குறளின் கதிர்களாய்…(208)
-செண்பக ஜெகதீசன்
நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை. (திருக்குறள் -325: கொல்லாமை)
புதுக் கவிதையில்…
மானிடப் பிறப்பின் தன்மை
அறிந்தஞ்சி,
பிறவாமை வேண்டித்
துறந்தார்களுக்குள்,
கொலைச்செயல் அஞ்சிக்
கொல்லாமை அறம் சார்ந்தோர்
உயர்ந்தவரே…!
குறும்பாவில்…
புவிவாழ்வின் நிலையஞ்சித் துறந்தாருள்,
கொலைச் செயல்களுக்கஞ்சிக் கொல்லாமை
அறம் சார்ந்தோர் உயர்ந்தோரே…!
மரபுக் கவிதையில்…
மண்ணில் மானிடப் பிறப்பதுவாய்
-மீண்டும் பிறக்க வேண்டாமென
எண்ணித் துறவை மேற்கொண்ட
-ஏற்ற மிக்கப் பெரியோர்க்குள்,
எண்ணம் போல உயிர்களைத்தான்
-எமனுல கனுப்பிடும் கொலைத்தொழிலைப்
பண்ண விரும்பா அறம்சார்ந்த
-பண்பு கொண்டோர் உயர்வாமே…!
லிமரைக்கூ…
துறவுகொண்டார் பிறப்பினுக்கே அஞ்சி,
கொல்லாமை அறம்சார்ந்தோர் மேலானவராவர்
துறவியர் அவரையும் மிஞ்சி…!
கிராமிய பாணியில்…
அஞ்சிடு அஞ்சிடு
கொலபாதகத்து அஞ்சிடு,
ஒலக வாழ்க்கயில
கொலபாதகத்து அஞ்சிடு…
ஒலக நடப்பப் பாத்துபயந்து
மறுபொறப்பு வேண்டாமுண்ணு
சாமியாரா ஆனவங்களில,
மத்த உயிரக் கொல்லாத
நல்ல கொணத்தக் கொண்டவங்க
எல்லாத்திலயும் மேலுங்க…
அதால,
அஞ்சிடு அஞ்சிடு
கொலபாதகத்து அஞ்சிடு,
ஒலக வாழ்க்கயில
கொலபாதகத்து அஞ்சிடு…!
