Pazhamozhi Naanooru

நாங்குநேரி வாசஸ்ரீ

பாடல் 33

தந்தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன,
வெந்தொழிலர் ஆய வெகுளிகட்குக் கூடுமோ?
மைந்(து)இறை கொண்ட மலைமார்ப! ‘ஆகுமோ
நந்துழுத எல்லாம் கணக்கு?’.

பழமொழி – ஆகுமோ, நந்து உழுதவெல்லாம் கணக்கு

என்ன உலகநாதன் ஏதோ பெரும பேசிக்கிட்டிருக்கீங்க போல. கொஞ்சம் நக்கலுடன் ஆரம்பித்தேன்.

இது தினமும் நாங்கள் சந்திக்கும்இடம் தான். என் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பூங்கா. உலகநாதனும் நானும் பால்ய நண்பர்கள். இயல்பாகவே அதிகம் பேசும் அவனுக்கு தினமும் வரும் இந்தப் பூங்காவில் நிறைய நண்பர்கள். அவன் வீடு இங்கேயிருந்து ஒருகிலோமீட்டர் தான். நான்தான் தினமும் ஜாகிங் வந்து பத்து நிமிடம் ரெஸ்ட் எடுத்தவுடன் திரும்பவும் அரக்க பரக்க ஓடிவிடுவேன். சனி,  ஞாயிறு மட்டும் கொஞ்சம் அதிக நேரம் கிடைக்கும். என்ன செய்வது பிரைவேட் கம்பெனி வேலை. அவனுக்கு சொந்த பிசினஸ்தான்.  நினைச்ச நேரத்துக்குக் கடைக்குப்போவான். துணி வியாபாரம். அது அவங்க பரம்பரைத்தொழில்.

இன்னிக்கு என்ன பேசிக்கிட்டிருக்கானோ கேட்போம். மனதை நிலைநிறுத்தினேன்.

ஒண்ணுமில்லடா நான் புதுசா கட்டியிருக்கற வீட்டுக்குக் குடிபோகப்போறோம் ஆரம்பித்தான்.

ஓ அப்டியா சந்தோசம் அது எங்க வீட்லேந்து ரொம்ப பக்கமில்ல.

ஆமாம்.  ஆனா இனிமே லோ லோன்னு இவ்ளோ தூரம் வாக்கிங் வர வேண்டியதில்ல.  அவன் சொல்ல ஆரம்பித்தவுடன் எனக்குள் உற்சாகம் குறைந்தது. ஒருவேளை வீட்டுப் பக்கத்திலிருக்கும் வேறு ஏதாவது பார்க்குக்கு வரச் சொல்லுவானோ.

என்னடா யோசனை. இந்த முழி முழிச்சிட்டிருக்க. நண்பனின் குரலால் சுதாரித்துக்கொண்டேன். ஒண்ணுமில்ல நீ சொல்லு.

அதாண்டா நான் நாளையிலேருந்து பார்க் வரமாட்டேன்.  நான் குடிபோற சொசையிட்டியிலேயே ஒரு சின்ன பார்க் இருக்கு. புல்லுல கால் வச்சு நடந்தா நல்லதுன்னு தானே இத்தன தூரம் வரோம். என்னோட புது வீட்டுக்குள்ளயே ஒரு ரூம்ல சின்னதா செயற்கைப்புல் தரை இருக்கும். அதுல நடந்தாலும் இதே எபக்ட் தானாம். அப்பறம் ஜிம், நீச்சல்குளம் எல்லாம் உள்ளயே இருக்கு. விளையாட கிளப்ல டேபிள் டென்னிஸ்,  கேரம் எல்லா இன்டோர் கேமும் இருக்கு. இதுக்கு மேல என்ன வேணும் சொல்லு.

அவன் பேசப்பேச ஏதோ மனதில் நெருடிற்று.

அவன்தொடர்ந்தான்.  நான் முதல்ல குடிபோயிடறேன். அதுக்கப்புறம் உனக்கும் ஒரு நல்ல வீட்டப் பாத்துக் கொடுக்கறேன். அங்கேயும் சேந்து என்ஜாய் பண்ணலாம். சோகமா மூஞ்சிய வச்சிக்காத.

எனக்கு சோகமெல்லாம் இல்ல. குழப்பம் தான். அதெப்படி நீ இப்படி செயற்கை விசயங்கள்ல மயங்கிப் போய் பேசறன்னு. நீ சொல்லற ஒவ்வொண்ணும் தொடக்கத்துல வேணா நல்லா இருக்கும். அப்பறம் அதத் தொடர்ந்து பராமரிக்கணும். ஒரு வருசம்கழிஞ்சா அதே முகங்களப் பாத்துப் பாத்து போரடிச்சுடும். எப்டியிருந்தாலும் நாம இப்ப வாக்கிங் வரும்போது எத்தன பேரப் பாக்கறோம். புதுப்புதுவண்டிகள், முகங்கள்,  காற்றோடு கலந்து வரும் வாசனைகள்.  அந்த மாதிரி.

என்னதான் நீ ரொம்ப வசதின்னு நெனச்சாலும் ஆகுமோ, நந்து உழுதவெல்லாம் கணக்கு ங்கற பழமொழி மாதிரிதான் நினைக்கத் தோணுது. நத்தைப் புழு மண்ணத் தோண்டுறதும் உழுவதற்குச் சமானம்னு சொல்லி நிலத்த  உழாம பயிர விளைவிச்சிற முடியுமா என்ன. நான் சொல்றதச்சொல்லிட்டேன். அப்பறம் உன் விருப்பம். நீ கூப்பிட்டாக்கூட நான் அந்தமாதிரி வீட்டுக்கெல்லாம் குடிவர மாட்டேன். தீர்மானமாகச் சொல்லிவிட்டு நடந்தேன் சந்தோசத்துடன்.

பாடல் 34

பொருளல்லார் கூறிய பொய்க்குறளை வேந்தன்
தெருளும் திறந்தெரிதல் அல்லால் – வெருளவெழுந்து
ஆடு பவரோடே ஆடார், உணர்வுடையார்,
‘ஆடுபணைப் பொய்க்காலே போன்று’.   

பழமொழி – ஆடுபணைப் பொய்க்காலே போன்று

ஒண்ணும் பிரச்சினையில்ல. அமைச்சர் வேதநாயகம் நம்ம கூட்டத்தார்தான். சொல்லறவிதமா சொல்லி காரியத்த முடிச்சிக்குடுத்திடறேன்.  அப்பறம் பேசினபடி தொகைய மாத்தி உட்றணும். புரிஞ்சுதா. அமைச்சரின் அள்ளக்கை மோகன் வாக்கு குடுத்ததால் பூமி பூசைக்கு ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தேன். நிம்மதி பூசைக்கு அமைச்சரையே கூட்டிக்கிட்டு வரப்போறான்னு நினைச்சிக்கிட்டு இருக்கும்போது இப்டி வந்து நிக்கறான்.

இப்ப போயி தலைய சொரிஞ்சிட்டு நின்னா எப்படி. பாங்குல பணத்த மாத்தி உடச்சொன்னப்போ குரல் நல்லா வெளிய வந்தது. இப்ப சத்தமே வர மாட்டேங்குது. என்ன விளையாட்டு இது. 450 வீடுகள் கட்டறதுன்னா சும்மாவா. அதான் சொன்னேனே. ஐந்து வீடுகள இலவசமா உங்க அமைச்சர் யாரையெல்லாம் கையக் காட்டுறாரோ அவங்களுக்குக் குடுத்துடறென்னு. அதச் சொன்னியா.

மரியாதை குறைந்துகொண்டே போக மோகன் செய்வதறியாது நெளிந்து கொண்டே நிற்கிறான்.

