வீட்டுக் கடனில் வங்கிகளின் உள்குத்து

0

எம். எஸ். லட்சுமணன்
காரைக்குடி 

கடன் வாங்காதவர்கள் வங்கிச் சட்டத்தின்படி, வட்டி அதிகம் கட்ட வேண்டியவர்கள்.

ரெபோ ரேட் படி வட்டியைக் குறைக்க மறுக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி.

வீட்டுக் கடன் வாங்கப் போகிறீர்களா? மக்களே உஷார்! உஷார்! பகுதி 2!

விழிப்புணர்வுப் பதிவு

நண்பர்களே சமீபத்தில் வீட்டுக் கடன் வாங்கி  ஒரு வருடமாக மீளக்கட்டி வருகின்றேன்.  நான் வீட்டுக் கடன் வாங்கச் செல்லும்பொழுது வங்கி சார்ந்து எனக்கு எந்தவிதமான கடனுமே  இல்லை. இதனால் என்ன நன்மை இல்லாத விஷயம் நடக்கும் என்று நினைக்கின்றீர்களா?  நடந்த விஷயத்தைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும்.

கடந்த ஓராண்டாக ரெப்போ ரேட் எனப்படும் வங்கி வட்டியானது 6.65 என்றும்,வங்கி வீட்டுக் கடன் 6.5 முதல் 6.65 வரைதான் என்று இருக்கின்றது. தேசியமயமாக்கப்பட்ட பாரத வங்கியில் தற்போது வழங்கப்படும் வீட்டுக் கடனுக்கான வட்டி 6.70 மட்டுமே. ஆனால் எனக்கான வட்டியானது 7.30 என்று நடந்துகொண்டிருக்கின்றது .இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு நாள் இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டு வங்கிக்குச் சென்று, எனது வீட்டுக் கடனுக்கான வட்டியைக் குறைத்துக் கொடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். வங்கி மேலாளரிடம் இருந்தும், வீட்டுக்கடன் பிரிவு பார்ப்பவரிடம் இருந்தும் எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.

ஒரு மாதத்தில் இரண்டு மூன்று முறை நானும் நேரில் சென்று கேட்டேன். எந்தவிதமான பதிலும் இல்லை. மீண்டும் ஒருநாள் வங்கிக்கு நேரில் சென்று நான் அருகில் உள்ள தேசிய  வங்கிக்கு எனது வீட்டுக்கடனை மாற்றினால் 6.50 வட்டியில் கடன்   தருவதாகக் கூறுகின்றனர். எனவே நான் அங்கு செல்கின்றேன் என்று கூறினேன். அதனைக் கேட்டவுடன் வங்கியின் மேலாளர் ஓராண்டாக எந்தவிதமான ஜம்பும்  இல்லாமல் பணத்தைச் செலுத்தி வருகிறீர்கள். எனவே எனது மேலதிகாரிகளிடம் கேட்கிறேன் என்று மூன்று மேலதிகாரிகளிடம் இது தொடர்பான தகவலை என் முன்பே கேட்டார்கள். அவர்களும் வட்டியை 6.80 ஆக மாற்றிக் கொடுக்கலாம் என்றும், அதற்காக படிவங்களில் கையெழுத்துப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றும், அதற்கான ரூபாய் 2000 பிளஸ் ஜிஎஸ்டி 360 ரூபாய்க்கான வித்ட்ராயில் சலனும் பூர்த்தி செய்து கையெழுத்துப் பெற்று கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார்கள்.

அன்று இரவு மற்றொரு தேசிய  வங்கியின் மேலாளர் என்னிடம் பேசும்பொழுது, நான் ஏற்கெனவே கடன் பெற்றுள்ள வங்கியிலேயே எனக்கு 6.80 வட்டி  தருவதால் நான் பிறகு பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டேன் (மிகவும் பெருமையாக).

