Author: மு. இளங்கோவன்

  • கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்கவிழா!

     

    தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இதனை உலக அளவில் பரப்பும் அமைப்பு உலகத் தொல்காப்பிய மன்றம் ஆகும். இந்த அமைப்பு பிரான்சில் தொடங்கப்பட்டு, கனடா, மலேசியா, ஜப்பான் நாடுகளில் கிளைகளைக் கொண்டு செயல்படுகின்றது. இந்த அமைப்பின் கிளை வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்டசோழபுரத்தில் நாளை (ஏப்ரல் 15 ஆம் நாள், ஞாயிற்றுக் கிழமை) மாலை 4 மணிக்குத் தொடங்கப்பட உள்ளது.

     

    கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள குருகாவலப்பர்கோவில் மீரா மகாலில் நடைபெறும் தொடக்க விழாவிற்குச் செம்மொழி நிறுவனத்தில் முன்னைப் பொறுப்பு அலுவலராகப் பணியாற்றிய பேராசிரியர் க. இராமசாமி தலைமை தாங்குகின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் செ.வை. சண்முகம், பிரான்சு நாட்டின் பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, நெதர்லாந்து நாட்டின் பொறியாளர் கோபி இரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகைதர உள்ளனர்.

     

    இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு அழைப்பாளர்களாக அய்வறிஞர் கு. சிவமணி (மேனாள் முதல்வர், கரந்தைத் தமிழ்க் கல்லூரி), பேராசிரியர் இரா. ச. குழந்தை வேலனார் (நிறுவுநர், கடலூர்த் தமிழ்ச்சங்கம்)  அழைக்கப்பட்டுள்ளனர்.

     

    உலகத் தொல்காப்பிய மன்றத்தின் செயலாளர் முனைவர் மு.இளங்கோவன் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் நோக்கங்களை எடுத்துரைத்து உரையாற்றுவார்.

     

    பல்வேறு தமிழ்ப்பணிகள் செய்த  மூத்த தமிழறிஞர்களான புலவர் இ. கோ. குஞ்சிதபாதன் பிள்ளை, முனைவர் அ. ஆறுமுகம், புலவர் மா. திருநாவுக்கரசு, புலவர் மு. செல்வராசனார், புலவர் கூத்தங்குடி அரங்கராசனார், புலவர். கு. கணேசமூர்த்தி, புலவர் சு. இராசகோபால், புலவர் பல்லடம் மாணிக்கம், பண்ணுருட்டி இரா. பஞ்சவர்ணம், புலவர் ஆலவாய் அ. சொக்கலிங்கம், புலவர் சி. பன்னீர்செல்வம், மா. சுப்பிரமணியன் ஆசிரியர், பூவை. சு. செயராமன், ஆகியோரைத் தமிழ் ஆர்வலர் சோழன் குமார் சிறப்பித்து, நினைவுப் பரிசு வழங்க உள்ளார்.

     

    உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தலைமை அலுவலகம் திறப்பு விழாவும் இந்த நிகழ்ச்சியில் நடைபெற உள்ளது.

     

    பேராசிரியர் இ. சூசை, முனைவர் ப. பத்மநாபன், முனைவர் அரங்க. பாரி, முனைவர் க. திலகவதி, முனைவர் உ. பிரபாகரன்,  முனைவர் சா. சிற்றரசு,  முனைவர் அ. சிவபெருமான், செ. திருவாசகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

     

    பொறியாளர் இரா. கோமகன் குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தியாக. மோகன், கி. முல்லைநாதன், ந. பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

     

    உலகத் தொல்காப்பிய மன்றப் பொறுப்பாளர்கள் சு.இளவரசன், ஸ்ரீ.ஸ்ரீகாந்த், கா. செந்தில், செ. திருவள்ளுவன், சா. க. கொளஞ்சிநாதன், நா. பாலசுப்பிரமணியன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர்.

     

    உலகத் தொல்காப்பிய மன்றத்தின் இணையதளம்:  http://www.tholkappiyam.org/

     

    Share
  • மலேசியாவில்  விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு நிகழ்ச்சி

    -முனைவர் மு.இளங்கோவன்

    மலேசியாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் SRI_5878வெளியீட்டு நிகழ்ச்சி 26.12.2017 மாலை சிறப்பாக நடைபெற்றது. கோலாலம்பூர்- பிரிக்பீல்ட்சு பகுதியில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாசார மையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

    SRI_5898மலேசியத் திருமுருகன் திருவாக்குத் திருபீடத்தின் நிறுவுநர் தவத்திரு பாலயோகி சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலேசியாவில் வாழும் தமிழறிஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

    திரு. ம. மன்னர் மன்னன் வரவேற்புரையாற்றினார். முனைவர் க.திலகவதி வாழ்த்துரை வழங்கினார். SRI_5915தவத்திரு. பாலயோகி சுவாமிகள் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டை வெளியிட, மலேசிய இலங்கைச் சைவர் சங்கத்தின் தலைவர் க. அருள்ஜோதி முதல் படியைப் பெற்றுக்கொண்டார். பொறியாளர் இராசு அவர்கள் சிறப்புப் படியைப் பெற்றுக்கொண்டார். தான்ஸ்ரீ  குமரன் அவர்கள் ஆவணப்படதின் சிறப்பினைக் குறித்து உரையாறிறனார்.

    மலேசியாவின் மூத்த தமிழறிஞர் முனைவர் முரசு.SRI_5928 நெடுமாறன், தமிழ்நெறி இயக்கத்தின் தேசியத் தலைவர் திருமாவளவன், கவிஞர் கம்பார் கனிமொழி, ஆசிரியர் பச்சைபாலன், மருத்துவர் பால. தர்மலிங்கம் உள்ளிட்டோர் ஆவணப்படத்தின் சிறப்புப்படிகளைப் பெற்றுக்கொண்டனர்.

    விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் இயக்குநர்SRI_5958 முனைவர் மு.இளங்கோவன் தம் ஆவணப்படத்தின் படப்பிடிப்பு அனுபுவங்களைப் பகிர்ந்துகொண்டார். ம. அண்ணாதுரை நன்றியுரை வழங்கினார்.

    *****

    இந்தியாவில் ஆவணப்படம் பெறுவதற்குத் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: muelangovan@gmail.com
    0091 9442029053

    Share
  • பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன்

    -மு.இளங்கோவன்

         திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர்பட்ட ஆய்வு மாணவனாக நான் இருந்தபொழுது சென்னை எனக்கு அறிமுகமானது. எங்கள் அண்ணனுடன் சென்னையை வலம்வரும்பொழுதுதான் நண்பர் அ. தேவநேயன் தொடர்பு கிடைத்தது. அவர்தான் “அடவி வரைகலை” வே. இளங்கோவை அறிமுகம் செய்துவைத்தார். அந்த வரிசையில் இன்னொரு நண்பரும் அறிமுகம் ஆனார். அவர் பொம்மலாட்டக்கலைஞர் மு. கலைவாணன். மாணவர் நகலகத் தந்தை ஐயா நா.அருணாசலம் கண்டெடுத்த அறிவுக்கலைஞர்களுள் மு. கலைவாணன் குறிப்பிடத்தகுந்தவர்.

         மாணவர் நகலகத் தந்தை நா. அருணாசலம் ஐயா
    செய்த தமிழ்ப்பணிகளுக்குத் துணையாக அழைப்பிதழ்kalai copy உருவாக்குவது, அச்சிடுவது, ஒட்டுவது, நிகழ்ச்சி வடிவமைப்பது, பதாகை கட்டுவது, படம் வரைவது என்று அனைத்துப் பணிகளையும் சலிக்காமல் செய்த பெருமை மு. கலைவாணனுக்கு உண்டு. தமிழ்ச்சான்றோர் பேரவை விழாக்கள், நந்தன் இதழ்வெளியீடு என்று மு. கலைவாணனின் பணிகள் மாணவர் நகலகத்தில் நீண்டவாறு இருக்கும்.

         சென்னை, தியாகராயர் நகரில் அமைந்துள்ள மாணவர் நகலகத்திற்குச் செல்லும்பொழுதெல்லாம் மு.கலைவாணனின் அறிவுத்துறையின் புதிய படைப்புகளைக் கண்டு கண்டு வியப்புறுவேன். அவருடன் உரையாடித் திரும்பும்பொழுது உலக அதிசயத்தைக் கண்டு வியந்த சிறுவனாக மகிழ்ச்சியுடன் வெளிவருவேன். நான் சிறு குழந்தையாக இருக்கும் குழு ஒளிப்படம் ஒன்றைக் கொடுத்து, இதிலிருந்து இக்குழந்தை வடிவத்தை மட்டும் தனிப்படமாக்கித் தாருங்கள் என்று வேண்டிக்கொண்டேன். அவரும் அறுவைப் பண்டுவத்தில் வல்ல மருத்துவர் ஒருவர், உடலோடும் உணர்வோடும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தையைப் பிரித்தெடுப்பதுபோல் கவனமாக என் குழந்தைப் பருவப் படத்தைப் பிரித்தெடுத்து, உயிர்கொடுத்து வழங்கினார். அதனை இன்றும் என் கண்ணெனக் காத்துவருகின்றேன்.

         மு. கலைவாணன் அவர்களுடன் உரையாடியபொழுதுதான் கலைமாமணி ந.மா. முத்துக்கூத்தன் அவர்கள் இவரின் அன்புத் தந்தையார் என்று அறிந்து என் வியப்புக்கு வரம்புகட்டத் தெரியாமல் அப்பொழுது தவித்தேன். பல இலக்கிய நிகழ்வுகளில் முத்துக்கூத்தன் ஐயாவைக் கண்டு, வணங்கியமையும் உரையாடியமையும் இப்பொழுது என் நினைவுக்கு வருகின்றன.

    “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
    ஆதவன் மறைவதில்லை
    ஆணைகள் இட்டே  யார் தடுத்தாலும்
    அலைகடல் ஓய்வதில்லை”

    என்ற அரசகட்டளை திரைப்படத்தின் பாடலை இயற்றியும், “நல்ல தமிழ்ப்பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்! நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்!” என்ற பாடலை இயற்றியும் பெருமைக்குரிய கவிஞராக அனைவராலும் அறியப்பட்டவர் ந. மா. முத்துக்கூத்தன் ஐயா என்பதை இங்கு நினைவுகூர விரும்புகின்றேன். புகழ்பெற்ற திரைக்கலைஞர்களான எம்.ஜி.ஆர், கலைஞர் மு.கருணாநிதி, “நடிகர் திலகம்” சிவாஜி கணேசன், எம்.ஆர் இராதா, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன், எஸ்.எஸ்.இராசேந்திரன் ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்தவர் இவர். அரசகட்டளை, நாடோடிமன்னன், இராஜராஜன் (எம்.ஜி.ஆர்) உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பாடல்களை எழுதிய “கலைமாமணி” ந. மா. முத்துக்கூத்தன் ஐயா அவர்களைத் தனித்துக்கண்டு அவர்தம் சீரிய பணிகளை எழுத முன்பே நினைத்திருந்தேன். என் விருப்பம் நிறைவேறுவதற்குள் ந.மா. முத்துக்கூத்தனார் 2005 மே 1இல் இயற்கை எய்தினார். இது நிற்க.

         கலைமாமணி ந.மா. முத்துக்கூத்தன் அவர்களின் அருமைப் புதல்வராக மு. கலைவாணன் பிறந்து வளர்ந்ததால் தந்தையாரின் கலையுணர்வு, கவிதையுணர்வு இவருக்கும் மரபுக்கொடையாகக் கிடைத்தது. எழுத்தாளர், பேச்சாளர், நடிகர், ஓவியர், சிறந்த கையுறைப் பொம்மலாட்டக்கலைஞர், வில்லுப்பாட்டுக் கலைஞர் என்ற பன்முகம் கொண்டவர் மு. கலைவாணன்.

         மு.கலைவாணன் மிகச் சிறந்த ஓவியர் என்பதை அறிந்து பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா அவர்களின் எங்கள் வீட்டுச் சேய்கள் நூலுக்கு உரிய அட்டைப்படம், உள்படம் வரைவதற்கு, வேலூர் மாவட்டம் ஆர்க்காட்டுக்குப் பதினைந்து ஆண்டுகளுக்குமுன் அழைத்துச்சென்று பயன்கொண்டேன். புதுச்சேரிக்கு வந்தபிறகு மு. கலைவாணனுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பு அருகியே இருந்தது. அண்மையில் தமிழகத்தின் நாட்டுப்புறக் கலைகள் குறித்த நூலொன்றை எழுதியபொழுது மு. கலைவாணன் நினைவு நெஞ்சில் வந்து தொற்றிக்கொண்டது. அவர்தம் திறமையை நீள நினைந்து, அவர்தம் ஆற்றலை உலகத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்து எழுதுவதில் மகிழ்கின்றேன்.

         கலைமாமணி ந. மா. முத்துக்கூத்தன், மு. மரகதம் ஆகியோரின் அருமைப் புதல்வராக மு.கலைவாணன் 20.11.1957 இல் பிறந்தவர். “கலைவாணர்” என்.எசு. கிருட்டினன் அவர்களின் மேல்கொண்ட மதிப்பின் காரணமாகத் தம் மகனுக்குக் கலைவாணன் என்று பெயர்சூட்டி மகிழ்ந்தார் நம் முத்துக்கூத்தனார்.

         மு.கலைவாணன் கோபாலபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்புவரை பயின்றவர். இளமை முதல் தந்தையாரின் அரவணைப்பில் வளர்ந்தவர். மு.கலைவாணன் – தமயந்தி திருமணம் 10.10.1982 இல் நடைபெற்றது. இவர்களுக்கு முத்தரசன், பகலவன் என்ற இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர்.

         மு.கலைவாணன் இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பொம்மலாட்டக் கலைநிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளார். அத்தனை நிகழ்வுகளிலும் பகுத்தறிவுக்கருத்துகளும், சுற்றுச்சூழல் சிந்தனைகளும், தமிழ் மரபு போற்றும் கருத்துகளும் இடம்பெற்றிருக்கும். பொம்மலாட்டத்தில் வழக்கமாக இடம்பெறும் புராணக் கருத்துகளை இவர் பின்பற்றாமல் மக்களும் மாணவர்களும் அறிவுத்தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கில் தம் பொம்மலாட்ட நிகழ்வை நடத்துவது சிறப்பிற்குரிய ஒன்றாகும்.

         சென்னை, பொதிகை தொலைக்காட்சிக்காக இதுவரை இருநூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும், “கலை மாமா” என்ற தலைப்பில் மக்கள் தொலைக்காட்சியில் தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும், வசந்து தொலைக்காட்சியில் நாற்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார். ஆசிரியர்களுக்கு இதுவரை இருநூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளையும், குழந்தைகளுக்கு இதுவரை அறுநூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளையும், பெற்றோருக்கான பயிற்சி வகுப்புகள் 54 ஐயும் நிகழ்த்தியுள்ளார். மூன்று திரைப்படங்களிலும், இரண்டு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

         மலேசியாவில் உள்ள பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் அழைப்பினை ஏற்று மலேசியா, சிங்கப்பூர் சென்று கலைநிகழ்ச்சிகளை நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கியுள்ளார். இலங்கைக்கு 2008ஆம் ஆண்டு சென்று, அங்குள்ள தேயிலைத் தோட்டப்பகுதியில் கலைநிகழ்வுகளை நடத்தி வந்துள்ளார். கலை அறப்பேரவை, கலைவாணன் பொம்மலாட்டக் கலைக்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை நிறுவித் தொடர்ந்து பணியாற்றி வருகின்றார். பல இடங்களில் வில்லுப்பாட்டுப் பயிற்சி முகாம், பொம்மலாட்டப் பயிற்சி முகாம்களை நடத்தி இக்கலைகள் வளர்வதற்கு அருந்தொண்டாற்றியுள்ளார்.

         ஆழிப்பேரலையால் தமிழகத்துக் கரையோர மக்கள் கவலையில் மூழ்கி, கண்ணீருடன் வாழ்ந்தபொழுது, இவரின் பொம்மலாட்ட நிகழ்வுகள் கன்னியாகுமரி முதல், சென்னைவரை நிகழ்ந்து, அவர்களுக்கு மன ஆறுதலையும், துன்ப மாற்றத்தையும் ஏற்படுத்தியது.

    மு.கலைவாணன் பெற்ற விருதுகள்:
         இலக்கிய வீதி அமைப்பு இவரின் பணியைப் பாராட்டி, சிறந்த பொம்மலாட்டக் கலைஞருக்கான விருதினை 1998இல் வழங்கியது. தாராபாரதி அறக்கட்டளை 2002இல் ’பல்கலை வித்தகர்’ விருதினை வழங்கியது. குரோம்பேட்டை திருக்குறள் பேரவை 2010இல் ’கலைஞாயிறு’ என்ற விருதினை வழங்கியது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ’கலைஞர் பொற்கிழி விருதினை’, 2004ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் உரூபாயுடன் வழங்கிப் பாராட்டியுள்ளது. தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 2015இல் ’பெரியார் விருது’ வழங்கிப் பாராட்டியுள்ளது.

    மு.கலைவாணன் நூல்கள்:

    1. கதை கேளு
    2. பாடலாம் வாங்க
    3. அன்புள்ள குழந்தைகளுக்கு (மரம் வளர்ப்பு)
    4. முகமூடி
    5. நீர் இன்றி (நீர் மேலாண்மை)
    6. யார் வந்தது? (சுற்றுச்சூழல்)
    7. சின்னச் சின்ன கதைகள் (உருவகக் கதைகள்)

         தமிழர் மரபு, தமிழ்ப் பண்பாடு, தமிழ்மொழிச் சிறப்பு, தமிழ் இலக்கியச் சிறப்பு, தமிழ்க்கலை வளர்ச்சி, சுற்றுச்சூழல், மரம் வளர்ப்பு, நீர் மேலாண்மை குறித்துப் பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலைவடிவங்களில் நிகழ்ச்சிகளை நடத்தும் மு. கலைவாணன் அவர்களை உலகத் தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். நம் பிள்ளைகளுக்கு இவர் வழியாக, இக் கலைவடிவங்களைக் கற்றுத் தருவதற்குரிய வாய்ப்புகளையும் சூழல்களையும் அமைத்து, வாழும் காலத்தில் இவரைப் போற்றுவது நம் கடமை.

    *****

    மு. கலைவாணன் தொடர்புக்கு:

    மு.கலைவாணன்,
    கூத்தர் குடில்,
    58/89 செல்லியம்மன்கோவில் தெரு,
    காட்டாங்குளத்தூர்,
    காஞ்சிபுரம் மாவட்டம் – 603 203
    பேசி: 9444147373

    Share
  • மலேசியாவில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்கம் செய்தி – மு.இளங்கோவன்

    மலேசியாவில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்க விழா!

