அவளுக்கு யாரும் இணையில்லை…_பகுதி 2
அருண் காந்தி
சில நாட்களுக்கு முன்பு வந்த சிறுகதையின் இரண்டாம் பகுதி . இக்கதையின் முதல் பகுதியைக் காண கீழே சொடுக்குங்கள்:
https://www.vallamai.com/archives/5262/
இரண்டு நாட்களுக்குப் பின் கணேசன் மாமாவின் துணையுடன் சிதம்பரம் நோக்கிப் புறப்பட்டோம். 140 km தொலைவுப் பயணம் சிற்றுண்டி தந்த மயக்கத்தில் காரில் நன்றாக உறங்கினாள் நந்தினி.கிட்டத்தட்ட 11 மணி அளவில் கோவிலை எட்டினோம்.
ராம் `சிதம்பரம் கோவிலின் சிறப்புகள் என்னவென்று தெரியுமா உங்களுக்கு?’என்றாள்.
சிறிது யோசித்தேன் வழக்கம் போல வெறுமையே மிஞ்ச உதட்டைப் பிதுக்கினேன்.
‘இது சிவனின் பஞ்ச பூதத்தைக் குறிக்கும் தலங்களுள் ஒன்று. ஒவ்வொரு கோவிலும் ஒரு பூதத்தைக் குறிக்கும்.இது ஆகாயத்தைக் குறிக்கும் தலம். மீதமுள்ள நான்கில் திருவண்ணாமலை நெருப்பையும், திருவானைக்காவல் நீரையும், காஞ்சி நிலத்தையும், திருக்காளத்தி காற்றையும் குறிக்கும் வண்ணம் அமைந்துள்ளன என்றாள்.
‘ஓய் நீ இன்ன கொஞ்ச நாள்ல காவி டிரஸ் போட்டிடுவேணு நெனைக்கிறேன்’
‘ஹே அப்படி எல்லாம் இல்ல ராம்,எல்லாம் ஒரு இண்டரெஸ்ட் தான்’என்றாள்.
கூத்தாடும் தமிழ் நாயகனைக் கண்டத்தில் நானும் கொஞ்சம் ஆடித் தான் போனேன்.நடராசனின் ஆனந்தத் தாண்டவத்தையும் அவனது அங்க நிலைகள் மறைவாக உணர்த்தும் உண்மைகளையும் எடுத்துக் கூறினாள் நந்தினி.உண்மையில் தமிழையும் கலையும் இந்துத்துவத்தையும் பிரித்தறிவது என்பது இயலாத ஒன்று என உணர்ந்தேன்.அப்படியே திருவையாறும் தேவாரத்தில் பாடப்பெற்ற திருத்தலமான திருநாகேஸ்வரமும் சென்று திரும்பினோம்.நான் எனது உறவினர்கள் வீட்டுக்கு ஒரு சில நாட்கள் சென்று வந்தேன்.கிட்டத்தட்ட நாங்கள் வந்து பத்து நாட்கள் ஓடின.பொங்கலுக்கு இன்னும் ஒரு வார காலமே இருந்தது.அடுத்த எங்களது பயணம் பழனியும் மதுரையும் நோக்கி அமைந்தது.
நந்தினியோடு சேர்ந்து நானும் இப்போது தான் தமிழ் மண்ணை உற்றுப் பார்க்கிறேன்.அன்று காலை பழனிக்குச் சென்று முருகனைத் தரிசித்த அனுபவம் அந்த புத்துணர்ச்சியும் நான் வாழ்நாளில் இதுவரை அனுபவித்திராதது.
‘என்ன நந்தினி பேசாம வர்ற, பழனியோட சிறப்புக்கள் ஏதும் தெரியாத உனக்கு?’ என்றேன் சற்று கிண்டலாக.
கலகலவெனச் சிரித்தவள் ‘இருக்கு உங்கள போட்டு வதைக்க வேண்டாம் என சும்மா வாறன்’ என்றாள்.’ஹே பரவால்ல சொல்லு நா அப்படி ஏதும் நெனைக்கல’.
