63 நாயன்மார்கள் வரலாறு 10. குங்கிலியக்கலய நாயனார்

 

வயல் எலாம் விளை செஞ் சாலி

  வரம்பு எலாம் வளையின் முத்தம்

அயல் எலாம் வேள்விச் சாலை

  அணை எலாம் கழுநீர்க் கற்றை

புயல் எலாம் கமுகின் காடு

  அப்புறமெலாம் அதன் சீர் போற்றல்

செயல் எலாம் தொழில்கள் ஆறே

  செழுந் திருக் கடவூர் என்றும். 

சிவபெருமானுக்கு ஒவ்வொரு வகையில் ஒப்பற்ற தொண்டு செய்து வந்த, அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர் குங்கிலியக்கலய நாயனார்.  சோழ நாட்டில் உள்ள முக்கியமான திருத்தலம் திருக்கடவூர். அபிராமி அந்தாதி பாடியருளிய அபிராமிபட்டர் அவதரித்த திருத்தலம் இது. சம்பந்தர், அப்பரடிகள், ஆரூரர் ஆகிய பெருமக்கள் பாடியருளிய அற்புத அருட் தலம் இது. திருமாலும் மற்றையோரும் அமிர்தத்தை ஒரு கலயத்தில் வைக்க, அது சிவலிங்கமாக மாறுகிறது. கலயம் என்ற சொல்லுக்கு கடம் என்ற பொருளும் உண்டு. அதனால் கடவூர் என்ற பெயராயிற்று. இவ்வூரில் கலயர் என்ற பெரியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். கலயர் என்பது இவ்வூர் இறைவனின் பெயர் என்பதால் இந்நாயனாருக்கு அவருடைய பெற்றோர் இப்பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர். இப்பெருமான் மீது அளப்பரிய அன்பைப் பொழிந்து கொண்டிருந்தார் இந்நாயனார். காலையும், மாலையும் தவறாது பெருமானை வழிபடுவதைத் தம் தலையாயக் கடமையாகக் கொண்டிருந்தார். திருக்கடவூர் கோயிலில் எழுந்தருளிய அமிர்தகடேசுவரர் சந்நிதியில் குங்கிலியத் தூபமிடும் திருத்தொண்டினையும் தவறாது உள்ளன்போடு செய்து வந்தார். எனவே இவர் குங்குலியக் கலயர் என்றே அழைக்கப்பெற்றார். ஆலயம் முழுக்க மணந்த குங்கிலியம் தொண்டர்கள் மனத்தில் சிவமணத்தைக் கூட்டி இறையன்பில் கூடித் திளைத்திருக்கச் செய்தது. அந்தணர் குடியில் பிறந்த கலயர் செல்வச் செழிப்பிலும் சிறந்திருந்தார். வயல், தோட்டம், வீடுகள் என நிறைந்த செல்வத்துடன் இறைப்பணி எனும் மாறாத செல்வத்தையும் நிரம்பப் பெற்றிருந்தார். சிவபெருமான் இவ்வடியாரின் அன்பில் கட்டுண்டவராதலால் இவர்தம் பெருமையை உலகறியச் செய்யவும் அருள்கூர்ந்தார்.

சிவபெருமானின் சோதனைக்கு உள்ளாகிய கலயனாரின் செல்வ வளம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. வீடு, மனை என அனைத்து  சொத்துக்களையும் இழந்தும் ஈசனாருக்கு குங்கிலியம் இடும் பணியில் எந்தக் குறையும் வைக்கவில்லை. கலயனார் தன்னுடைய உடைமைகளான நிலங்கள், கால்நடைகள், வீடு முதலியவற்றையும் விற்கும் அளவுக்கு வறுமை ஏற்பட்டாலும் அவர் தாம் செய்யும் திருப்பணியைத் தவறாமல் நடத்திவந்தார். நாளடைவில் மேலும் மேலும் பிரச்சனைகள் அதிகமாகி, குழந்தைகளுக்கு உணவுக்கு கூட வழியில்லாத நிலையால் குழந்தைகள் பசியில் துடிக்கும் நிலையும், இரண்டு நாட்களாக உணவின்றி அனைவரும் பட்டினியாகக் கிடக்கும் நிலையும் ஏற்பட்டது. இதனைக் கண்டு மனம் நொந்த குங்கிலிய கலயனாரின் மனைவி, மஞ்சள் கயிறை எடுத்து அணிந்துகொண்டு, தன்னுடைய திருமாங்கல்யத்தை கழற்றி கணவனிடம் கொடுத்து அதை விற்று நெல் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்கி வருமாறு கூறினார். குங்குலியக்கலய நாயனார் அந்தத் திருமாங்கல்யத்தை வாங்கி வந்துகொண்டிருந்த அந்த நேரத்திலும் அன்றைய தூப வழிபாட்டிற்கு குங்கிலியம் வாங்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டே சென்றார். அதே நேரத்தில் எதிரே ஒரு வணிகன் குங்கிலிய மூட்டையை எடுத்து வந்தான். அதைக் கண்ட கலயனார் மிகவும் மகிழ்ந்து போனார்.

ஆறு செஞ் சடைமேல்

  வைத்த அங்கணர் பூசைக்கான

நாறுகுங்குலியம் ஈதேல் நான்

  இன்று பெற்றேன் நல்ல

பேறு மற்றிதன் மேல் உண்டோ

  பெறாப்பேறு பெற்று வைத்து

வேறினிக் கொள்வது என் என்று

  உரைத்தெழும் விருப்பின் மிக்கார்

அடுத்த நொடி அவர் பசியோடிருக்கும் தமது குழந்தைகள், மனைவி என அனைவரையும் மறந்தார். மனைவி எதற்காக தன்னுடைய திருமாங்கல்யத்தைக் கழட்டிக் கொடுத்து அனுப்பினார் என்பதையும் மறந்துவிட்டார். வணிகனிடம் இருந்த குங்கிலியம் இவ்வளவு அருமையாக இருக்கிறதே, விலையும் மலிவாக இருக்கிறதே, எம்பிரானுக்கு இதனைப் புகைத்தால் சால இனிதாகுமே என்று மட்டுமே அவர் நினைவில் இருக்க, அந்த வணிகனிடம் சென்று அந்த திருமாங்கல்யத்தைப் பெற்றுக் கொண்டு குங்கிலியத்தைக் கொடுக்கும்படி வேண்டினார். வணிகனும் அந்த பொன்னைப் பெற்றுக்கொண்டு குங்கிலியத்தைக் கொடுத்தான். மகிழ்ச்சியுடன் குங்கிலிய மூட்டையைப் பெற்றுக்கொண்டு வேறு எந்த நினைவும் இல்லாதவராக அமிர்தகடேசுவரர் கோவிலை நோக்கிச் சென்றவர் அங்கு தாம் கொண்டு சென்ற குங்குலியப் பொதிகளை பண்டாரத்தில் வைத்துவிட்டு, எம்பெருமானுக்குக் குங்கிலிய தூபமிட்டு, வழிபாடு செய்ய ஆரம்பித்தவர் அப்படியே அங்கேயே தங்கிவிட்டார். ஆனாலும் அந்த பசிப்பிணி அவரையும் தாக்கத்தான் செய்தது. அவரும் பசியால் மயங்கி அயர்ந்தார்.

ஆனால் கலயனாரின் மனைவியோ அவர் நெல்லுடன் வீட்டுக்கு வருவார், சமைத்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் என்று காத்திருந்தவர் ஒரு கட்டத்தில் அவரும், குழந்தைகளும் பசியால் மயங்கி உறங்கிவிட்டனர். அவ்வேளையில் எம்பெருமானாரின் ஆணையால் குபேரன் கலயனார் இல்லத்தில் செல்வச் செழிப்பை உண்டாக்கினார். நெல் குவளைகள் அனைத்தும் நிரம்பி வழிய அவர்களின் பசிப்பிணியும் அறவே ஒழிந்தது. குழந்தைகளும் குதூகலித்தனர். அதனைக் கண்ட தாயின் மனமும் நிம்மதியடைந்தது. எம்பெருமானின் கருணையை எண்ணி மகிழ்ந்தவர், கணவனின் பசியைப் போக்கும் நினைவோடு சமைக்கச் சென்றார். மயங்கிச் சரிந்த நாயனாரின் செவிகளில் பெருமானின் குரல் தேனாக ஒலித்தது.

காலனைக் காய்ந்த செய்ய

  காலனார் கலயனாராம்

ஆலும் அன்புடைய சிந்தை

  அடியவர் அறியும் ஆற்றால்

சாலநீ பசித்தாய் உன் தன் தட

  நெடு மனையில் நண்ணிப்

பாலின் அடிசில் உண்டு

  பருவரல் ஒழிக என்றார்.