ஆனால் நண்பர்களே மறுநாள் மாலை,  எனது வீட்டுக் கடன் வங்கி மேலாளரைச் சந்தித்தேன். அவர்கள் மிக எளிமையாக, சார் சிஸ்டம் மாற்ற விடவில்லை, எனவே உங்களுக்கான வட்டி வீதத்தை மாற்ற முடியாது என்று தெரிவித்துவிட்டார்கள். நானும் மிக வேதனையாக, மன  வருத்தத்துடன் மேலாளர் அவர்களைப் பார்த்து, ஏன் மேடம் நேற்று 3 அலுவலரிடம், உயரதிகாரிகளிடம் பேசினீர்கள். மூவரும் மாற்றிக் கொள்ளலாம் என்று கூறினார்கள். நானும் கையெழுத்திட்டு உங்களிடம் கொடுத்து விட்டுத்தான் சென்றேன். சிஸ்டம் என்பதை மனிதர்கள் தான் இயக்குகிறார்கள். எனவே மனிதர்கள் இயக்குவதை நீங்களே சிஸ்டத்தில் மாற்றி எனக்கு வட்டியை மாற்றித் தர வேண்டும் என்று கூறினேன்.

அவர்களோ எனக்கு இது தொடர்பாக எதுவும் தெரியாது, உயரதிகாரியிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று போனைப் போட்டு எனக்குக் கொடுத்துவிட்டார்கள். நான் மீண்டும் உயர் அதிகாரியிடம் பேசினேன், அவரோ இல்லை தவறு நடந்துவிட்டது மன்னித்துக்கொள்ளுங்கள் என்று மிக எளிதாக என்னிடம் தெரிவித்தார். எனக்கோ மிகவும் மன வேதனையாகவும் வருத்தமாகவும் இருந்தது. அப்போது வங்கி மேலாளர் என்னிடம், சார் உங்களுக்கு மாற்றினால் எல்லோரும் கேட்பார்கள், எனவே மாற்ற இயலாது என்றும் கூறினார். மீண்டும் மேலாளரைப் பார்த்துக் கேட்டேன்.

நேற்று ஒரு வங்கியில் 6.50 வட்டி தருவதாகக் கூறினார்கள். நான் அங்கு செல்கிறேன் என்று கூறினேன். அந்த மேலாளர் என்னிடம் இரவு கேட்ட பொழுது, நான் ஏற்கெனவே வீட்டுக் கடன் பெற்றுள்ள வங்கியில் இருந்துகொள்கிறேன் என்று தெளிவாகத்  தெரிவித்துவிட்டேன். இப்போது நான் எப்படி அந்த வங்கியின் மேலாளர் முகத்தில் சென்று முழித்து  மீண்டும் எனக்கு லோன் கொடுங்கள் என்று கேட்பது? நீங்களே ஒரு மேலாளர். தகவல் கூறுங்கள் என்று கேட்டேன். அவரிடம் இருந்து எனக்கு எந்தவிதமான தகவலும் வரவில்லை. மௌனமே பதிலாக வந்தது.

மீண்டும் என்னுடைய கேள்விகளைத் தயார் செய்து  வங்கியின் சென்னை அலுவலகத்திற்கு குறைதீர் பிரிவுக்கு எழுதினேன். உடனடியாகப் பதில் ஏதும் வரவில்லை. மீண்டும் மீண்டும் மெயில் மூலம் தொடர்பு கொண்டதன் தொடர்ச்சியாக, சில நாட்கள் கழித்து அவர்களிடமிருந்து மண்டல மேலாளர், தொலைபேசியில் என்னை அழைத்து, சிஸ்டம் செயல்படவில்லை என்று என்னிடம் தெரிவித்தார்கள். நான் கேட்டேன்,  கோபித்துக் கொள்ளாதீர்கள் மேடம், தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்,  சிஸ்டத்தை இயக்குவதே மனிதர்கள் தான். அந்த சிஸ்டத்தில் தவறான ஏதோ ஒரு தகவல் வந்தால் அதனை நீங்கள் உடனடியாகச் செய்து விடுவீர்களா?  உதாரணமாக தூக்கு மாட்டிக்கொள்ளுங்கள் என்றால் உடனடியாக நீங்கள் அதனைச் செய்வீர்களா?  எனவே சிஸ்டம் செய்கிறது என்று கூறுவது தவறான தகவலாகும். அதனை இயக்குவதே மனிதர்கள் தான் என்று தெரிவித்தேன். அவரோ உண்மைதான் ஆனால் எங்களுக்கான பதில் இதுதான் என்று தெரிவித்தார்கள்.