‘ம்ம்ம் சொல்லுறன்….என பழனியில் கோவிலின் கீழ் ஜீவசமாதி அடைந்த போகர் எனும் சித்தரையும் அவரது மருத்துவக் குறிப்பின் அருமைகளையும் விளக்கினால் நந்தினி.உண்மையில் அவளுடனான ஒவ்வொரு பயணமும் எனக்கு அறிவுப் பயணமாக அமைந்தது.மதுரை மீனாட்சியைத் தரிசிக்கப் புறப்பட்டோம்.
ராம் ‘எனக்கு கொஞ்சம் உடுப்புகள் வாங்கோணும் மதுரைல’என்றாள்
தரிசனத்துக்குப் பின் மதிய உணவை முடித்து அன்று மாலை வரை ராஜ்மஹால்,நல்லி என ஏறி இறங்கினோம்.நிறைய ஆடைகளை வாங்கிக் குவித்திருந்தாள் நந்தினி.நானும் என் பங்கிற்கு ஒரு பட்டுப் புடவையை வாங்கிக் கொடுத்தேன்.மாலை ஆறு மணி அளவில் மதுரையை விட்டுக் கிளம்பினோம்.
முந்தைய நாள் அலைச்சலில் மறுநாள் காலை சிறிது தாமதமாகவே எழுந்தேன்.அன்று காலை நான் எழுந்தபோது அம்மா வாசலில் கோலம் போட நந்தினி அதற்கு வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தாள்.வீட்டில் எல்லோரும் பொங்கலுக்கான வேலையில் இறங்கினர்.நானும் என பங்கிற்கு ஒட்டடை அடிப்பதாக கம்பைத் தூக்கிக் கொண்டு அலைந்தேன்.அம்மா பழைய துணிகளை எல்லாம் எடுத்து கட்டிக் கொண்டிருக்க நந்தினி செடிகளுக்குத் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தாள்.அவள் இப்போது ஒரு சகஜ நிலைக்கு வந்திருந்தது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.நந்தினி செடிகளுக்குத் தண்ணீர் பிடிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.என்னைக் கவனித்தவளை அம்மா உள்ளிருந்து அழைக்க சிரித்துக் கொண்டே ஓடினாள்.
அன்று பொங்கல் தினம்.காலையில் அய்யர் வந்து பொங்கலிட வேண்டிய நல்ல நேரத்தை குறித்துக் கொடுத்து அவருக்குச் சேரவேண்டிய வரும்படிகளை வாங்கிச் சென்றார்.
‘நந்தினி அங்க மாதிரி வீட்டுக்குளே பொங்கல் வைக்க மாட்டோம் இங்கே வாசலிலே தான்’
‘ஓ அப்படியா ஏன்? என்றாள்.
கதிரவனுக்குத் தானே நன்றி செலுத்துறோம்.அதெப்படி வீட்டுக்குள்ளே வைக்க முடியும்? ம்ம்ம்… இங்க கிராமத்துல வைக்கலாம்…அங்க ஜெர்மனில வச்ச அவ்ளோதான்,ஸ்னோ பொங்கல் தான்’ எனச் சிரித்தாள்.
அய்யர் சொன்ன நேரத்தில் நான் வாசலில் சிறு களிமண் மேடை அமைக்க சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்தார் அப்பா.அம்மாவும் நாந்தினியும் தாம்பூலத்தில் வழிபாட்டுப் பொருட்களுடன் வந்தனர்.தேங்காய் உடைத்து வழிபட்டு வாசலில் கோடு வெட்டினார் அப்பா.வெண்பொங்கல் பானையும் சர்க்கரைப் பொங்கல் பானையும் வைத்து அடுப்பை பற்ற வைத்தால் அம்மா.
நான் வெண்பொங்கல் பானையையும் நந்தினி சர்க்கரைப் பொங்கல் பானையையும் எரிக்க அம்மா தேங்காய் துருவிக் கொண்டிருந்தார்.காய்ந்த விறகினை எடுத்து வைக்க அடுப்பு அணைந்து புகையைக் கக்க ஆரம்பித்தது.புகையில் இரும ஆரம்பித்தவளை அம்மா வந்து விலக்கி அடுப்பைச் சரிசெய்து கொடுத்தாள்.அடுத்த வீடு வாசலில் புதிதாக திருமணம் ஆனா அண்ணனும் அண்ணியும் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தனர்.
