கவியரசரின் பாடல்களில் ஆன்மீக அறிவியல் . . .14

சக்தி சக்திதாசன்

கவியரசர் கண்ணதாசன் என்பவர் தமிழ்ச் சினிமாவின் கவிதைச் சக்கரவர்த்தி மட்டுமல்ல.

அவர் ஒரு ஆழமான ஆன்மீக சிந்தனையாளர். “அர்த்தமுள்ள இந்து மதம்” போன்ற நூல்களில் அவர் காட்டிய ஆன்மீகப் பார்வை, பக்தியின் வழியாக தத்துவத்தை எளிமையாக மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சி.

அவருடைய பாடல்களில் அது வர்த்தக நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படமாக இருப்பினும் அதன் பாடல்களில் தெய்வீக உணர்வுகள், தர்ம சிந்தனைகள், மற்றும் பகவானின் லீலைகள் ஆழமாக பதிந்துள்ளன.

“கீதை சொன்ன கண்ணன்” பாடல், இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இதனை ஒரு ஆன்மீகக் கோணத்தில் பார்க்க விழைந்தால்

“கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்”

பகவான் கண்ணன், கீதை உபதேசித்தவர்.

இங்கு “வண்ணத் தேரில் வருகிறான்” என்பது, பகவான் தனது லீலைகளுடன், அழகிய உருவத்தில், உலகிற்கு தர்மத்தை எடுத்துச் செல்ல வருகிறார் என்பதைக் குறிக்கிறது.

ஆன்மீகப் பொருளாக பகவான், மனிதனின் வாழ்க்கை தேரில், வழிகாட்டியாக வருகிறார்.

கீதை என்பது வாழ்க்கையின் நெறிமுறை.

“நீல மேனி கோலம் காண கண்கள் மறுக்குமோ”

கண்ணனின் அழகு, ஆனந்தத்தின் வடிவம்.

அவர் நீல மேனி, நிமிர்ந்த தோள், விரிந்த மார்பு அனைத்தும் பிரபஞ்ச சொரூப வனப்பின் எடுத்துக்காட்டு.

ஆன்மீகப் பொருள் பகவானின் ரூபம், மனதின் எல்லைகளை கடந்தது.

அது “விஸ்வரூபம்” – பிரபஞ்சத்தின் முழுமை.

“பாரதப் போர் நடத்தி வைத்த யுக்தி அதிசயம் .அது முக்தி ரகசியம்”

பகவான் கண்ணன், தர்மயுத்தத்தின் நாயகர்.

பாரதப் போர் என்பது, மனிதனின் உள்ளார்ந்த போராட்டம்.

கண்ணன் வழங்கிய யுக்திகள், வாழ்க்கையின் சிக்கல்களை தீர்க்கும் வழிகள்.

ஆன்மீகப் பொருள்: கீதை உபதேசம் என்பது முக்திக்கான வழிகாட்டி.

“அல்லிக்கேணி குளத்தின் அருகில் கள்ளன் சிரிக்கிறான்”

கள்ளன் என்றாலும், அவர் பரமாத்மா.

கண்ணன், பசுமை முகத்துடன், பசுமை செயல்களுடன், உலகை ஈர்க்கும் “கள்வன்”.

ஆன்மீகப் பொருளாக பகவான், பாவங்களை “திருடி” பக்தர்களை புனிதமாக்குகிறார்.

அவர் சிரிப்பு, ஆனந்தத்தின் வெளிப்பாடு.

“சொல்லும் மந்திரம் எட்டெழுத்தில் சொர்க்கம் தோன்றுதே”

“ஓம் நமோ நாராயணாய”  எட்டெழுத்து மந்திரம்.

இந்த மந்திரம், பக்தியின் வழியாக சொர்க்கம் தரும்.

ஆன்மீகப் பொருளாக மந்திரம் என்பது மனதின் தூய்மை.

அதில் சொர்க்கம் என்பது ஒரு இடமல்ல அது உ தன்னிலை மறந்த தியானநிலை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

“பார்த்தனுக்கு பாடம் சொன்ன கீர்த்தன் வருகிறான்”

கீதை உபதேசமே ஒரு வாழ்க்கையின் பாடம்.

பார்த்தனுக்கு கண்ணன் சொன்னது, ஒவ்வொரு மனிதனுக்கும் சொன்னது.

ஆன்மீகப் பொருளாக வாழ்க்கையின் சிக்கல்களில், பகவான் வழிகாட்டியாக இருக்கிறார்.

“கழல்களுக்கு விளக்கம் தானே பிரம்ம சூத்திரம்”

பகவானின் பாதம்  என்பது என்ன அதுவே அறுதியான உண்மை.

அவர் கழல்கள், பிரம்மத்தின் அடையாளம்.

ஆன்மீகப் பொருளாகப் பார்த்தால் பகவானின் பாதங்களை அடைவது, முக்திக்கான வழி.

பிரம்ம சூத்திரம் என்பது, அந்த பாதையின் விளக்கம்.

“கீதை சொன்ன கண்ணன்” என்பது ஒரு பக்திப்பாடல்  மட்டுமல்ல அது ஒரு தத்துவ வேதம்.

கவியரசர் கண்ணதாசன், கண்ணனின் லீலைகளை, கீதை உபதேசத்தை, மற்றும் பக்தியின் ஆனந்தத்தை, கவிதையின் வழியாக மக்களுக்கு எளிமையாக எடுத்துச் செல்கிறார்.

அவரது பாடல்கள், பக்தி, தத்துவம், மற்றும் கலை மூன்றையும் ஒருசேர இணைக்கும் தெய்வீக பாலம்.

அன்பினியோரே அடுத்தொரு கவியரசரின் ஆன்மீக ஆழத்துள் வீழ்ந்துமூழ்கினோம்.

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *