பவள சங்கரி

 

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

முத்துக்குமார் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (24.03.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

10 thoughts on “படக்கவிதைப் போட்டி (153)

  1. முதுமையில் தனிமை…!
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    -ஆ. செந்தில் குமார்.

    பெற்றெடுத்த பிள்ளைகள் மனதில் சற்று
    ஈரம் குறைந்ததால் ஏற்பட்டதன் விளைவோ?
    கற்றுத் தெளியா வாழ்க்கை நெறியொடு
    சுற்றத்தைப் புறக்கணித்து வாழ்ந்ததன் விளைவோ?

    மனிதம் மறந்த மனித சமுதாயம்
    பணமே முதன்மையெனக் கொண்டதன் விளைவோ?
    புனிதம் நிறைந்த பாசப் பிணைப்புகள்
    கணக்குப் பார்த்து காசுக்கலைவதன் விளைவோ?

    வெளிநாட்டு வேலைகள் டாலர் கனவென
    இளைஞர் பலரும் பறந்ததன் விளைவோ?
    களிப்பென்றெண்ணும் எந்திர வாழ்க்கையில் நாம்
    தொலைத்துவிட்ட கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் விளைவோ?

    நீதிக்கதைகள் போதிக்க நேரமின்றி பிள்ளைகட்காய்
    பாதிவாழ்வைத் தொலைத்து பொருளீட்டியதன் விளைவோ?
    ஆதிக்கம் செலுத்தி பிள்ளைகள் மனதில்
    சாதிக்க தன்னலத்தை விதைத்ததன் விளைவோ?

    காரணம் பல நூறு இருந்தாலும்
    கருணை உள்ளம் கொண்டவரை
    இருகரம் நீட்டி அரவணைத்து
    அருமருந்தெனும் அன்பைச் சொரிந்திடுவோம்!

  2. மாதாவின் மகிமை!!
    ?????????
    ஜன்னலுக்கு அந்தப்புறம்
    அன்னையின் பார்வையில்
    மின்னுகிற வருத்தங்களில்
    என்னென்ன சேதிகளோ???
    சொத்து சுகம் சேத்துவச்சு
    கெத்தாய்வாழ்ந்தமகராசி
    மகன் போனவேதனையில்
    மதிகெட்ட சோதனையோ???
    வளமோடுவளந்தபிள்ளை
    வாகனவிபத்தில்பலியான
    சேதிவந்த நாள்முதலாய்
    சித்தபிரமையின்மவுனமோ?
    அகல்விளக்குநெய்தீர்ந்து
    அணைவதுண்டு,ஆதவனாம்
    அம்மாவின் உயிர்துடிப்புக்கு
    அஸ்தமனம் எப்போதோ???
    அதுவரையில்சளைக்காமல்
    அகலத்திறந்தகண்ணொளி
    அங்கிங்கு அலைபாயாமல்
    நிலைகுத்தி நிற்கிறதோ???
    அத்தனைக்கும் உதாரணம்
    அகிலத்தில்நிரம்ப உண்டு
    பெற்றவளின்பிரியத்துக்கு
    உற்ற உவமைஉலகிலேது???
    ???????????
    ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி
    பவானி…ஈரோடு…
    9442637264….
    ????????????

  3. தேடுவோம்…

    கிளிகள் பறந்துவிட்டன
    வெளியே,
    கூண்டுக் கிளியானாள்
    அன்னை..

    பிள்ளைகளுக்குப் பலவேலை,
    பறந்துவிட்டார்கள் வெளியே-
    பெற்ற தாயை மறந்து..

    பெற்றவளுக்கு ஒரே வேலை,
    ஒரே நினைவு-
    பிள்ளைகளின் நல்வாழ்வு..

    ஆனாலும்,
    அவளுக்கும் உள்ளதே
    வாயும் வயிறும்..

    இப்படி
    சன்னல் கம்பிகளுக்குப்பின்
    காத்திருக்கும்
    அன்னையர் ஆயிரம்,
    அத்தனைபேர் எண்ணமும் ஒன்றாய்-
    பிள்ளைகள் பிள்ளைகள் என்றே..

    ஆனால் பிள்ளைகள்-
    தேடுவோம் அவர்களை…!

    செண்பக ஜெகதீசன்…

  4. விசனம் வதனமிடும் விண்ணப்பம் ஏதோ?

    அசனம் மிகுந்தவோ இல்லிடை காட்டமோ?
    கசனம் விரைந்தவோ வல்லுரை வாட்டமோ?
    மசனம் நிறைந்தவோ மல்லுறை கொட்டமோ?
    திசனம் மறந்தவோ இறையுறை கோட்டமோ?
    உசனம் நினைந்தவோ சொல்லுரை தேட்டமோ?
    நிசனம் குறைந்தவோ கண்ணுறை வெட்டமோ?
    வசனம் உறைந்தவோ உள்ளுறை ஓட்டமோ? – அம்மே!
    விசனம் வதனமிடுமுன் விண்ணப்பம் ஏதோ?

    பொருள்

    வீட்டில் காட்டமான மனக்கசப்பால் (சோறு உண்ணப்படாமல்) மிஞ்சியதோ?
    கரிக்குருவி (சீறிட்டுப்) பறக்க, கெட்ட சகுனம் என்று (மனம்) வாட்டமடைந்ததோ?
    வருத்தம் ஏற்படுமாறு அடாவடித்தனமாய் (எவரேனும்) (வீதியில்) சண்டையிடுகின்றனரோ?
    (சாமி) தரிசனம் செய்ய மறந்தோமே என, கோயிலின் பால் (எண்ண) நாட்டமோ?
    (புராணச்) சொற்பொழிவுகள் நினைவுக்கு வர, நல்ல பிரசங்கங்க உரைகள் பால் (மனதுள்) தேடல் எழுந்ததோ?
    கண்ணுள் காணும் வெளிக்காட்சியின் வெளிச்சத்தில் (உன்) ஒற்றை உணர்வு (சற்றுக் ) குறைவதாய் உணர்வெழுந்ததோ?
    உள்மனதில் (தொடர்ந்து) எண்ண ஓட்டம் நிகழ்ந்துகொண்டிருப்பதால் வார்த்தைகள் உறைந்து போயினவோ? (மௌனியானாயோ?)
    அம்மா! தனிமைக் களையோடு உன் முகம் விடுக்கும் விண்ணப்பம் தான் எதுவோ?

  5. துணையான தனிமை ::::::: சோகமே உருவாய், ஒரு தாய்!
    தனிமையே துணையாக கொண்டிருந்தாய்!
    யாரின் வரவுக்காய், காத்திருந்தாய்!
    பிள்ளையை எதிர்பார்த்தா நின்றிருந்தாய்!
    முன்னூறு நாள் சுமந்தாய்!
    கருவில் உயிர் வளர்த்தாய்!
    வலிகள் நீ பொறுத்தாய்!
    உறக்கம் நீ தொலைத்தாய்!
    பத்தியம் நீ இருந்தாய்!
    உயிரைப் பணயம் வைத்து!
    பிள்ளையைப் பெற்றெடுத்தாய்!
    உன் உதிரத்தை பாலாய் நீ கொடுத்தாய்!
    கண்ணை இமை காப்பது போல்!
    பிள்ளையை காத்திருந்தாய்!
    நீ வளர்த்த பிள்ளைக்கு உன் அருமை புரியவில்லை!
    உன்னைத் தன்னோடு வைத்திருக்க ஏனோ மனமில்லை!
    முதியோர் இல்லத்தில், சேர்த்து விட்டான் உன் பிள்ளை!
    நீயே அனைத்தும் என்று இருப்பவள் உன் தாயே!
    இதை நினைக்க ஏனோ மறந்தாயே!
    உனக்கும் ஒரு நாள் முதுமை வரும்!
    கொடுத்தது திரும்பி வரும்!
    முதுமையில் தனிமை கொடுமை என்பது!
    உனக்குக் கட்டாயம் புரிய வரும்!
    தாயை அரவணைக்க மறக்காதீர் பிள்ளைகளே
    உயிர் கொடுத்த உத்தமியை ஒதுக்காதீர் பிள்ளைகளே!

  6. அறையின் சிறையில் அன்பில் உள்ளம்
    அவள் மனதின் சிறையில் என்றும்
    மகனின் உள்ளம்…. 
    துள்ளி ஓடும் மானாய் இருக்கும் உன்னை 
    துள்ளாத மீனாய் மாற்றி கூண்டில் அடைத்தது ஏனோ?
    சமத்திர நீராய் இருக்கும் உன் கண்ணீரை
    நிறுத்த வருவது யாரோ?
    சிந்தும் மழை கூட சிதறிவிடும்
    ஆனால் உன் அன்பு கண்ணீர் என்றும் சிதறாது
    என் புகழ் பேச கடலாய் இருந்தாய் ஆனால் நான்
    உன் புகழ் பேச அனையாய் இருந்து விட்டோன்
    அன்பு அறையில் அறைந்தாய் ஆனால் நான்
    இரவு சிறையில் அறைந்து விட்டோன்
    ஆற்று நீராய் இருந்ததால் 
    உன் மனம் எங்கும் பார்க்க முடிந்தது
    கானல் நீராய் இருந்ததால் 
    தூரத்தில் மட்டும் பார்க்கமுடிந்தது
    ததும்பி ததும்பி என் அருகில் வந்தாய்
    வெதும்பி வெதும்பி அழ வைத்து விட்டோன்
                                                            -அழுகையுடன் அன்பு மகன்

  7. அவருக்கென காத்திருந்த
    கன்னிப்பொழுதெல்லாம்
    கடந்த காலம்.

    சீராட்டிய பிள்ளைச் செல்வங்களை
    எதிர்பார்த்து பூத்திருந்தது
    முடிந்த கணங்கள்.

    பேரப்பிள்ளையின் தளிர்நடையை
    காண விழித்திருக்கிறது
    முதுமையின் மிச்சம்.

    மாறிக்கொண்டே இருந்த காலவோட்டத்தில்
    மாறாத ஒன்றாக
    எனது காத்திருப்பு.

    காத்திருப்பின் பதட்டத்தை;
    துருவேறிய கம்பிகளின்
    தடம் சுமந்த என் கைகள்
    அழியா சாட்சி சொல்லும்.

  8. கருப்பு வெள்ளைக்குள்
    சுருங்கிவிட்ட எம் உலகில்,
    வீட்டின் பரப்பளவுக்குள்
    குறுகிக்கிடக்கும்
    சிந்தனைத் தேக்கங்கள்.
    சாளரத்தின் வழியே படமாகும்
    காட்சி சேகரிப்புக்களால் மட்டுமே
    வண்ணங்கள் தீட்டப்படுகின்றன.
    ஜன்னல் கம்பிகள்
    எண்ணப்படுவதெல்லாம்
    சிறைச்சாலைகளில் மட்டுமல்ல.

  9. காத்திருப்பு

    தவமிருந்து பெத்தெடுத்தேன்
    மொத்தமா நாலு புள்ள
    அதுல ஒன்னுகூட
    இப்போ என்கூட இல்ல

    அந்த மனுஷன் பென்ஷன்னுல
    வயித்துக்கு சாப்புடறேன்
    துணைக்கந்த சாமியத்தான்
    அப்பப்போ கூப்பிடுறேன்

    பெத்ததலாம் பத்தி நான்
    கண்ட கனவு ஏராளம்
    ஒன்னுகூட பலிக்காம
    பொய்யாப் போச்சு பூராவும்

    அதி பெருசா ஏமாந்தேன்
    எதைஎதையோ நம்பி நான் – இப்போ
    என் பிடியில் இருப்பதெல்லாம்
    இந்த ஜன்னல் கம்பிதான்

    சுயநலமா வாழும் நாலு
    பிண்டங்கள பெத்துட்டேன்
    அவங்களோட செய்கைப் பார்த்து
    எப்பவோ நான் செத்துட்டேன்

    ஆனாலும் எப்பத்தான்
    எனக்கந்த மரணமுன்னு
    காத்துக்கிட்டு கெடக்குறேன் நான்
    சீக்கிரம் வரணுமுன்னு

    புதுவைப் பிரபா
    2,முத்துவாழியம்மன் கோயில் தெரு
    பாக்கமுடையான்பட்டு,
    புதுச்சேரி– 605 008.
    பேசி: 94432 14654
    மின்னஞ்சல் : puthuvaipraba@gmail.com

  10. முதுமையின் அனுபவம்..!
    ====================

    பதிவிரதை என்னனுபவத்தை இங்கே பகிர்கிறேன்
    ……….பகட்டான வாழ்க்கை தந்தானென் அன்புக்கணவன் *
    அதிசயித்துப் பார்க்கிறேனென் கடந்தகால வாழ்வை
    ……….அனைத்து வசதிகளையும் அனுபவித்து உய்ந்தேன் *
    கதியேயென் கணவன்தானென இருந்தேன்! விதியால்
    ……….காலனும் கடிதேயவரை அழைத்துக் கொண்டான் *
    அதிட்டமில்லையோ?எனச் சொல்லியே அழுவேன்
    ……….ஆருக்கும் இந்நிலை வேண்டாமென வேண்டுகிறேன்*

    உதிரத்தைக் கொட்டித்தான் ஒவ்வொரு தாய்மாரும்
    ……….உயிராய் மதிக்கும்தன் பிள்ளையை வளர்ப்பார்கள் *
    எதிர்காலம் நினைக்காமல் எதிர்பார்ப்பு இல்லாமல்
    ……….என்றைக்கும் இருக்கின்ற மனம்தான் தாய்ப்பாசம் *
    துதிப்பாட்டு பாடுதற்கு தனக்கோர் துணையொன்று
    ……….தேடிக்கொண்ட சந்ததியும் வெறுக்கிறார் தாயையும் *
    அதிர்ச்சி யாயிருக்கும் அன்றாடமிதை நினைத்தால்
    ……….அன்னை நானெ உணர்ந்தாலனைத்தும் மறையும் *

    பொதிசுமந்து பிள்ளையை வளர்த் தாளாக்கினேன்
    ……….பொறுப்பில்லை! போற்றும் குணம் அவரிடத்தில்லை *
    சதிசெய்தார்கள்! சேர்த்தவென் சொத்தைப் பிரித்து
    ……….சாதிக்கிறார் கிடைத்ததைப் பங்கு போட்டுக்கொண்டு*
    முதியோர் இல்லத்திலின்று…முகம்தெரியா நபர்களே
    ……….முகமலர்ந்த அன்பைப் பொழிந்தாலும்! நான்நிர்க்..
    கதியாய் நிற்கிறேன்! எதிர்ஜன்னலில் எனைப்போல
    ……….கலங்குவோர்கள் இன்னும் எத்தனைபேர் உளரோ.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.