கவியோகி வேதம்
சிற்பியின் கைகள் நடுங்குமெனில்
சிலைகளும் எவ்வா றுருவாகும்?
கற்பவன் கல்வி சிறந்திடுமோ,
கற்பிப்ப வனுமே அரக்கனெனில்?
கற்பிலா மாதர் தலைவியெனில்
கன்னலாய் ஆட்சி நடப்பதெங்கே?
சொற்களும் இவைபோல் சக்திபெறா,,
சொலும்காப் பியமே ‘சக்கை’எனில்!
.
கதிரவன் சக்தி வராநிலத்தில்
கனிதராப் புல்லும் முளைப்பதில்லை!
முதியவர் ‘சோடை’- போம்ஊரில்
முன்னேற் றமென்றும் இருப்பதில்லை!
சுதிகளே சேரா வீணைகொண்டால்
‘சுக’மெனும் வார்த்தைக் கர்த்தமில்லை!
கதியிலா ஏழை வாழ்வதெங்கே?
கருணையே பாயா ஆட்சிதன்னில்!
.
பயிற்சியே செய்யா சோம்பல்மனம்
பகுத்தறி புத்தி கொள்வதில்லை!
அயற்சியில் உழலும் நெஞ்சத்தில்
அற்புத ‘ஸித்தி’ வருவதில்லை!
வயிற்றினில் அடிக்கும் சீமான்கள்
வாழ்வதும், ”சொல்லும்” தரமில்லை!
கயிற்றினில் மாயை வாழ்வு‘கட்டும்’
கடவுளே! உனையான் விடுவதில்லை!

Leave a Reply