செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(408)

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

-திருக்குறள் -106 (செய்ந்நன்றி அறிதல்)

புதுக் கவிதையில்…

குற்றமற்ற
நல்லோர் உறவை
நாளும் மறக்கலாகாது,
துன்பம் வந்த காலத்தில்
துணையாய் இருந்தே
உதவியோர் நட்பை
ஒருநாளும்
விட்டு விலகிடக்கூடாது…!

குறும்பாவில்…

மறந்திடாதே குறையிலா நல்ல
மனிதர்களின் உறவை, விட்டிடாதே துன்பத்தில்
துணையிருந்தே உதவியோர் நட்பை…!

மரபுக் கவிதையில்…

குறைக ளேது மில்லாத
குணத்தில் நல்ல மாந்தர்தம்
உறவை யென்றும் கருதியேதான்
உளத்தா லவரை மறவாதே,
துறக்கக் கூடா தொன்றுண்டு
துன்பம் வந்த வேளையிலே
உறவாய்க் கூடத் துணையிருந்தே
உதவி செய்தோர் நட்பதுவே…!

லிமரைக்கூ…

மறக்கக் கூடா உறவு
மாசிலா நல்லோருடனானதே, வேண்டாம் துன்பத்தில்
உதவியோர் நட்பின் துறவு…!

கிராமிய பாணியில்…

மறக்காத மறக்காத
ஒருநாளும் மறக்காத,
ஆபத்தில செய்த ஒதவிய
ஒருநாளும் மறக்காத..

கொணத்தில ஒசந்த
கொறயே யில்லாதவங்க
ஒறவ மனசால கூட
ஒருநாளும் மறக்காத..

அதுபோல
துன்பப்படுற நேரத்தில
தொணயாயிருந்தே
ஒதவுனவுங்க நட்ப
ஒருநாளும் உட்டு வெலகிடாத..

அதால
மறக்காத மறக்காத
ஒருநாளும் மறக்காத,
ஆபத்தில செய்த ஒதவிய
ஒருநாளும் மறக்காத…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *