( எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

 

படைக்கின்ற பிரம்மாவை நாம்பார்த்த  தில்லை

படைப்பதனை பார்த்துவிட்டு வியப்படைந்து நிற்போம்

படைக்கின்ற பிரம்மாவும் அவர்படைப்பும் கண்முன்

பார்க்கின்ற பாக்கியத்தைப் பார்மீது காண்போம் !

 

எழுத்தாளர் இவ்வுலகின் இயங்கிநிற்கும் பிரம்மா

எழுத்தாலே இவ்வுலகை அவர் ஆளுகின்றார்

எழுத்தாலே எத்தனையோ எமக்களித்து நிற்கும்

எழுத்தாளர் எல்லாமே இறைவனது வரமே !

 

கல்லுக்குள் கலைநயத்தைக் காட்டுகிறான் சிற்பி

சொல்லுக்குள் ஆயிரத்தைத் தீட்டுகிறான் எழுத்தன்

நல்லவற்றைத் தீயவற்றை நாட்டுக்கு உரைக்கும்

வல்லமையை எழுத்தாளன் வாங்கிவந்து உள்ளான் !

 

வாழ்க்கையினை மாற்றுகின்ற எழுத்தாளர் தம்மை

வானவரும் போற்றிடுவார் மனமார நாளும்

வாழ்வினுக்கு ஏற்காமல் எழுதிநிற்பார் ஆகின்

வாழ்க்கையிலே நரகமதை அடைந்திடுவார் விரைவில் !

 

கம்பனெனும் எழுத்தாளன் கைபட்ட தமிழும்

கவிகாள மேகமது கைபட்ட தமிழும்

நம்ஐயன் வள்ளுவனார் நமக்களித்த தமிழும்

நாளுமே எம்வாழ்வில் நல்லதுணை அன்றோ !

 

சங்கத்தமிழ் எழுத்தாளர் சபையேறி நின்று

இங்கிதமாய் எமக்களித்த இலக்கியதைப் பார்க்கின்

எங்களது எழுத்தாளர் இவ்வுலகில் என்றும்

இறவாத வரம்பெற்று வாழ்கிறார்  என்போம் !

 

வாழுகின்ற வாழ்நாளை வசந்தமுள தாக்கி

வருங்காலம் எம்வாழ்வில் விடிவு வருமென்று

கூறுகின்ற துணிவுதரும் எழுத்தாலே எம்மை

குதூகலத்தில் குளிக்கவைப்பர் எழுத்தாளர் அன்றோ !

 

வறுமைதனில் இருந்தாலும் பொறுமையுடன் எழுதி

வையகத்தார் மனங்களிலே மலர்ச்சிவர உதவி

தலைநிமிர்ந்து நிற்கின்ற தன்மையினை உடைய

தகவுடைய  எழுத்தாளர் தமைப்போற்றி நிற்போம் !

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *