“சோழர்காலப் பெண்மை”
டாக்டர். இராம. மலர்விழி மங்கையர்க்கரசி
இணைப் பேராசிரியர் (ம) துறைத்தலைவர்(iஃஉ)
தமிழ்த்துறை
தியாகராசர் கல்லூரி
மதுரை-625009
தமிழ்நாட்டின் பழம்பெருமையை பழந்தமிழர்களின் வாழ்வியல் சிறப்புகளை, பழந்தமிழ் இலக்கியங்களோடு மட்டும் அல்லாமல் மூவேந்தர், குறுநிலமன்னர்கள் போன்ற இவர்தம் வரலாற்றுப் பதிவுகளில் இருந்தும் அறிந்து கொள்ள முடிகின்றது.
குறுநில மன்னர்களை உள்ளடக்கி முடியுடை மூவேந்தர்களாக சேரர், சோழர்,
பாண்டியர் என முடியாட்சியுடன் குடியாட்சி நிகழ்த்தியுள்ளனர். அவர்களுள் சோழர்களின் கலை, இலக்கியம், சமயம் ஆகியவற்றுக்கான பணிகள் தனித்துவம் பெறுவதாக விளங்குகின்றன.
முற்காலச் சோழர்களின் வரலாற்றை எழுதப்புகுந்த திரு. நீலகண்ட சாஸ்திரி,
திரு. கே.கே. பிள்ளை, டாக்டர். இராசமாணிக்கனார், திரு. வேங்கடசாமிநாட்டார்,
திரு. மயிலை சீனி வேங்கடசாமி போன்றவர்கள் வெற்றி பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் ஆவர். இவர்களையெடுத்து ரா. இராகவ ஐயங்கார், மு. இராகவ ஐயங்கார் போன்றவர்களும் அடங்குவர். (பழங்கால சோழர்களின் வரலாறு – அ. சவரிமுத்து – பக். 4)
சோழ மன்னர்கள் அவர்களின் பரம்பரை பற்றிய செய்திகள், சோழர்களின்
படைத்தளபதிகள், படைச்சிறப்புகள், ஆட்சிமுறைகள், பாசனக் கொள்கைகள், நாணயங்கள், பழங்கால நாட்டு மக்களின் சமுதாய பழக்க வழக்கங்கள், திருமண முறைகள் எனப் பல்வகைக் கூறுகளையும் மேற்குறித்தோரின் ஆய்வுகள் நமக்குப் பறைசாற்றி நிற்கின்றன.
சோழநாடு சோறுடைத்து என்ற சொலவடை நாம் அறிந்ததே. ஆனால் சோழநாடு எனும் பெயர் நபர்களை மையமிட்டதா? அன்றி நிலத்தை மையமிட்டதா? என்று கேள்வி எழுகின்றது. இதற்கு விடையாக நாம் சோழ நாட்டின் அமைப்பையும் தொன்மையையும் அறிய வேண்டும்.
“கடல் கிழக்குத் தெற்குக்கரை பொரு வெள்ளாறு குடதிசையில் கோட்டைக் கரையாம் – வடதிசையில் ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம் சோணாட்டுக் கெல்லையெனச் சொல்.”
என்று சோழ நாட்டு எல்லையைப் பழம்பாடல் ஒன்று பகர்ந்துள்ளது.
கிழக்கு – மேற்கில் 24 காத தூரம், வடக்குத் தெற்கில் 24 காத தூரம் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கடலில் கலக்கிடும் காவிரி, பாலாறு, தென்பெண்ணை, வடபெண்ணை, கிருட்டிணா ஆகிய ஆறுகளின் கழி முகப் பகுதியாக, வடிநிலமாக சோழநாடு அமைந்துள்ளது.
நீர் சுழல் நாடு நீர்சூழ்நாடு நீர்சோழநாடு சோழநாடு. இதையே ஆங்கிலத்தில் சோழ மண்டலக் கடற்கரை என்ற பொருளில் “ஊhழசய அயவெயட ளுநயளாழசந” என்று வழங்குகின்றனர்.
சோழநாடு என்பது சோழவளநாடு, தொண்டை நாடு என்று இருபெரும் பிரிவாகப் பிரிக்கப்பட்டு, பிறகு ஒவ்வொரு நாடும் கூற்றங்களாக, சிறுநகரங்களாக, சிறுநாடுகளாக, மண்டலங்களாக வகுக்கப்பட்டன.
தலாமி என்ற யவண வரலாற்று ஆசிரியர், பிளினி என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர், கிரேக்கர் தம் பெரிப்ளுஸ் என்ற நூல் இவற்றின் வாயிலாக அறியலாகும் செய்திகள் சோழநாட்டின் பெருமையை நமக்குப் பறை சாற்றி நிற்கின்றன.
சோர்நாடு என்று இவர்தம் குறிப்பில் இடம்பெறுவது சோழநாடு என்பது வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பு கிரேக்கத்தில் உள்ள காபேரிஸ் என்ற சொல்
காவிரியைக் குறிக்கும். அம்மொழியில் கடைசியில் ஸ்(5) உச்சரிக்கப்படுவதில்லையாம். அவ்வாறெனில் காபேரி என்பது நமது காவிரியைக்
குறித்து அதன் பட்டினமாம் காவேரிப் பூம்பட்டினத்தையே குறித்து நிற்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
நவீன தேசப் படத்திற்கும் தாலமி வரைந்துள்ள தேசப்படத்திற்கும் வேறுபாடு உள்ளதாம். நவீன தேசப் படத்தில் அட்சரேகை நில நடுக்கோடு 0 (சுழியம் – பூஜ்ஜியம்) (பாகை – டிகிரி) என்பது சுமத்திர தீவின் நடுவில் செல்கிறது. ஆனால் தலாமி வரைந்த நிலப்படத்தில் இலங்கையின் நடுவில் நிலநடுக்கோடு செல்கிறது. இதனால் 60 பாகையைக் கூட்ட நவீன அட்சரேகை கிடைத்து விடுமாம்.