‘நந்தினி முதல்ல என்னோட பான தான் பொங்கும் என்ன பெட்? ‘ஓ அப்படியா அதையும் பாப்பம்’என்று போட்டியிட்டாள்.வெண்பொங்கல் எளிதில் பொங்கிவிடும் என்பதை அறியாமல்.வெண் பொங்கல் பொங்க சிறிது நேரத்தில் நந்தினியின் சர்க்கரை பொங்கலும் பொங்கியது.அம்மா வந்து மஞ்சள் தோரணம் கட்டி இறக்கி வைத்தாள்.கதிரவனுக்குப் படைத்து மூதாதையர்களுக்குப் படைத்து உணவருந்தினோம்.வெளியில் வேப்பமர நிழலில் அமர்ந்தோம்.’ராம் இந்த பொங்கலை என வாழ்வில மறக்க இயலாது.’
ஓகே…’ஓய் வெத்திலை போடுவமா?’ராம்’ நீங்க வெத்திலை எல்லாம் போடுவிங்களா என்ன?’
இங்க வந்து எப்பவாச்சும் நல்லா சாப்பிட்டா பாட்டியோட பைலேர்ந்து எடுத்துப் போடுவேன்.
ம்ஹும் …எனக்கு வேண்டாம் பா’என்றாள்
இரு நா எடுத்துட்டு வரேன்.
நானும் மடித்து வாயில் போட்டுக் கொண்டு நந்தினிக்கும் மடித்துக் கொடுத்தேன்.அவள் முகத்தைச் சுளித்துக் கொண்டே வாயில் போட்டு மெல்லத் துவங்கினாள்.
ஓய் ‘நல்லா நாக்கு செவந்த அவனுக்கு அவன் பொண்டாட்டி மேல நெறைய ப்ரியம் என்று சொல்லுவாங்க’ என்று நந்தினியிடம் நாக்கை நீட்டினேன்.
‘ம்ம்ம்.. நல்லா செவந்திருக்கு…’ஆனா இதுல சுண்ணாம்புதான் மேட்டர், அது கரெக்ட்டா இருந்தா தான் செவக்கும்’என்றாள் புத்திசாலித்தனமாக.
‘உன் நாக்கை காட்டு என்றேன்’.சிரித்துக் கொண்டே மறுத்துவிட்டாள்.
மறுநாள் அன்று மாட்டுப் பொங்கல். அன்று இரவு எங்களது பசு,மாமா,சித்தப்பா,பெரியப்பா என எல்லாருடைய வீட்டு மாடுகளையும் களத்தில் ஒன்றாக கட்டி பொங்கல் இட்டோம். அன்று எல்லா உறவினர்களும் ஒன்றாக இருந்து மகிழ்ந்தோம்.நானும் என் மைத்துனர்களும் வேம்பு, ஆவாரம்பு,பிரண்டை, கண்ணிப்பூ ஆகியன வைத்து மாலை கட்டி எல்லா மாடுகளுக்கும் அணிவித்தோம்.எண்ணெய் அரைப்பும் இட்டு வர்ணம் பூசி மகிழ்ந்தோம்.படையலுக்குப் பின் எங்கள் வீட்டுக் கன்றுக்கு பொங்கல் ஊட்டினாள் நந்தினி. அதை முழுதும் சாப்பிட்டு அவளது கையை நக்கிய கன்றை முத்தமிட்டாள் நந்தினி.மறுநாள் பொங்கல் விளையாட்டுகள் ஆரம்பமாகின.என் மைத்துனர்கள் வற்புறுத்த உரியடித்தலில் நானும் கலந்து கொண்டேன்.உரியை விட்டு நான் ஓரத்தில் நின்ற கிழவியை ஓங்க நண்பர்கள் பிடித்து கட்டை அவிழ்த்தனர்.அதைக்கண்டு விழுந்து விழுந்து சிரித்தாள் நந்தினி.
