விடுதலைப் போர் வீராங்கனை ஜோன் ஆஃப் ஆர்க் [மின்னூல்]

0

சி. ஜெயபாரதன், கனடா

முன்னுரை

ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுதிய வரலாற்று நாடகங்களில் மிகச் சிறந்ததாகக் கருதப் படுவது, ஜோன் ஆஃப் ஆர்க் நாடகம். அது ஸெயின்ட் ஜோன் என்னும் தலைப்பில் உருவானது. பத்தொன்பது வயதான, கல்வி அறிவற்ற பாமரப் பெண்ணியப் பிறவியான வாலிப ஜோன், ராஜ தந்திரங்களும், போர்த்துறை யுக்திகளும் கல்லாமல் தெரிந்து, நூற்றுக் கணக்கான படை வீரர்களை நடத்திச் சென்று அனுபவம் நிறைந்த பிரிட்டீஷ் ராணுவத்துடன் துணிந்து போரிட்டுத் தோற்கடித்து பிரான்சைக் காப்பாற்றிய உண்மைக் கதையை யாரும் நம்ப முடியாது.  சிறிது காலமே வாழ்ந்த ஜோன் ஆஃப் ஆர்க்கின் சோக வரலாற்றுக் கதை மெய்யானது.   இது கற்பனை நாடக மில்லை. ஒரு வரலாற்று நாடகமே.

பதினைந்தாம் நூற்றாண்டில் விடுதலை வேட்கை கொண்டு நூறாண்டுப் போரில் பிரிட்டனுடன் போரிட்டு, அடிமை நாடாக இருந்த பிரான்ஸை விடுவித்த 19 வயது ஜோன் ஆஃப் ஆர்க் வீராங்கனையை மதத்துரோகி என்று ஆங்கில ஆதிக்க வர்க்கம் குற்றம் சுமத்தி உயிரோடு எரித்தது. அவளது குறுகிய வாழ்வின் அதிசயக் கதை மெய்யாக நிகழ்ந்தது. பிரான்ஸ் நாட்டில் லொர்ரேன் பகுதியில் உள்ள டோம்ரெமி என்னும் கிராமத்தில் 1412 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ஜோன் ஆஃப் ஆர்க் பிறந்தவள். மன வைராக்கியம் படைத்த ஜோன், சிறு வயதிலேயே பிரான்ஸின் விடுதலையைக் கனவாகக் கண்டு கடவுளால் ஏவப் பட்டதாகக் கருதிப் போராடி வெற்றி பெற்றவள்.  கல்வி ஏதும் கற்காத பட்டி நங்கை ஆயினும் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த மத நம்பிக்கையும், தளராத மன உறுதியும், உயர்ந்த போர்த் திறனும், படைகளை முன்னடத்திச் சென்று பிரான்ஸின் விடுதலைக்கு அடிகோலிப் பிரெஞ்ச் மன்னர் ஏழாம் சார்லஸ் மகுடம் சூடச் செய்தது. ஆனால் பட்டம் சூடிய சார்லஸ் மன்னன், ஜோன் ஆஃப் ஆர்க்கின் தொடர்ந்த போர் முயற்சி களுக்குப் போதிய படையினரை உதவாமல், மாறாகத் தன் விருப்புத் திட்டங்களில் முனைந்தது, அவளுக்கு வினையாகி அவளது மரணப் பாதைக்கு வழி வகுத்தது!

பெர்னாட் ஷா நாடகங்கள் பொதுவாகப்  படிப்பதற்கும், நடிப்பதற்கும், திரைப்பட எடுப்புக்கும் எழுதப் பட்டவை. இவற்றின் காட்சிகள் தொடர்ந்து திண்ணை வலையிதழில் வெளியிடப்பட்டன.  முதற்கண் திண்ணை வலை ஆசிரியர்கள் ராஜாராம், துக்காராம் ஆகியோருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த நாடகத்தில் இடையிடையே அரிய வாய்மொழிகள்  வருகின்றன.  அவற்றைத் தகுந்த படத்துடன் இணைத்த பெருமை பதிப்பாசிரியர் வையவனைச் சாரும்.   இந்த வரலாற்று நாடகத்தைச் சிறப்பாக வெளியிட்ட தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் அவர்களுக்கு அடுத்து என் நன்றி உரித்தாகுக.

சிஜெயபாரதன்
கனடா
(ஜனவரி 27, 2015)


சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் பெர்னாட் ஷாவின் ஸெயின்ட் ஜோன் நாடகத்தைத் தழுவியது

‘கடவுளின் மகளே! செல்! முன்னே செல்! முன்னேறிச் செல்! எனது உதவி உனக்குக் கிடைக்கும்! முன்னேறிச் செல்! இந்த அசரீரி குரலைக் கேட்டதும், எப்போதும் அக்குரலைக் கேட்க வேண்டுமென்று என் உள்ளத்தில் ஆனந்தம் பொங்கித் துடிக்கிறது! ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)

‘ஜோன் ஆஃப் ஆர்க் சாதாரண மனிதத் தரத்திலிருந்து மிகவும் உயர்ந்த ஒரு மானிடப் பிறவி. அவளுக்கு இணையான மனிதப் பிறவி ஓராயிரம் ஆண்டுகளிலும் உதிக்கப் போவதில்லை! ‘

வின்ஸ்டன் சர்ச்சில் (1874-1965) 

நாடக மேதை பெர்னாட் ஷா

ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர்.  அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத்துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர்.  இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார்.  அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார்.  நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார்.  பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங் களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆஃப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), மற்றும் தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans) வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple), சீஸர் & கிளியோபாத்ரா (Caesar and Cleopatra),  காப்டன் பிராஸ்பவுண்டு மாற்றம் (Captain Brassbound’s Conversion), மேலும் நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை.  ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