அதுமட்டுமா? அது போலவே 0 (சுழியம் – பூஜ்ஜியம்) நவீன தீர்க்கக் கோடு கிரீன் வீச் வழியே செல்கின்றது. ஆனால் தாலமி கணிப்பு 00 டிகிரி (பாகை) ஐஸ்லாந்தில் தொடங்கிற்று. ஐஸ்லாந்து கிரீன் வீச்சுக்கு மேற்கே 200 டிகிரி உள்ளது. 200 டிகிரியைக் கழித்தால் நவீன கிரீன்வீச் கிடைத்துவிடும்.
தாலமி 329.7-ல் இருப்பது பெரே (டீநசயந) இது திருச்சிக்கும் கரூருக்கும் செல்லும் பாதையில் “பாராய்” என்ற திருப்பராய்த்துறை என்னும் இடத்தைக் குறிக்கின்றது.
இது மேற்கே திருச்சியிலிருந்து 13கி.மீட்டர் தொலைவில் உள்ளது. பெரே என்ற இந்தப் பதிவு பேரூர் ஆகக் கூட இருக்கலாம்.
தென்னகரா என்ற சொல் தென்னரங்கரம் என்பதான ஸ்ரீரங்கத்தைக்
குறிக்கலாம் என்று தாலமி பற்றி எழுதிய வி.எஸ்.வி. இராகவன் அவர்கள் குறிப்பிடுகிறார். (பழங்கால சோழர் வரலாறு – பக். 16,22)
வடமொழியில் சோரன் என்ற சொல்லுக்குத் திருடன் அல்லது கள்ளன் என்பது பொருள். சோரன் என்பது உருமாறி சோழன் என்று ஆனதாக வரலாற்று ஆசிரியர் டி.ஆர். பந்தர்க்கர் கூறியுள்ளார். (டீhயனெயசமயச. னுச. யுnஉநைவெ ஐனெயை Pயபந-89). இது தவறான பொருளாகும். தமிழினத்தை இழித்துப் பேச நினைப் போரின் இழிந்த தன்மை. மேலும் வல்லின ற கரம்தான் ழ கரமாகத் திரியுமே ஒழிய, இடையின ர கரம் ழ கரமாகத் திரியாது. இது தமிழ்மொழியின் இயல்பினை அறியாதவரின் விழைவார்ந்த விருப்பமாகத் தோன்றுகிறது என்று “சேர சோழ பாண்டியர்” என்ற நூலில் மயிலை. சீனி வேங்கடசாமி கருத்துரைத்துள்ளார்.
சோழர்களைச் செம்பியன், சென்னி, வளவன், கிள்ளி எனத் தனித்தனியாக
அழைப்பினும் இவர்தம் ஒட்டுமொத்தப் பெயர் சோழரே. மன்னர்கள் மட்டும்
அல்லாது நிழக்கிழார்களும், அரையர்களும் சிற்றரசர்களாக இருந்தும் சங்க காலத்தில் ஆண்டு இருக்கிறார்கள்.
பழவேல் தரையன் பழுவேட்டரையன்.
முத்தரையன் முத்தரசன்.
சோணாட்டுப் பிடவூர்க் கிழான்.
சிறுகுடிக் கிழான்.
இருங்கோவேள்.
வல்லம் கிழான்.
மலையமான்.
கொல்லிமலை அரசன்.
ஆர்க்காடு சோழன்.
தொண்டைமான்.
ரேனாட்டுச் சோழன்
என்பவர்களே அவர்கள், இவர்களைத் தவிரவும் பட்டையதார்கள், நிலம்
உடையர்வர்கள், அம்பலக்காரர்கள், கிழார்கள், நாட்டார்கள், வேளாளர்கள், முத்தரையர்கள், காவுந்தர்கள், காவல்காரர் போன்றவர்களும் சோழப் பேரரசிற்குத் துணையாக நின்று ஆள்வதற்குத் துணை நின்றிருக்கிறார்கள். (பழங்காலச் சோழர் வரலாறு – பக். 32)
இவர்களிடம் அந்தப் பகுதி வளம்;, நீர்ப்பாசனம், வரிவசூல், தண்டம்,
வாணிகம், தொழில், வேளாண்மை, மேற்பார்வையிடுதல் போன்றவை ஒப்படைக்கப்பட்டு நிர்வாகம் செய்யப்பட்டது.
சோழவள நாட்டில் அகத்திய முனிவர் வருகைக்கு முன்னரே சோழர்கள் ஆண்டு வந்திருக்கிறார்கள். சோழ மன்னன் முசுகுந்தன் காலத்தில்தான் ஆரிய
பிராமணர் செல்வாக்கு ஏற்பட்டது என்கின்றனர் ஆய்வாளர்கள். ஊர்தோறும்
பிராமணர் செல்வாக்கு ஏற்பட்டிருக்கிறது. பிராமணர் குடியிருப்பு மையப்படுத்தப்பட்டது. சாதியமுறை குடியிருப்பு உருவானது என்பதும் அவர்தம் கணிப்பு. (பழங்காலச் சோழர்களின் வரலாறு – பக். 71).