மீண்டும் நான் அதனை ஆர்பிஐ ஓம்புட்ஸ்மன் மெயில்  கொடுத்தேன். அவர்கள் மீண்டும் ரீபிளையில்  அப்படித்தான் தங்களுக்கு வட்டி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்கள். நான் கடன் பெறும் பொழுது எனக்கான வட்டி 7.05. ரெப்போ ரேட். நான் கடனே  வாங்காத காரணத்தினால் எனது சிபில் ஸ்கோர் குறைவாக இருந்ததால் (கடன் வாங்காதவர்களுக்கு சிபில் ஸ்கோர் குறைவு என்று இப்பொழுதுதான்  தெரிந்துகொண்டேன்), வட்டியில் எனக்கு 0.65 சதவிகிதம் சேர்த்திருக்கிறார்கள். 7.70 ஆக இருந்திருக்கின்றது. ரெபோ ரேட் வட்டி 6.65 ஆக மாறும் பொழுது 6.65+0.65=  7.30 ஆக உள்ளது.

இதனை மாற்றிக் கொடுங்கள் என்று ஆர்பிஐ ஓம்புட்ஸ்மேனிலும் அப்ளை செய்தேன். அங்கும் எனக்குப் பழைய பதில் தான்  கிடைத்தது.  மீண்டும் சென்ட்ரல் கவர்மெண்ட் உள்ள பிஜி போர்ட்டலில்  சென்று அப்ளை  செய்தேன். அங்கும் அவர்கள் மாற்ற இயலாது என்று தெரிவித்து விட்டார்கள். மீண்டும் அப்பீல்  செய்தேன். அதிலும் எனக்கு வட்டியை மாற்ற இயலாது என்று தெரிவித்து விட்டார்கள்.

எனது முக்கியமான கேள்வி என்னவெனில் புதிதாக வரக்கூடிய வாடிக்கையாளருக்கு 6.70 என்று கொடுக்கும் வங்கியானது, நல்ல முறையில் கடனைக் கட்டிவரும் எனக்கு சிபில் ஸ்கோர் தற்போது அதிக புள்ளிகள் இருக்கும் பொழுது, ஏன் வட்டியைக் குறைக்கக் கூடாது என்பது கேள்வி. எனது நியாயமான இந்தக் கேள்விக்கு கடைசிவரை எனக்குப் பதில் கிடைக்கவில்லை.

மேலும் மூன்று அதிகாரிகளிடம் பேசிய பிறகு மாற்ற முடியாது என்று மேலாளர் அவர்கள் தெரிவித்துவிட்டார்கள். அதற்கான காரணத்தைக் கேட்ட பொழுது வங்கியில் இருந்தோ, ஆர்பியை ஓம்புட்ஸ்மேனிலிருந்தோ, பிஜி போர்ட்டலில் இருந்தோ எனக்குச் சரியான தகவல் கிடைக்கப்பெறவில்லை. இதை அவர்கள் ஒரு விஷயமாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்பது தான் வேதனையான தகவல். வங்கி அதிகாரிகள் வாய்க்கு வந்தபடி  எதை வேண்டுமானாலும் சொல்கிறார்கள். ஆனால் செயலில் காண்பிக்க மாட்டேன் என்று தெரிவித்து விடுகிறார்கள். எனவே இந்த வங்கியின் வட்டியைக் குறைப்பதற்கு ஏதேனும் வழிமுறைகள் இருந்தால் தாங்களும் தெரிவிக்கவும். இதனைப் படிப்பவர்களும் ஏதேனும் யோசனைகள் இருந்தால் எனக்குத் தெரிவிக்கவும். வங்கியில் புகார் அளிக்கும் உச்சம் வரை போராடியும் வங்கி தொடர்பான ஓம்புட்ஸ்மன் கம்ப்ளைன்ட் செய்தும் எனக்கு எந்தவிதமான நீதியும் கிடைக்கவில்லை என்பதை இங்கே பதிவு செய்கின்றேன்.

முடிந்தவரை முயற்சி செய்தேன், போராடினேன். பதிலனுப்பினேன். பலமுறை டோல் பிரீ எண்ணில் தொடர்பு கொண்டேன். மெயில் அனுப்பினேன். அதன் பிறகுதான் எனக்கு இந்தப் பதில்  கிடைக்கப்பெற்றது.  எனவே புதிதாக வருபவர்களுக்கு வழங்குவது போல் எங்களுக்கும், சரியாகக் கடனைக் கட்டி வருபவர்களுக்கும் ரெபோ ரேட் படி, வட்டியைக் குறைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.