ஜோன் ஆஃப் ஆர்க் கதைச் சுருக்கம்: பதினைந்தாம் நூற்றாண்டில் விடுதலை வேட்கை கொண்டு நூறாண்டுப் போரில் பிரிட்டனுடன் போரிட்டு, அடிமை நாடாக இருந்த பிரான்ஸை விடுவித்த 19 வயது ஜோன் ஆஃப் ஆர்க் வீராங்கனையைச் சூனியக்காரி என்று குற்றம் சாற்றி உயிரோடு எரித்தது, கோரமான வரலாற்று நிகழ்ச்சியாகும். அவளது குறுகிய வாழ்வின் தீவிரக் கதை மெய்யாக நிகழ்ந்த ஒன்று. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லொர்ரேன் ஷாம்பெயின் எல்லைப் பகுதியில் உள்ள டோம்ரெமி கிராமத்தில் 1412 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ஜோன் ஆஃப் ஆர்க் பிறந்தவள். வைர நெஞ்சமும், மன வைராக்கியமும் படைத்த ஜோன் பிரான்ஸின் விடுதலையைக் கனவாகக் கண்டு, சிறு வயதிலேயே கடவுளால் ஏவப் பட்டவள். கல்வி கற்காத கிராமத்து எளிய நங்கை ஆயினும் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த மத நம்பிக்கையும், கூரிய சிந்தனா சக்தியும், தளராத மன உறுதியும் மக்களை முன்னடத்திச் சென்று, அவளது குறிக்கோளான பிரான்ஸின் விடுதலைக்குக் காரணமாயின. மக்களை ஒன்று திரட்டிப் போரிட முன்வழி நடத்தும் திறமை ஜோன் ஆஃப் ஆர்க் கொண்டிருந்தது, தெளஃபின் சார்லஸ் மன்னனாக மகுடம் சூட உதவியது. மேலும் பிரான்ஸின் பல பகுதிகளை ஆண்டு வந்த அன்னிய ஆங்கிலேய ஆட்சியை எதிர்க்க மக்களைத் தூண்டியது. ஆயினும் பட்டம் சூடிய சார்லஸ் மன்னன், ஜோன் ஆஃப் ஆர்க்கின் போர்ச் சூழ்ச்சிக்கு மாறாகத் தன் விருப்புத் திட்டங்களில் முனைந்தது, அவளுக்கு வினையாகி அவளது மரணப் பாதைக்கு வழி வகுத்தது!

கதைச்சுருக்கம்: பதினைந்தாம் நூற்றாண்டில் விடுதலை வேட்கை கொண்டு நூறாண்டுப் போரில் பிரிட்டனுடன் போரிட்டு, அடிமை நாடாக இருந்த பிரான்ஸை விடுவித்த 19 வயது ஜோன் ஆஃப் ஆர்க் வீராங்கனையைச் சூனியக்காரி என்று குற்றம் சாற்றி உயிரோடு எரித்தது, கோரமான வரலாற்று நிகழ்ச்சியாகும். அவளது குறுகிய வாழ்வின் தீவிரக் கதை மெய்யாக நிகழ்ந்த ஒன்று. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லொர்ரேன் ஷாம்பெயின் எல்லைப் பகுதியில் உள்ள டோம்ரெமி கிராமத்தில் 1412 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ஜோன் ஆஃப் ஆர்க் பிறந்தவள். வைர நெஞ்சமும், மன வைராக்கியமும் படைத்த ஜோன் பிரான்ஸின் விடுதலையைக் கனவாகக் கண்டு, சிறு வயதிலேயே கடவுளால் ஏவப் பட்டவள். கல்வி கற்காத கிராமத்து எளிய நங்கை ஆயினும் அவள் கொண்டிருந்த ஆழ்ந்த மத நம்பிக்கையும், கூரிய சிந்தனா சக்தியும், தளராத மன உறுதியும் மக்களை முன்னடத்திச் சென்று, அவளது குறிக்கோளான பிரான்ஸின் விடுதலைக்குக் காரணமாயின. மக்களை ஒன்று திரட்டிப் போரிட முன்வழி நடத்தும் திறமை ஜோன் ஆஃப் ஆர்க் கொண்டிருந்தது, தெளஃபின் சார்லஸ் மன்னனாக மகுடம் சூட உதவியது. மேலும் பிரான்ஸின் பல பகுதிகளை ஆண்டு வந்த அன்னிய ஆங்கிலேய ஆட்சியை எதிர்க்க மக்களைத் தூண்டியது. ஆயினும் பட்டம் சூடிய சார்லஸ் மன்னன், ஜோன் ஆஃப் ஆர்க்கின் போர்ச் சூழ்ச்சிக்கு மாறாகத் தன் விருப்புத் திட்டங்களில் முனைந்தது, அவளுக்கு வினையாகி அவளது மரணப் பாதைக்கு வழி வகுத்தது!

பிரான்ஸின் கிறித்துமத ஆலயம் ஜோனைக் கைது செய்து, சூனியக்காரி என்று குற்றம் சாட்டி வழக்கு விசாரணைக்குக் கொண்டு வந்தது. சார்லஸைப் பட்டம் சூட வைத்த அவளது அசையாத, அழுத்தமான மத நம்பிக்கைகளே குற்றங்களாக எடுத்துக் கொள்ளப் பட்டன. சூனியக்காரி என்றும், மந்திர வித்தைக்காரி என்றும், கிறித்துவ திருச்சபைக் குருவை எதிர்த்தவள் என்றும் பிரான்ஸை ஆக்கிரமித்திருந்த பிரிட்டாஷ் அதிகார வர்க்கம் பழிசுமத்தி 1430 மே மாதம் 30 ஆம் தேதி கம்பத்தில் கட்டி, ஜோன் ஆஃப் ஆர்க் உயிருடன் எரிக்கப்பட்டாள். ஜோன் மறைந்து 500 ஆண்டுகள் கழித்து, இருபதாம் நூற்றாண்டில் கிறித்துவ திருச்சபை 1920 ஆம் ஆண்டில் ‘புனித அணங்கு ‘ என்று கெளரவத்தை அளித்தது!

+++++++++++++++++

முதல் காட்சி

காலம்: கி.பி.1429
இடம்: வெளகோலர் கோட்டை (Castle of Vaucouleurs)
நேரம்: காலை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

  1. ராபர்ட் ஆஃப் பெளட்ரிகோர்ட் (Robert De Baudricourt) இராணுவக் காப்டன்
  2. ஜோன் ஆஃப் ஆர்க் (பதினெட்டு வயது கிராம இள நங்கை)
  3. பெர்டிராண்டு ஆஃப் பெளலஞ்சி [(Bertrand De Poulengey) Polly] 36 வயது பிரென்ச் இராணுவ அதிகாரி
  4. ராபர்டின் பணியாள் 20-25 வயது.

அரங்க அமைப்பு: கோட்டை அறையில் இராணுவக் காப்டன் ராபர்ட் காலை உணவு அருந்திட நாற்காலியில் அமர்ந்துள்ளான்.