     

         தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தைப் பரப்பும் வகையில் தமிழகத்திலும், பிற நாடுகளிலும் உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பு செயல்படுகின்றது. இந்த அமைப்பின் கிளை மலேசியாவில் தொடங்கப்பட உள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பந்திங்கில் உள்ள தெலுக் பங்ளிமா காராங் என்ற இடத்தில் 23.12.2017 சனி(காரி)க் கிழமை மாலை 6 மணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளை தொடக்க விழாவும், தொல்காப்பியர் நூலகம் திறப்பு விழாவும் நடைபெறுகின்றன.  இந்த நிகழ்ச்சிக்குத் தமிழகத்திலிருந்து முனைவர் மு.இளங்கோவன் வருகை தந்து சிறப்புரையாற்ற உள்ளார்.

         மலேசிய நாட்டில் வாழும் தமிழ்மக்கள் பல்வேறு இலக்கிய அமைப்புகளை ஏற்படுத்தித் தமிழ்மொழிக்குத் தொண்டாற்றி வருகின்றனர். இந்த நாட்டில் வாழ்ந்த தொல்காப்பிய அறிஞர் செ. சீனி நைனா முகம்மது அவர்கள் தொல்காப்பியப் பரவலுக்குப் பல்வேறு முயற்சிகளைச் செய்துவந்தார். அன்னாரின் மறைவு மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது. அவரின் தொண்டினைத் தொடரவும், அவர் செய்த பணிகளை இயன்ற வரை நினைவுகூரவும், தொல்காப்பிய நூல் அறிமுகத்தைப் பரவலாக்கும் வகையிலும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளையை மலேசியாவில் தொடங்க உள்ளனர். உலகத் தொல்காப்பிய மன்றம் இந்தியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் பல கிளைகளுடன் இயங்குகின்றது.

         தொல்காப்பியத்தில் ஈடுபாடுடைய அறிஞர்களை அழைத்து, தொல்காப்பியத்தை மக்களுக்கும், மாணவர்களுக்கும் அறிமுகம் செய்யவும், தொல்காப்பியப் பணிகளில் ஈடுபடுவோரைச் சிறப்பிக்கவும் இந்த அமைப்பு விரும்புகின்றது.

         மலேசியாவின் மூத்த தமிழறிஞரான முனைவர் முரசு. நெடுமாறன், திரு. ம. மன்னர் மன்னன், திரு. திருச்செல்வம், திரு. கம்பார் கனிமொழி உள்ளிட்ட அறிஞர்கள் நெறியாளர்களாக இருந்து இந்த அமைப்பை நெறிப்படுத்த உள்ளனர். தமிழகத்திலிருந்து தமிழறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொல்காப்பியச் சிறப்புகள் குறித்து உரையாற்ற உள்ளனர்.

         தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தைத் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்யும் எங்கள் முயற்சி வெற்றியடைய அனைவரின் மேலான ஒத்துழைப்பினையும் வழிகாட்டலையும் வழங்க வேண்டும் என்று இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான ம. முனியாண்டி, சரசுவதி வேலு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    உலகத் தொல்காப்பிய மன்றம்  மலேசியாக் கிளை தொடங்கும் விவரம்:

    தேதி: 23.12.2017 காரி(சனி)க் கிழமை

    நேரம் : மாலை 6.00 மணி

    இடம்: 32 B, ஜாலான் உத்தாமா 2, தாமான் ஜெயா உத்தாமா, தெலுக் பங்ளிமா காராங்,  பந்திங்,  சிலாங்கூர்

    தொடர்புக்கு:

    ம. முனியாண்டி 0060 164442029

    சரசுவதி வேலு 0060 123189968

    ஒருங்கிணைப்பாளர்கள்,

    உலகத் தொல்காப்பிய மன்றம் – மலேசியாக் கிளை

    Share
  • மக்கள் தொலைக்காட்சியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா ஒளிபரப்பு!

    அன்புடையீர், வணக்கம்

    விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் இந்த விழாவில் ஆற்றிய உரையின் முதன்மைப்பகுதிகளும், ஆவணப்படத்தின் முதன்மைக் காட்சிகளும் வரும் 14.10.2017 சனிக்கிழமை (இந்திய நேரம்) காலை 8.30 மணிமுதல் 9 மணி வரை மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழார்வலர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியிலும், இணையத்திலும் பார்க்க இயலும். தாங்கள் கண்டு மகிழ்வதுடன் தங்கள் நண்பர்களுக்கும் இந்தச் செய்தியைத் தெரிவித்துப் பார்க்கச் செய்யுங்கள்.

    இணையமுகவரி:

    Home

    இடைக்கட்டு மு.இளங்கோவன்

    Dr.Mu.Elangovan
    Assistant Professor of Tamil
    K. M. Centre for Postgraduate Studies,
    Government of Puducherry,
    Puducherry-605 008, India

    E.Mail : muelangovan@gmail.com
    blog: http://muelangovan.blogspot.com
    cell: +91 9442029053

    Share
  • மின்மினி இதழ் ஆசிரியர் தில்லை சிதம்பரப்பிள்ளை

    முனைவர் மு.இளங்கோவன்

    Thillai_Mu.E.

         இணையத்தின் தொடர்பில் இருப்பவர்களுக்கு மின்மினி இதழ் அறிமுகமாகியிருக்க வாய்ப்பு உண்டு. சுவிட்சர்லாந்திலிருந்து கால் நூற்றாண்டு காலமாக வெளிவரும் மின்மினி இதழ் இலவச இதழாகும். விளம்பரம் உட்பட அனைத்தும் இலவசமாக அமைவது இதன் தனிச்சிறப்பு. தில்லை சிதம்பரப்பிள்ளை இதன் ஆசிரியர். 25/04/1945 இல் பிறந்த இவர், இலங்கை யாழ்ப்பாணம் நாவற்குழியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பெற்றோர் பெயர் சங்கரப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை – சரஸ்வதி என்பதாகும். இவர் உயர்தரக் கல்வியை வண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரியில் பயின்றவர். இலங்கைப் பல்கலைக் கழகம் பேராதனையில் பயின்று 1969இல் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.

         தில்லை சிதம்பரப்பிள்ளைக்குக் கல்லூரியில் கற்கும் நாள்களில் கல்வி சாராத பல நூல்களைப் படிப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகக் கிடைத்தன. எனவே இவரின் உள்ளம் நூல்களைப் படைக்க வேண்டும் என்று ஆவல் கொண்டது. எனவே, அவ்வப்போது நாடகங்கள் சிலவற்றை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த நாடகங்கள் சில இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டன என்பதை இங்குக் குறிப்பிடுதல் வேண்டும்.

        தில்லை சிதம்பரப்பிள்ளை கல்லூரியில் பயின்று, பட்டம் பெற்றுத் தகுந்த வேலை கிடைக்கும் வரை 2 ஆண்டுகள் இலங்கை வீரகேசரிப் பத்திரிகையில் செய்தியாளராகவும், கட்டுரையாளராகவும், சிரித்திரன் பத்திரிகையில் நகைச்சுவை எழுதுபவராகவும் பணியாற்றியவர்.

    Minmini printஇவர் எழுதிய கட்டுரைகள்  வீரகேசரியில் வெளிவந்ததோடு நின்றுவிடாமல்  அக் கட்டுரைகளில் சில அன்றைய ஆட்சியாளர்களிடம் மொழிபெயர்ப்புடன் இவரால் சமர்ப்பிக்கப்பட்டு அவை நடைமுறைக்கு வந்தனவும் உண்டு.

         எடுத்துக்காட்டாக அரசு பனை அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் அமைக்க அப்போதைய இலங்கைப் பல்கலைக்கழகப் புவியியற் பீடத்தலைவர் பேராசிரியர் க. குலரத்தினம் அவர்களுக்கு உதவியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதைக் குறிப்பிடலாம். பல ஆண்டுகளாகப் பெருந்தொகையான பட்டதாரிகள் வேலை எதனையும் பெற வாய்ப்பின்றி இருந்த காரணத்தினை ஆய்வுசெய்தபோது  பட்டதாரிகளுக்கு வேலைப் பயிற்சித் திட்ட முக்கியத்துவம் பற்றிக் கட்டுரை எழுதினார். அதனை அப்போதைய ஆட்சியாளர்களிடம் கையளித்து நடைமுறைப்படுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தினார். இதனால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் – சிங்களப்  பட்டதாரிகள் பயிற்சி பெற்றதுடன் தகுந்த வேலையிலும் அமர்த்தப்பட்டனர்.

         இலங்கை அரசாங்கக் கூட்டுத்தாபனம் ஒன்றில் 15 ஆண்டுகள் நிர்வாக உத்தியோகத்தவராகவும், தொடர்ந்து உதவி முகாமையாளராகவும் கடமையாற்றியவர். அக்காலத்தில் தேவைக்கேற்ற சிறந்த கட்டுரைகள் எழுதுவதில் ஈடுபாட்டுடன் செயல்பட்டவர். இக்கட்டுரைகள் பத்திரிகைகளுக்கும், கடமையாற்றிய அரச நிறுவனத்தின் வளர்ச்சிக்கும்  உதவியுள்ளன. தாம் பணிபுரிந்த நிறுவனத்தின் கருத்தரங்கம், மேடைப் பேச்சுக்களில் பேச்சாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். வவுனியா, மட்டக்களப்பு, திரிகோணமலை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளார்.

