வேதனை நீக்கும் வேட்டீஸ்வரர்

0

இராஜராஜேஸ்வரி

அகிலத்தின் அன்னை ஸ்ரீமகாலஷ்மி ஸ்ரீமந் நாராயணனைத் திருமணம் செய்யப் பல முயற்சி எடுத்தும் அத்தனை முயற்சியும் சரியான பலன் கிடைக்காததால், தமது விருப்பம் சிவ வழிபாடு செய்தால் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் ஒரு செண்பக மலர்க் காட்டில் சிவபூஜை செய்து தவம் இருந்தாள் ஸ்ரீமகாலஷ்மி. தவத்தையும் வழிபாட்டையும் ஏற்ற சிவபெருமான் ஸ்ரீலஷ்மிதேவிக்குக் காட்சி தந்து திருமண வரம் அருளினார். இதன் பிறகுதான் ஸ்ரீமகாவிஷ்ணுவை ஸ்ரீமகாலஷ்மி திருமணம் செய்தார்.

சிவபெருமானை முதன் முதலில் திருவேட்டீஸ்வரர் கோயிலில் வணங்கித் தன் மனக்குறை நீங்கித் திருமணம் பாக்கியம் பெற்றதால், இந்த ஆலயத்தில் ஸ்ரீ மகாலஷ்மி சிவனுக்குத் தன் கையில் கலசம் ஏந்தி, சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல், ஒரு தூணில் வடிவம் அமையப் பெற்று பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.

தண்ணீர்க் குழாயில் அடைப்பு இருந்தால் தண்ணீர்த் தொட்டி நிறைய நீர் இருந்தாலும் எப்படிக் குழாயில் தண்ணீர் வராதோ, அது போல் என்னதான் திறமை இருந்தாலும் ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தால் சந்தோஷம்-முன்னேற்றம் தடைபடும். திருமணத் தடை விலகவும், மகிழ்ச்சியைப் பெறவும், அப்பன் திருவேட்டீஸ்வரருக்கு வில்வ மாலையும் விபூதிக் காணிக்கையும் தந்தால் போதும்.  ஈசனின் ஆசியை பெறலாம்.

வஸ்திரத் தானமும் செய்யலாம்.  சிவனைத் தேடி அன்னை செண்பகவனத்திற்கு வந்ததால், இங்குள்ள அம்பிகை செண்பகாம்பிகைஎன்ற பெயர் பெற்றார். செண்பகாம்பிகைக்கு வாசனை மலர் மாலையும், மஞ்சள்-குங்குமமும் தந்தால் சுபிக்க்ஷம் ஏற்படும்.  அம்மை-அப்பனை வணங்கி வாழ்வில் நல்ல ஏற்றமும், நல்ல மாற்றமும் பெற்றுச் சிறப்புடன் வாழ்வோம்.

அர்ஜுனன் பல திருத்தலங்களுக்கு யாத்திரை மேற் கொண்டார். அப்போது செண்பக காடு வழியாக வந்த போது ஒரு பன்றி வித்தியாசமான நிறத்தில் இருப்பதைக் கண்டார். அர்ஜுனன் அந்தப் பன்றியை வேட்டையாட எண்ணி அம்பு எய்தார். அம்பு பட்டுப் பன்றி இறந்து விழுந்த இடத்தை நெருங்கிச் சென்று பார்த்த போது அந்த பன்றியின் உடலில் இரண்டு அம்புகள் குத்தி இருந்ததை கண்டார் அர்ஜுனன்.

அப்போது எங்கிருந்தோ வந்த வேடன் ஒருவன், “இந்தப் பன்றியை நான்தான் குறி வைத்து வேட்டையாடினேன். ஆகவே இது எமக்கே சொந்தம்.” என்றான்.

வேடனே இந்தப் பன்றி நான் எய்த அம்பு பட்டுத்தான் இறந்தது. பிறகே உன் அம்பு இதன் உடலில் தைத்துள்ளது. ஆகவே முதலில் வேட்டையாடிய எமக்குத்தான் இந்தப் பன்றி சொந்தமாகும்.” என்றான் அர்ஜுனன். இதனால் கோபம் அடைந்த வேடன் ஒரு அம்பை எடுத்து அர்ஜுனனைக் குறி பார்த்தான்.

