எட்டுக் கோணல் பண்டிதன் – 5

0

தி. இரா. மீனா

               அத்தியாயம் – 2 தன்னை ’உணர்தல்

‘இதுவரை மாயையால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த நான் இப்போது அதிலிருந்து விடுபட்டு குறைபாடுகளற்று, அமைதியானேன்’ என ஜனக மன்னர் தத்துவத்தின நுட்பமுணர்ந்து வியப்புடன் சுவானுபவம் உணர்த்தல் இரண்டாவது அத்தியாயமாகும். இதில் இருபத்தைந்து வசனங்கள் உள்ளன.

  1. படைப்பிற்கப்பால் குற்றமற்ற அமைதிமயமான அறிவே நானாகயிருக்க இத்தனை காலம் மயக்கத்தில் நான் ஏமாறினேனே.
  2. நானொருவன் இந்த உடலை ஒளிர்விப்பது போல உலகத்தையும் ஒளிர்விக்கிறேன். ஆதலால் உலகமனைத்தும் என்னுடையது அல்லது ஒன்றுமே எனதல்ல.
  3. உடலுடன் உலகை விட்டு நீங்குவதும், ஏதோ ஒரு நுட்பத்தால் என பரம்பொருள் எனக்குக் காட்டுகிறது.
  4. அலைகளும் நீர்க்குமிழிகளும் நீரிலிருந்து வேறானவையில்லை என்பது போலவே ஆத்ம வெளிப்பாடான உலகம் ஆத்மாவிலிருந்து வேறானதில்லை.
  5. ஆராய்ந்து பார்க்கும் போது ஆடை என்பது நூல் என்ற ஒன்றே என்பது போல படைப்பும் ஆன்மமயமானதாக உள்ளது.
  6. கரும்பின் சாற்றில் உண்டாகும் சர்க்கரை அதனாலேயே [சாற்றால்] வியாபிக்கப்படுவது போல உலகம் என்னிடம் உண்டாகி இடைவிடாமல் என்னால் வியாபிக்கப்படும்.
  7. தன்னையுணராத போது உலகம் உண்டாகும்; தன்னையுணர்ந்தால் உலகம் தோன்றாது. கயிற்றைப் பார்க்காதபோது அரவு தோன்றும்; கயிற்றைக் கண்டால் அரவு தோன்றாது.
  8. எனது சுயவடிவம் ஒளியேயன்றி வேறில்லை; உலகம் ஒளிரும் போது நானே ஒளிர்கிறேன்.
  9. கிளிஞ்சலில் வெள்ளியென, கயிற்றில் பாம்பென, வெயிலில் கானலென அறியாமையால் உலகம் என்பால் விகர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
  10. என்னிடமிருந்து வெளிப்பட்ட உலகம் என்னிடம்தான் ஒடுங்கும். மண்ணில் குடமும், நீரில் அலையும் பொன்னில் பணியும் போல.
  11. பிரமன் முதல் புழுவரை உலகின் அழிவிலும், அழிவின்றி நிற்கும் வியப்பு மிகும் யான் போற்றி.
  12. உடலுற்றாலும் ஒருவனாயிலகும் நானே நான்! எனக்கே வணக்கம். வருவது, போவது எங்குமெனக்கில்லை. உலகம் முழுவதும் நிறைந்திருப்பவன் நானே.
  13. உடலால் எதையும் தொடாமல், தொன்று தொட்டு உலகு தாங்குமெனக்கு நிகர் சமர்த்தானவர் எவர்? நானே நான்! என்னை வணங்குகிறேன்.
  14. என்னை வணங்குகிறேன். ஒன்றுமில்லையெனக்கு. இல்லையெனில் மனம், வாக்குகளுக்கு, இலக்கு எல்லாம் என்னுடை யதே.
  15. அறிபவன், அறிவு, அறிகின்ற பொருள் என்ற இந்த மூன்றும் உண்மையல்ல. அறியாமையால் இவை எங்கிருக்குமோ அங்கு களங்கமில்லாப் பொருள் நான்
  16. துன்பத்தின் மூலம் துவைதம். அதற்கு முன்பு பார்ப்பது முழுவதும் பொய். ஏகமாம் தூய ஞான ரஸமே நான் என்பதிலும் வேறு மருந்தில்லை.
  17. ஞானமுடையவன் நான்; அறியாமையால் சிலவற்றைக் கற்பிதம் செய்து கொண்டேன். தொடர்ந்து ஆய்ந்ததன் மூலம் எனக்கு விகற்பமில்லா நிலை வாய்த்தது.
  18. பந்தமெனக்கில்லை; மோட்சமுமில்லை. ஆதாரமற்ற குழப்பம் அடங்கியது. உலகம் என்னிடமுள்ளது; [ஆயினும்] உண்மையில் என்னிடமில்லை.
  19. உடலுடன் இவ்வுலகம் ஒன்றுமேயில்லையென்றும், ஆத்மா தூய அறிவு மயமென்றும் துணிந்தேன். ஆனால் இப்போது கற்பனை எதனிடம்?
  20. உடலும், சொர்க்க – நரகங்களும், பந்த முக்திகளும், பயமும் – இவையெல்லாம் கற்பனையே. ஞான ஆத்மாவாம் எனக்கு இதனாலென்ன பயன்?
  21. துவைதம் காணாத எனக்கு மக்கள் கூட்டம் காடு போலாகியது. எதனிடம் நான் மகிழ்வடைவேன்?
  22. உடல் நானல்ல; எனக்கு உடலில்லை. ஜீவனும் நானல்ல; ஞானமே நான். வாழ்க்கை விருப்பமே என் பந்தமாக இருந்தது.
  23. எல்லையில்லாத பெரும் கடலாகிய என்னிடம் மனமாகிய காற்றெழ பற்பல உலகத் திரைகள் திடீரென விந்தையாய்க் கிளம்புகின்றன.
  24. எல்லையில்லாத பெருங்கடலாகிய என்னிடம் மனக்காற்று ஒடுங்க, ஜீவனாகிய வியாபாரியின் உலகக் கப்பல் அழிவடைகிறது.
  25. கரையில்லாத பெருங்கடலாகிய என்னிடம் ஜீவ தரங்கங்கள் இயற்கையாகவே உண்டாகி மோதி விளையாடி ஒடுங்குகின்றன.

[தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.