ராபர்ட்: (மேஜையைத் தட்டி) எப்படித் தின்பது இதை ? முட்டை யில்லை! உன் தலையில் இடி விழ! முட்டை யில்லை என்று நீ சொல்வது எனக்குப் புரியவில்லை.

பணியாள்: காப்டன் ஸார்! முட்டை யில்லை என்பது என் தவறில்லை! கடவுள் செய்த தப்பு!

ராபர்ட்: நீ முட்டை இல்லை என்று சொல்லிப் பழியைக் கடவுள் மீது ஏன் போடுகிறாய் ?

பணியாள்: ஸார்! முட்டை கிடையாது. என்னால் முட்டை இட முடியாது! முட்டை கிடைத்தால் சமைப்பேன்.

ராபர்ட்: முட்டாள். யார் உன்னை முட்டையிட வேண்டினார்கள் ?

பணியாள்: யாரும் சொல்லவில்லை ஸார்! உண்மையாகக் கடவுளுக்குத்தான் தெரியும். உங்களைப் போல் எங்களுக்கும் இன்று முட்டை கிடையாது! கோழிகள் இன்றைக்கு வேலை நிறுத்தம்! அவை முட்டையிடப் போவதில்லை!

ராபர்ட்: சொல்வதைக் கேள்! முதலில் நான் யார் தெரியுமா ? ராபர்ட் ஆஃப் பெளடிரிகோர்ட்! இந்தக் கோட்டையின் தளபதி! நீ யார் தெரியுமா ?

பணியாள்: ஸார்! இங்கே அரசரை விடப் பெரியவர் நீங்கள்! வெறும் வேலைக்காரன் நான்! என் கடன் தொண்டு செய்வது! என் பெருமை, உங்களுக்கு ஊழியம் செய்வது!

ராபர்ட்: போதும் பெருமையைப் பீற்றிக் கொள்ளாதே! பிரான்சிலே உன்னைப் போன்று வேலை சரிவரத் தெரியாத முட்டாள் வேறு ஒருவன் கிடையாது! முட்டை இல்லை என்று பொய் சொல்கிறாய்! கொழுத்த கோழிகள் நான்கு இருக்கும் போது, அவை இட்ட முட்டைகள் எங்கே போயின ? யார் திருடினார் அவற்றை ? சொல்லடா! சொல்! முட்டைகள் களவு போயிற்றா ? அல்லது கைச் செலவுக்கு விற்று விட்டாயா ? கழுத்தைப் பிடித்து உன்னை வெளியே தள்ளுவதற்கு முன் உண்மையைச் சொல்! நேற்றுப் பாலும் குறைவாக இருந்தது! பாலைப் பூனை குடித்ததா ? அல்லது நீ குடித்தாயா ? என்ன நடக்கிறது உன் சமையல் புரியில் ?

பணியாள்: இல்லை ஸார்! யாரும் பாலைக் குடிக்கவும் இல்லை! யாரும் முட்டையைத் திருடவும் இல்லை! நம் கோட்டை மேல் ஏதோ ஒரு சூனிய வசியம் உள்ளது!

ராபர்ட்: அப்பனே! அந்தக் கதை இங்கு அரங்கேறாது! காப்டன் ராபர்ட் மாந்திரீகரை எரித்திடுவான்! திருடரைத் தூக்கிலிடுவான்! போ! ஓடிப் போ! நான்கு டஜன் முட்டைகளும், இரண்டு காலன் பாலும், இங்கு பகலுக்குள் கொண்டு வர வேண்டும்! இல்லாவிட்டால் உன் முதுகு எலும்பை முறித்து விடுவேன்! என்னை முட்டாளாக்குவதற்கு உனக்குப் பாடம் கற்பிக்கிறேன்!

பணியாள்: ஸார்! நான் சொல்கிறேன், முட்டையே இல்லை! உங்களைக் கும்பிடுகிறேன்! என்னைக் கொன்று போட்டாலும் சரி சொல்கிறேன், முட்டையே கிடைக்காது …. கோட்டை வாசலில் அந்த பணிமாது நிற்கும் வரை!

ராபர்ட்: பணிமாதா ? எந்தப் பணிமாது ? நீ என்னப்பா சொல்கிறாய் ? விளக்கமாய்ச் சொல்!

பணியாள்: ஸார்! அந்த இள நங்கை லொரேன் நகரைச் சேர்ந்தவள். டோம்ரெமி கிராமத்துக்காரி.

ராபர்ட்: ஆயிரம் இடி விழட்டும் உன் தலையில்! ஆயிரம் பேய்கள் எழட்டும் உன் படுக்கை அறையில்! முரட்டுப் பிடிவாதமாய் என்னைப் பார்க்க வேண்டும் என்று இரண்டு நாள் முன்பு வந்த அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணை சொல்கிறாயா ? நான் அவளை இழுத்துக் கொண்டு போய் அவள் அப்பனிடம் ஒப்படைக்கச் சொல்லி யிருந்தேன். அவளைக் குடிசையில் ஒளித்து வைக்கும்படி உத்தரவு இட்டிருந்தேன்! அவளா இன்னும் இங்கு காத்திருக்கிறாள் ?

பணியாள்: அவளைப் போகச் சொன்னேன். அவள் போக மறுக்கிறாள் ஸார்! நான் என்ன செய்யட்டும் ?

ராபர்ட்: அவளைப் போகச் சொல்லி நான் கட்டளை இடவில்லை! அவளைத் தூக்கி வெளியே எறியத்தான் உத்தரவிட்டேன்! ஐம்பது காலாட் படைகள், ஒரு டஜன் வேலைக்காரத் தடியன்கள் இருந்தும், என் உத்தரவு என்ன ஆயிற்று ? அத்தனை பேரும் அந்தப் பிடாரிக்குப் பயப்பட்டுகிறார்களா ?

பணியாள்: ஸார்! நிச்சயம் உங்களைக் காண வேண்டும் என்று கற்தூண் போல் கால் வலிக்க நிற்கிறாள்! நைந்த நங்கை போல் தோன்றினாலும், நம்மை விட உறுதியோடு இருக்கிறாள். அவளை தூக்கி எறிய என்னால் முடியாது! உங்களால் ஒருவேளை முடியலாம்! அவளைப் பயமுறுத்திப் பாருங்கள் ஸார்!

ராபர்ட்: எங்கே இருக்கிறாள் அந்தப் பிடிவாதக்காரி ?

பணியாள்: காவல் படையினருடன் பேசிக் கொண்டே இருக்கிறாள், பிரார்த்திக்கும் நேரத்தைத் தவிர!

