குறளின் கதிர்களாய்…(484)
![](https://www.vallamai.com/wp-content/uploads/2020/03/5-2.jpg)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(484)
ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
– திருக்குறள் – 139 (ஒழுக்கமுடைமை)
புதுக் கவிதையில்…
தவறியும் தீய சொற்களைத்
தம் வாயால்
சொல்லிடும் குற்றம்,
உயர் நெறியாம்
ஒழுக்கம் உடையவர்க்கு
ஒருநாளும்
பொருந்தி வராதே…!
குறும்பாவில்…
தீய சொற்களைத் தவறியும்
தம்வாயால் சொல்லும் குறைபாடு நல்லொழுக்கம்
உள்ளவர்க்கு என்றும் பொருந்தாது…!
மரபுக் கவிதையில்…
தீங்கைப் பிறர்க்குத் தருகின்ற
தீய சொல்லைத் தம்வாயால்
ஓங்கிச் சொல்லும் குற்றமதாய்
ஒன்றைத் தவறிச் செய்வதையும்
தாங்கிக் கொள்ள முடியாத
தனமாம் ஒழுக்கம் உடையோர்க்குத்
தீங்காம் இதுபோல் உள்ளவையே
திடமாய் என்றும் பொருந்தாதே…!
லிமரைக்கூ…
தவறியும் பிறர்க்குத் தீங்கு
தரும்சொற்கள் பேசும் குறைபாடு ஒழுக்கமுடையோரிடம்
பொருந்தி வராதே ஆங்கு…!
கிராமிய பாணியில்…
வேணும் வேணும்
வாழ்க்கயில கண்டிப்பா வேணும்,
வேணும் வேணும்
ஒழுக்கம் வேணும்..
வாய்தவறிக் கூட
மத்தவங்களுக்குக் கெடுதல் தருற
தீயசொல்லப் பேசுற
கொறபாடு,
ஒழுக்கமா நடக்கிற
ஒசந்தகொணம் உள்ளவங்களுக்கு
ஒருநாளும் பொருந்திவராதே..
அதால
வேணும் வேணும்
வாழ்க்கயில கண்டிப்பா வேணும்,
வேணும் வேணும்
ஒழுக்கம் வேணும்…!