்சி வரவேணும்!!
    எருவுக்கு சாணம்
    மருந்துக்கு கோமியம்
    விருந்துக்குபால்மோர்தயிர்
    இத்தனையும் கொடுக்கிற
    உத்தமமான ஆவினத்தின்
    உருப்படிகள் பெருக வேணும்!!
    கால்நடைச் செல்வங்களை
    காப்பாற்றி வச்சாத்தான்
    அடுத்த தலைமுறைக்கும்
    அவைகளால் பயன்கிடைக்கும்!!
    மாடுகள் தானேனு
    மட்டமா நினைக்காம
    சாமியோட ரூபமுன்னு
    காமிப்போம் அகிலத்திற்கு!!

    *****

    ”எது இனிய வாழ்க்கை? தொலைந்துபோன கிராமம், அழகிய கிராமம்” எனும்  மூன்று முத்தான தலைப்புக்களில் மண்ணின் மணங்கமழும் கிராமத்து எழில் வாழ்க்கையையும், கிராம மக்களின் வெள்ளந்தி உள்ளத்தின் மகிமையையும், கிராமங்களை விட்டகன்றதால் நம் இன்பமும் நமைவிட்டு அகன்றுவிட்டதையும் நெஞ்சைத் தொடும் கொஞ்சுதமிழ் வரிகளில் கவிதைகளாய் வடித்துள்ளார் திரு. ஆ.செந்தில் குமார். 

    எது இனிய வாழ்க்கை?

    தென்னங்கீற்றில் கூரை வேய்த
    சின்னதாய் ஒரு ஓலைக் குடிசை!
    குடும்பத்தின் பசி போக்க
    குறைவிலா பயிர் வளர்நிலம்!

    நீருடைய என்றும் வற்றாத 
    நிலத்திடையே ஒரு கிணறு!
    அதைச் சுற்றி வளர்ந்த
    அழகான பத்து தென்னைமரங்கள்!

    பால்தரும் பசுமாடு இரண்டு – நிலத்தைப்
    பண்படுத்த எருதுகள் இரண்டு!
    பட்டியில் சில ஆடுகள்!
    பண்ணையில் சில கோழிகள்!

    […]

    நிழலுக்கு ஒரு வேப்பமரம் – அதனடியில்
    அழகாய் ஒரு கயிற்றுக்கட்டில்!
    உழைத்த களைப்புக்கு பழங்கஞ்சி!
    பிழைப்புக்கு சிறிது பணம்!

    கையால் குத்திய அரிசி – சமைக்க
    களிமண்ணால் செய்த பாண்டங்கள்!
    அன்பைப் பரிமாறும் மனைவி!
    பண்பில் சிறந்த குழந்தைகள்!

    பக்கத் துணையாய் உறவுகள்!
    படுத்த உடனே உறக்கம்!
    இதைவிட இனிமை இனியுண்டோ?
    இப்பிறவியில் கிடைக்க வாய்ப்புண்டோ?

    *****

    தொலைந்துப் போன கிராமம்

    […]
    நெல்விளைந்த பூமியெல்லாம் கல்முளைத்த மனையாச்சு!
    கல்நட்ட கழனியெல்லாம் கண்கவரும் வீடாச்சு!

    வழிப்போக்கர் ஓய்வெடுக்கத் திண்ணைவைத்த வீடில்லை!
    எழிற்தோற்றம் கொண்டிருந்த ஏரியிலும் நீரில்லை!
    ஆட்டுக்கல்லும் அம்மியும் காண்பதெல்லாம் அரிதாச்சு!
    வீடுகளில் திருக்கை உரலுலக்கையனைத்தும் போயாச்சு!

    பனைமரங்களெல்லாமே அழிவின் விளிம்புக்கு வந்தாச்சு!
    சினையாக மாட்டுக்கு ஊசியே என்றாச்சு!
    நாதியற்றுப் போய்விட்ட நாட்டு மாட்டினங்கள்!
    சேதிசொல்லும் குட்டிச்சுவர் பழங்கால சரித்திரங்கள்!

