பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 7

0

 

63 நாயன்மார்கள் வரலாறு – 6. அமர்நீதியார்

 

 அமர்நீதியார்

சோழ வள நாட்டில், சோழ மன்னர்களால் பெரிதும் மதிக்கப்பெற்ற ஊர்களில் ஒன்று பழையாறை எனும் பழம்பெரும் பதி. பழையாறை சோழ மன்னர்களின் இராணுவத் தளவாடங்களின் இருப்பிடமாகவும், நாணயங்கள் தயாரிக்கும் கருவூலமாகவும் திகழ்ந்தது. ஞானசம்பந்தப் பெருமானாரால் போற்றி புகழப்பட்ட மங்கையர்கரசியார் அவதரித்ததும் இத்தலமே. அனைத்திற்கும் மேலாக சிவபெருமானின் திருமேனியின் வண்ணம் கண்டு வணங்கும்வரை உண்ணேன் என்று திருநாவுக்கரசு பெருமான் உண்ணா நோன்பினை உலகுக்கு அறிமுகம் செய்த இப்பழையாறைதான், சோழ நாட்டின் தலைநகராகவும் விளங்கியது. இத்தகு பல்வேறு பெருமைகளைப் பெற்ற ஒரு பதியில் காலத்தால் மூத்த நாயன்மார்களில் ஒருவராக, ஏழாம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்தவரான அமர்நீதி நாயனார் அவதரித்தார்.

சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்வதையே தமது தலையாயக் கடமையாகக் கொண்டிருந்த அமர்நீதியார் வணிகர் குலத்தில் பிறந்தவர். பொன், மணி, ஆடை போன்றவற்றை வணிகம் செய்து செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தார். அவர் தமது இல்லம் நாடி வரும் அடியார்களுக்கு அமுது செய்வித்து, கந்தை எனும் முழங்கால் வரை அணியும் வேட்டியும், கீழுடையும், கோவணமும் அளித்து மகிழ்பவர்.

பழையாறைக்கு அருகில் உள்ள சிவத்தலமான திருநல்லூரில் எழுந்தருளியிருக்கும் நீலகண்டப் பெருமானின் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக குடும்பத்துடன் சென்றார் அமர்நீதியார். இவ்விழாவிற்கு வெளியூர்களிலிருந்தெல்லாம் பக்தர்கள் வெள்ளமெனத் திரண்டு வந்திருந்தனர். விழாக்காலங்களில் அன்பர்கள் தங்கிச் செல்லவும், அமுது செய்யவும் அவ்வூரில் திருமடம் அமைத்திருந்தார் அமர்நீதியார். இவ்வாறு தொண்டு செய்துவரும் சூழலில் ஓர் நாள்,

சிவனடியார்களுக்கு தொண்டாற்றி வரும் அமர்நீதியாரின் பக்திப் பெருக்கால் உயர்ந்த நற்பண்பினை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான். எம்பெருமான் மறையவர் குலத்துப் பிரம்மச்சாரி வடிவம் தாங்கி அமர்நீதியார் இருப்பிடம் வருகிறார். அவர்தம் திருமுடியில் பஞ்சசிகை இருந்தது. நெற்றியில் திருநீறை மூன்று பட்டைகளாக இட்டிருந்தார். மார்பில் மான்தோல் வைத்துக் கட்டப்பட்ட பூநூல் இருந்தது. கையிலும் தர்பைப் புல்லால் ஆன மோதிரமும் அணிந்திருந்தார். இடையிலே முஞ்சி என்ற பச்சைத் தர்பைப் புல்லால் திரித்த அரைஞானில் கோவண ஆடையும் இருந்தது. கையில் ஒரு தண்டும், அதில் இரு கோவணங்களும், திருநீற்றுப்பை, தர்ப்பைப் புல் ஆகியவற்றை முடிந்துகொண்டு  அமர்நீதியார் இருந்த திருமடம் வந்து சேர்ந்தார்.

முஞ்சி நாணுற முடிந்தது

  சாத்திய அரையில்

தஞ்ச மா மறைக்

  கோவண ஆடையின் அசைவும்

வஞ்ச வல் வினைக்

  கறுப்பறும் மனத்து அடியார்கள்

நெஞ்சில் நீங்கிடா அடி

  மலர் நீணிலம் பொலிய

என்பார் சேக்கிழார் பெருமான்.

இத்தகைய சீர்மிகு வடிவம் தாங்கி வந்துள்ள பிரம்மச்சாரியைக் கண்டு உள்ளம் மகிழ்ந்து, வணங்கி அவர் அங்கு எழுந்தருளியது தாம் செய்த தவம் என்று பணிந்து நின்றார் அமர்நீதியார்.

அடியார்களுக்கு அமுதளிப்பதோடு, கந்தை, கீழுடை, கோவணம்  போன்றவற்றை வழங்கிவருவதையும் அறிந்ததால் உம்மைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன் என பதிலுரைத்தார். இதனைக் கேட்டு மகிழ்ந்த அமர்நீதியார் உள்ளங்குளிர, அவரை அமுது செய்தருள வேண்டுமென்றும், அதற்கென்று தக்க வேதியர்களைக்கொண்டு தூய்மையாக அமுது தயாரிக்கப்பட்டுள்ளதையும் எடுத்துரைத்து வேண்டினார். அவரும் அகமகிழ்ந்தார் போன்று புனித காவிரியில் சென்று நீராடிவிட்டு வந்து அமுது செய்கிறேன் என்றார்.

மேலும் அவர், மழை வந்தாலும் வரும் போலுள்ளதே. ஒருவேளை மழை வந்தால் இக்கோவணங்கள் இரண்டும் நனைந்து போக நேரிடும். அதனால் ஒன்றை மட்டும் உன்னிடம் கொடுத்து விட்டுப் போகிறேன். பாதுகாப்பாக வைத்திருந்து நான் கேட்கும்போது திருப்பித் தரவேண்டும். இந்தக் கோவணத்தைச் சர்வ சாதாரணமாக எண்ணிவிடாதீர். இதன் பெருமையைப் பற்றி நான் சொல்லி நீ அறிய வேண்டியதில்லை. அதனால் அலட்சியமாக இருந்துவிடாதே என்றார். அமர்நீதியாரும் அதற்கு ஒப்புக்கொள்ள அந்த பிரம்மச்சாரியும் நீராடச் சென்றுவிட்டார். வேதியர் மொழிந்ததை மனதில் கொண்ட அமர்நீதியார் அக்கோவணத்தை மற்ற கோவணங்களோடு சேர்த்து வைக்காமல் தனிப்பட்ட இடத்தில் தக்க பாதுகாப்புடன் வைத்தார்.

திடீரென்று பெருமழையும் பொழிந்தது. குளிக்கப்போன வேதியரும் நனைந்தபடி வந்து சேர்ந்தார். நான் கட்டியுள்ள கோவணம் நனைந்து விட்டது. அதனால் நான் உன்னிடம் கொடுத்த அந்தக் கோவணத்தை எடுத்து வா என்றார். ஆனால் பிரம்மச்சாரியாக உருவெடுத்து வந்துள்ள சிவபெருமானாரும், திருநீலகண்டரிடம் கொடுத்துவிட்டுச் சென்ற திருவோட்டை அன்று மறைத்தது போல, இன்று அமர்நீதியாரிடம் கொடுத்த கோவணத்தையும் மாயமாக மறையச் செய்தார். இதையறியாத நாயனார் உள்ளே சென்று கோவணத்தை தாம் வைத்த இடம் முழுவதும் தேடிப்பார்க்கிறார். ஆனால் அந்தக் கோவணம் அங்கு இல்லை. சேக்கிழாரின் மொழியில் சிவபெருமானார் ‘கோவணக் கள்வர்’ ஆகிறார்.

அமர்நீதியாரும், அவர் மனைவியாரும் செய்வதறியாது திகைத்தனர். இப்படியொரு அதிசயம் இதுவரை நம் வாழ்வில் நடந்ததில்லையே. இது எப்படி நடந்தது என்று மருகியவ்ர், மனைவியோடு கலந்து ஆலோசித்து இறுதியில் மற்றொரு அழகிய, புதிய வெண்ணிறக் கோவணத்தை எடுத்துக்கொண்டு, வேதியர் முன் சென்று, வேதனையுடன் தலைகுனிந்து நின்றார். கண்களில் நீர்மல்க அவரை நோக்கி, தம்மை அறியாமலே நடந்த இந்த மாபெரும் தவறைப் பொறுத்தருள வேண்டும் என்று வேண்டி நின்றார் அமர்நீதியார். தாம் கொண்டு வந்துள்ளது கிழிந்த ஒன்று அல்ல. கோவணத்திற்கென்றே தனியாக நெய்யப்பட்ட கோவணம் என்றும் கூறினார்.

ஆனால் அந்த பிரம்மச்சாரி மிகவும் கோபமுற்றவராக, “அமர்நீதியாரே, நன்றாக உள்ளது உமது பேச்சு. சற்று முன்னால் கொடுத்துச் சென்ற கோவணம் அதற்குள் எப்படி காணாமற் போகும்? நான் மகிமை பொருந்திய கோவணம் என்று சொல்லியும், அதனை நீரே எடுத்து வைத்துக்கொண்டு, மற்றொரு கோவணத்தைக் கொடுத்து என்னை ஏமாற்றலாம் என்ற எண்ணமா? உமது வணிகம் மிக அழகாகத்தான் இருக்கிறது. இந்த நிலையில் நீர் அடியார்களுக்குக் கோவணம் கொடுப்பதாக ஊரெல்லாம் முரசு முழங்குகின்றீரோ! கொள்ளை இலாபம் கொழிக்க, நீர் நடத்தும் வஞ்சக வணிகம் பற்றி இப்போது தான் எனக்குப் புரிகிறது. உம்மை நம்பி மோசம் போனேனே நான்!” என்றார் கோபத்தின் உச்சத்தில்.

எம்பெருமானின் கோபத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய அமர்நீதியார், அறியாது நடந்த பிழையை மன்னித்துப் பொறுத்தருள வேண்டும் என்றும், காணாமற்போன கோவணத்திற்கு ஈடாக அழகிய, விலை உயர்ந்த பட்டாடைகளும், பொன்மணிகளும் எவ்வளவு வேண்டுமாயினும் தருகின்றேன், சினம் தணிந்து எம்மைப் பொறுத்தருள வேண்டும் என்று பயபக்தியுடன் பிரார்த்திக்கிறார். பன்முறை மன்னிப்புக் கேட்டவர், அடியாரை வீழ்ந்து வணங்கினார். அமர்நீதியாரின் வேதனையையும், அவர் கெஞ்சுவதையும் கண்டு, சினம் சற்று தணிந்தாற்போன்ற பாவனையுடன் அந்த வேதியர், தண்டில் இருக்கும் நனைந்த கோவணத்தைக் காட்டி, இது உம்மிடம் கொடுத்த கோவணத்தோடு கொடுத்தால் அதுவே போதுமானது. பொன்னும் பொருளும் எமக்கெதற்கு என்றார். இதைக் கேட்ட அமர்நீதியார் சற்று மன அமைதி கொண்டார். உள்ளே சென்று துலாக்கோலை எடுத்து வந்து வேதியர் முன் நாட்டினார். அந்தணரிடமிருந்த கோவணத்தை வாங்கி ஒரு தட்டிலும் தம் கையில் வைத்திருந்த கோவணத்தை மற்றொரு தட்டிலுமாக வைத்தார். நிறை சரியாக இல்லாததால் அமர்நீதியார் அடியார்களுக்கு அளிப்பதற்காக வைத்திருந்த அனைத்து கோவணங்களை எடுத்து வந்து வைத்தும் நிறை சரியாக நிற்காமல் அமர்நீதி நாயனாரின் தட்டு உயர்ந்தேயிருந்தது. அந்தணரின் கோவணம் இருந்த தட்டு தாழ்ந்தே இருந்தது. அம்மாயத்தைக் கண்டு வியந்த அமர்நீதியார், தொடர்ந்து நூல் பொதிகளையும், பட்டாடைகளையும் கீள்களையும் ஒவ்வொன்றாக அடுக்கடுக்காகத் தட்டில் வைத்துக் கொண்டே இருந்தார்.

ஆனால் எவ்வளவுதான் வைத்தபோதும்  அமர்நீதியார் தட்டு உயர்ந்தும், வேதியர் தட்டு தாழ்ந்தும் இருப்பதைப் பார்க்கும்போது, நாயனாருடைய அன்பாகிய தட்டுக்கு முன்னால் இறைவனுடைய அருள் தட்டு தாழவுறும் என்பதையும், அத்தகைய பக்திக்கு முன்னால் இறைவனின் சோதனைகூடச் சற்றுத் தாழ்ந்துதான் உள்ளது என்ற உண்மையை உணர்த்துவதுபோல் தோன்றியது. திருமடத்திலிருக்கும் அனைவரும் இக்காட்சியைக் கண்டு வியந்து நின்றனர். தராசுத் தட்டின் மீது இறைவனால் வைக்கப்பட்டுள்ள கோவணத்தின் மகிமையை யார்தான் அறிய முடியும்? செய்வதறியாது திகைத்த தொண்டர் பொன்னும் பொருளும், வெள்ளியும், வைரமும், நவமணித் திரளும் மற்றும் பலவகையான உலோகங்களையும் கொண்டுவந்து குவித்தார். ஆனால் அப்போதும் தட்டுக்கள் சமமாகவில்லை. தம்மிடமுள்ள எல்லாப் பொருட்களையும் தராசுத் தட்டில் கொண்டுவந்து வைத்து மலைபோல் குவித்தார். அவரிடமுள்ள பொருள்கள் அனைத்தும் தீர்ந்த நிலையில், எஞ்சியிருப்பது தொண்டரின் குடும்பம் மட்டும்தான். அமர்நீதியார் சற்றும் மன உறுதி தளராமல் இறைவனை மனதிலே தியானித்தார்.