           1985 முதல் இலங்கைத் தமிழர்கள் சுவிட்சர்லாந்தில் குறிப்பிடத்தக்க அளவில் குடியேறினர். சுவிசில் வழக்கில் இருந்த பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி  மொழி இவற்றில் ஒன்றை இருப்பிடத்திற்கேற்ப கற்கவேண்டிய சூழ்நிலை  ஈழத்தமிழர்களுக்கு அப்பொழுது ஏற்பட்டது. அம்மொழிகளைக் கற்றுத் தேர்வதற்குக் கால அவகாசம் தேவைப்பட்டது  இக்காலப் பகுதியில் இங்குவாழ்ந்த தமிழ் மக்கள் உள்ளுர் மொழிபற்றி அதிகம் அறியவில்லை. எனவே  இந்த நாட்டின் நடைமுறைகளையும், சிறார்களின் கல்வி முறைகளையும் அறிவதற்கு இதழின் முக்கியத்துவம் உணர்ந்து, மின்மினி என்ற இதழைத் தொடங்கினார். தங்கள் தங்கள் சமய, கலை பண்பாடுகளைப் பேணிக்காக்க உதவும் வகையில் தமிழ் மொழி அறிவைத் தமிழ்ச் சிறார்களுக்கு ஊட்டவும் சில முக்கியச் செய்திகளை அறியச் செய்யவும் மின்மினி இதழ் வெளியிடப்பட்டது.

         1993 புரட்டாசி மாதம் சுவிட்சர்லாந்து  வோ மாநிலத்தில் முதன்முதலாக  மின்மினி இதழ் உதயமானது, முதலில்  மாநில அளவில் இங்கு வாழும் தமிழ்மக்களைச் சென்றடைந்தது. மின்மினி இதழ் நேரடியாக அவரவர் வீட்டுக்கு அஞ்சல் பெட்டியில் இலவசமாகவே கிடைக்கும்படியாக அனுப்பப்பட்டது. பின் படிப்படியாகத் தமிழ்மக்கள் வாழும் எல்லா மாநிலங்களுக்கும் இதன் சேவை பரவியது.  அங்குள்ள வியாபார நிலையங்கள் வழியாகவும் மின்மினி விநியோகிக்கப்பட்டது. பிற்காலத்தில் வெளிநாடுகளுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் விநியோகிக்கப்படுகின்றது.

                    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு அந்த அந்த நாடுகளின் செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுத்  தனித்தனியாகப் பதிப்புகள் சில வருடங்கள் வெளியிடப்பட்டன.

                    தில்லை சிதம்பரப்பிள்ளை 1985ஆம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்தில் ஆரம்பத்தில் சேவை மனப்பான்மையுடன் ஆங்கில, தமிழ் உரையாடல்களை மொழிபெயர்த்தும் சில அரச சார்புடைய ஆவண நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் வழங்கியவர்.  தனியார் தமிழ் ஆவணங்களைப் பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்த்தல், வரியிறுப்புப் பத்திரங்களை நிறைவுசெய்வதற்கு உதவுதல், கணினி, இணையம் ஆகியவற்றில் வேண்டியோர்க்கு உறுதுணை அளித்தல் போன்றவற்றில் ஆர்வமாகச் செயல்பட்டவர்.

         தில்லை சிதம்பரப்பிள்ளை மின்மினி என்ற தமிழ்ச் சஞ்சிகையை அன்றைய தேவைகருதி ஆரம்பித்து 24 வருடங்களாகத் தொடர்ந்து வெளியிட்டு, அதன் ஆசிரியராகவும் கடமையாற்றிவருகின்றார். அயல்நாட்டு எழுத்தாளர்களுடன் நல்ல தொடர்பில் உள்ளார்.

                    2013ஆம் ஆண்டில் இருந்து மின்மினி இதழின் வழியாக மாநாடுகள் நடத்துவோர்க்கும், ஆய்வுக்கட்டுரைகள் வழங்கும் ஆய்வாளர்களுக்கும் தொடர்புப் பாலமாக சேவைமனப்பான்மையுடன் கடமையாற்றி வருவதைக் குறிப்பிட்டுச் சொல்லுதல் வேண்டும். 2014இல் நடைபெற்ற 2 வது முருகபக்தி மாநாடு, 2014இல் சிட்னியில் நடைபெற்ற சிட்னி முருகன் சைவநெறி மாநாடு, புதுச்சேரி அருள்மிகு திருப்புகழ் மன்ற வெள்ளிவிழா மாநாடு 2014, 2015இல் நடைபெற்ற 9 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, மற்றும் ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு 2015, 2016 மற்றும் உலகத் தமிழ் இணைய மாநாடு  ஆகியவற்றின் செய்திகளை உலக அளவில் தெரியப்படுத்தி, கல்வியாளர்களுக்கு உதவியுள்ளார்.

                    தமிழ் மொழி இந்தப் பூமிப்பந்தில் தொடர்ந்து  வாழ வழிதேடும் வகையில் மேற்கொள்ளவேண்டிய பொறிமுறைகளைப் பல ஆய்வாளர்களிடமிருந்து பெற்று, அக்கரையில் பச்சை என்ற கட்டுரைத் தொகுப்பு நூலினை வெளியிட உழைத்துவருகின்றார். இந்த நூல் நூல் வடிவிலும், மின்னூல் வடிவிலும் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு இலவசமாகவே சென்றடையவேண்டுமென்ற நோக்கில் முயற்சிகள் இவரால்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

       மின்மினி இதழில் வெளியிடப்படும் இவரின் கட்டுரைகள் தமிழ் மக்களின் கல்வி சமய வேறுபாடின்றிக் கலை கலாசாரங்களைப் பேணிப் பாதுகாப்பதாக அமைவனவாகும்.

         சுவிட்சர்லாந்தில் மருத்துவக் காப்பீட்டுக் கட்டணம்  வருடாவருடம் அதிகரித்து வருகின்றது.  அதனைக் கட்டுப்படுத்தப் பலதிட்டங்கள் தீட்டப்பட்டும் அதனை மக்கள் ஆதரிக்கவில்லை என்பதால் அமல்படுத்தப்படவில்லை. மின்மினியில் இது தொடர்பான தீர்வுக்குப் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டன. மேலும் அதன் மொழிபெயர்ப்பைச் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அவ்வப்போது அனுப்பியதால் பயன் ஏற்பட்டுள்ளது.  மாநிலங்கள் அளவிலான மின்மினி ஆசிரியரது தீர்வுத்திட்டம் ஒன்று மேல்மட்டத்தில் ஆராயப்பட்டுத் தற்போது நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வதாக அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

         புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தில்லை சிதம்பரப்பிள்ளை அவர்கள் தமிழுக்கும், மக்களுக்கும் பயன்படும் அரிய செயல்களைத் தொடர்ந்துசெய்துவருகின்றார். கால்நூற்றாண்டாக மின்மினி இதழ்வழியாக உலகத் தமிழர்களின் உள்ளத்தில் இடம்பெற்றிருக்கும் இவர்தம் தொண்டு தொடர்வதாகுக! நீடு நிலைபெறுவதாகுக!

    Share
  • இலங்கையில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வுகள்!

    ????????????????????????????????????

         விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாக்கம்பெற்றவுடன் 2017 சூலை 1 ஆம் நாள் அமெரிக்காவில் – வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில் கயனா நாட்டின் தலைமை அமைச்சர் மாண்புநிறை மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட்டார். முதற்படியை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் மாண்புநிறை வேந்தர் கோ. விஸ்வநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து விபுலாநந்தரின் தாய்நாடான இலங்கையில் அவர்தம் ஆவணப்படத்தை வெளியிட வேண்டும் என்று அன்பர்கள் பலரும் முன்வந்து வேண்டுகோள் வைத்தனர். விபுலாநந்த அடிகளார் உருவாக்கிய பள்ளிகளில் பயின்றவர்கள், விபுலாநந்த அடிகளாரின் ஊரைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள் எனப் பலரும் அன்புவேண்டுகோள் வைத்ததன் அடிப்படையில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் இலங்கையில் திரையிடப்பட்டது.

         மட்டக்களப்பு நகரில் விபுலாநந்த அடிகளாரின் 125 ஆம் பிறந்த நாள் நிகழ்வு சார்ந்து பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ஆவணப்படத்தைத் திரையிட வேண்டும் என்ற விருப்பத்தை விபுலாநந்த அடிகளார் நூற்றாண்டு விழாச்சபையினர் முன் வைத்தனர். அவர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று 04.08.2017 பிற்பகல் மூன்று மணியளவில் அடிகளார் தோற்றுவித்த கல்விக்கோயிலான சிவாநந்த வித்யாலயத்தின் வேலுப்பிள்ளை அரங்கில் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

    Blog 7

         விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் அறிமுக விழா குறித்த அழைப்பிதழ் பலருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. அதனால் மக்கள் கூட்டம் அரங்கு நிறைந்து இருந்தது. பேராசிரியர் சி.மௌனகுரு, கனடாவிலிருந்து வருகைபுரிந்த சிவம்வேலுப்பிள்ளை,     மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் திரு. இரஞ்சிதமூர்த்தி, வலயக்கல்விப் பணிப்பாளர் க.பாஸ்கரன், சமூக ஆர்வலர் காசிபதி நடராசா, மட்டக்களப்பைச் சார்ந்த பல்வேறு இலக்கிய அமைப்பினர், காரைதீவு சார்ந்த பொதுமக்கள், விபுலாநந்த அடிகளாரின் உறவினர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    ஆவணப்படம் திரையிடத் தொடங்குவதற்கு முன்பாக ஆவணப்படம் எடுத்த பட்டறிவுகளை ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவன் பகிர்ந்துகொண்டார். ஆவணப்படம் திரையிடப்பட்டதும் ஆவணப்படம் குறித்த மதிப்பீட்டு உரையைப் பேராசிரியர் சி. மௌனகுரு சிறப்பாக வழங்கினார். ஆவணப்படம் குறித்த மதிப்பீடுகளைத் தனித்தனியாக அவரவரும் மு.இளங்கோவனுடன் பகிர்ந்துகொண்டனர். விபுலாநந்த அடிகளார் 125 ஆம் பிறந்த நாள் விழாக்குழுவினர், காரைதீவு விபுலாநந்த அடிகளார் மணிமண்டபத்தின் பொறுப்பாளர்கள், காரைதீவு பொதுமக்கள், மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தார் வழங்கிய சிறப்புகளையும், வரிசைகளையும் மு.இளங்கோவன் ஏற்றுக்கொண்டார்.