    […]

    *****

    அழகிய கிராமம்

    கருக்கல்லில் கண்விழிப்பர்! கழனிக்குச் சென்றுழைப்பர்!
    மாடுகன்று ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்குச் சென்றிடுவர்!
    தொழுவத்தைத் தூய்மைசெய்து வாயிலில் சாணந்தெளிப்பர்!
    அழகான மாக்கோலம் வீட்டிற்கழகுசேர்க்க இட்டிடுவர்!
    எருக்குழியை ஏற்படுத்தி தொழுவுரத்தைச் சேகரிப்பர்!

    […]

    பச்சைப் பட்டாடை போன்றிருக்கும் வயல்வெளி!
    வயல்களைப் பிரித்திருக்கும் வரப்பென்ற இடைவெளி!
    அதிகாலைப் பொழுதினிலே நனைத்திருக்கும் பனித்துளி!
    செங்கதிரோன் உதயத்திலே சிவந்திருக்கும் வான்வெளி!
    இத்தகு கிராமமே சிங்காரச் சமவெளி!

    பனையோலைக் குடிசையெல்லாம் எளிமையினைப் பறைசாற்றும்!
    ஐய்யனார் கோயிலெல்லாம் பக்தியின் திடங்காட்டும்!
    முதியோரின் பேச்செல்லாம் வெள்ளந்தி மனங்காட்டும்!
    மக்களின் மனதெல்லாம் மாட்டிடமும் பாசங்காட்டும்!
    இத்தகு கிராமத்திலே இருப்பதுவேநம் மனதின்நாட்டம்!

    *****

    ”ஆடு மாடுகளைச் சொந்தப் பிள்ளைகள்போல் பாடுபட்டு வளர்ப்பவன் உழவன். அவன் சேற்றில் கால்வைத்தால்தான் நம் மக்கள் சோற்றில் கைவைக்க முடியும். ஆனால் இன்றோ… வான்பொய்த்து வளங்குன்றிப் போனதனால் கழனிகளெல்லாம் கட்டுமனைகள் ஆனதே” என்று வெதும்புகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    அனைத்துயிர்க்கும் அவனே நண்பன்..!

    அதிகாலையில் ஆதவன் தோன்றுமுன் அவனெழுவான்..
    ……….ஆடுமாட்டைத் தன்பிள்ளையெனப் பேணிக் காப்பான்.!
    கதிரவனைத் தொழுதபடி ஏருழுவான் ஏற்றமிறைப்பான்..
    ……….கதிர்நெல்லைக் காணவயல் களத்திலே கடுமுழைப்பான்.!
    நதிதீரம் நாடியேயிவர்கள் வாழ்க்கையாம் தன்னலமின்றி..
    ……….நானிலத்துக்காக உழைத்து உலகுக்கே நண்பனாவான்.!
    விதியேயெனக் காலமுழுதும் கடமையாற்றும் நற்பண்பு..
    ……….விதிமாற்றத்தால் கண்ணீர் விட்டுக் கலங்குகிறானின்று.!

    உதிரத்தை வியர்வையாக்கி உழைக்கின்ற வர்க்கம்தான்..
    ……….ஊராரும் உணவுக்காக நம்பிவாழும் உயருழவன்தான்.!
    எதிரிகளென்றால் இயற்கையின் சீற்றம்தான் அதிகம்..
    ……….என்றைக்கு மோருயர் நிலையில்லாத வாழ்க்கைதான்.!
    நிதிப்பற்றாக்குறை என்பதெப்போது மிருக்கும்! அவன்..
    ……….நிலத்தைச் சீர்படுத்தி விளைபயிர் செழிக்கவே!..இவன்..
    குதிகால் குவலயத்தில் பதியாவிட்டால்?..ஒருவேளைக்..
    ……….கூழுக்கும் கஞ்சிக்கும் சோற்றுக்கும் கடும்பஞ்சம்தான்.!

    அனைத்துத் தொழிலுக்கும் முதலானது உழுதொழில்..
    ……….அனைத்துலக ஜீவிகளுக்கும் உழவனே நல்நண்பன்.!
    நினைவில் கொள்ளுவீர் நீர்! அறிவியல் வளர்ந்தாலும்..
    ……….ஆருமுணவின்றி வாழ்தலியலா தென்பது இயற்கை.!
    பனைமரத்தை வளர்க்காமலே பலருக்கும் பயன்தரும்..
    ……….பாருலகுக்கு அதுபோல நீரும்நிலவளமும் பலன்தரும்.!
    வினைசெய்யும் வஞ்சகத்தார் இன்று விளைபயிரழித்து..
    ……….விளை நிலைத்தையும் வீட்டுமனையாக்கி விட்டனரே.!

    *****

    ”எம்மை எங்குக் கொண்டு போறீக எஜமான் மாருகளே! எடைபோட்டு விற்பதற்கா!? பால்கொடுத்துக் காத்த எமக்கு நீர்காட்டும் பரிவிதுவோ?” என்று காளைகள் கண்ணீரோடு கேள்வி எழுப்பக் காண்கிறோம் திரு. எஸ். கருணானந்தராஜாவின் கவிதையில்!

    பொட்டு வச்ச நெத்தியில பூமாலை ஒண்ணு சுத்தி
    தொட்டுக்கிட்டுப் போறதுக்கும், தோழியரைச் சேத்து வச்சி
    எங்க கொண்டு போறீங்க எஜமான் மாருகளே – எங்கள
    எடை போட்டு விற்பதற்கா எஜமான் மாருகளே!

    கொம்புக்கு எடை கழிச்சி குழம்புக்கும் எடை கழிச்சி
    இம்புட்டுத்தான் மிச்சமென்பார் யாவாரி மாரே –அத
    ஏத்துக்கிட்டுப் போவிகளோ எஜமான் மாருகளே

    தோலைக் கழிச்சிப்பிட்டுத் தோராய நிறைபோட்டு
    மேலே ஒண்ணும் தேறாதெம்பார் யாவாரி மாரே –காச
    வேண்டிக்கிட்டுப் போவிகளோ எஜமான் மாருகளே

    காலம் முழுதுமுங்க காலடியிலே கிடந்து
    பாலூத்திக் கொடுத்ததுக்கு எஜமான் மாருகளே–உங்க
    பரிசு இதுதானோ எஜமான் மாருகளே

    ஓரத்திலே எங்காச்சும் உயிர் பிரிஞ்சு போம் வரைக்கும்
    பாரங் கொடுக்காம எஜமான் மாருகளே – நாங்க
    படுத்தாலும் பயன் தருவோம் எஜமான் மாருகளே.

    கொல்லக் கழுத்தறுத்து குருதி கொட்டி நாங்க விழ
    அல்லாஹு அக்பரென்று தக்பீர் செய்கையிலே –அத
    அருகிருந்து பார்ப்பீகளோ எஜமான் மாருகளே!

    நாங்க தந்த பால் குடிச்ச நம்மூட்டுப் புள்ளைங்கள
    ஓங்க வச்சு உயர்த்திடுங்கோ எஜமான் மாருகளே –எங்க
    உயிரதுக்குப் பயன்படட்டும் எஜமான் மாருகளே.

    *****

    மடுத்த வாயெல்லாம் மெய்வருத்தம் பாராது பாரமிழுக்கும் பகடுகளின் அவல நிலையைத் துல்லியமாய்க் காட்சிப்படுத்தியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டும் நன்றியும்!

    இனி வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    தேடியே

    செல்வ மென்றே மாடதையும்
    சேர்த்துக் கொண்ட நம்முன்னோர்,
    இல்ல மதிலே ஓருறுப்பாய்
    இணைத்தார் நமது வாழ்வினிலே,
    புல்லும் மேய இடமின்றிப்
    போனதா லின்று கிராமத்தில்,
    செல்கிறார் மாந்தர் மாட்டுடனே
    சேர்ந்தே தேடிட பிழைப்பினையே…!

    செல்வமென்று மாட்டைக் கருதிய திருநாட்டில் இன்று அவை பசித்தால் புசிக்கக்கூடப் புல்லில்லை; இந்த அவலத்தை எடுத்தியம்பச் சொல்லில்லை!

    கழனிகள் காய்ந்துவிட்டதால் காளைகளும் உழவின்றி ஓய்ந்துவிட்டன. எனவே உழைக்கும் வர்க்கத்தவரான உழவரும் அவரின் உறுதுணையான மாடுகளும் பிழைப்புத்தேடி ஊரைவிட்டுச் செல்வதை எளிமையாய்ச் சொல்லியிருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

    Share