தமிழ்நாட்டில் சாதிய முறைக்கு வித்திட்ட முசுகுந்தச் சோழனுக்குப் பின்னர்
காலந்தோறும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும் களப்பிரர், பல்லவர், பிற்காலச்
சோழர்கள் காலத்தில் மெல்ல மெல்ல உயர்ந்து தீண்டாமை உச்சத்துக்கு உயர்ந்தது. அதனால் சாதீயம் ஒழிக்கப் பெரியபுராணத்தைச் சேக்கிழார் எழுதி சாதீயத்தை ஒழிக்கப் பாடுபட்டார் என்பதும் தெளிவு.
இத்துணை சிறப்பு வாய்ந்த சோழப் பேரரசின் பெண்மை நிலைப்பாடு குறித்து
அறிய வேண்டியுள்ளது அவசியம் மட்டுமல்ல ஆர்வமும் கூட. ஏனென்றால் சோழர்காலத்தில் தான் கலைகளின் வளர்ச்சியும் போற்றுதலும் உச்சகட்டத்தில்
இருந்திருக்கிறது. குறிப்பாக கட்டடக்கலையும், கோயில் கலையும் மகுடம் கூட்டியது என்றே கூறமுடியும். அவ்வாறெனின் கலைகளுக்கும் பெண்களுக்கும் உள்ள சம்பந்தமும் பிரிக்க முடியாததே!
எனவே சோழர் காலப் பெண்மையை ஒட்டு மொத்தமாகக் கூறிவிட முடியுமா?
என்பது கேள்விக்குறியே. அரசமகளிர், சாமானியப் பெண்டிர், கலைகளோடு தொடர்புடையவர் என முப்பரிமாணங்களில் சோழர் காலப் பெண்களை நோக்குவதே! சாலப் பொருத்தம் என்று தோன்றுகிறது.
சோழ அரசன் என்றவுடன் ராஜராஜசோழன் அவன் குலப் பெண்டிர் என்றவுடன் அவன் தமக்கையார் குந்தவைநாச்சியாருந்தான் இக்காலத் தமிழ் மக்கள் மனதில்
முதற்கண் தோன்றும் உருவங்களாக உள்ளன. அதற்குக் காரணம்
தமிழ்த்திரையுலகம் நமக்குத் தந்த இராஜராஜசோழன் என்ற திரைப்படம். அப்படத்தில் வரும் காட்சி ஏடுதந்தானடித் தில்லையிலே… என்ற கணீர்க் குரலுடன்
தோன்றும் ராஜலெஷ்மியின் இராஜமாதா தோற்றம். ஆணையிடும் தோரணை, வழிநடத்தும் பாங்கு, பக்தித் திறம், இசைப் புலப்பாடு, அழகும் அறிவும் நிறைந்த இராஜகளை இத்தனையும் அச்சோழர் குலப் பெண்ணிடம் நிறைந்திருந்ததை நாம் கண்டு களித்தோம்.
மற்றொரு புனைகதை கல்கியின் “பொன்னியின் செல்வன்” தமிழ் மக்களை
எழுத்தாலும், வரலாற்றுச் செய்திகளாலும் இராஜதந்திரக் காட்சிகளாலும், விவரணைகளாலும் கட்டிப் போட்ட நாவல். அதில்வரும் பெரிய குந்தவை, சின்ன
குந்தவை, நந்தினி, பூங்குழலி எனும் இவர்கள் நம் மனதில் ஆழப்பதிந்த
கதாபாத்திரங்கள். அரசகுலப் பெண்டிரின் அத்தனை திறமைகளும் கொண்ட பெண்கள் இருவர். பழிவாங்கும் மனம் படைத்த பெண். அன்பு செலுத்துதற்கும் விட்டுக் கொடுத்தற்கும் முகாரி ராகம் பாடுவதற்கும் என சோக வடிவில் ஒரு
சாமானியப் பெண் என இவர்களைப் படைத்துக் காட்டியது அந்நாவல். கற்பனை மாந்தர்கள்தானே என்று கடந்து போக முடியாத கல்வெட்டுப் பாத்திரங்கள் அவை.
சங்க இலக்கியப் பக்கங்களைப் புரட்டினால் அரிதான ஒரு சம்பவத்தை உணர்த்தும் பாடல் ஒன்று புறநானூற்றிலே பதிவாகியுள்ளது. முட்டிக் கொண்டும்
முறைத்துக் கொண்டும் திகழ்கின்ற சேரசோழ பாண்டியராம் மூவேந்தர் ஒரு பெண்பாற் புலவரின் அறிவுரையை ஒருங்கே அமர்ந்து கட்டிக் கொண்டு கேட்டனர் என்பது அதிசயத்தக்கதுதானே! ஆம்! பாடாண் திணையில் அமைந்த வாழ்த்தியல் துறைப் பாடல்தான் அது.
சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கு கூடியிருக்க அவரை ஒளவைப் பிராட்டி பாடிய பாடலும் அதுவே.
“நாகத்து அன்ன பாகுஆர் மண்டிலம் தமவே ஆயினும் தம்மொடு செல்லா@ வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும் ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து புhசிழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய நார் அரிதேறல் மாந்தி, மகிழ் சிறந்து, இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி, வாழ்தல் வேண்டும், இவண் வரைந்தவைகல்@ வாழச் செய்த நல்வினை அல்லது ஆழுங்காலைப் புணைபிறிது இல்லை@
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்!
யான் அறி அளவையோ இதுவே@ வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப்
பரந்து இயங்கு மாமழை உறையினும்
உயர்ந்து மேந் தோன்றிப் பொலிக நும் நாளே.”(புறம். பா. எண். 367).