ராபர்ட்: பிரார்த்தனை வேறா பிடிவாதக்காரி செய்கிறாள் ? முட்டாள்! அவள் பிரார்த்தனையை நம்புகிறாயா ? இந்த மாதிரி மந்திரக்காரிகளை எனக்குத் தெரியும்! போ! அழைத்து வா அவளை! இல்லை! அவளைத் தூக்கிப் போடுங்கள் என் முன்னால்!

பணியாள்: [முணங்கிக் கொண்டே போகிறான்] ஸார்! பெண் பிறவியா அது ? அவளுக்குப் படையில் சேர்ந்து போரிட ஆசை! படைகள் அணியும் உடைகள், நீங்கள் தர வேண்டுமாம் அவளுக்கு! உடற் கவசம், ஒரு போர்வாள் வேறு வேண்டுமாம்! அடாடா! ஆணாய்ப் பிறக்க வேண்டிய பெண்! பெண்ணாய்ப் பிறந்து ஆணாக மாற இங்கு வந்திருக்கிறாள்! இதோ அழைத்து வருகிறேன் ஸார்! [கோட்டைக் கதவைத் திறந்து வெளியே செல்கிறான்]

[18 வயதுடைய கிராமத்து நங்கை ஒருத்தி உள்ளே நுழைகிறாள். சிவப்பு நிற உடையை ஒழுக்கமாக அணிந்திருக்கிறாள். அசாதாரண முகம். கூர்மையான நோக்கு. நிமிர்ந்த பார்வை. அகன்று அமைந்த கண்கள். அம்சமான மூக்கு. அகன்ற நெற்றி. எடுப்பான தோற்றம். ஆண்கள் போன்று கம்பீரமான நடை. பார்த்தாலே ஆடவரும், பாவைகளும் மதிக்கும் தோற்றம்.]

ஜோன்: [முகத்தில் புன்முறுவலுடன் வணங்கி, அழுத்தமாக] மதிப்புக்குரிய காப்டன் அவர்களே! வந்தனம்! ஒரு குதிரை, ஒரு கவசம், சில காலாட் படையினரை எனக்குக் கொடுத்து, என்னை நீங்கள் மன்னர் தெளஃபின் அரண்மனைக்கு அனுப்ப வேண்டும். எனது பிரபு உங்களுக்கு அளித்த உத்தரவு அது!

ராபர்ட்: [கோபப்பட்டு] உனது பிரபுவிடமிருந்து எனக்குக் கட்டளையா ? .. நீ பிரபு என்று சொல்லும் அந்தப் பிடாரன் யார் ? அவனிடம் போய் இதைச் சொல்! அவன் கட்டளை யிடும் காலாட் படை அல்லன் நான்! அரசனைத் தவிர வேறு யாருடைய உத்தரவையும் ஏற்றுக் கொள்ள மாட்டான் இந்த ராபர்ட்!

ஜோன்: [அழுத்தமுடன்] அதுசரி காப்டன் ஸார்! எனது பிரபும் ஓர் அரசனே! மேல் உலகத்தின் அரசன்!

ராபர்ட்: (தலையில் கையை வைத்து) இவள் ஒரு பைத்திகாரி! [பணியாளைப் பார்த்து] களிமண் தலையா! இதை ஏன் எனக்கு முன்பே சொல்லவில்லை!

பணியாள்: ஸார்! அவளைக் கோபப் படுத்த வேண்டாம்! கேட்டதைக் கொடுத்து விடுங்கள்!

ஜோன்: [பொறுமை இழந்து நட்புடன்] நான் சொல்லும் முக்கிய செய்தியைக் கேட்காத வரை, அவர்களும் என்னைப் பைத்தியம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் பாருங்கள் ஸார்! கடவுள் என்னிடம் கூறியபடிதான் நீங்கள் செய்ய வேண்டும் என்பது கடவுளின் விதி!

ராபர்ட்: இல்லை பெண்ணே! கடவுளின் கட்டளை, உன்னை உன் அப்பனிடம் மீண்டும் சேர்ப்பது! உன்னை

வீட்டுக்குள் தள்ளி கதைவைப் பூட்டி, உன் பைத்தியத்தை தெளிய வைப்பது! அதற்கு என்ன சொல்கிறாய் பெண்ணே ?

ஜோன்: அப்படிக் கட்டளை என்பது உங்கள் விளக்கம்! எப்படி நடக்கும் என்பது எனக்குத் தெரியும்! என் முகத்தைப் பார்க்க மாட்டேன் என்று முதலில் மறுத்தீர்! என்ன ஆயிற்று ? இப்போது நான் உங்கள் முன்பாக நிற்கிறேன்! எப்படி மாறிவிட்டது பார்த்தீர்களா, காப்டன் ஸார்!

பணியாள்: [முந்திக் கொண்டு] பார்த்தீர்களா! அவள் உங்களை மடக்கிப் போடுவதை! என்ன சாமர்த்தியம்! அடடா! .. இவள் பெண்ணல்ல! ஆணே தான்! ஆணு மில்லை! பெண்ணுருவில் ஆணை விடப் பெரியவள்!

ராபர்ட்: [கோபமாக] வாயை மூடுடா! அதிகப் பிரசங்கி! [ஜோனிடம்] சரி இப்போது சொல்வதைக் கேள். நான் என்ன செய்யலாம் என்று பண மதிப்பீடு செய்கிறேன்.

ஜோன்: [வேகமாக] செய்யுங்கள் காப்டன் ஸார்! குதிரை வாங்க 16 பிராங்க் தேவைப்படும். அதுவே மிகையான பணம்! எனக்குகந்த உங்கள் காலாட் படையின் கவசத்தைத் தாருங்கள் கடனாக. அதிக படைகள் எனக்குத் தேவையில்லை. ஆர்லியன்ஸ் கோட்டையை முற்றுகையிடப் போதுமான படை

வீரர்களை நான் தெளஃபின் அரசரிடம் பெற்றுக் கொள்கிறேன்.

ராபர்ட்: [அதிர்ச்சி அடைந்து] என்ன ? ஆர்லியன்ஸ் கோட்டையைப் பிடிக்கப் போகிறாயா ? அவ்வளவு பெரிய திட்டமா ? (முணுமுணுப்புடன்) … பெரிய பைத்தியமாகத் தெரிகிறது!