தன்னை இந்த வேடன் கொன்று விடுவானோ என்ற பயத்தில் அவசர அவசரமாக அர்ஜுனன், தானும் ஒரு அம்பை வேடனின் தலையைக் குறி பார்த்து எய்தான். அர்ஜுனன் எய்த அம்பு வேடன் தலையில் பட்டு ரத்தம் வடிந்தது.

அடுத்த விநாடியே வேடன் சிவபெருமானாகத் தோன்றினார். ஈசனைக் கண்ட அர்ஜுனன் பதறினான். “தங்களைக் காயப்படுத்தி விட்டேனே” என்று கண்ணீருடன் வருந்தினான். “கவலை வேண்டாம் அர்ஜுனா. காரணம் இல்லாமல் எதுவும் நடப்பது இல்லை. இதுவும் ஒரு காரணத்தால்தான் நடந்திருக்கிறது. நீ அடுத்தப் பிறவியில் கண்ணப்பராகப் பிறந்து என்னை வணங்கி வழிபடு. என்றென்றும் உன் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.” என்று அர்ஜுனனுக்கு ஆசி வழங்கினார் சிவபெருமான். சிவன் ரத்தம் கொட்டிய இடத்தில் சிவலிங்கம் உருவானது.

சிவ பெருமான் வேடன் வடிவில் தோன்றியதாலும், ஸ்ரீமகாலஷ்மி சிவபூஜையும் தவமும் செய்த இடம் என்பதாலும்திருவேட்டீஸ்வரர்என்று இந்த ஆலயத்திற்குப் பெயர் உருவானது.

கோவிலின் சிறப்பு:

அர்ஜுனர் மறுபிறவில் கண்ணப்பராகப் பிறந்து, சிவனுக்கு தன் கண்ணையே தந்து தன்னுடைய பக்தியை உலகத்திற்குத் தெரியப்படுத்தியதால் அவர் “கண்ணப்ப நாயனார்” என்று 63 நாயன்மார்களில் ஒருவராகப் புகழ் பெற்றார். இதன் காரணமாக இந்த ஸ்தலத்தில் கண்ணப்ப நாயனார், உற்சவராக இருந்து பக்தர்களின் குறைகளை சிவபெருமானிடம் எடுத்துச் சொல்லி பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வருகிறார்.

என்னதான் இறைவன் நமக்கு அருள் செய்பவராக இருந்தாலும் எப்போதும் இறைவன் நமக்கு அருள் செய்ய இறைவனின் அடியார்கள் ஆசியும் வேண்டும். அதனால் கண்ணப்ப நாயனார் போன்ற தூய்மையான அடியார்களையும் நாம் வணங்க வேண்டும்.

சூரியனையும், சந்திரனையும் விழுங்க முயற்சிப்பது போல் சுவாமி சன்னதி எதிரேயுள்ள மண்டபத்தின் மேல் சுவரில் காட்சி தருகிறார்கள் இராகு – கேது. இத்திருத்தலத்தில் அமையப் பெற்றுள்ள ராகு-கேது பகவான்களை வணங்கினால் ஜாதகத்தில் உள்ள காலசர்ப்ப தோஷம், நாகதோஷம் நீங்கும்.

சென்னை. திருவல்லிக்கேணியில் அருள்மிகு திருவேட்டீஸ்வரர் கோயிலில், அருளும் திருவேட்டீஸ்வரை வணங்கி வாழ்வில் வளம் பல பெறப் பிரார்த்திப்போம்.

சென்னைத் திருவல்லிக்கேணியில் உள்ள செண்பகாம்பிகை உடனுறை திருவேட்டீஸ்வரர் (உள்படம்) கோயிலில் சித்திரைத் திருவிழாவில் நடைபெற்ற தேரோட்டம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *