எட்டுக் கோணல் பண்டிதன் – 5
![](https://www.vallamai.com/wp-content/uploads/2020/07/1-6.jpg)
தி. இரா. மீனா
அத்தியாயம் – 2 தன்னை ’உணர்தல் ’
‘இதுவரை மாயையால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த நான் இப்போது அதிலிருந்து விடுபட்டு குறைபாடுகளற்று, அமைதியானேன்’ என ஜனக மன்னர் தத்துவத்தின நுட்பமுணர்ந்து வியப்புடன் சுவானுபவம் உணர்த்தல் இரண்டாவது அத்தியாயமாகும். இதில் இருபத்தைந்து வசனங்கள் உள்ளன.
- படைப்பிற்கப்பால் குற்றமற்ற அமைதிமயமான அறிவே நானாகயிருக்க இத்தனை காலம் மயக்கத்தில் நான் ஏமாறினேனே.
- நானொருவன் இந்த உடலை ஒளிர்விப்பது போல உலகத்தையும் ஒளிர்விக்கிறேன். ஆதலால் உலகமனைத்தும் என்னுடையது அல்லது ஒன்றுமே எனதல்ல.
- உடலுடன் உலகை விட்டு நீங்குவதும், ஏதோ ஒரு நுட்பத்தால் என பரம்பொருள் எனக்குக் காட்டுகிறது.
- அலைகளும் நீர்க்குமிழிகளும் நீரிலிருந்து வேறானவையில்லை என்பது போலவே ஆத்ம வெளிப்பாடான உலகம் ஆத்மாவிலிருந்து வேறானதில்லை.
- ஆராய்ந்து பார்க்கும் போது ஆடை என்பது நூல் என்ற ஒன்றே என்பது போல படைப்பும் ஆன்மமயமானதாக உள்ளது.
- கரும்பின் சாற்றில் உண்டாகும் சர்க்கரை அதனாலேயே [சாற்றால்] வியாபிக்கப்படுவது போல உலகம் என்னிடம் உண்டாகி இடைவிடாமல் என்னால் வியாபிக்கப்படும்.
- தன்னையுணராத போது உலகம் உண்டாகும்; தன்னையுணர்ந்தால் உலகம் தோன்றாது. கயிற்றைப் பார்க்காதபோது அரவு தோன்றும்; கயிற்றைக் கண்டால் அரவு தோன்றாது.
- எனது சுயவடிவம் ஒளியேயன்றி வேறில்லை; உலகம் ஒளிரும் போது நானே ஒளிர்கிறேன்.
- கிளிஞ்சலில் வெள்ளியென, கயிற்றில் பாம்பென, வெயிலில் கானலென அறியாமையால் உலகம் என்பால் விகர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
- என்னிடமிருந்து வெளிப்பட்ட உலகம் என்னிடம்தான் ஒடுங்கும். மண்ணில் குடமும், நீரில் அலையும் பொன்னில் பணியும் போல.
- பிரமன் முதல் புழுவரை உலகின் அழிவிலும், அழிவின்றி நிற்கும் வியப்பு மிகும் யான் போற்றி.
- உடலுற்றாலும் ஒருவனாயிலகும் நானே நான்! எனக்கே வணக்கம். வருவது, போவது எங்குமெனக்கில்லை. உலகம் முழுவதும் நிறைந்திருப்பவன் நானே.
- உடலால் எதையும் தொடாமல், தொன்று தொட்டு உலகு தாங்குமெனக்கு நிகர் சமர்த்தானவர் எவர்? நானே நான்! என்னை வணங்குகிறேன்.
- என்னை வணங்குகிறேன். ஒன்றுமில்லையெனக்கு. இல்லையெனில் மனம், வாக்குகளுக்கு, இலக்கு எல்லாம் என்னுடை யதே.
- அறிபவன், அறிவு, அறிகின்ற பொருள் என்ற இந்த மூன்றும் உண்மையல்ல. அறியாமையால் இவை எங்கிருக்குமோ அங்கு களங்கமில்லாப் பொருள் நான்
- துன்பத்தின் மூலம் துவைதம். அதற்கு முன்பு பார்ப்பது முழுவதும் பொய். ஏகமாம் தூய ஞான ரஸமே நான் என்பதிலும் வேறு மருந்தில்லை.
- ஞானமுடையவன் நான்; அறியாமையால் சிலவற்றைக் கற்பிதம் செய்து கொண்டேன். தொடர்ந்து ஆய்ந்ததன் மூலம் எனக்கு விகற்பமில்லா நிலை வாய்த்தது.
- பந்தமெனக்கில்லை; மோட்சமுமில்லை. ஆதாரமற்ற குழப்பம் அடங்கியது. உலகம் என்னிடமுள்ளது; [ஆயினும்] உண்மையில் என்னிடமில்லை.
- உடலுடன் இவ்வுலகம் ஒன்றுமேயில்லையென்றும், ஆத்மா தூய அறிவு மயமென்றும் துணிந்தேன். ஆனால் இப்போது கற்பனை எதனிடம்?
- உடலும், சொர்க்க – நரகங்களும், பந்த முக்திகளும், பயமும் – இவையெல்லாம் கற்பனையே. ஞான ஆத்மாவாம் எனக்கு இதனாலென்ன பயன்?
- துவைதம் காணாத எனக்கு மக்கள் கூட்டம் காடு போலாகியது. எதனிடம் நான் மகிழ்வடைவேன்?
- உடல் நானல்ல; எனக்கு உடலில்லை. ஜீவனும் நானல்ல; ஞானமே நான். வாழ்க்கை விருப்பமே என் பந்தமாக இருந்தது.
- எல்லையில்லாத பெரும் கடலாகிய என்னிடம் மனமாகிய காற்றெழ பற்பல உலகத் திரைகள் திடீரென விந்தையாய்க் கிளம்புகின்றன.
- எல்லையில்லாத பெருங்கடலாகிய என்னிடம் மனக்காற்று ஒடுங்க, ஜீவனாகிய வியாபாரியின் உலகக் கப்பல் அழிவடைகிறது.
- கரையில்லாத பெருங்கடலாகிய என்னிடம் ஜீவ தரங்கங்கள் இயற்கையாகவே உண்டாகி மோதி விளையாடி ஒடுங்குகின்றன.
[தொடரும்]