மனைவி, குழந்தைகள், சுற்றம் என நினைவிற்கு வர இல்லம் நோக்கி விரைந்தார். செல்வச் செழிப்பில் நிறைந்த தமது வீட்டைக் கண்டு வியந்து நின்றார். வறுமையின் கோலத்தில் இருந்த அந்த வீடு சில மணிகளில் இப்படி மாறியது எங்கனம் என்று கேட்டபோது அனைத்தும் ஈசன் செயல் என்பதை விளங்க வைத்தார் அவர்தம் துணைவியார். நாயனாரும் முன்னைவிட பெருவிருப்பத்துடன் குங்கிலியப் பணியை மேற்கொண்டு வாழ்ந்துவந்தார்.

குங்குலியக் கலயனாரின் அன்பின் வலிமையையும், பெருமையும் உலகிற்கு உணர்த்துவதற்காக சிவபெருமான், திருப்பனந்தாள் என்ற திருத்தலத்தில் மற்றுமொரு திருவிளையாடல் புரிந்தார்.

திருப்பனந்தாள் எனும் சிவத்தலத்தில் தாடகை என்றொரு பக்தை வாழ்ந்து வந்தார். அந்த அம்மையார் நாள்தோறும் திருப்பனந்தாள் பெருமானை குடநீர் சுமந்தாட்டி மலர்மாலை சூட்டி வழிபடும் வழமையுடையவர். பனைமரம் தலமரமாக இருந்த காரணத்தினால் திருப்பனந்தாள் எனப்பெயர் பெற்றது. பாடல் பெற்ற அரிய தலமான இது அம்மையார் அன்றாடம் வழிபடும் தலமானது. அம்மையார் அன்று பெருமானுக்கு மாலை சூட்ட முனைந்தபொழுது அவருடைய சேலை நெகிழ்ந்தது. மாலையைக் கீழே வைப்பதும் முறையன்று, அதேசமயம் சேலையையும் விடவும் முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். அப்போது சேலையைத் தம் இரு முழங்கைகளாலும் பற்றிக்கொண்டு எம்பெருமானுக்கு மாலை சூட்ட முயல்கிறார். அப்போது அம்மையாரின் அன்புக்கு இரங்கிய பெருமான் குனிந்து மாலையைப் பெற்றார். ஆனால் அம்மையாரோ அதைக் கவனிக்காமல் வழிபாட்டை முடித்துவிட்டு கிளம்பினார். அடுத்து வழிபாடு செய்ய வந்தவர்களும், அந்தணரும் பெருமான் சாய்ந்திருப்பதைக் கண்டு பதைத்து நின்றனர். இதனால் ஏதும் கேடு நிகழ்ந்துவிடுமோ என்று அஞ்சியவர்கள் தங்கள் சோழ மன்னரிடம் சென்று முறையிட்டனர். மன்னர் வரவும், மக்களும் கூடினர். எல்லோரும் சேர்ந்து இரும்புச் சங்கிலியால் கட்டி இழுத்து அயர்ந்தனர். யானை, குதிரை என அனைத்தும் கட்டி இழுத்தும் எந்தப் பயனும் இல்லை. அன்பினால் வளைந்த பெருமான் என்பதை உணராது அவர்களும் ஏதேதோ செய்து முயன்று தோற்றனர். இதனைக் கேள்விப்பட்ட குங்கிலியக்கலயனார் திருப்பனந்தாள் செல்ல முடிவெடுத்தார்.

எவராலும் முடியாத ஒன்றை என் தெய்வபலம் முடித்துக்காட்டும் என்ற எண்ணத்தோடெல்லாம் புறப்படவில்லை அவர். மன்னனும், மக்களும் முயன்றும் இயலாமல் போன திருப்பணியில் தானும் இணைந்துகொள்ள எண்ணினார். பெருமான் மீது இருந்த இரும்புச் சங்கிலிகளை அகற்றச் சொன்னார். ஒரு நாறினை எடுத்தவர், ஒரு பக்கத்தை பெருமான் மீதும், மற்றொரு பக்கத்தை தன் கழுத்திலும் இணைத்துக்கொண்டு இழுக்க முயன்றார். அப்போது பெருமான் நேரே நின்றார். நாயனாரோ தாயாக மாறி, பனந்தாள் பெருமானை சேயாக எண்ணினார். இரும்பு சங்கிலி நோகச் செய்யுமே என்று அவற்றை நீக்கினார். அன்பாகிய நாறினைக் கொண்டு இழுக்க முயன்றபோது எம்பெருமானும் நாயனார் கழுத்து அறுபடுமே என்று வருந்தி உடனே நேர் நின்றார்.

நண்ணிய ஒருமை அன்பின்

  நாருறு பாசத்தாலே

திண்ணிய தொண்டர் பூட்டி

  இளைத்த பின் திறம்பி நிற்க

ஒண்ணுமோ கலயனார் தம்

  ஒருப்பாடு கண்ட போதே

அண்ணலார் நேரே நின்றார்

  அமரரும் விசும்பில் ஆர்த்தார்.

நடந்தவைகளைக் கண்டு கொண்டிருந்த சோழ மன்னன் கலயனார் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, மானியங்களும்,  பரிசுகளும் கொடுத்து கௌரவப்படுத்தியவர், திருப்பனந்தாள் ஆலயத்திற்கு திருப்பணிகளும், திருவிழாக்களும் நடத்தினான்.  கலயனார் நாயனாரும் சிலநாட்கள் தங்கி திருப்பனந்தாள் இறைவனை வணங்கி பிரிய மனமில்லாமல் வழிபட்டுப் பின் திருக்கடவூர் வந்து சேர்ந்தார்.

குங்கிலியக்கலய நாயனார் மீண்டும் திருக்கடவூரில் தூபத்திருப்பணி செய்திருக்கும் நாளில் திருஞானசம்பந்த நாயனாரும், திருநாவுக்கரச நாயனாரும் திருகடவூர் வந்திருந்து எம்பெருமான் மீது பாடல்கள் பாடினர். அப்போது குங்கிலியக்கலய நாயனார் மிக்க மகிழ்ச்சி அடைந்து, அவர்களை எதிர்கொண்டு அழைத்து, தமது இல்லத்தில் திருவமுதளித்து மகிழ்ந்தார். குருவருளும் திருவருளும் ஒருங்கே அமையப்பெற்ற குங்கிலியக்கலய நாயனார் இறைவனாருக்கும், அவர்தம் அடியவர்களுக்கும் திருத்தொண்டுகள் பல புரிந்தவர், பலகாலம் வாழ்ந்து சிவனடியை அடைந்து பெறும் பேறு பெற்றார்.

 

குங்குலியக்கலயநாயனார் புராணம் சொல்லும் கருத்து:

​​​​​​​“கடவூரிற் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்” என்றே  திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடியுள்ளார்.

திருக்கோயில்களிலே சிவசந்நிதானத்தில் மெய்யன்போடு சுகந்ததூபம் இடுதல் சிவபுண்ணியமாம்.

பெரும்புலர் காலை மூழ்கிப்

  பித்தற்குப் பத்த ராகி

அரும்பொடு மலர்கள் கொண்டாங்

  கார்வத்தை யுள்ளே வைத்து

விரும்பிநல் விளக்குத் தூபம்

  விதியினால் இடவல் லார்க்குக்

கரும்பினிற் கட்டி போல்வார்

  கடவூர்வீ ரட்ட னாரே.

என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தின் மூலம் அறியலாம்.

தூபம் ஐவகைப்படும் என்பதை,

 “ஐவகைய தூபங்களாவனதாங் குந்துருகந்

 – துய்யபெருங் கருப்பூரந் துன்னியகா ரகில்வெண்மை –

யெய்தியசந் தனமினிய குக்குலுவு மெனவறிக –

நெய்யதனாற் றிருவிளக்கைக் காபிலத்தா னிகழ்த்துகவே!”

என்று சிவதருமோத்தரச் செய்யுள் செப்புகின்றது.

அந்த வகையில் குங்கிலியக்கலய நாயனார் தம் சிவபுண்ணியத்தினால் தாம் மிகுத்த வறுமை எய்தியபொழுதும் இத்திருத்தொண்டைத் தவறாது செய்து வந்து சிவனடியில் கலந்தார்.

விடையவர் வீரட் டானம் விரைந்து

  சென்று எய்தி என்னை

உடையவர் எம்மை ஆளும்

  ஒருவர் தம் பண்டாரத்தில்

அடைவுற ஒடுக்கி எல்லாம் அயர்த்து

  எழும் அன்பு பொங்கச்

சடையவர் மலர்த்தாள் போற்றி இருந்தனர்

  தமக்கு ஒப்பு இல்லார்.

என்று சேக்கிழார் பெருமான் அருளுகிறார்.

திருக்கடவூர் இன்று திருக்கடையூர் என்று அழைக்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது இத்திருத்தலம். மார்கண்டேயருக்காகக் காலனை காலால் உதைத்த அமிர்தக்கடேசுவரரின் ஆலயத்தில் பக்தியோடும், தூய உள்ளத்தோடும் அனுதினமும் தூய மணம் கமழும் குங்கிலியத் தூபமிடும் திருத்தொண்டைச் செய்து இறையடி சேர்ந்தார்.

திருச்சிற்றம்பலம்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.