    Blog 10

         07.08.2017 இல் இலங்கைத் தலைநகர் கொழும்பு நகரில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னம்பலவாணேசுவரர் திருக்கோயில் திருமண அரங்கில், இந்து சமய கலாசாரா அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்  நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்பட அறிமுக விழாவிற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மிகச்சிறந்த வரலாற்று அறிஞருமான முனைவர் சி. பத்மநாதன் ஐயா தலைமை தாங்கினார்.

         இலங்கை அரசின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மாண்புநிறை அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்கள் கலந்துகொண்டு, ஆவணப்படத்தை அறிமுகம் செய்து பேசினார். விபுலாநந்தரின் சமயப்பணியையும், கல்விப்பணியையும் மாண்புநிறை அமைச்சர் அவர்கள் நினைவுகூர்ந்தார். தம் முன்னோர்கள் விபுலாநந்தருடன் கொண்டிருந்த தொடர்புகளையும் எடுத்துரைத்தார். மாண்புமிகு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் விபுலாநந்தரின் பிறந்த ஊரான காரைதீவில் முதன்மைச்சாலையில் விபுலாநந்தர் திருவுருவச் சிலையைத் திறந்துவைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆவணப்பட இயக்குநர் மு. இளங்கோவனுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

         யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் நா. சண்முகலிங்கன் அவர்களும், நாடகவியல் அறிஞரும் பேராசிரியருமான சி.மௌனகுரு அவர்களும் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் குறித்த தங்களின் மதிப்பீட்டு உரைகளைச் சிறப்பாக வழங்கினர். விபுலாநந்தர் இலங்கையிலும் இந்தியாவிலும் தம் பன்முகப் பணிகளை விரிவாகச் செய்துள்ளமையை இரண்டு பேராசிரியர்களும் எடுத்துரைத்து, கலைநேர்த்தியுடன் உருவாகியுள்ள விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் இலங்கையிலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளிலும் திரையிடப்பட வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தைத் தெரிவித்தனர்.

         சிறப்பு அழைப்பாளர்களாகப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் வி. முத்து, திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கே.பி.கே. செல்வராஜ், கனடாவில் வாழும் சிவம் வேலுப்பிள்ளை, திரு தில்லைநாதன், பேராசிரியர் இரகுபரன், ஞானம் இதழின் ஆசிரியர் திரு. ஞானசேகரன், மூத்த எழுத்தாளர் அந்தோனி ஜீவா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

    Blog 9

         இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரும், மிகச் சிறந்த செயல்மறவருமான திரு. அ. உமாமகேசுவரன் அவர்கள் மிகச்சிறந்த அறிமுகவுரையையும், வரவேற்புரையையும் நிகழ்த்தினார். இந்து சமய திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். இலங்கையின் பல பகுதிகளைச் சேர்ந்த தமிழார்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

         கல்விப் பணியும், சமயப் பணியும், தமிழாய்வுப் பணியும் செய்து உலகத் தமிழர்களின் உள்ளங்களில் இடம்பெற்ற யாழ்நூலாசிரியர் விபுலாநந்த அடிகளாரின் வாழ்வியலை விளக்கும் இந்த ஆவணப்படம் தமிழகத்திலும், புதுவையிலும் விரைந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    Share
  • விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம்!

    வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில்

    கயானா பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து வெளியிட்டார்!!

    unnamed (4)

    அமெரிக்காவின், மினசோட்டா மாநிலம், மினியாபோலிஸ் நகரில் 01.07.2017 இல் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில்

    unnamed (5)

    புதுவைப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் இயக்கிய விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தினை, கயானா பிரதம மந்திரி மோசஸ் வீராசாமி நாகமுத்து வெளியிட்டார். ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவனுக்கு நூல் ஒன்றினை அன்பளிப்பாக வழங்கிப் பாராட்டினார்.

    unnamed (6)

    புதுவையில் பணியாற்றும் மு.இளங்கோவன் இலங்கைப் பேரறிஞரும் யாழ்நூல் ஆசிரியருமான விபுலாநந்த அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றையும் சமூகப் பணிகளையும், இலக்கியப் பணிகளையும் ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார். இதற்காக விபுலாநந்த அடிகளார் வாழ்ந்த இலங்கையின் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. தமிழகத்தில் தஞ்சாவூர், சென்னை, புதுக்கோட்டை, மதுரை, திருக்கொள்ளம்பூதூர், கொப்பனாப்பட்டு ஊர்களிலும் படப்பிடிப்பு நடந்தது. இலங்கையிலும் இந்தியாவிலும் வாழ்ந்துவரும் மூத்த பேராசிரியர்கள், துறவிகள் பலரை நேர்காணல் செய்து விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது.

    unnamed (7)

    2017, சூலை முதல்நாள்(சனிக்கிழமை) அமெரிக்காவில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை(பெட்னா) விழாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. கயானா நாட்டிலிருந்து விழாவுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினரும், பிரதம மந்திரியுமான மோசஸ் வீராசாமி நாகமுத்து விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தினை வெளியிட்டார். வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி. விஸ்வநாதன் ஆவணப்படத்தின் முதல்படியைப் பெற்றுக்கொண்டார்.  மறைந்த அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் வி. பொன்ராஜ், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கே.பி.கே. செல்வராஜ், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவைத் தலைவர் செந்தாமரை பிரபாகர், பேராசிரியர் தண்டபாணி குப்புசாமி, சிவம் வேலுப்பிள்ளை, வலைத்தமிழ் ஆசிரியர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் ஆவணப்படத்தின் படியினைப் பெற்றுக்கொண்டனர். பின்னர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் முக்கிய பகுதிகள் பார்வையாளர்களுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டன. அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பேராளர்கள் ஆயிரக்கணக்கில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    Share
  • திருக்குறள் தொண்டர்

    மு. இளங்கோவன்

    திருக்குறள் தொண்டர் கரு. பேச்சிமுத்து

    amu1

         நாகர்கோயில் திருக்குறள் மாநாட்டில் அகவை முதிர்ந்த ஐயா ஒருவர் திருக்குறள் நூலினைச் சுமந்தபடி, அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கியவாறு, அவரவரின் முகவரியையும் பெற்றவண்ணம் இருந்தார். எனக்கும் திருக்குறள் நூல் ஒன்று கிடைத்தது. அவர் பெயர் கரு. பேச்சிமுத்து என்பதாகும். அந்தப் பெரியாரின் திருக்குறள் பணியினை அருகிலிருந்த திருக்குறள் செம்மல் பேராசிரியர் பா. வளன் அரசு, முனைவர் கடவூர் மணிமாறன், இராம.மாணிக்கம் ஆகியோரிடம் விதந்து பேசிக்கொண்டிருந்தேன். இவர்களைப் போலும் தன்னார்வலர்கள் உலகின் பல பகுதிகளில் இருந்துகொண்டு திருக்குறள் தொண்டூழியம் புரிவதை அறிவேன். கல்விப்புலத்தில் இருப்பவர்கள் இத்தகு இலக்கியத் தொண்டில் ஈடுபடுவது அரிதாகவே என் கண்ணில் தென்படும். தமிழறியாத, கல்லா மக்கள் தமிழ்ப்போர்வையில் நுழைந்துகொண்டு, புளியம்பழம்போல் தமிழோடு ஒட்டாமல் உறவு இல்லாமல் கல்விப்புலங்களில் வயிற்றுப்பாட்டைப் பார்த்துக்கொண்டு, பணியாற்றுவதை(!) அனைவரும் நாடெங்கும் காண்கின்றோம். அத்தகையோரை நாளும்  கண்ட கண்ணுக்கு,  இயந்திரப் பொறியியல் துறையில் பயின்ற ஒருவர் திருக்குறள் தொண்டராகப் பார்வையில் தென்பட்டது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

    amu

         திருக்குறள் கரு. பேச்சிமுத்து ஐயா அவர்களின் வாழ்க்கையை முழுமையாக அறிந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் மிகுதியாக இருந்தது. கருத்தரங்கில் பரபரப்பாக இருந்த என்னால் அவருடன் தனித்து உரையாட நேரம் இல்லாமல் போனது. ஊர் திரும்பியதும் பேச்சிமுத்து ஐயா வழங்கிய திருக்குறள் மற்றும் ஏழிளந்தமிழ் நூல்களைப் படித்துப் பார்த்தேன். அகரூர்க் கல்வி அறக்கட்டளை என்னும் அமைப்பைத் தம் தந்தையாரின் நினைவாக உருவாக்கி, அதன் வழியாகத் திருக்குறள் நூலினை எளிய அமைப்பில் தொடர்ந்து அச்சிட்டு, அனைவருக்கும் இலவயமாக வழங்குவது இவரின் உயிர்மூச்சான பணி என்பதை அறிந்தேன். ஒரு இலட்சம் படிகளுக்கு மேல் இதுவரை இவர் திருக்குறள் நூலினை அச்சிட்டும், விலைக்கு வாங்கியும் வழங்கியுள்ளார். என் கையில் இருந்தது 2016 சூலையில் அச்சிட்ட, ஐந்தாம் பதிப்பு நூலாகும். இதில் வ.சுப..மாணிக்கம் அவர்கள் வரைந்த உரை இடம்பெற்றுள்ளது. தேவநேயப் பாவாணரின் திருக்குறள் குறித்த எண்ணங்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

