-பெருவை பார்த்தசாரதி

சுத்தமாக எழுபது ஆண்டுகள் ஆனபின்னும்
===சுதந்திர தேசப்பிதாவின் கனவு நனவாகவிலை..!
பத்திரிகைத் தாளின் பக்கங்களிலெலாம் பத்தி
===பத்தியாகப் பாலியல் வன்கொடுமைச் செய்தி..!
சத்தமின்றியே எங்கோவோர் மூலையில் இது
===எப்போதும் அரங்கேறுகிற சமூகக் குற்றமாம்..!
அத்துமீறி இக்குற்றம் புரிவோரை யடக்கவே
===அசுரபலம் கொண்ட புதியசட்டம் வேண்டும்..!

எங்கும் நடந்தேறுகிற பாலியல் கொலைகளின்
===எண்ணிக்கையில் பச்சிளம் பிஞ்சுகளே அதிகம்..!
எங்கேயொரு ஊடகத்தில் வெளிவந்த பின்னே
===எரியும் தீபோல பரவுகின்ற அவலநிலைதாம்..!
எங்கும் சுதந்திரமாயுலவும் சமூகக் குற்றங்கள்
===இனி நிகழாதிருக்க ஏனின்னும் முடியவில்லை..?
அங்கங்கே அரங்கேறும் அராஜகம் அக்கிரமம்
===அதை மன்றத்தில் கையாளும் திறமையெங்கே..?

மண்டிக் கிடக்கும் சமுதாயச் சீர்கேட்டால்
===மங்கியநம் கலாசாரம் மெதுவாக மறைகிறது..!
கண்ட பழக்கமும் கைவரப் பெற்றதாலின்று
===காதல் வலையில் சிக்குவாராம் சிறாரும்கூட..!
எண்ணிப் பார்த்து எச்செயல் நல்லதுதீயது
===என வறியத்தான் பள்ளிக்கு அனுப்புகிறோம்..!
பண்பறியா ஆசான்கள் இல்லாது போனதால்
===பாழாய்ப் போனவது பள்ளியுள்ளும் புகுந்தது..!

மாற்றம் கொண்டுவரவே மனவுறுதி கொண்ட
===மகத்தான உத்தமர்கள் வாழ்ந்தநம் திருநாட்டில்..!
ஆற்றலிருந்தும் அன்றே தவித் தார்களவர்
===அருமைச் சமுதாயம் அமைந்திட உழைத்தார்..!
நாற்ற மெடுக்கின்ற சமுதாயத்தைக் காண
===நல்லவேளை இன்ற வர்கள் உயிருடனில்லை..!
ஏற்றமின்றி இன்றுவரை தத்தளிக்கும் சமூகம்
===ஏற்றமுற எத்துணைநாள் காத்திருக்க வேணும்..!

*****

நன்றி தினமணி வெளியீடு:: 22-04-18
நன்றி :: கூகிள் இமேஜ்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.