“மூவேந்தர்களே! வேந்தராயினும் இறக்குங்கால் ஆட்சிபுரிந்த நாடு அவருடன்
செல்லாது. அவருடைய நாடு வழித்தோன்றல் கட்டு என்றாலும் சிலபோது
அதுவன்றி நோற்றார்க்கு உரிமை உடைத்தாக மாறிவிடும். இவ்வுலகத்தே வாழுங்காலம் நல் வினை புரிந்து வாழ வேண்டும். இறக்கும் போது ஒருவன் செய்த நல்வினையே துணையாவது அன்றிப் பிறிதில்லை என்பதை உணருங்கள்.” என்று
பெண்பாற் புலவர் ஒருவர் அறிவுரை கூறும் காட்சி பெண்மையின் திறத்தையும் உயர்நிலையையும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
இப்பாடற் சம்பவத்தினின்றும் மற்றொரு நுட்பத்தையும் காண முடிகிறது.
சேரமான் மாரி வெண்கோ, பாண்டியன் காணப் பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என மூவரும் கூடிய கூட்டுறவு அவையில் மூவர்க்கும் பொதுவாகவே,
“ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறைப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து”
என்று ஒளவை அறிவுறுத்துகிறார். அவர் காலத்தில் பிராமணர்களுக்குத் தகுந்த
மதிப்பளிப்பது குறைந்திருக்க மீண்டும் அம்மதிப்பை ஒளவையார் பெற்றுத்
தருகிறார். அதன் பின்னரே இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி மீண்டும்
பிராமணர்களுக்கு மதிப்புத் தரத் தொடங்கினான் என்று வரலாற்று ஆசிரியர்கள்
விகசித்து எழுதியுள்ளனர். வாழ்வின் உண்மை உரைத்தலோடு மட்டும் நின்றுவிடாது. ஒரு இனப் போற்றுதலுக்கான பரிந்துரையையும் மன்னர்க்கு ஒரு
பெண் வழங்கியதையும், அதனைச் சோழமன்னன் ஏற்றதையும் காணும்போது, சோழர்கள் பெண்மையைப் போற்றி வந்துள்ளனர் என்றே தெளிய முடிகிறது.
தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தின் வழி நாம் அறிந்து கொண்ட சேரன் செங்குட்டுவன், இளங்கோ அடிகள் இவர்களின் தாய் நற்சோணை என்பவள் கி.பி. 105-135 வரை வாழ்ந்த சோழ மன்னன் மணக்கிள்ளி என்பவனின் மகளாவார். “உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்” என்ற உன்னத சிந்தனையை
உலகுக்கு தருதற்பொருட்டு கருவிலே உருவேற்றிய நற்சோணைக்கு நல்வணக்கங்கள் கூறுவோம்.
பாண்டிய நாட்டில் சைவந் தழைத்தற்குக் காரணமாக விளங்கிய மங்கையர்க்கரசியாரும் சோழர் குலப் பெண்ணே. பாண்டிய மன்னனை மணந்து சோழர் குலமகளாய் சைவந்தழைக்கத் தக்க துணையாய் நின்றவர். அதனால்
தானே பக்தி இலக்கியமாம் தேவாரமும் அவரைப் போற்றிப் பரவுகின்றது. மன்னனுக்காய் புறத்தும் மதத்திற்காக அகத்தும் வெளித்தெரியாது திருநீறுபூசிக் கொண்டு அத் திருநீற்றை மன்னணும், மன்னன் வழி மக்களும் ஏற்றுப் பகிரங்கமாய்
பறைசாற்றிய இராஜதந்திரி மிகுந்த மதியூகியாகவும் மங்கையர்க்கரசியார் திகழ்ந்தார் என்பது வியத்தற்குரியது.
“மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை வரிவளைக் கை மடமானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவ…”
என்று சோழர்குலமகள் பாண்டியன் மாதேவி பரவும் பெருமையுடைவன் சிவன், ஆலவாய் அண்ணல் என்று இறையையே குறிப்பிடும் அளவிற்குப் பக்தியின் உன்னத இடத்தைச் சோழர்குலப் பெண்கள் பெற்றிருந்திருக்கிறார்கள் என்பது போற்றுதற்குரியது.
மூவேந்தருடன் தொடர்புடையதோடு மட்டுமல்லாமல் வரலாற்றில் பிறநாட்டுடன் அல்லது அண்டைநாட்டுப் பெண்களின் தொடர்புடனும் சோழதேசம் தனது ஆட்சி
எல்லையை மற்றும் கலாச்சார எல்லையினை விரிவுபடுத்தியிருந்ததையும் காணமுடிகிறது.
மணிமேகலை என்ற ஐம்பெருங் காப்பியத்தால் அறியப்படும் மன்னன் சோழன் நெடுமுடிக் கிள்ளி. பூம்புகார் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன்
(கி.பி. 135-170) அவனுடைய மகன் உதயகுமாரன். இளவரசனான இவன் சிலப்பதிகார மாதவியின் மகள் மணிமேகலையை ஒருதலையாகக் காதலித்து வந்தான். பல நேரங்களில் பல வழிகளில் அவளை அடையமுயன்றான். அவனது தொல்லைக்குப் பயந்து மணிமேகலா தெய்வத்தை வேண்டுகிறாள் மணிமேகலை.