கொஞ்சம் பொறுமையா இருங்க. அவரு சம்மதிக்கத்தான் செஞ்சாரு. கூட இருந்த அவரோட நண்பர்தான் காரியத்தக் கெடுத்துட்டாரு. நீங்க வீடு கட்டப்போற இடம் முன்ன குளமா இருந்ததாலதான் பிரச்சினை. அதுக்கும் பலவிதமா சொல்லிப்பாத்தேன். எப்படியிருந்தாலும் பல வருசமா இந்த நிலம் வறண்டுதான் இருக்கு. ஏதோ ஒருகாலத்துல குளம் இருந்ததா சொல்லறாங்க. அப்டிப் பாத்தா எங்கயுமே மனுசன் வீடுகட்டி குடியிருக்க முடியாதுன்னு.

கூட இருந்தவர்தான் அமைச்சரக் குழப்பிட்டாரு. நீதி, நேர்மை, நியாயம் எதுவுமே இல்லாம எப்படி இப்படி அனுமதி கேக்க வந்துட்டீங்க. அமைச்சருக்கு வெளிய நடக்கற நல்லது கெட்டதப் பாத்துட்டுவந்து எடுத்துச்சொல்ல வேண்டிய நீங்களே தப்பு செஞ்சீங்கன்னா அவரால எப்படி மத்த பொறுப்புகள நியாயமா கவனிக்க முடியும். அப்டி இப்டீன்னு. கடைசியில என் பேச்சு எடுபடவே இல்ல.

அவரு இல்லாதநேரம் பாத்து திரும்பவும் வீட்டுக்குப் போய் முயற்சி பண்ணினயா.

அங்கயும் போனேன்.  ஆனா…………..மனதுள் நிகழ்ந்ததை அசைபோட ஆரம்பித்தான் மோகன்.

ஏன்யா….. இங்கயும் வந்துட்டீரா நீர். யாரையும் உருப்படியா செயல்பட உடமாட்டீரு போல…. கேட்டுக்கொண்டே வருகிறார் அதே நபர்.

இவர் யாராக இருக்கக் கூடும். அமைச்சரின் நண்பரா சொந்தக்காரரா. சுத்தி சுத்தி என்னயே கேள்வி கேக்கறார்.  யோசித்துக்கொண்டிருக்கும்போதே மீண்டும் தொடர்கிறார்.

படிச்சுப்படிச்சு சொன்னேன் வேதநாயகத்துக்கு. இந்தமாதிரி நியாயங்கெட்ட அரைகுறை முட்டாளுங்கள கட்சியில வச்சிக்காதன்னு. எவ்வளவு முயற்சி செஞ்சாலும் உன் பாச்சா இங்க பலிக்காது. ‘ஆடுபணைப் பொய்க்காலே போன்று’னு பழமொழி கேள்விப்பட்டிருக்கியா.

அரசன உன்னயமாதிரி யாரவது பொய்பேசி குழப்பினா கூட இருக்கற அமைச்சருங்க உண்மய எடுத்துச்சொல்லி தெளிய வைப்பாங்களாம். அந்த பொய்யர்கள் கூட சேந்து தாங்களும் பொய்க்கால் கட்டிக்கிட்டு ஆடமாட்டாங்களாம். அந்தமாதிரி தான். நான் கூட இருக்கற வரை இந்த வீடு ப்ராஜக்ட் நடக்காது. யார்கிட்ட கைநீட்டி பணம் வாங்கிட்டு இந்தக் காரியத்தச் செய்யறயோ அந்த ஏஜண்ட்கிட்ட முடியலனுஒத்துக்கிட்டு திருப்பிக்குடுத்துடு. மிரட்டுகிறார்.

அச்சச்சோ….. அங்க நடந்ததச் சொல்லக்கூடாது.  பணத்த திருப்பிக்குடுக்கறதப் பத்தி யோசிச்சிற வேண்டியதுதான்.

என்னய்யா மோகன் என்ன பலத்த யோசனை. நான் கேட்கிறேன்.

அவனிடத்தில் பதில் இல்லை. மீண்டும் என்முன் தலையைச் சொரிந்துகொண்டு நிற்கிறான்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.