ஜோன்: [எளிதாகப் பேசி] ஆம் காப்டன் ஸார்! அதற்குத் தான் கடவுள் என்னை அனுப்புகிறார்! மூன்று வீரர்கள் போதும், உறுதியானவர்கள், என்மீது கனிவுள்ளவர்கள். அப்படி என்னுடன் வரச் சிலர் ஒப்புக் கொண்டுள்ளனர். … பாலி, ஜாக் போன்றவர்!

ராபர்ட்: [சினத்துடன்] என்ன அவமரியாதை உனக்கு ? பாலி என்றா விளிக்கிறாய் ? பாலி யார் தெரியுமா ? படைத் தளபதி பெட்ரெண்டு ஆஃப் பெளலின்ஜி அவர்களையா பாலி என்று சொன்னாய் ?

ஜோன்: [சாதாரணமாக] எல்லாரும் அவரைப் பாலி என்றுதான் அழைக்கிறார்! அவருக்கு வேறு பெயர் இருப்பது எனக்குத் தெரியாது! … காப்டன் ஸார்! அடுத்தவர் ஜாக். அவருக்கு வேறு பெயர் என்ன ?

ராபர்ட்: மறுபடியும் பெயரைச் சுருக்காதே! திருவாளர் ஜான் ஆஃப் மெட்ஸ் தான் அவர் என்று நினைக்கிறேன்.

ஜோன்: ஆம் காப்டன் ஸார்! ஜாக் நிரம்ப நல்லவர். கனிவும் இரக்கமும் கொண்டவர். ஏழை எளியவருக்குக் கொடுக்க எனக்குப் பண உதவி செய்பவர். … அப்புறம், ஜான் காட்சேவ் என்னுடன் வருவார்; மேலும் வில்வீரர் ரிச்சர்டு, அவரது வேலைக்காரர் ஜான் ஆஃப் ஹோனிகோர்ட், ஜூலியன் அனைவரும் என் பின்னால் வருவார்கள்.

ராபர்ட்: [முணுமுணுத்து] .. எல்லாரையும் வசப்படுத்தி முன்பே பிடித்து விட்டாயா ? .. என் கோட்டை கெட்டுப் போச்சு! எனக்கு வேலை போயிடும்! … எனக்குத் தெரியாமல் என் படை ஆட்களை இவள் எப்படி மயக்கினாள் ? அவள் பின்னே வருவார்கள் என்று என்ன அழுத்தமாகச் சொல்கிறாள்! [மனதிற்குள்] .. அடி! சூனியக்காரி!

(முதல் காட்சி தொடரும்)

+++++++++++++++++++

‘கடவுள் பெயரில், நாம் பகைவரை விரட்டப் போரிட வேண்டும். ஆங்கிலேயர் மேகத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்தாலும், நாம் அவரைப் பிடித்து விடுவோம். அவரைத் தண்டிக்கவே கடவுள் நம்மை அனுப்புகிறார். கனிவுள்ள நம் தெளஃபின் மன்னருக்கு நீண்ட காலத்துக்குப் பிறகு மாபெரும் வெற்றி கிடைக்கப் போகிறது. பகவரை விரட்டி விடுவோம் என்று அசரீரிக் குரல் எனக்குச் சொல்லியிருக்கிறது! ‘

ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431)
முதல் காட்சியின் தொடர்ச்சி
காலம்: கி.பி.1429
இடம்: வெளகோலர் கோட்டை (Castle of Vaucouleurs)
நேரம்: காலை

நாடகத்தில் பங்கு கொள்வோர்:

  1. ராபர்ட் ஆஃப் பெளட்ரிகோர்ட் (Robert De Baudricourt) இராணுவக் காப்டன்
  2. ஜோன் ஆஃப் ஆர்க் (பதினெட்டு வயது கிராம இள நங்கை)
  3. பெர்டிராண்டு ஆஃப் பெளலஞ்சி [(Bertrand De Poulengey) Polly] 36 வயது பிரென்ச் இராணுவ அதிகாரி
  4. ராபர்டின் பணியாள் 20-25 வயது.

அரங்க அமைப்பு: கோட்டை அறையில் இராணுவக் காப்டன் ராபர்ட் காலை உணவு அருந்திட நாற்காலியில் அமர்ந்துள்ளான். பணிமாது ஜோன் ராபர்ட் முன்பாக நின்று கொண்டிருக்கிறாள்.

ராபர்ட்: (கோபத்துடன்) என்ன கேட்கிறாய் ? இது நடக்கவே நடக்காது. காட்சேவ், ஹோனிகோர்ட், ஜுலியன் இவர்கள் எல்லாரும் உன் பின்னால் வருவார் என்று கனவு காணாதே, பெண்ணே! அவர்கள் யாரும் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்.

ஜோன்: (உறுதியாக) கவலைப் படாதீர்கள், காப்டன் ஸார்! கடவுள் கருணை யுள்ளவர். அவர்கள் எல்லோரும் என்னுடன் வரக் கனிவோடு ஒப்புக் கொண்டு விட்டார்கள்! நீங்கள் எதுவும் சிரமப்பட வேண்டியதில்லை! தினமும் என்னுடன் பேசும் புனித அணங்கு மார்கரெட்டும், புனித அணங்கு காதிரைனும் எனக்காக உங்களிடம் கேட்பார்கள். உங்களுக்குச் சொர்க்க புரி திறந்திருக்கும்! எனக்கு முதன் முதலாக உதவி புரிந்தவர் நீங்கள் என்று உங்கள் பெயர் நினைக்கப்படும்!

ராபர்ட்: (பணியாளைப் பார்த்து) திருவாளர் பெளலிஞ்சியைப் பற்றி இவள் கூறுவது உண்மையா ?

பணியாள்: (ஆர்வமாக) முற்றிலும் உண்மை ஸார்! திருவாளர் மெட்ஸைப் பற்றி ஜோன் சொன்னதும் உண்மையே! அவர்கள் இருவரும் ஜோன் கூடப் போவதற்கு இசைந்துள்ளார்கள்.

ஜோன்: (சிரித்துக் கொண்டு) ஜோன் பணிமாது என்றும் பொய் பேசமாட்டாள்! [பணியாளைப் பார்த்து] உண்மையை உண்மையாகச் சொன்ன உங்களுக்கு நன்றி! மிக்க நன்றி!!

ராபர்ட்: (பணியாளைப் பார்த்து அதட்டலுடன்) வெளியே போய் பெளலஞ்சியை உடனே வரச் சொல்! விரைவாகப் போ! (பணியாள் வெளியேறுகிறான்). (ஜோனைப் பார்த்து) நீ சற்று வெளி காத்திரு. நான் பெளலஞ்சிடம் தனியாகப் பேச வேண்டும்.