அத்தெய்வம் அவளை மணிபல்லவத்தீவிற்குத் தூக்கிச் செல்கிறது. அங்கே மணிமேகலைக்கு அமுத சுரபி கிடைக்கிறது. அதைக் கொண்டு காஞ்சியிலும், பூம்புகாரிலும் பட்டினி இருப்போரைக் கண்டு அவர்களுக்குப் பசிப்பிணி மருத்துவம் புரிகிறாள் மணிமேகலை. இங்கே காதலை மறுக்கும் உரிமையும், பொதுத்தொண்டு புரியும் மனத்தின்மையையும் பெண் பெற்றிருக்கிறாள் என்பதை அறிய முடிகிறது.
அதனோடு அமையாது, இளவரசன் கொல்லப் படுகிறான். தன் மகனின் மரணத்திற்குக் காரணம் மணிமேகலையே என்று தவறாக எண்ணிய அரசமாதேவி சீர்த்தி பல துன்பங்கள் தந்து மணிமேகலையைக் கொடுமைப்படுத்தி சிறையில் அடைக்கிறாள். ஈண்டு பழிவாங்கும் மனநிலையிலும் பெண்கள் இருந்திருக்கிறார்கள். அந்தச் சிறைக் கோட்டத்தையும் அறக்கோட்டமாக்கிப் பின் அரசமா தேவியைத் தவறுணர்ந்து திருந்துமாறு மணிமேகலையின் செயல்கள் அமைகின்றது.
“இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு”
எனும் வள்ளுவனின் வாக்குக்கு வாழ்வியல் சான்றாகவும் மணிமேகலை விளங்கியிருக்கிறாள்.
இம்மணிமேகலையில் வரும் நெடுமுடிக்கிள்ளி மன்னன்தான்
“புன்னையங்கானல்” எனும் மணல்பகுதியில் இருக்கும்போது அங்கு வந்த அழகியை காந்தருவமணம் புரிகிறான். அந்தப்பெண் பீலிவளை. முகா ஈழநாகன் (கி.பி. 180 – கி.மு. 200) என்ற இலங்கை மன்னனின் மகள் அவள். அந்த ஈழநாட்டுப் பெண்ணுடனான தொடர்பு நாகர் எனும் வம்சத்தோடு கொண்ட கலப்பு பின்னர் இலங்கையிலும் தமிழக்க் கலாச்சாரப் பண்பாட்டுக் கலப்பு ஏற்படுவதற்குக் காரணமாயிற்று. (பழங்காலச் சோழர்களின் வரலாறு – அ. சவரிமுத்து – பக்.146)
அக்காலகட்டத்தில் அமைந்த மன்னர்களின் பெயர்கள் தமிழ் பெயர் பாதியாகவும் நாகா பெயர் பாதியாகவும் இருப்பதை அறிய முடிகிறது. சான்றாக சில இலங்கை மன்னர்களின் பெயரைக் காண்போம்.
முதலாம் கயவாகு, மகா ஈழநாகன், பட்டிகதீசன், கனித்த தீசன், குஞ்சநாகன், குகநாகன், ஸ்ரீநாகன், ஒகரிக நாகன், அபய நாகன் என அடுத்தடுத்து ஒன்றரை நூற்றாண்டுகள் இவர்கள் ஆட்டி புரிந்துள்ளார்கள்.
மகா வம்சத்தை ஈழத்தின் கதை என்ற எழுதிய கே.வி.எஸ். வாஸ் என்பவரே இதனை வலியுறுத்திக் கூறுகிறார். நாகன் என்ற பெயருடைய மன்னர்கள் தமிழ் இரத்தக் கலப்புடையவர்கள் என்று யூகிக்க இடமுண்டு. இவர்கள் புராதன நாகர்
வகுப்பைச் சார்ந்தவர்களுடன் ரத்த சம்பந்தம் உடையவர்கள் என்ற சிலர் கருதுகிறார்கள். இன்றுள்ளது போல் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் வகுப்பு வேற்றுமையோ அல்லது பாஷை வேற்றுமையே அன்று இல்லாத படியால் கலப்பு மணம் நடப்பதும், ஒரே குடும்பத்தில் தமிழர் பெயருடையவர்களும் சிங்களப் பெயருடையவர்களும் இருப்பது சர்வ சாதாரணம். அனேக சிங்கள மன்னர்களின் பட்டத்து இராணிகள் தமிழ்ப் பெயர் கொண்டவர்களாகவும், தமிழ்ப் பெண்களாகவும், சுத்த சைவர்களாகவும் இருந்தனர். எனவே தான் பௌத்தத்தையும் சைவத்தையும் பேணி வளர்த்ததோடு ஒவ்வொரு பௌத்த விகாருக்கும் அருகில் ஒரு சிவன்கோயில்
கட்டுவது அன்றைய வழக்கமாக இருந்தது. இன்றைக்கும் கூட பாழடைந்து
கிடக்கும் தாது கோபுரங்களுக்கும் அருகில் சிவலிங்கம் தென்படுவதும்
இந்தப்புராதன சரித்திர உண்மையையே காட்டுகின்றன. (ஈழத்தின் கதை.
திரு.கே.வி. வாஸ்-பக். 262-263).