    திருக்குறள் ஆய்வு என்ற வகையில் திருக்குறளில் இடம்பெற்றுள்ள மொத்த எழுத்துகள் 42914 எனவும், தமிழ் எழுத்துகள் 247 இல் 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை எனவும், அனிச்சம், குவளை என்னும் இரு மலர்களின் பெயர்கள்மட்டும் இடம்பெற்றுள்ளன எனவும், நெருஞ்சிப் பழம் என்ற ஒரு பழத்தின் பெயர் மட்டும் திருக்குறள் நூலில் இடம்பெற்றுள்ளது எனவும், குன்றிமணி என்ற ஒரு விதை மட்டும் இடம்பெற்றுள்ளது எனவும் “ஔ” என்ற ஓர் உயிரெழுத்து மட்டும் பயன்படுத்தப்படவில்லை எனவும், பனை மூங்கில் என்ற இரண்டு மரங்கள்  மட்டும் இடம்பெற்றுள்ளன எனவும், “னி” என்ற எழுத்து மட்டும் 1705  முறை இடம்பெற்றுள்ளது எனவும் “ளீ”, “ங”, என்னும் இரு எழுத்துகள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன எனவும், திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் ஒன்பது எனவும் அரிய ஆய்வுக்குறிப்புகளை இந்த நூலில் கண்டு மகிழ்ச்சியுற்றேன்.

         நூற்பகுப்பு, அதிகாரவகராதி, பாட்டு முதற்குறிப்பு அகரமுதலி, திருக்குறள் மூலமும் உரையும், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, நறுந்தொகை, நன்னெறி, உலகநீதி என்னும் பிற அற நூல்களும் உரையுடன் இந்தச் சிறுதொகுதியில் உள்ளன. பிழைபடச் சொல்லேல், ஒலிப்புப் படங்கள் என்னும் குறிப்புகளும் இந்த நூலில் அமைந்துள்ள பாங்கினைக் காணும்பொழுது தமிழைப் பிழையில்லாமல் பேசவும், எழுதவும் வேண்டும் என்ற கரு. பேச்சிமுத்து ஐயாவின் உள்ளக்கிடக்கை எனக்குப் புலப்பட்டது.

    கரு. பேச்சிமுத்துவின் கல்விப் பின்புலம் என்ன?

         திருக்குறள் தொண்டில் தம்மைக் கரைத்துக்கொண்ட பேச்சிமுத்து அவர்களின் சொந்த ஊர் தேவகோட்டையாகும். 26.09.1944 இல் பிறந்தவர். பெற்றோர் அ. கருப்பையா, பொன்னம்மாள் ஆவர். தேவகோட்டையில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் புகுமுக வகுப்பினைப் பயின்றவர். மூதறிஞர் செம்மல் வ. சுப. மாணிக்கம் அவர்களின் அன்புக்குரிய மாணவராகச், சிறப்புத் தமிழ் பயின்ற இவர் செம்மலின் திருமகனார் தொல்காப்பியனாருடன் உடன் பயின்ற பெருமைக்குரியவர்.

         புகுமுக வகுப்பை அடுத்து, இயந்திரப் பொறியியல் படிப்பை அழகப்பர் கல்லூரியில் பயின்று பொறியாளராக மிளிர்ந்தவர்(1965). அறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடு அவர்களிடம் சிலகாலம் பணிபுரிந்த இவர் கரூர் மின்சார வாரியத்தில் சில மாதங்கள் பணிபுரிந்தவர். திருச்சிராப்பள்ளியில் அமைந்த பாரத மிகுமின் நிறுவனத்தில்(BHEL) 36 ஆண்டுகள் இயந்திரப் பொறியாளராகப் பணிபுரிந்து 1999 இல் ஓய்வுபெற்றவர்.

         மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரின் அகரமுதலிப் பணிக்கு அன்பர்கள் இணைந்து பொருட்கொடை வழங்கியபொழுது இவரும் முன்வந்து கொடை வழங்கியவர்.

         கரு. பேச்சிமுத்து ஐயாவின் பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள். ஆன்மீகத்தில் ஈடுபட்டு உழைத்த பெருமக்கள். தேவாரமும் திருவாசகமும் முழங்கிய இல்லத்தில் பேச்சிமுத்து வளர்ந்த காரணத்தால் இவருக்குத் திருமுறைகளும் வள்ளலாரும் அறிமுகம் ஆயினர்.

    வள்ளலாரின் மனுமுறை கண்ட வாசகத்தின்,

    “நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!

    வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!

    தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!

    கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!

    மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!

    குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!”

    என்னும் வரிகளைக் கேட்ட இவருக்கு, இச் செய்திகள் யாவும் திருக்குறளில் இடம்பெற்றுள்ளனவே என்று உணர்ந்து, திருக்குறளின் பக்கம் தம் கவனத்தைச் செலுத்தினார். தொடர்ந்து திருக்குறளைப் படிக்கவும், பரப்பவும் திட்டமிட்டுத் தம் கைப்பொருள் கொண்டு, திருக்குறள் நூலினை வாங்கியும், அச்சிட்டும் இல்லந்தோறும், பள்ளிதோறும் சென்று வழங்கி வருகின்றார். இவ்வகையில் பள்ளி மாணவர்களுக்கு 51,794 படிகளும், இல்லங்களுக்கு 15,192 படிகளும்  பள்ளிகளுக்கு 533 படிகளும் வழங்கித் தம் திருக்குறள் தொண்டினைச் செய்துவருகின்றார். மணற்பாறை அடுத்த வையம்பட்டியில் தொடங்கிய இவரின் திருக்குறள் பணி இன்று உலகு தழுவிய பணியாகப் பரந்து நிற்கின்றது.

         கரு. பேச்சிமுத்து அவர்களுக்கு 1966 இல் திருமணம் நடைபெற்றது.துணைவியார் பெயர் திருவாட்டி இராக்கம்மாள் ஆகும்.  இரண்டு மக்கள் செல்வங்கள் இவருக்கு வாய்த்தனர். இவர்கள் யாவரும் பேச்சிமுத்து அவர்களின் திருக்குறள் தொண்டிற்கு அரணாக உள்ளனர்.

         குருதிக்கொடை என்ற வகையில் இதுவரை 81 முறை குருதிக்கொடை வழங்கியுள்ளார். கண் கொடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர். மண்புழு உரம் உருவாக்கம், மரக்கன்று நட்டு ஒராண்டு வளர்த்து ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளுக்கு வழங்குவது, கல்வி உதவித்தொகையாக 596 மாணவர்களுக்கு வாழ்நாள் காப்பீட்டுக் கழகத்தில் பணம் செலுத்தி வருதல், திருக்குறள் குறித்த ஒட்டிகள், தட்டோடுகள், குறுவட்டுகள், பேசும் கடிகாரம் வாங்கி அளித்தல், திருக்குறள் தாங்கிய மேலாடை வழங்குதல் என்று தம் வாழ்நாளைத் திருக்குறளுக்கு ஒப்படைத்து வாழ்ந்துவரும் இப்பெருமகனாரின் தொண்டு தொடர்வதாகுக! வாழ்நாள் நீண்டு வளம் பெருகுவதாகுக!

    Share
  • விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் சுவரொட்டி வெளியீடு!

    amu

    amu1

    இலங்கையில் பிறந்து, தமிழகத்தில் துறவறப் பயிற்சி பெற்ற, தமிழ் மாமுனிவர், பேராசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் சுவரொட்டி இன்று (09.05.2017) மாலை புதுச்சேரியில் அமைந்துள்ள திரு. சீனு. அரிமாப்பாண்டியன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. அறிஞர் வே. ஆனைமுத்து அவர்கள் சுவரொட்டியை வெளியிட, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ஒப்பிலா. மதிவாணன் பெற்றுக்கொண்டார். புரவலர் தூ. சடகோபன், பாவலர் சீனு. தமிழ்மணி, பாவலர் சீனு. தமிழ்நெஞ்சன், திரு. திருவாசகம், ஓவியர் அன்பழகன் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் சுவரொட்டிகளைப் பெற்றுக்கொண்டனர்.

    பணிவுடன்
    மு.இளங்கோவன்
    புதுச்சேரி,இந்தியா

    Share
  • உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர்பொழிவும் ஆத்திரேலியா எழுத்தாளர் ம. செயராம சர்மாவுக்குப் பாராட்டுவிழாவும்!

    aje

          புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் புதுச்சேரி நீட இராசப்பையர் தெருவில் அமைந்துள்ள, செகா கலைக்கூடத்தில்   14.04.2017, வெள்ளிக் கிழமை, மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை தொல்காப்பியத் தொடர்பொழிவு நடைபெற்றது.

          வில்லிசைவேந்தர் இ. பட்டாபிராமன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். முனைவர் ப. பத்மநாபன்   வரவேற்புரையாற்றினார்.  முனைவர் மு.இளங்கோவன் அறிமுகவுரைற்றினார். முனைவர் சிவ. மாதவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியர் தெ. முருகசாமி தமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியத்தின் தாக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.  தொல்காப்பியத்துள் குறிப்பிடப்படும் இலக்கணச் செய்திகள் சிலப்பதிகாரம், கம்பராமாயணம் உள்ளிட்ட நூல்களில் பொதிந்து கிடக்கும் தன்மையை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.