ஜோன்: (சிரித்துக் கொண்டு) உத்தரவின்படி வெளியே காத்திருக்கிறேன் ஸார். [ஜோன் வெளியேறுகிறாள்]

[பெளலஞ்சியும், பணியாளும் உள்ளே நுழைகிறார்கள். 36 வயது இராணுவ அதிகாரி ஒருவர் ராபர்ட்டுக்கு வந்தனம் செய்கிறார்.]

ராபர்ட்: [எதிர் நாற்காலியைக் காட்டி] பாலி உட்கார்! போரைப் பற்றி நான் பேசப் போவதில்லை. நட்பு முறையில் சும்மா சில கேள்விகள். …. இதை முதலில் கேட்க வேண்டும். நீங்கள் கண்டு பேசிய அந்த பணிப்பாவையைப் பற்றிதான்! நானும் பார்த்துப் பேசினேன். அசல் பைத்தியம்! பட்டிக் காட்டுப் பாவை! நடுத்தரக் குடும்ப நங்கை! எனக்குத் தெரியும், அவள் அப்பன் ஒரு குடியானவன்! நல்ல பணம் சேமித்து வைத்திருக்கிறான். ஆனாலும் சமூகத்தில் தரமற்ற கீழ்நிலை மனிதன்! முரசடிக்கும் அவள் புளுகு மூட்டையை நம்பி, மன்னரைப் பேட்டி காண நீங்களும் அவளுடன் போவதாய்க் கேள்விப் பட்டேன்! உங்கள் திட்டம் வெற்றி பெற்றால், மன்னருக்கு ஆபத்து! திட்டம் சீர்கேடாகிப் போனால், என் வேலைக்கு ஆபத்து! அவளுக்கும் ஆபத்து! .. நான் சொல்கிறேன் பாலி! அவள் திட்டத்தில் மண்ணைப் போடு! அவளைப் புறக்கணித்து உன் வேலையைப் பார்!

பெளலிஞ்சி: [அழுத்தமுடன்] காப்டன்! அவளா பைத்தியகாரி ? அவளைப் பைத்தியம் என்றால், புனித மேரியைப் பைத்தியம் என்று சொல்வதுக்குச் சமமானது. அவள் ஓர் ஆழ்ந்த அறிவாளி! சந்தேகமில்லை.

ராபர்ட்: நீ, ஜாக், ரிச்சர்டு மூவரும் அவளுடன் சார்லஸ் மன்னரைப் பார்க்க ஒப்புக் கொண்டதாக அவள் கூறுவது உண்மைதானா ? அவளது மடத்தனமான திட்டப்படி நீங்களும், மன்னரைக் காணப் போவீர்களா ?

பெளலிஞ்சி: [உறுதியுடன்] ராபர்ட்! அவள் பேச்சில் ஒரு மகிமை உள்ளது! அவள் பெண்ணென்றோ, பட்டிக்காடென்றோ, குடியானவன் மகள் என்றோ நாங்கள் யாரும் நினைக்கவில்லை! அசிங்கமாகப் பேசுபவர் கூட அவள் முன்பு வாயைச் சுத்தமாக வைத்துக் கொண்டு, அவள் சொல்வதைக் கூர்ந்து கேட்கிறார்கள்! அவள் பேச்சில் ஒரு மகத்துவம் தெரிகிறது! பிரான்ஸின் விடுதலையைப் பற்றி தெளிவாகப் பேசுகிறாள். அவள் ஓர் அசாதாரண மங்கை! அதிசய ஞானமுள்ள நங்கை அவள்! அவள் சொற்படி முயல்வது சரியென்று எனக்குத் தோன்றுகிறது! பிரான்ஸின் விடுதலைப் பற்றி மன்னர் கூடப் பேசியதில்லை!

ராபர்ட்: ஞானத்தோடுதான் நீ பேசுகிறாயா ? பொது அறிவு உனக்கு என்றைக்கும் இருந்ததில்லை!

பெளலிஞ்சி: பொது அறிவு எனக்கு இல்லைதான்! பிரென்ச் இராணுவரான நமக்குப் பொது அறிவு இருந்தால், பர்கண்டியின் தளபதியுடன் இணைந்து, பிரிட்டாஷ் மன்னருக்குப் பணி செய்வோமா ? ஆங்கிலேயர் பாதி பிரான்ஸ் நாட்டைக் கைபற்றி ஆண்டு வருகிறார்! பாரிஸ் அவரது கையில்! ஏன், நீங்கள் இருக்கும் இந்தக் கோட்டை அவரது கையில்! அடுத்து நாம் இழக்கப் போவது ஆர்லியன்ஸ்! நமது மன்னர் தெளஃபின், சினான் நகரின் மூலையில், ஓர் எலியைப் போல் அடைபட்டுக் கிடக்கிறார்! அவருக்கு ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட ஆர்வம் இல்லை! ஆற்றல் இல்லை! ஆத்ம தாகமும் இல்லை! அவர் தெளஃபின் அரசர் தானா என்று நமக்கும் தெரியாது! மகாராணி அன்னையாரே மகனைத் தெளஃபின் இல்லை என்று சொல்கிறார்! விந்தையாக உள்ளதல்லவா! தாயிக்குத் தெரிய வேண்டாமா ? சொந்த மகனின் பிறப்புரிமையைக் கூட மகாராணி மறுக்கிறார்!

ராபர்ட்: நன்றாகத்தான் உள்ளது! மகாராணி சொந்த மகளை ஆங்கில மன்னனுக்கு மண முடித்து வைத்திருக்கிறார்! வேறென்ன செய்வார், மகாராணி ? அவரைப் பழிப்பதில் அர்த்தமில்லை!

பெளலிஞ்சி: யாரையும் நான் பழிக்கவில்லை! உண்மையை ஒத்துக் கொள்வோம்! மகாராணியின் மூடச் செயலால், தெளஃபின் மன்னர் கீழே விழுந்து மண்ணைக் கவ்வினார்! ஒருநாள் அரண்மனையை விட்டு வெளியே ஓடப் போகிறார்! நாசமாகும் நமது எதிர்காலத்தை ஏற்றுக் கொள்வோம்! அடுத்து ஆங்கிலேயர் பிடுங்கப் போவது, ஆர்லியன்ஸ்! தூங்கிக் கொண்டிருக்கும் மன்னர் அதை நிறுத்தப் போவதில்லை! வேங்கை போன்ற அவரது காலாட் படைகள், வாலாட்ட முடியாது செம்மறி ஆடுகளாய் மேய்ந்து கொண்டிருக்கின்றன! அற்புத நிகழ்ச்சியோ அல்லது தெய்வீக நிகழ்ச்சியோ ஏற்பட்டால்தான் ஆர்லியன்ஸைக் காப்பாற்ற முடியும்!

