படக்கவிதைப் போட்டி – 226

அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
Yesmk எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் வெள்ளிக்கிழமை (04.10.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
அன்னையின் தோளில் சாய்ந்து
உலகத்தின் அழகில் இலயித்திருக்க
முன்னின்று பின்னோக்கியும்
பின்னின்று முன்னோக்கியும்
ஓடும் காட்சிகள்
நிகழ்வுகளின் சாட்சிகளாய் !
காட்சிகள் அயர்ச்சியூட்டினாலும்
அன்னையின் தோள்
தலையணையாயும் – அவர்தம்
கரங்கள் மெத்தையாயும் மாறிப்போக
சுகமான துயிலும் கண்களை
வருடியபடி தழுவிக் கொள்ள
அன்னையின் முத்தங்கள்
தாலாட்டு பாட – உறங்கிப் போன
கிள்ளையின் துயில் கலையாது
அலுங்காது நடக்கும் கலை
அன்னைகட்கெலாம் – தானாக
கைவந்து சேரும் உத்தியன்றோ !
அன்னையின் தோள் சாய்ந்து கொண்டு
பின்னிருக்கும் உதடுகளில்
புன்னகையும் – உள்ளத்தில்
ஆனந்தமும் துளிர்க்கச் செய்யும்
வித்தை கைவரப் பெற்றவர்கள்
கிள்ளைகள்!
தாயவள் தோளில் தவழ்கின்ற
தூயவளே கண்மணியே
துள்ளிக் களித்தே பின் நோக்குகிறாய்
தூக்கம் வரவில்லையோ? – தூளியது ஏங்குதம்மா
அன்னையவள் அள்ளியணைத்து
ஆரத் தழுவி அமுதே தேனே அஞ்சுகமே என
ஆசையாய் கொஞ்சுகையில் நெஞ்சில்
அன்பு தவழுதம்மா ஆருயிரும் சிலிர்க்குதம்மா
பிள்ளைக் கனியமுதே பேசும் பொற்சித்திரமே
கள்ளமில்லா கற்கண்டு பொற்குவையே
வெள்ளை உள்ளத்து வளர் கவின் நிலவே
எல்லையில்லா இன்ப அமுதூற்றே ஆவி துடிக்குதம்மா
உன்னை வளர்த்து ஆளாக்க
உன் அன்னையவள் அல்லும் பகலும்
உழைத்திருப்பாள் ஊணுறக்கம் இல்லை அவளுக்கு
உலகே நீ தான் என்று உள்ளம் மகிழ்ந்திருப்பாளம்மா
காலத்தால் அழியாத களவாட முடியாத
கல்விச் செல்வம் அதை கண்ணும்
கருத்தாக நீ கற்றிடவே கலாசாலைக்கு அன்போடு
கருமை பொட்டு வைத்து அனுப்பிடுவாளம்மா
அன்னை போல் அன்புகாட்ட ஆர் உளார்
அவனிதனில் அன்னையே யாவரும் அறிந்த
அன்பு தெய்வம்மம்மா அவளுக்கும்
அன்பு செய்வோம்மம்மா அகிலம் வாழுமாம்மம்மா
யாழ். நிலா. பாஸ்கரன்
ஓலப்பாளையம்
கரூர்- 639136
9789739679
basgee@gmail.com
noyyal.blogspot.in
ஆடி ஓடி விளையாடி
அயர்வுற்று வரும்பொழுதெல்லாம்
அம்மாவின் தோள்களே
அடைகலம் தரும்
அன்னையின்
தோள் சாய்ந்து
பார்க்கும் பொழுது
பரந்த உலகம் கூட
ஒரு பனித் துளியாய்
தெரியும்
கனவுகள் மெய்ப்படவும்
காற்று வெளியிடை
அவள்
சிறகு விரிக்கவும்
அந்தத் தோள்சாயலில்தான்
தொடங்குகிறதுப் பாடம்
எதிர்படும் இன்னல்களை
எதிர்கொள்ளும் வழியினையும்
அன்னையின் தோள்களில் இன்றி
வேறு எங்கு
கற்க இயலும்?
வெம்புலிக் குழாமென
விலங்கு மனிதர்கள்
திரிகின்ற உலகில்
அன்னையின் அரவணைப்பே
அவளுக்கு
எல்லாமுமாய் விளங்கும்
சின்ன ஞ் சிறு ஆசைகள் கூட
வண்ணம் பெற்று
வானில் பறக்க
தோள் மீது
கண் மூடும்போதுதான்
வடிவம்கிடைக்கிறது!
அம்மாவின் தோள் சாயுமிவள்
நாளை
ஆதவனில் கால்பதிக்கும்
அதிசயமும் நடக்கலாம்
எங்கு சென்று
எதனை சாதித்தாலும்
அம்மாவின் தோள் சாய்ந்த
அந்த அற்புத உணர்வுக்கு
ஈடென்று சொல்ல
இங்கு
எதுவும் கிடையாது!
சேயே அறிவாய்…
தாயின் தோளில் சாய்ந்திருந்தால்
தானே வந்திடும் தைரியமே,
சேயின் எண்ணம் எதுவாயினும்
சேதி சொலாமல் தாயறிவாள்,
சாயும் கொடிக்குக் கொழுகொம்பாய்ச்
சற்றும் பிரியாத் துணையவளே,
ஓயும் போதவள் துணையாயிரு
ஒன்றே போதுமுன் உயர்வுக்கே…!
செண்பக ஜெகதீசன்…
அன்னையின் தோளிற் சாயந்துன்
அரவிந்த முகத்தைக் காட்டி
என்னடீ சிரிக்கின்றாய் நீ
என்முகக் கரியைக் கண்டா?
உன்னைப் போல் மதிமுகத்தை
உண்மையில் கொண்டேனில்லை
கன்னிப் போய்க் கறுத்து விட்ட
கன்னந்தான் எனக்குத் தொல்லை.
பார்க்கின்ற உன்னைப் போன்ற
பாலகரெல்லா மென்னை
ஆரிந்த மந்தியென்று
அருவருத்திட்ட போதும்
கூரிய விழியாலென்னைக்
குத்திடப் பார்க்கும்போதும்
நேரிய உங்கள் கண்ணில்
நின்றொளி பாய்ச்சுகின்ற
சூரியப் பிரபை என்றன்
துன்பங்களகற்றும் போடீ.