பொங்கல் முடிந்து ஒரு வாரம் வீட்டிலேயே கழிந்தது.இன்பமாக போய்க் கொண்டிருந்தது ஒவ்வொரு நாளும்.எனக்கு எதோ பரிகாரம் இருப்பதாகவும் மேலும் குடும்பத்தில் எல்லாரும் இணைந்து ராமேசுவரம் செல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் சொன்னாள் அம்மா.அதன்படி ஓர்நாளில் ராமேசுவரம் புறப்பட்டோம்.எங்கள் வீட்டிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழி இனிதே எங்கள் பயணம் துவங்கியது.வழி நெடுக கடல் நீரும் உப்பலங்களும் தென்னை மரங்களும் நிறைந்த காட்சியில் மூழ்கினாள் நந்தினி.நான் என் அக்கா குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டு வந்தேன்.மண்டபத்தில் சிற்றுண்டியை முடித்து ராமேஸ்வரம் நோக்கி பயணித்த எங்களுக்கு பாதை விட்டு கடல் இரு புறமும் அழகே பிரிந்து கிடந்தது.பாம்பனைத் தொட்டோம்.2 km நீளமுள்ள பாலத்தை அதிசயித்துப் பார்த்தாள் நந்தினி.பாம்பனைக் கடந்த சில மணித்துளிகளில் ராமேஸ்வரம் கோபுரம் எங்கள் கண்ணில் தென்பட்டது.
ஒருவழியே கோவிலை எட்டினோம்.வண்டியை நிறுத்திவிட்டு எல்லோரும் கடலுக்கு குளிக்கச் சென்றோம்.வழியில் ஆங்காங்கே இருந்த வரலாற்றுக் குறிப்புகளை படித்துக் கொண்டே சென்றோம்.அங்கிருந்து இலங்கையின் தொலைவு மற்றும் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய கல்வெட்டுகளை நானும் நந்தினியும் நின்று பார்த்துவிட்டுச் சென்றோம்.இலங்கையின் திருகேதீஸ்வரம்.நகுலேஸ்வரம்,கோணேஸ்வரம் ஆகியவற்றுக்கும் ராமேஸ்வரத்துக்கும் உண்டான தொடர்பை அவை குறிப்பிட்டன.மேலும் இலங்கையின் தமிழ் மன்னன் ஒருவன் அக்காலத்தில் தினம் ராமேஸ்வரத்தில் வந்து வழிபட்டுச் செல்வதற்கான அடையாளங்களையும் அவை சுட்டின.
கடல் சீற்றமில்லாமல் காலை நேரத்தில் மிகுந்த அமைதியுடன் காணப்பட்டது.நிறைய வடஇந்தியப் புனிதப் பயணிகள் ஏதோ மந்திரங்களை கூறிக் கொண்டே நீராடிக் கொண்டிருந்தனர். நீருக்கடியிலிருந்து காசு பொறுக்கும் சிறுவர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.எல்லா உறவினர்களும் கடலுக்குள் இறங்கினர்.நந்தினி கடலையும் கண்ணுக்குத் தெரியும் அதன் தொலைவையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நந்தினி’அங்க அம்மா கூட போய் குளியேன்’ அக்கரை நோக்கி வெறித்துப் பார்த்துக் கொண்டு நீருக்குள் இறங்கியவள் என்னிடம் கேட்டாள்,
‘ஏன் ராம் 16 மைல் கல் அந்தப்பக்கம் குண்டுவெடிச்சா இங்க கேட்காதா ராம்?
ஒலி நீர் வழி எளிதில் கடத்தப்படும் தானே? கேட்கவில்லையா இங்க இருக்கவங்களுக்கு என்று.கேட்டுவிட்டு நீருக்குள் மூழ்கினாள்.எழுந்தவளின் கண்கள் கலங்கி இருந்தன.சரட்டென ஒரு சொட்டுக் கண்ணீர் கடல்நீரில் விழுந்ததை நான் கவனிக்கத் தவறவில்லை.அந்த ஒரு துளிப் பெருங்காயத்தின் நெடியில் கடலுக்கென தும்மலா வரப்போகிறது.அந்த உப்பு நீரில் விழும் உப்பு நீரை எனைத் தவிர வேறு யார் அறிவர் அங்கே?