ராபர்ட்: அற்புதங்களா, அவற்றை விட்டுத்தள்ளு பாலி! கனவில் கூட அவை காணப்படாதவை. அற்புதங்களின் உண்மை என்ன, தெரியுமா ? இந்தக் காலத்தில் அற்புதம் நிகழ்வதில்லை! அதுதான் உண்மை!

பெளலிஞ்சி: நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன்! அதுதான் சரியென்று சொல்ல மாட்டேன். இந்தச் சமயத்தில், எந்த வழியையும் நிராகரிப்பது முறை யில்லை! அந்த இளநங்கையிடம் ஏதோ ஓர் அற்புத சக்தி உள்ளது! தீர்க்க தெரிசிபோல் அவளுக்கு எதிர்காலம் தெளிவாகத் தெரிகிறது! அந்த அற்புத சக்தியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ராபர்ட்: (கேலியாக) பாலி! அற்புத மாயங்கள் செய்வாள் அந்த மாது என்று நம்புகிறாயா நீ ?

பெளலிஞ்சி: (உறுதியாக) ஆம் அதை நம்புகிறேன் நான்! அந்த நங்கையே ஓர் அற்புதப் பிறவியாக எனக்குத் தோன்றுகிறது! அற்புதப் பிறவிகள் எல்லோரும் அற்புதங்கள் செய்வார் என்று என் கற்பனையில் உதிக்கவில்லை! இந்த இளநங்கை அற்புதம் செய்வாள் என்று உறுதியாக நம்புகிறேன். இவளுக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும். அதைத் தவிர இப்போது நம் கைவசம் வேறு ஆயுதம் இல்லை! அந்த ஆயுதத்தைப் பயன்படுத்தாமல், தூக்கி எறிவது அறிவுடைமை ஆகாது!

ராபர்ட்: [ஆத்திரமோடு] பாலி! என் பதவியில் நீ இருந்தால் என்ன செய்வாய் சொல் ?

பெளலிஞ்சி: [அழுத்தமாக] குதிரை வாங்க அவளுக்கு பதினைந்து பிராங்க் பணம் கொடுப்பேன். அவளது கட்டளைக்குக் காது கொடுப்பேன். ஆணைகளைப் பின்பற்றுவேன். என் நெஞ்சில் கனலை எழுப்புகின்றனஅவளது இராணுவப் போர் தீர்க்கமும், கடவுள் மீதுள்ள உறுதியும்!

ராபர்ட்: [கேலியாக] பாலி! அந்தப் பட்டிக்காட்டுப் பாவைபோல் நீயும் பைத்தியமாய் இருக்கிறாய்!

பெளலிஞ்சி: [கோபமாக] காப்டன்! இப்போது நமக்குச் சில பைத்தியகாரர் தேவை! பிரான்ஸில் அறிவுள்ளவர் நம்மை எக்கேடான அடிமை நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார், பார்த்தீர்களா ?

ராபர்ட்: நம் எல்லோரையும் அந்த பைத்தியக்காரி முட்டாள் ஆக்குவதாக எனக்குத் தோன்றுகிறது!

பெளலிஞ்சி: [அழுத்தமாக] சின்னான் நகருக்கு மன்னரிடம் அவளை அழைத்து செல்ல நான் முடிவு செய்து விட்டேன், நீங்கள் என்னைத் தடுத்து நிறுத்தா விட்டால்!

ராபர்ட்: [கோழைத்தனமாக] இந்த புத்தி கெட்ட பெண் சொல் கேட்டு பின்னால் போவது எனக்கு அவமானம்! உங்களுக்கும் அவமானம்! … சரி …சரி [பணியாளியைப் பார்த்து] அந்த நங்கையை உள்ளே வரச் சொல்.

[பணியாளி வெளியேறி ஜோனை அழைத்து வருகிறான்]

ஜோன்: [ஆர்வமோடு பணியாளியிடம்] காப்டன் ஸார் சம்மதித்து விட்டாரா ? .. ஜாக் பாதி விலைக்குக் குதிரையை விற்பதாகக் கூறுகிறார்!

பெளலிஞ்சி: [கனிவோடு] இங்கே உட்கார் ஜோன்.

ஜோன்: [ஆச்சரியம் அடைந்து, தயக்கமுடன்] பணிமாது நான் இங்கே உட்காரலாமா ?

ராபர்ட்: [சற்று சினத்துடன்] .. சொன்னபடி செய்! [ஜோன் ஒரு நாற்காலியில் அமர்கிறாள்] உன் பெயர் என்ன ? .. உன் குடும்பப் பெயர் என்ன ? .. நீ எந்த ஊர்க்காரி ?

ஜோன்: லொர்ரேன் கிராமத்தில் என்னை ஜென்னி என்று கூப்பிடுவார். பிரான்ஸில் என்னை ஜோன் என்று அழைப்பார். படை வீரர் என்னைப் பணிமாது ஜோன் என்று விளிப்பார். குடும்பப் பேரா ? அது என்ன ? எனக்குத் தெரியாது. என் தந்தை தன்னை தி ‘ ஆர்க் என்று சொல்லிக் கொள்வார். அதைப் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது. காப்டன் ஸார்! நீங்கள் என் தந்தையைச் சந்தித்தது உண்டு.

ராபர்ட்: ஆமாம், உன் தந்தையைச் சந்தித்திருக்கிறேன். இப்போது நினைவுக்கு வருகிறது.. நீ லொர்ரேனில் உள்ள டோம்ரெமி கிராமத்தைச் சேர்ந்தவள் அல்லவா ?

ஜோன்: ஆம், அதில் என்ன இருக்கிறது ? நாமெல்லாரும் பிரென்ச் மொழியில் பேசுவோர்தானே!

ராபர்ட்: [சினத்துடன்] எங்களை நீ கேள்வி கேட்காதே! பதில் மட்டும் சொல்! … ஆமாம், உன் வயதென்ன ?