          ஆத்திரேலியாவிலிருந்து வருகை தந்த எழுத்தாளர் ம. செயராம சர்மாவின் எழுத்துப்பணியைப் பாராட்டும் வகையில், மரபுப் பாமணி என்ற விருதளித்து இந்த நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டது. மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு உழைத்துவரும் ஏம்பலம் செல்வம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு திரு. சர்மா அவர்களுக்கு விருதளித்துப் பாராட்டினார். ஆத்திரேலியாவில் தமிழும் தமிழர்களும் தொடர்பான அரியதோர் கருத்துரையச் செயராம சர்மா வழங்கினார். திரு. தூ. சடகோபன், தனித்தமிழ்ப்பாவலர் தமிழியக்கன், திருவாசகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தமிழறிஞர்களைச் சிறப்பித்தனர்.

          முனைவர் இரா. கோவலன் நன்றியுரை வழங்கினார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    Share
  • விசயமங்கலம் புலவர் வீ. சொக்கலிங்கம்

     

    முனைவர் மு.இளங்கோவன்

    muelangovan@gmail.com

    Gods_AS

         இந்த முறை திருப்பூர் சென்றிருந்தபொழுது குடந்தை ப. சுந்தரேசனாரின் சமய ஈடுபாட்டை, எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்குத் தெரிவித்து, உரையாடிக்கொண்டிருந்தேன். ப. சு. ஆவணப்படத்திற்காக ஒரு புல்லாங்குழல் செய்யும் கலைஞரைத் தேடி, கேரளாவில் திருச்சூரை அடுத்த குன்னங்குளம் சென்ற கதையையும் அக்கலைஞரின் ஒத்துழைப்பால் புல்லாங்குழல் செய்தமையைப் படம் பிடித்தமையையும் குறிப்பிட்டேன். அப்பொழுது தமக்கு அறிமுகமான விசயமங்கலம் புலவர் வீ. சொக்கலிங்கம் பற்றி சுப்ரபாரதிமணியன் எடுத்துரைத்தார்.

    cho     அண்மையில் புலவர் வீ. சொக்கலிங்கம் நிகழ்த்திய பெரியபுராணச் சொற்பொழிவில் ஆனாய நாயனார் புராணத்தை விளக்கும்பொழுது ஒரு புல்லாங்குழல் கலைஞரை அழைத்துவந்து மேடையில் அருகமர்த்தி, புல்லாங்குழல் செய்வது பற்றியும், அதன் வாசிப்பு முறைகள் குறித்தும் அவையினருக்குச் செய்முறை விளக்கம் அளித்தார் என்று குறிப்பிட்டவுடன்  புலவர் அவர்களைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு மேலிட்டது. ஏனெனில் ஆனாய நாயனார் புராணம் புல்லாங்குழல் குறித்த அரிய உண்மைகளைப் பொதிந்து வைத்திருக்கும் பகுதியாகும்.

         என் ஆசிரியர் இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்கள் ஆனாய நாயனார் புராணத்தில் பொதிந்துகிட்டும் குழல்செய்யும் முறை, குழல் துளைகளின் அளவு, இடைவெளி, குழல் துளைகளின் பெயர், மாறுமுதல் பண்ணல், கோடிப்பாலை உருவாக்கும் முறை, துளைகளில் கைவைத்து ஊதும் முறை, இசைக்கு உயிரினங்கள் மயங்குதல் குறித்து எடுத்துரைத்த கருத்துகள் பலவாண்டுகளுக்குப் பிறகு எனக்கு நினைவிற்கு வந்தன. தமிழிசைக் கலைக்களஞ்சியம் முதல் தொகுதியிலும் (பக்.152, 179), மூன்றாம் தொகுதியிலும் இவை இடம்பெற்றுள்ளன. பெரியபுராணத்தில் இசைக்குறிப்புகள் என்னும் தலைப்பிலும் ( III 290-291), புகல் நான்கு என்னும் தலைப்பிலும்( III பக். 288) வீ.ப.கா.சு. வரைந்துள்ள  விளக்கங்களை ஆர்வலர்கள் அங்கே காண்க.

         பெரியபுராணத்தின் துணைக்கொண்டு புல்லாங்குழல் குறித்து விளக்குவதற்குத் தமிழ்நாட்டில் ஒருவர் உள்ளார் என்பதைக் கேட்டதும் புலவரைக் காணும் வேட்கை மீதூரப்பெற்றேன். ஏனெனில் இன்றைய கல்விப்புலங்கள் தக்க அறிஞர்கள் இல்லாமல் இருண்டுக்கிடக்கும் அவல நிலையை எண்ணி எண்ணி உலைந்து வரும் எனக்குப் புலவரின் ஆற்றல் பளிச்செனத் தெரிந்தது.

         உடல்நலம் இல்லாமல் புலவர் வீட்டில் இருப்பதால் அவரைக் காணும் வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் அடுத்த முறை பார்க்கலாம் என்றும் எனக்குச் சுப்ரபாரதிமணியன் கூறினார். திருப்பூருக்கும் புலவர் வீ. சொக்கலிங்கம் இல்லத்திற்கும் இருபது கல் தொலைவு இருக்கும் என்றும் அவர் இன்று வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் எனக்கு அமைதி கூறினார். அப்படி என்றால் நாம் சென்று புலவரைச் சந்திப்போம் ஐயா!; இது என் விடை.

         எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்கள் சிறுமுயற்சி எடுத்துப் புலவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு என் வருகை பற்றியும் மாலையில் நடைபெறும் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திரையீடு பற்றியும் சொன்னார். என்னையும் புலவருடன் பேசும்படித் தூண்டினார். புலவரிடம்  நான் பேசினேன். என்னை அறிமுகம் செய்துகொண்டேன். குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் பற்றியும் அவர்தம் தமிழிசை வாழ்க்கையைப் பற்றியும் எடுத்துரைத்தேன். புலவர் சொக்கலிங்கம் அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. புலவர் அவர்கள் நம் பண்ணாராய்ச்சி வித்தகரை இரண்டுமுறை பார்த்துள்ளதாகவும், அவருடன் பழகிய நாள்கள் இன்னும் தம் மனக்கண்ணில் இருப்பதாகவும் குறிப்பிட்டு, அப்பர் பெருமானின்

    “கூற்றாயின வாறுவி லக்ககிலீர்

    கொடுமைபல செய்தன நானறியேன்

    ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்

    பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

    தோற்றாதென் வயிற்றின் அகம்படியே

    குடரோடு துடக்கி முடக்கியிட

    ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில

    வீரட்டா னத்துறை அம்மானே”

    எனத் தொடங்கும் கொல்லிப்பண் பாடலைப் பாடியும், பண் விளக்கம் சொல்லியும் பண்ணாராய்ச்சி வித்தகர் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்ததை நினைவூட்டினார். அவர் பாடியபொழுது வயிற்றுவலி வந்தோன் அடையும் துன்பத்தைக் கண்முன் பாடிக்காட்டி நடித்துப் புலப்படுத்தியதைப் பகிர்ந்துகொண்டார். மேலும் சிதம்பரத்தில்

    அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்

    பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை

    என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற

    இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே?

    என்னும் பாடலை உழவாரப்பணியின் பொழுது, உழவாரம் கொண்டு புல்லைச் செதுக்கி எடுப்பதுபோல் பாடிக்காட்டியதாகப் புலவர் தொலைபேசியில் உரையாடியபொழுது குறிப்பிட்டமை எனக்குப் பெரும் மகிழ்வாக இருந்தது.

         புலவர் அவர்களின் உடல்நலம் நோக்கி, அவரை இல்லம் சென்று நாங்கள் பார்க்க நினைத்தோம். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் மேல் கொண்ட பற்றின் காரணமாகவும், தமிழிசையின்மேல் கொண்டு ஈடுபாட்டின் காரணமாகவும் தாமே உரிய இடத்திற்கு வருவதாகப் புலவர் அவர்கள் வாக்களித்தார். சொன்னபடியே ஆவணப்படம் திரையிடும் இடத்திற்கு முதலாமவராக வந்து  நம் புலவர் காத்திருந்தார். புலவர்முன் கைகுவித்து வணங்கி, ’மாறிப்புக்கு இதயம் எய்தினோம்’. தம் தமிழ்ப் புலமையையும் சமய ஈடுபாட்டையும் இலக்கியப் பயிற்சியையும் புலவர் அவர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்டார்.

    விசயமகங்கம் புலவர் வீ. சொக்கலிங்கம் அவர்களின் தமிழ் வாழ்க்கை:

         திருக்குற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டை என்னும் ஊரில் வாழ்ந்த திருவாளர் வீரபத்திரன், ஆச்சியம்மாள் ஆகியோரின் தலைமகனாக 22.05.1940 இல் வீ. சொக்கலிங்கம் பிறந்தவர். இவருடன் ஆண் ஒருவரும், பெண் ஒருவருமாக உடன் பிறந்தவர்கள் உண்டு. பிறந்த ஊரான செங்கோட்டையில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றவர் (1958).  பெரும்புலவர்களை வாட்டும் வறுமைச்சூழல் காரணமாகச் சிலவாண்டுகள் கடையொன்றில் குற்றேவலராகப் புலவர் சொக்கலிங்கம் இளமையில் பணிபுரிந்தார். சிலவாண்டு இடைவெளியில் செங்கோட்டை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ( 1960-62) பயிற்சி பெற்றவர்.