எனை அறியாமல் என் கண்கள் கலங்கின. தாய் அழுவதைப் பார்த்து அழும் பிள்ளை போல அவளைப் பார்த்து நானும் அழத் துவங்கியதை உணர்ந்தேன்.அவளைத் தேற்ற எனக்கு எந்த சொற்களும் அப்போது கிட்டவில்லை.கரையேறிய பின்னும் ஏதும் பேசாமல் வந்துகொண்டிருந்தாள் நந்தினி. அவளைத் தேற்றவும் தமிழினத்தின் சாபத்தைத் தீர்க்கவும் வேண்டி பர்வதவர்த்தினியிடம் மனதுக்குள் மன்றாடினேன்.மனம் நிறைய கனத்துடன் அவளும் நானும் ராமபிரான் முன்பு நின்று கொண்டிருந்தோம்.
கோவிலை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தோம்.நந்தினியின் பேச்சு முழுதும் நின்று போனது.அங்கிருந்து புறப்பட்டு ராமர் பாதத்தை வணங்கச்சென்றோம்.அந்த உயரத்திலிருந்து ராமேஸ்வரம் அழகாக காட்சி அளித்தது.
‘ராமர் இந்த உச்சியில் ஏறி நின்று தான் சீதையை தேடினாரம்.அன்று அவர் பாதம் படிந்த இடம் தான் இது.எல்லோரும் தொடாமல் கும்பிடுங்க…’என வருகின்ற எல்லோரிடமும் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தார் அந்த அர்ச்சகர்.வெளியே அந்த காப்பு சுவற்றோரமாய் குடும்பத்தில் எல்லோரையும் தம்பதிகளாக நிற்கவைத்து நானும் நந்தினியும் புகைப்படம் எடுத்தோம்.வீட்டில் அக்கா எல்லோருடனும் நந்தினியை வைத்து நான் எடுத்த புகைப்படம் மிகவும் அற்புதமாக வந்திருந்தது.கீழே ஒரு பாட்டி நாவல் பழம் விற்றுக் கொண்டிருக்க என் அக்கா குழந்தைகள் கீழே இறங்கி ஓடினர்.பின் வீட்டினர் எல்லோரும் கீழிறங்கத் துவங்கினர்.
சிறிது நேரம் கடல் தாண்டி வெறித்துப் பார்த்தவள் ‘இங்கிருந்து எப்படி ராம் சீதையைக் கண்டார் ராமர்?அப்படி எண்டால் எண்ட தாத்தா,பாட்டி,பெரியப்பா,சித்தப்பா எல்லாரையும் காண இயலுமா?என்றாள் அப்பாவியாக…
‘ஓய் அது புராணம்…’ என்றேன்.வைத்த கண் வாங்காமல் நின்றிருந்தவளின் கண்கள் நீரைச் சுரந்தன.வேறு யாரும் எங்கள் அருகில் இல்லாத நிலையில் அவள் கரங்களை இறுகப் பற்றினேன்.அந்நேரம் கீழிருந்து மற்றவர்கள் அழைக்க கிளம்புமாறு அறிவுறுத்தினேன். மனமின்றி கீழே இறங்கினாள் நந்தினி.இருந்தும் அவளது முகத்தின் கவலைக் கோடுகளை அழிக்க முற்பட்டு தோற்றுப்போனேன்.வேனில் ஏறிய சில நிமிடங்களில் அசதியில் எல்லோரும் கண் அயர்ந்தனர்.நான் முன்புறம் ஓட்டுனர் அருகே அமர்ந்திருந்தேன்.நந்தினி கடைசி சீட்டில் அமர்ந்திருந்தாள்.இமைக்காமல் அக்கரையை பார்த்துக் கொண்டே வந்தாள்.நீடித்த மௌனம் நிலைகொள்ள வீட்டை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தோம். இந்த ஒட்டுமொத்த இந்திய பயணத்தில் நான் அவளுக்கு அளித்த மகிழ்ச்சியை ராமநாத ஸ்வாமிகள் பறித்துக் கொண்டதாக எனக்குததோன்றியது…………………………………………………………………………………………………………………………………………………………………………….