ஜோன்: பதினேழு வயது! அப்படி என்று சொல்லக் கேள்விப் பட்டேன்! பதினெட்டு, பத்தொன்பது கூட இருக்கலாம்! எனக்கு சரியாகத் தெரியாது.

ராபர்ட்: ஜோன்! புனித அணங்கு மார்கரெட்டும், புனித அணங்கு காதிரைனும் உன்னிடம் தினமும் பேசுவதாகச் சொல்கிறாயே, அதை விளக்கமாகச் சொல்வாயா ? எனக்குப் புரியவில்லை.

ஜோன்: அவர்கள் இருவரும் தினமும் என்னுடன் பேசுவது உண்மையே! …. ஆனால் அதைப் பற்றி நான் எதுவும் உங்களிடம் சொல்லப் போவதில்லை! அதைப் பற்றிப் பேச எனக்கு அனுமதி தரவில்லை, அவர்கள்.

ராபர்ட்: உண்மையாக நீ அவர்களை நேரில் காண்கிறாயா ? நான் இப்போது உன்னுடன் பேசுவது போல், அவர்களும் உன்னுடன் உரையாடுகிறார்களா ?

ஜோன்: இல்லை! அது முற்றிலும் வேறானது! நான் சொல்ல மாட்டேன்! எனக்கு மட்டும் கேட்கும் அந்த அசரீரிக் குரலைப் பற்றி, நீங்கள் பேசக் கூடாது!

ராபர்ட்: எப்படி அதை அசரீரிக் குரல் என்று சொல்கிறாய் ?

ஜோன்: என்ன செய்ய வேண்டும் என்று அசரீரிக் குரல் எனக்கு ஆணை யிடுகிறது! அது கடவுள் இடும் கட்டளை!

ராபர்ட்: அது உன் கற்பனையில் தெரிகிறது அல்லவா ?

ஜோன்: உண்மைதான்! அவ்விதமே கடவுளின் கட்டளை எல்லாம் நமக்கு வருகிறது!

ராபர்ட்: [சற்று ஏளனமாய்] … அதாவது கடவுள் உன் காதில் சொல்கிறார்! … நீ போய் ஆங்கிலேயர் பிடித்திருக்கும் ஆர்லியன்ஸ் கோட்டையை முற்றுகை இட்டுப் போரிடு என்று..!

ஜோன்: [ஆர்வமுடன்] …. அதற்குப் பிறகு நமது அரசர் தெளஃபின் அவர்களுக்கு ரெய்ம்ஸ் கிறித்துவ ஆலயத்தில் மகுடம் சூடு வென்றும் சொல்கிறார்.

ராபர்ட்: [மூச்சுத் திணறி, நாற்காலியில் சாய்ந்து போய்] .. என்ன ? .. என்ன சொன்னாய் ? தெளஃபின் மன்னருக்கு மகுடம் சூடவா ? … அட கடவுளே!

ஜோன்: அது மட்டுமில்லை! பிரான்ஸை விட்டு ஆங்கிலேயரைத் துரத்து என்றும் கட்டளை இடுகிறார்.

ராபர்ட்: பைத்தியகாரப் பெண்ணே! … கோட்டை முற்றுகை இட்டுப் பகவரை விரட்டுவது, பசு மாட்டைப் புல்வெளியிலிருந்து ஓட்டுவதைப் போலென்றா நினைத்தாய் ? படை திரட்டிப் போரிடுவது, யாரும் செய்யலாம் என்பது உன் நினைப்பா ?

ஜோன்: போரிடுவது ஒன்றும் சிரமமில்லை, கடவுள் உன் பக்கம் இருந்தால்! போரிடுவது ஒன்றும் கடினமில்லை, உயிரைக் கடவுளிடம் ஒப்படைக்க விருப்பம் இருந்தால்! முழு மனமோடு மெய்வருந்திப் போர் புரிவோருக்குக் கடவுள் உதவி கிடைக்கும். அரை மனதில் போரிட்டால் கடவுள் அவரைத் தண்டிக்கிறார்! படையில் உள்ள மாந்தர் பலர் சாதாரண மனிதர்தான்!

ராபர்ட்: [ஆச்சரியமுடன்] என்ன சொன்னாய் ? படையில் உள்ளவர் சாதாரண மனிதரா ? ஆங்கிலப் படை வீரர்கள் போரிடுவதை எங்காவது பார்த்திருக்கிறாயா ?

ஜோன்: ஆங்கிலேயரும் மனிதரே! நம்மைப் போலவே கடவுள் அவரையும் படைத்திருக்கிறார். கடவுள் அவருக்கு அவரது நாட்டையும், அவரது மொழியையும் அளித்திருக்கிறார். ஆனால் அவர்கள் நம் நாட்டுக்குள் புகுந்து, நமது மொழியைப் பேசுவது கடவுளுக்குச் சற்றும் விருப்பமில்லை!

ராபர்ட்: இந்த மூடத்தனத்தை உன் மூளையில் திணித்தது யார் ? ஆட்சி செய்யும் நாட்டு மன்னருக்கு இங்குள்ள படைவீரர் அடிமைகள்! பிரிட்டாஷ் மன்னர், பிரான்ஸ் மன்னர் யார் ஆண்டால் என்ன ? அவரது மொழிக்கும் ஆட்சிக்கும் என்ன சம்பந்தம் ?

ஜோன்: [ஆத்திரமுடன்] நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை! ஆங்கில மன்னரை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது! நாம் யாவரும் கடவுளின் குடிமக்கள்! கடவுள் நமது நாட்டையும் நமது மொழியையும் நமக்கு அளித்து, அவற்றை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று கருதுகிறார். அப்படி இல்லை என்றால், ஓர் ஆங்கிலேயனைப் போரில் கொல்வது கொலை செய்வது போலாகும்! காப்டன் ஸார்! உங்கள் பேச்சும், போக்கும் பிரென்ச் மக்களுக்குக் கேடு விளைவிக்கும்! பிரிட்டாஷ் மன்னரா உங்கள் பிரபு ? ஆங்கில மொழியா உங்கள் மொழி ? பிரிட்டாஷ் மன்னர் ஆண்டால் என்ன ? பிரென்ச் மன்னர் ஆண்டால் என்ன ? இப்படி நீங்கள் சொன்னது தப்பு! என் நெஞ்சம் கொதிக்கிறது! நீங்கள் பிரிட்டாஷ் மன்னருக்குக் கடமைப் பட்டவரா ? இல்லை! பேராற்றல் உடைய கடவுளுக்குக் கடமைப் பட்டவர்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *