இன்னம்பூரான்

நான் இந்த இழையை ஒரு பாடாக தணித்து அணைத்து விட்டேன், யாருக்கும் விழிப்புணர்ச்சி ஏற்பட்டதாக அறிகுறிகள் இல்லாததால். ஆனால், தற்குறிகள் நாடாளத்தொடங்கினால், இறைவன் கூட ஓடி ஒளிவான். இன்றைய தணிக்கைத் தகவல் நம்மை தடுமாற வைக்கிறது. சில அரசியலார் தகிடுதத்தம் செய்வதும், சில உயர் அதிகாரிகள் மட்டமான தகாத செயல்களில் ஈடுபடுவதும் அன்றாட செய்தி. விஞ்ஞானிகளும் அஞ்ஞானிகளாக மாறி, ஆடிட்டர் ஜெனெரல் சொன்ன மாதிரி, ‘அரசு சேமிப்பை தனியார் சொத்தாக மாற்றி இருப்பதை’ அறிவோம். போதாக்குறைக்கு, வசிஷ்டருக்கு எள்ளுத்தாத்தா போல் தன்னை சுகபிரும்மமாக காட்டிக்கொள்கிறார், மஹாகனம் பொருந்திய திருவாளர் ஜி.மாதவ மேனோன். அவர் ஒரு திரிமூர்த்தி. ஸ்பேஸ் துறைத்தலைவர். ஸ்பேஸ் கமிஷன் தலைவர். இஸ்ரோவுக்கும் தலைவர். நல்ல வேளை எல்லாம் மாஜி. தனக்குத்தானே, இங்கிருந்து அங்கே, அங்கிருந்து இங்கே மடலாடி, இந்திய அரசின் மேலாண்மைக்கு குந்தகம் விளைவித்த கதை கேளும்.

எம்.ஜி.சந்திரசேகர், டி.வேணுகோபால் என்ற இரு மாஜி ‘விஞ்ஞானிகள்’ ஆரம்பித்த ‘தேவாஸ்’ என்ற பேய்கம்பெனிக்கு முறையற்றவகையில் நிதி கொட்டி கொடுக்க, அரசு பணமும், பொது நலமும் சூறையாடப்பட்டன. அப்படி செய்யும்போது, சம்பந்தப்பட்ட இலாக்காக்களிடமிருந்து முக்கியமான தகவல்கள்/தீர்வுகள்/ விளைவுகள் எல்லாவற்றையும் இருட்டடிப்பு செய்தார். இந்திய அரசியல் சாஸனத்தின் ஷரத்துக்கள் படி அரசின் மேலாண்மை அமைச்சரவைக்கு மட்டுமே. இது எழுத்து மூலம் உள்ள அரசாணை. அதையெல்லாம் உதறிவிட்டு, அரசு நடாத்த வேண்டிய விதிகள், வழிமுறைகள், கோட்பாடுகள், நடைமுறைகள் எல்லாவற்றையும் தானே ஜீரணம் செய்து கொண்டார். இந்த தாந்தோன்றித்தனமான இழிச்செயலால் பாதிக்கப்பட்டவை ராணுவம், தொலைத்தொடர்பு, அரசின் மேலாண்மை.

இந்த தேவாஸ்ஸுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வசதிகளை தந்திரமாக மறைத்து விட்டார். 269 கோடி ரூபாய் மதிப்புள்ள சேவைக்கு 147 கோடி என்று மதிப்பீடு செய்து, தன்னுடைய கண்ட்ரோலுக்குள் வைத்துக்கொண்டார். என்னே ராஜ விசுவாசம்! அத்துடன் நின்றால், நாட்டுப்பற்று உள்ளவர் என்று நீங்களும் நானும் நினைத்து விட்டால்? அதனால் ‘ஃபோர்ஜ் ஆலோசகர்கள்’ என்ற அமெரிக்கக் கம்பெனிக்கு அதீத சலுகைகள்.

3ஜி ஏலத்தில் கிடைத்தது: 67,719 கோடி ரூபாய். ப்ராட்பேண்ட் ஏலம் 38,543 கோடி ரூபாய். அந்த வகையில் பார்த்தால் ஸ்பேஸ் கமிஷன் மோசடியில் இழந்தது பல்லாயிரம் கோடி ரூபாய்கள். இந்தியாவை ஒழித்துக்கட்டி, மக்களை பட்டினி போட்டு, நம் தன்மானத்தை செருப்படியில் மிதிக்க வேறு வினை வேண்டாம்.

அடடா! ஒரு தலைமையில் குட்டையை குழப்பி, இன்னொரு தலைமையில் மட்டையில் மறைத்து, மூன்றாவது தலைமையில் ‘சத்யமேவ ஜயதே’ என்பதை அசட்டை செய்தார். பேச்செல்லாம் ஆ.ராசா ஸ்டைல்!அந்த சந்தேகத்துக்குட்பட்ட உள்கை கம்பெனி, விஞ்ஞானிகளுக்குப் பொன்காசு கொடுத்தார்கள். அது லஞ்சமில்லையாம்!

சுருங்கச்சொல்லின், மெத்தப்படித்த மண்ணாங்கட்டிகள் அரசியல் சாசனத்துக்கு சமாதி கட்டினர். ஆனால், அரசு தண்டனை என்ன? அவர் இனி அரசு செலவில் ஊர் சுற்ற தடை. ஒரு ஸுப்பர் பாரதரத்னா கொடுத்திருக்கலாமோ!

இதெல்லாம் ஆடிட்டர் ஜெனெரல் முன்னாலேயே ஏன் சொல்ல வில்லை என்று கேட்பீர்கள். அவர் சொன்னதை இந்த மேதாவிகள் உதறி விட்டனர். ஆவணங்களை லேசில் கொடுக்கவில்லை. அது போகட்டும். அமைச்சரவை ஏன் இதையெல்லாம் நிறுத்தவில்லை என்று கேட்கிறீர்கள். நானும் அது தான் கேட்கிறேன்.

 படத்திற்கு நன்றி:

http://www.expertbusinessadvice.com/images/content/Manage-your-business-money-like-a-pro.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.