இதைக் கொண்டு பார்க்கும்போது நெடுமுடிக்கிள்ளி மனைவி மகாராணி
தனது மகன் உதயகுமாரன் கொல்லப்பட்ட சோகத்தால் மணிமேகலையைச்
சிறையில் இட்டுக் கொடுமைப்படுத்தினாள். அதை ஒடுக்கப் பௌத்தர்கள்
(மணிமேகலை பௌத்தப் பெண் துறவி என்பதும் அவள் தாய் மாதவி தன் மகள் மணிமேகலையுடன் தன் கணவன் கோவலன் மரணத்திற்குப் பின் பௌத்தம் தழுவினாள் என்பதும் சிலப்பதிகாரத்தின் மூலம் பெறப்பட்ட செய்தியே) திட்டமிட்டு
மணிமேகலையைச் சிறையில் இருந்து மீட்டு பாய்மரக்கப்பலில் ஏற்றி இலங்கைத் தீவில் இறக்கி அவளைத் துணிவுடையவளாக மாற்றியுள்ளனர். பின் அவளுடன்
இணைந்து அனுராதபுரம் மாவலி கங்கைப் பகுதியில் கிடைக்கும் உணவுப் பொருள்களைப் பாய்மரக்கப்பலில் ஏற்றி சோழ நாட்டின் பஞ்சத்தைப் போக்கி சோழநாட்டு மக்களைத் தன் வசம் செய்து இருக்கிறார்கள்.
பின்னர் அதன் மூலம் சமணர்களும், பௌத்தர்களும் சோழநாட்டிலும் பாண்டிய நாட்டிலும் தொண்டைநாட்டிலும் மக்களைத் தன் வசப்படுத்தி உள்ளனர்.
இதற்குக் காஞ்சியை ஆண்ட இளங்கிள்ளி ஒத்துழைத்து இருக்கிறான். மணிமேகலையை காய சண்டிகைப் போன்று உருவாய்க் கொண்டு வந்துள்ளாள். இது கோச் செங்கண்ணானுடன் கணைக்கால் இரும்பொறை செய்த போருக்குப் பின் கிடைத்த பாடத்தைக் கொண்டு மணிமேகலை என்ற பெண் துறவி மூலம் களப்பிரர்
படையெடுப்புக்கு முன் தயாரிப்புச் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதற்கு
நெடுங்கிள்ளி பகடைக் காயாகப் பயன்பட்டு இருக்கிறான் என்பது வரலாற்று ஆய்வாளர்களுடைய கருத்து. இச்சம்பவத்திற்குப் புராணங் கலந்த செயல்பாடுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அமுதசுரபி அள்ள அள்ளக் குறையாது. பசிப்பிணி பஞ்சத்தைப் போக்கும் ஆற்றல் உடையது என்றெல்லாம் பகுத்தறிவுக்குப் புறம்பான
விசயங்கள் கூறப்பட்டன. அவ்வாறெனில் அப்பிச்சைப் பாத்திரம் பின்னர் என்னவாயிற்று? யாரேனும் அழித்து விட்டனரா? இல்லையேல் தானே மறைந்து விட்டதா?
மணிமேகலா தெய்வம் சோழன் மகாராணி சீர்த்தியிடம் இருந்து காப்பாற்ற மணிமேகலையை வான மண்டல வழியாக மணிபல்லவத் தீவிற்குக் கொண்டு சென்றது. அங்கே புத்தப் பீடிகை வைக்கப்பட்டிருந்தது. அந்தப் புத்த பீடிகையில் புத்தர் பிரானை தினமும் வழிபட்டது. ஏழு நாட்கள் கடந்து அமுத சுரபியைத் தந்து மீண்டும் பூம்புகாருக்குக் கொண்டு வந்துவிட்டது. இவையெல்லாம் பகுத்தறிவுக்கு
ஒத்து வராத கருத்துகள். ஏனெனில் அக்காலத்தில் இலங்கைக்கு நீர்வழி மாத்திரமே செல்ல முடியும்.
இந்த நெடுமுடிக்கிள்ளி மன்னன் காலத்தில் மெல்ல மெல்லக் காவிரியின்
வெள்ளம் சரியாகப் பாசனத்திற்குப் பயன்படுத்தப் படாமல் கவனிக்காது விடப்பட்டது. எனவே அந்தச் சூழலில் மழையுமின்றி போகப் பஞ்சம் வந்திருக்கிறது. இன்றும் உறையூரில் மணல் வாரி மழை ஒருகாலத்தில் பெய்ததாகச் செவிவழிச் செய்தி உலவுகின்றது.
ஆகவே, இயற்கைச் சூழலாலும் சோழ மன்னனின் கவனம் இன்மையாலும், பாலாறு போன்றவை மழையின்றி வரண்டு போனதாலும் பஞ்சம் நிலவி உள்ளது. அதைப் பௌத்தர்கள் மணிமேகலை வாயிலாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
இச்சம்பவங்கள் எல்லாமே நெடுமுடிக்கிள்ளி காலத்தில் நடந்தவை. அதன் தொடக்கமாக பௌத்த மதப் பிரச்சாரத்தின் களமாக அமைந்தது மணிமேகலை காவியம் பௌத்த மதக் கோட்பாடுகளைப் புகுத்தி சீத்தலைச்சாத்தனார் அதனை அரங்கேற்றினார் என்பது வரலாற்றாசிரியர்களின் முடிவு. இவ்வாறாக இராஜாங்க மாற்றத்திற்கான காரியங்களிலும் பெண்கள் ஈடுபட்டிருந்தமை புலனாகிறது.
சோழர்களின் நகர அமைப்பும் மக்கள் குடியிருப்பும் பெண்களை மனதிற்கொண்டே அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. கோ நகர் என்று சொல்லக் கூடிய உறையூர், பூம்புகார், கழுமலம், அழுந்தூர், நெய்தலங்கானம், கரூர், ஆவூர் இவைகள் எல்லாம் தலைநகரமாக ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொன்று இருந்தவை. அதிலும் குறிப்பாக உறையூர் பூம்புகார் பன்னெடுங்காலமாக இருந்தன. கோஇல் – அரசன் வாழும் இல்லம். நட்ட நடுவில் அரசன் வாழும் அரண்மனை ஆகும். அதை அடுத்து அந்தணர்கள் அறங்கூறும். அவையர், சான்றோர்கள், புலவர்களின் வீடுகள்
உள்ள தெருக்கள் சுற்றிலும் இருக்க, அதை அடுத்த சுவற்றில் வணிகர்கள்
வீடுகள் இருக்க அதற்கும் வெளிவட்டத்தில் இருக்குமாறு அமைக்கப்பட்டன.