         1962 இல் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம் விசயமங்கலம் என்னும் ஊரை அடுத்துள்ள கினிப்பாளையம் என்னும் ஊரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியில் இணைந்து, பணி நிறைவுக்காலம் வரை அந்தப் பள்ளியில் பணிபுரிந்தார். இவரின் ஆசிரியப் பணியைப் போற்றும் வகையில் தமிழ்நாட்டு அரசு நல்லாசிரியர் விருது (1994-95) வழங்கிச் சிறப்பித்துள்ளது. பணியில் இருந்தபடியே தம் புலமையை வளர்த்துக்கொள்ள, புலவர் (சென்னைப் பல்கலைக்கழகம்), இலக்கிய இளையர் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்), கல்வியியல் இளையர், முதுகலை (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) பட்டங்களைப் பெற்றவர்.

         வாழ்வியல் தேவைக்கு ஆசிரியப் பணிபுரிந்தாலும் உள்ளம் முழுவதும் ஆன்மீக ஈடுபாட்டிலும், இலக்கிய இன்பத்திலும் மூழ்கிக் கிடந்தது. எனவே ஓய்வு நேரங்களில் சொற்பொழிவாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.

         சமய இலக்கியங்கள், காந்தியம், பாரதிப் பாடல்கள், காமராசர் வாழ்வியல் குறித்து உரையாற்றுவதில் நம் புலவருக்குப் பெரிதும் ஈடுபாடு உண்டு. “நீரதன் புதல்வர்” என்னும் பாரதியார் பாடலடிகளைத் தலைப்பாக்கி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கையூட்டும் எழுச்சியுரையாற்றுவதில் வல்லவர். படித்தவர்களையும் படிக்காதவர்களையும் கவர்ந்திழுக்கும் சொல்லாற்றல் கொண்டவர். ’ஆன்மீகமும் மக்கள் வாழ்க்கையும்’, ’ஒரு ஊதுகுழலின் உலாக்கோலம்’, ’தெய்வச் சேக்கிழார் சுவாமிகளின் திட்பமும் நுட்பமும்’ என்னும் தலைப்புகளில் இவராற்றிய உரைகள் மக்களின் உள்ளத்தில் நீங்கா இடம்பெற்றவையாகும். இலக்கியங்களில் அமைந்துள்ள நுணுக்கமும் நுட்பமும் காணும் பேராற்றல் கொண்டவர் என்பதும் அவற்றை வெளிப்படுத்துவதில் வல்லவர் என்பதும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

         பேரூர் திருமடத்தில் அருளாட்சி செலுத்தும் தவத்திரு சாந்தலிங்க அடிகளாரின் மெய்த்தொண்டினை நினைவூட்டி, இவர் எழுதிய “தவம் செய்த தவம்” என்னும் நூல் அடியவர்களால் விரும்பிப் பயிலப்படும் நூலாகும். திருக்குற்றாலச் சாரலின் இயற்கை எழிலை வருணித்து இவர் வரைந்துள்ள “கவிச்சரம்” என்னும் நூல் இலக்கிய ஆர்வலர்களுக்கு இனிய விருந்தாகும். 32 கவிதைகள் இந்த நூலின் உள்ளடக்கமாக உள்ளன.

         சென்னை, நெல்லை, நாகர்கோயில் உள்ளிட்ட ஊர்களில் இலக்கியப் பேருரையாற்றிய இவர் மலேசியாவுக்குச் சென்று இருபத்தைந்து நாள் தங்கிச் சமய நூல்கள் குறித்தும், இலக்கியச் சுவையுணர்வு குறித்தும் உரையாற்றி மீண்ட பெருமைக்குரியவர்.

         புலவர் வீ. சொக்கலிங்கம் அவர்கள் சைவ சமய ஈடுபாடு கொண்டவர் எனினும் வடநாட்டிலிருந்தும், பிற பகுதிகளிலிருந்தும் சுற்றுப்பயணம் வரும் சமணர்கள் தங்கிச் செல்லும் வகையில் இவரின் வீட்டுக் கதவம் எப்பொழுதும் திறந்திருப்பதும் அவர்களை விருந்தோம்பி வழியனுப்புவதும், வருவிருந்துக்குக் காத்திருப்பதும் இவரின் உயர்ந்த மாந்த நேயத்தை வெளிப்படுத்துவன. சமயங்கடந்து, அனைவரிடமும் அன்பு பாராட்டி வாழும் தமிழுள்ளம் வாய்த்த புலவர் பெருமான் நலம்பல பெற்று, நீடு வாழ வாழ்த்துவம்!

    Share
  • புதுவைப் பேராசிரியர் அ. அறிவுநம்பி மறைவு!

    மு. இளங்கோவன்

    amu

    புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியரும், புகழ்பெற்ற ஆய்வாளருமான முனைவர் அ. அறிவுநம்பி இன்று (09.04.2017) மாரடைப்பால் புதுச்சேரியில் இயற்கை எய்தினார். காரைக்குடியில் பிறந்த பேராசிரியர் அ. அறிவுநம்பி, காரைக்குடி அழகப்பர் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி பயின்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கியவர். பின்னர் புதுவைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராக இணைந்து, பேராசிரியர், துறைத்தலைவர், புலமுதன்மையர் பொறுப்புகளை வகித்தவர். பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். கல்விப்பயணமாகப் பலநாடுகளுக்குச் சென்று வந்தவர்.

    இன்னும் இரண்டு மாதங்களில் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அ.அறிவுநம்பி இன்று திடுமென இயற்கை எய்தியமை தமிழகத்துக் கல்வியாளர்களைப் பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

    நாளை 10.04.2017 (திங்கள்) மாலை 4.30 மணிக்குப் புதுச்சேரி, இலாசுப்பேட்டையில் உள்ள கலைவாணி நகர் இல்லத்திலிருந்து உடல் நல்லடக்கம் செய்ய எடுத்துச்செல்லப்பட உள்ளது. பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாக வந்து பேராசிரியர் அ. அறிவுநம்பிக்கு அஞ்சலி செலுத்தியவாறு உள்ளனர்.

    Share
  • திருப்பூரில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திரையீடு!

    ama

    தமிழிசைக்குத் தம் வாழ்நாள் முழுவதும் பணியாற்றிய பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் மலேசியா, சிங்கப்பூர், கனடா, இலண்டன், குவைத்து, இலங்கை உள்ளிட்ட அயல்நாடுகளில் திரையிடப்பட்டதுடன் புதுச்சேரி, சென்னை, பாளையங்கோட்டை, திருவண்ணாமலை, கோபி, குடந்தை, திருவரங்கம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருவையாறு, கடலூர் உள்ளிட்ட தமிழகத்துப் பேரூர்களில் திரையிடப்பட்டு, தமிழிசை ஆர்வலர்களின் பாராட்டினைப் பெற்றுள்ளது. அந்த வரிசையில் அண்மையில் திருப்பூரில் திரு. கே.பி.கே. செல்வராஜ் அவர்களின் பெருமுயற்சியால் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. திருப்பூரிலும் அருகில் உள்ள ஊர்களிலும் வாழும் தமிழார்வலர்கள் ஐம்பதின்மர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரையிடலுக்குப் பெருமை சேர்த்தனர்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க வளாகத்தில் மாலை 7 மணிக்குத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆவணப்பட வெளியீட்டு நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்கள் உரையாற்றினார். ஆவணப்படத்தை உருவாக்கிய முனைவர் மு.இளங்கோவன், ஆவணப்படம் உருவான வரலாற்றையும் தமிழ் இலக்கிய உலகிற்கு இப்படத்தின் தேவையையும் நினைவுகூர்ந்தார். திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், தொழிலதிபரும், தமிழ் வள்ளலுமான திரு. கே.பி.கே. செல்வராஜ் அவர்கள் ஆவணப்படத்தின் ஒளிவட்டை வெளியிட, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. இராஜா. எம். சண்முகம் அவர்கள் முதல் படியைப் பெற்றுக்கொண்டார். ஏற்றுமதியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. விஜயகுமார், முத்தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திரு. பாலசுப்பிரமணியன் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. ஆவணப்படம் வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் பிறகு திரையிடல் தொடங்கியது.

    நிகழ்ச்சியின் நிறைவில் திரு. இராஜா. எம். சண்முகம் அவர்கள் ஆவணப்படத்தைப் பார்த்துத் தாம் அடைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, ஆவணப்படத்தின் சிறப்பினை எடுத்துக்கூறி, ஆவணப்படம் தமிழர்களின் பார்வைக்குக் கொண்டுசெல்ல வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார்.  திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத் தலைவர் கே.பி. கே. செல்வராஜ் அவர்கள் அமெரிக்காவின் பெட்னா விழாவில் குடந்தை ப. சுந்தரேசனாருக்கு அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடியதை நினைவூட்டித் தொடர்ந்து இந்த ஆவணப்படத்தைத் தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டுவதற்குரிய வழிமுறைகளை விளக்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சார்ந்த திரு. ஈஸ்வரன் அவர்கள் ஆவணப்படத்தில் வெளிப்பட்டு நிற்கும் கலைநுட்பத்தையும், தமிழிசைச் சிறப்பையும் எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சியின் நிறைவாகப் பெரும்புலவரும், குடந்தை ப. சுந்தரேசனாருடன் பழகியவரும், சைவ இலக்கியச் செம்மலுமாகிய சொக்கலிங்கனார் அவர்கள் ஆவணப்படத்தில் மூழ்கித் திளைத்த தம் தமிழ் இசை ஈடுபாட்டை விளக்கி, குடந்தை ப.சுந்தரேசனாருடன் தாம் பழகிய நாளினை நினைவூட்டி அரியதோர் உரை நிகழ்த்தினார். தமிழறிஞர்களின் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளும் ஊக்க மொழிகளும் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திருப்பூரில் மீண்டும் திரையிடலுக்கு வழி செய்துள்ளது.

    Share