தம்மிடம் இருந்த பொருள்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. தானும், தன் மனைவியும், குழந்தையும் மட்டுமே மிகுந்துள்ள நிலையில் நாங்கள் தட்டில் உட்கார இயைந்தருள வேண்டும் என்று வேண்டினார் நாயனார். தராசில் குடும்பத்தோடு சேர்ந்து அமர அனுமதி கொடுத்தார் எம்பெருமான். அமர்நீதியாரும், அவரது மனைவியாரும், மகனும் அடியாரின் பாதங்களில் ஒருங்கே வீழ்ந்து வணங்கி எழுந்தனர்.

நாங்கள் அடியவர்களுக்குச் செய்த அன்பில் இறைவனுடைய திருநீற்று மெய் அடிமையில் தவறு செய்யவில்லை என்றால், தராசே நீ நேர் நிற்க” என்று சொல்லித் திருநல்லூர் இறைவனை வணங்கி ஐந்தெழுத்தோதி ஏறினார். துலை நேர்நின்றது. அடியவர் மகிழ்வுடன் ஏற, இறைவனின் திரு அரைக் கோவணமும் அன்பில் குறைபடாத அடிமைத் தொண்டும் சமம் ஆதலால் துலை நேர் நின்றது.

அப்போது எம்பெருமான் உமாதேவியாருடன் விடையின் மீது காட்சி அளித்தார். தம்முன் எப்பொழுதும் தொழுதிருக்கக்கூடிய பேரின்பப் பேற்றினை வழங்கியருளினார்.

 

அமர்நீதி நாயனார் புராணம் கூறும் கருத்து:

அமர்நீதியார் பெருமையை அப்பரடிகள்,

நாட்கொண்ட தாமரைப் பூத்தடஞ் சூழ்ந்தநல் லூரகத்தே
கீட்கொண்ட கோவணங் காவென்று சொல்லிக் கிறிபடத்தான்
வாட்கொண்ட நோக்கி மனைவி யொடுமங்கொர் வாணிகனை
ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன் றோவிவ் வகலிடமே

என்று பாடுகிறார்.

திருநல்லூர் எனும் இத்தலத்திலுள்ள நல்லூர்ப் பெருமான் பல்வேறு வண்ணங்களில் காட்சியளிக்கும் அழகை இன்றும் காணமுடிகின்றது. தஞ்சை மாவட்டம் வலங்கைமான் சாலையில் இரண்டாவது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இத்திருத்தலம், நாவுக்கரசு பெருமானுக்கு திருவடி தீட்கை கொடுத்த தலம் எனும் பேறும் பெற்றுள்ளது. திருநாவுக்கரசர் இதனை,

நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்

        நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்

சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்

        செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்

இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற

        இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி

நனைந்தனைய திருவடியென் றலைமேல் வைத்தார்

        நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 

என்று போற்றி புகழ்கின்றார்.

சிவனடியார்களிடம் மாறாத பக்தி கொண்ட அமர்நீதி நாயனாரை சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் “அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கு அடியேன்” என்று புகழ்கிறார்.

சேக்கிழார் பெருமானார்,

நன்மை பெருகு அருள்நெறியே வந்தணைந்து நல்லூரின்

மன்னு திருத்தொண்டனார் வணங்கி மகிழ்ந்தெழும் பொழுதில்

உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம்!” என்று அவர் தம்

சென்னி மிசை பாதமலர் சூட்டினான் சிவபெருமான்.

என்று பாடியருள்கிறார்.

சிவபெருமான் அமர்நீதியாரிடம் பாதுகாப்பாக வைக்க வேண்டி அளித்த கோவணத்தின் பெருமையை,

ஓங்கு கோவணப் பெருமையை

  உள்ளவாறு உமக்கே

ஈங்கு நான் சொல்ல வேண்டுவது

  இல்லை

என்கிறார் சேக்கிழார் பெருமான்.

வேதியர் வேடமணிந்து வந்த சிவபெருமான் நீராடிவிட்டு வருவதாகச் சென்றவரின் திருவிளையாடலை இங்கனம் விவரிக்கிறார்,

போன வேதியர் வைத்த

  கோவணத்தினைப் போக்கிப்

பானலந்துறைப் பொன்னி நீர்

  படிந்து வந்தாரோ

தூநறுஞ் சடைக் கங்கை

  நீர் தோய்ந்து வந்தாரோ

வானம் நீர் மழை பொழிந்திட

  நனைந்து வந்து அணைந்தார்.

திருநல்லூர் திருக்கோயிலில் உள்ள சிற்பத்தில் துலாவில் நாயனார் அவர்தம் துணைவியார் அவர் கரத்தில் குழந்தை ஆகிய மூவரும் இருப்பது போன்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

திருச்சிற்றம்பலம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.