காரணம், நதிகள் கடற், அறங்கூற உள்வட்டம், உள்நாடு, வெளிநாடுகளில் வாணிகம் செய்ய வேண்டி வணிகர் செல்ல வேண்டி இருப்பதால் உள்வட்டத்தில் குடியிருப்பு வணிகர்களுக்கு அமைக்கப்பட்டது.
“முந்நீர் வழக்கம் மகடூஉ வோடு இல்லை”(தொல். அகம். 980)
என்பதால் உள்வட்டத்தில் பெண்கள் பாதுகாப்புக் கருதி அமைக்கப்பட்டது. வேளாண்மை செய்ய வயலுக்குச் செல்ல வேண்டி இருப்பதால் வேளாண் மக்கள் குடியிருப்புகள் சற்றே புறத்தே அமைக்கப்பட்டன.
வெளிச்சுற்றில் வினை ஏவலர் குடியிருப்பு அமைக்கப்பட்டது. அரண்மனைவேலை, வணிகவேலை, வேளாண் வேலை எல்லோருக்;கும் வினை
ஏவலர்ப் பணியாள் வேண்டியிருப்பதால் அவர்கள் வெளி வட்டத்தில் குடியமர்த்தப்பட்டனர். இவைகள் வேலை வாய்ப்பைக் கருதியே தொல் தமிழ்நாட்டில் சோழர் நாட்டில் குடியிருப்புகள் சிந்து சமவெளி காலம் முதல் அமைக்கப்பட்டன. அந்தணர் என்போர் காமம், குடும்பவாழ்வு, செல்வம், புகழ் இவற்றை விரும்பாது ஒதுக்கித் துறவு பூண்டவர் ஆவர்.
அந்தணர் என்போர் அறவோர் அவரும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்… என்ற வரிகள் ஈண்டு சிந்திக்கத்தக்கது. பின்னர் அவரே துறவோர்கள் ஆயினர். இவர்கள் ஒதுக்கப்பட்டு பிராமணர்கள் அங்கே குடியமர்த்தப்பட்டனர். முதல்நிலைச் சாதிகள் உருவாகாத காலத்தில் தமிழகத்தின் நிலை குறிப்பாக சோழர்கால
ஊர்களின் நிலை இவ்வாறகத்தான் இருந்திருக்கவேண்டும். பிறகு வடஆரியர் நுழைவிற்குப் பின்னரே துறவோர், அந்தணர் ஆகியோர் பின்னுக்குத் தள்ளப்பட்டு பிராமணர் அந்த இடத்தில் வைக்கப்பட்டுச் சாதிப்பிரிவினையும் வர்ணாசிரம தர்மமும் ஏற்கப்பட்டிருக்க வேண்டும் என்பது வரலாற்றாய்வாளர்தம் முடிவாக அமைந்துள்ளது.
வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் என்ற நிலையில் பூம்புகாரிலிருந்து புறப்பட்ட வணிககுல அப்பாவிப் பெண்ணொருத்தி “தேரா மன்னா! என் கணவன்
கள்வன் அல்ல என வீரமங்கையாய் விசுவரூபம் எடுத்துப் பாண்டிய மன்னனின் சாம்ராஜ்யத்தையே போரின்றிச் சேதமின்றி சொற்போரால் தகர்த்த கண்ணகி கதை நாம் அறிந்ததே.”
கணவன் இழந்த செல்வம் அனைத்தையும் மீண்டும் பெற்று விடும்
அளவிற்குப் பெண்ணுக்கும் பொருளாதாரநிலை பெற்றோரால் ஏற்படுத்தித்தரப் பட்டிருக்கிறது என்பதை “சிலம்புள கொன்ம்” எனும் கண்ணகியின் ஒரு சொல்லால் இளங்கோவடிகள் நமக்கு உணர வைக்கிறார்.
மதுரையைத் தீக்கிரையாக்குகிறபோது கண்ணகியின் முன்னெச்சரிக்கை வார்த்தைகள் தீயார் மீது பற்ற வேண்டும் என்று கூறுவது சோழர்தம் வழக்கம் என்ற அறிய முடிகிறது. “பார்ப்போர், அறவோர், அந்தணர், பெண்கள், பசுக்கள்
இந்த ஐவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்பது எழுதாத சட்டமாக தமிழ்நாட்டு அரசர்களுள் ஓர் உடன்பாடு இருப்பதற்கும் சோழர்களே அடிப்படையாக
இருந்துள்ளனர். இந்நிலை சோழர்தம் பெண்களைப் பற்றிய கரிசனம் வெளிப்படுதற்கு அடித்தளமாக அமைகிறது.
வதுவைமணம் எனப்படும் அக்காலத் தமிழர்தம் திருமண முறையை அகநானூற்றுப் பாடல் ஒன்று பதிவு செய்திருக்கிறது. பண்பாட்டுச் சடங்கான
அந்நிகழ்வில் பெண்டிர்தம் நிலையினையும், அவர்தம் முக்கியத்துவத்தையும் வாழ்வியல் முறைகளையும் நல்லாவூர் கிழார் எனும் புலவர் நம் கண் முன்னே
படம்பிடித்துக் காட்டுகிறார். சங்ககாலத் திருமண முறையையே வலியுறுத்துக் காட்டுகிற நிகழ்வுகளை வரிசைப் படுத்துகிறார் சோழர் வரலாறு நூல் எழுதிய
டாக்டர். இராசமாணிக்கனார்.
- இசைக் கருவிகள் ஒலித்தல்.
- கடவுள் வணக்கம்.
- மணப்பெண்ணைப் பெற்ற பெண்டிர் பிள்ளையைப் பெற்றப் பெண்டிர், வாழ்வரசிகள் நால்வர் கூடி அரிசியும் மலரும் கலந்த நீரால் பெற்றோன் பெட்கும் பிணையை ஆகுக என வாழ்த்தி நீராட்டுதல்.
- அன்றிரவே மணமக்களை மங்கலப் பொழுதில் இல்லறப்படுத்துதல்.
- புpன்னர் திருமணவிருந்து
எனப் பொதுவாகவே சாமானியரின் திருமண முறைகள் அமைந்திருக்கின்றன.
பின்னாளில் ஐயர் வந்து நடத்தும் திருமணத்தை அக்காலத்தில் பெண்களே நடத்தியிருக்கின்றனர்.
“உழுந்து தலைப் பெய்த கொழுங்களி மிதவை பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிறை கால் தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி, மனை விளக்குறுத்து, மாலை தொடரி,
கனை இருள் அகன்ற கவின் பெறு காலை கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள் கேடு இல் விழுப்புகழ் நாள் தலை வந்தென உச்சிக்குடத்தர், புத்தகல் மண்டையர், பொது செய் கம்பலை முது செம் பெண்டிர் முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தர, புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று வால் இழை மகளிர் நால்வர் கூடி, கற்பினின் வழாஅ, நற்பல உதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை ஆக! ஏன, நீரோடு சொரிந்த ஈர் இதழ் அலரி,
பல் இருங்கதுப்பின் நெல்லொடு தயங்க,
வதுவை நல்மணம் கழிந்த பின்றை,
கல்லென் கம்மையர், ஞெரே ரெனப் புகுதந்து,
“பேர் இற்கிழத்தி ஆக” எனத் தம்ர்தர, ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல், கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து, ஒடுங்கினள் கிடந்த ஓர்புறம் தழீஇ, முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப அஞ்சினள் உயிர்த்த காலை “யாழ நின் நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை” என இன்நகை இருக்கை பின், யான் வினைவயின் செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல் வர, அகம் மலி உவகையள் ஆகி, முகன் இகுத்து ஒய்யென இறைஞ்சியோளே – மாவின் மடம் கொள் மதை இய நோக்கின்,
ஒடுங்கு ஈர் ஓதி மா அயோளே”.(நல்லாவூர்க் கிழார்-மருதம்-86 அகம்.)
இப்பாடல் பழந்தமிழ் மக்கள் நடத்திய திருமணம் குறித்து விளக்கம் தருவதாக அமைகின்றது. திங்கள் உரோகிணியோடு கூடிய நாள் திருமணத்திற்கு உரிய சிறந்த நாளாகக் கருதப்பட்டது. வீட்டிற்கு முன் வரிசையாக கால்களை நட்டுப் பந்தலிட்டனர். பந்தலின் கீழ்ப் புதுமணல் பரப்பினர். மனைவிளக்கு ஏற்றி
மாலைகளைத் தொங்க விட்டனர்@ உழுந்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த
குழைவாக வெந்த பொங்கலோடு பெருஞ்சோற்றுத் திரளை உண்பது இடைவிடாது நிகழ்ந்து கொண்டே இருந்தது.
முழுமையான செவ்விய பெண்கள் திருமணத்தைச் செய்து வைத்தனர். புதல்வனைப் பெற்றெடுத்த மங்கல மகளிர் நால்வர் கூடிக் கற்பினின்றும் வழாது வாழ்க என வாழ்த்தினர். நீரோடு நெல்லும் மலரும் கலந்து மணமகனின் கூந்தலில் தூவினர். இவ்வாறு வதுவையாகிய திருமணச் சடங்குகள் நிகழ்ந்தன.
பின்னர் உறவினர்கள் தலைமகனிடம் தலைவியைத் தந்து “பெருமனைக் கிழத்தி ஆகுக” என வாழ்த்திய செய்தியும் இப்பாடல் வழி அறியமுடிகிறது.
சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருப்பது போல மாமுது பார்ப்பான் மறை வழி காட்டிய நிகழ்ச்சி இப்பாடலுள் இடம் பெறவில்லை. மங்கல நாண் அணிதல் எனும் தாலி கட்டிய குறிப்பும் இல்லை. இது பின்னாளில் புகார் நகரம் சோழநாட்டில் வந்து சேர்ந்த வழக்கமாக இருக்க வேண்டும். எனவே தான் மங்கல வாழ்த்துப்
பாடலில் தாலிகட்டி, மறை ஓதி அந்தணர் நடத்திய திருமணத்தை சிலப்பதிகாரத்தில் பதிவு செய்துள்ளனர்.
மற்றைய பெண்டிர் கூடி நின்று வாழ்த்த “பெருமகனைக் கிழத்தி ஆகுக” என்ற வரிகளால் சோழர்காலச் சாமானியப் பெண்கள் மனைக்கு விளக்கம் மடவார் என்பதற்கிணங்கவே வாழ்ந்திருந்தனர்.
கணக்குடும்பம், குழுக்குடும்பம் இருந்த காலங்கனில் இல்லாத மரபு பின் தோன்றிய பாங்கை ஆய்வாக கூறியது அருமை.