சதுக்க பூதம்

பாஸ்கர் சேஷாத்ரி

யுகம் யுகமாய் மண்ணில் கிடக்கின் பாதச் சுவடுகள்
புனிதர்களும் புத்தர்களும் வாழ்ந்து கடந்த பூமியிது
மிருகங்கள் மனிதர்கள் தடம் மாறிப் பெயர்ந்தனர்
கடல்பரப்பு அவ்வப்போது சத்தியம் மீறியது
மலையும் குன்றும் ஓர் நாள் உருவம் சிறுத்தன
எரிமலைகள் ஆங்காங்கே முடியாமல் கக்கின
மரங்களும் பறவைகளும் ஏதுமறியாமல் இயங்கின
தத்துவம் சொன்னோர் தவறியே போயினர்
மதமே பெரிதென்றோர் மாண்டே தொலைந்தனர்
காலமும் நில்லாது – காற்றும் நில்லாது
வாழ்ந்தவனின் ரேகை எங்குமே நிற்கவில்லை
சென்றவனின் சாம்பல் கண்ணில் தெரியவில்லை
நிலம் மட்டும் நின்றது, வானோடு துணையாக
எல்லாமே மாயையிங்கு நாம் என்ன விலக்கா என்ன
காலம் சதுக்க பூதம், கற்றுணர்ந்தோர் ஞானியிங்கு

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *