தாத்தா பாட்டி சொல்லைக் கேளுங்கள்

5

சாந்தி மாரியப்பன் 

கடவுளோட படைப்புகள்லயே ரொம்பவும் அற்புதமான படைப்பு என்ன தெரியுமா?.. மனுஷனைப் படைச்சதுதான்.மத்த படைப்புகளில் இல்லாத ஒரு அற்புதமான சக்தி மனுஷனுக்கு இருக்கு. அதான் பேசும் சக்தி.மற்ற மிருகங்களுக்கும் வாயிருந்தாலும், மனசுல தோணற எண்ணங்களை வார்த்தையால் வெளிப்படுத்தும் திறமை மனுஷனுக்கு மட்டுமே இருக்கு. அப்படிப்பட்ட மனுஷப்படைப்பை ஏந்தான் படைச்சோமோன்னு அந்தக் கடவுளே நொந்துக்கற அளவுக்கு அந்த திறமையை தவறா உபயோகப் படுத்துறதும் கூட மனுஷனோட சிறப்பம்சம்தானோ. 

சில பேர் இருக்காங்க.. நகைச்சுவைங்கற பெயர்ல எப்பவும் மத்தவங்க மனசைப் புண்படுத்தி அதுல சந்தோஷப்படுறதையே வழக்கமா வெச்சிருக்கற ரகம். பொதுவா நகைச்சுவைங்கறது நாமளும் சிரிக்கணும், நாம யாரை அல்லது எதைப் பத்திக் கிண்டல் செய்யறோமோ அவங்களும் சிரிக்கணும். அதான் நல்ல நகைச்சுவை. அப்படியில்லாம ஒருத்தரோட உருவத்தையோ இல்லை அவங்களோட தனிப்பட்ட குணங்களையோ எள்ளல் செய்யறது நிச்சயமா குரூரமானது. சம்பந்தப்பட்டவங்க அழுதுக்கிட்டிருக்கப்ப மத்தவங்க சிரிக்கிறதுங்கறதை நகைச்சுவைங்கற வகையில் சேர்க்கறதை நினைச்சுக் கூட பார்க்க முடியலை. 

இன்னும் சில ரகங்கள் இருக்காங்க. பொதுச்சபையில் எப்போ எதைப் பேசணும்ன்னே ஒரு இங்கிதமில்லாம வார்த்தைகளை வெளியிட்டுடுவாங்க. உதாரணமா, கல்யாணமாகி ஒரு வருசம்தான் ஆகியிருக்கும். அந்தப் பொண்ணைப் பார்த்து,“ஏம்மா..ஏதாவது விசேஷமுண்டா?..”ன்னு கேப்பாங்க. கணவர் வெளி நாட்ல இருக்க, பொண்ணு அம்மா வீட்டுக்கு ஒரு ஆறுதலுக்காக வந்துருக்கும். அதைத் தெரிஞ்சு வெச்சிருந்தாலும், அந்தப் பொண்ணைப் பார்த்து, “ஏம்மா, ரொம்ப நாளா இங்கேயிருக்கியே?.. உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சினையா?”ன்னு கேப்பாங்க. “ஆமா,.. பிரச்சினைதான். இன்னும் அம்பது பவுன் நகை கொண்டாந்தாத்தான் வீட்டுக்கு வரலாம்ன்னு எங்க மாமியார் சொல்லிட்டாங்க. எம்மேல இவ்ளோ அக்கறை காமிக்கிற நீங்க அதைப்போட்டு எங்கூர்ல கொண்டு விடுங்களேன்னு அந்தப் பொண்ணு திருப்பிச் சொன்னா இவங்க நிலை என்ன?. இதெல்லாம் தேவையா?.. எங்க கல்யாணத்துக்கப்புறம் முதல் முறையா ஊருக்குப் போனப்ப, ரெண்டு மாசம் லீவு எடுத்துட்டுப் போனோம். ஊருக்குப் போயிச் சுமார் பத்து நாள்தான் ஆகியிருக்கும். என் கணவரைப் பார்த்து ஒரு உறவு, “என்னப்பா?.. தொடர்ந்தாப்ல பத்து நாளா ஊர்ல இருக்கியே, வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்துட்டியா..”ன்னு கேட்டது. அடப்பாவிகளா..ன்னு நொந்துட்டோம்.

“இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று” ன்னு இப்படிப்பட்ட ஆட்களுக்காகத்தான் வள்ளுவர் பாடி வெச்சிருக்காரோ என்னவோ!!. ஒண்ணும் புரியலை போங்க 🙂 

அதே மாதிரி, மறந்தும் மத்தவங்க கிட்ட ஒரு இன்சொல் சொல்லாம எப்பவும் சுடுசொற்களால் அபிஷேகம் செஞ்சுக்கிட்டிருக்கறவங்களும் உண்டுதான். ஒரு சொல்லால பிரிஞ்ச குடும்பங்களும் உண்டு, இணைஞ்ச குடும்பங்களும் உண்டு. இதைத்தானே “ஒரு சொல் வெல்லும்,.. ஒரு சொல் கொல்லும்”ன்னு சொல்லி வெச்சிருக்காங்க. நாலு நல்ல வார்த்தை சொல்றதால மனுஷங்களுக்கு என்ன நட்டம் ஆகிடப் போகுதுன்னே புரிய மாட்டேங்குது. 

சொல்லால அவமதிக்கிறது ஒரு வகைன்னா, செயலால அவமதிக்கிறது இன்னொரு வகை. இப்ப,.. நல்ல நாளும் அதுவுமா நீங்க உங்க நண்பர் வீட்டுக்குப் போறீங்கன்னு வெச்சுக்குவோம். அட!.. இதோ,.. காணும் பொங்கல் வருது. அன்னிக்கு ஃப்ரெண்ட் வீட்டுக்கு ஒரு விசிட் அடிக்கலாமேன்னு குடும்பத்தோட போறீங்க. ஒரு ஃப்ரெண்டு வீட்ல உங்க தலையை வாசல்ல கண்டதுமே, அந்த வீட்டுப் பையன், “அப்பா,..நாராயணன் மாமா வந்துருக்கார்”ன்னு சொன்னதும், உங்க ஃப்ரெண்டு ஓடி வந்து,.. ”வாடா மாப்ளே..”ன்னு கையைப் பிடிச்சுட்டு வர்ற உங்க பையனைக் கொஞ்சிட்டு, “வாம்மா..”ன்னு உங்க தங்க்ஸையும் வாய் நிறைய அழைச்சு வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போறார். வீட்டுக்குள்ள போனதும், அவங்க தங்க்ஸும் கலகலன்னு அன்பா உபசரிக்கிறார். இருந்து சாப்பிட்டுட்டுத்தான் போகணும்ன்னுட்டு அவங்க தங்க்ஸ் நிமிஷத்துல விருந்துச் சாப்பாட்டைத் தயாரிச்சுடறாங்க. நேரம் போறதே தெரியாம உக்காந்து சந்தோஷமாப் பேசிச் சிரிச்சு பொழுதைக் கழிக்கிறீங்க. 

சரி,..வீட்டுக்குக் கிளம்பலாம்ன்னு திரும்பி வந்துட்டிருக்கறப்ப அதே ஏரியாவுல இருக்கற இன்னொரு ஃப்ரெண்டு வீட்டுக்கும் போயி வாழ்த்திட்டு வந்துடலாமேன்னு நினைச்சு அங்கியும் போறீங்க. நீங்க வர்றதைப் பார்த்தும் பார்க்காத மாதிரி அந்த வீட்டு வாண்டு வாசல்ல விளையாடிட்டு இருக்குது. உள் தாழ்ப்பாள் போட்டிருக்கற கம்பிக் கதவை நீங்களே திறந்துட்டு உள்ள வர்றதைப் பார்த்தும் கவனிக்காத மாதிரி குடும்பமே டிவியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்ல மூழ்கியிருக்குது. திடீர்ன்னு, அப்பத்தான் உங்களைக் கவனிச்ச மாதிரி உங்க ஃப்ரெண்டு வெளியே வந்து, “வாங்க..”ன்னு ஒப்புக்கு பொத்தாம் பொதுவாச் சொல்லிட்டு உள்ளே போயிடறார். நீங்களும் தொடர்ந்து வீட்டுக்குள்ள போறீங்க. 

உள்ளே, வீட்ல மொத்தப் பேரும் டிவி நிகழ்ச்சியோட சுவாரஸ்யத்துல மூழ்கியிருக்காங்க. நீங்க இந்த நேரத்துல வந்ததை அவங்க விரும்பலைங்கறதை அவங்க முகமே காட்டிக் கொடுக்குது. பொங்கல் பண்டிகையின் தாத்பரியத்தைப் பத்தி, வட நாட்டு நடிகை, “என்க்கூ பொங்கள் ரோம்ப ப்டிக்கும். ஆக்சுவலி நானு தீவ்லி அன்னிக்கும் பொங்கள் சாப்டும்”ன்னு சிலாகிச்சுப் பேசற தத்துவ முத்துகளைக் கேக்கறது தடங்கல் பட்டுப் போச்சேன்னு வேண்டா வெறுப்பா எழுந்து போயி, கடனேன்னு சீனி போட்ட வெந்நீர்த் தண்ணியை ‘டீ’ங்கற பேர்ல கொண்டாந்து டீபாய்ல கொஞ்சம் சிதறி விழுறபடிக்கு வெச்சுட்டுப் போறாங்க அவங்க தங்க்ஸ். அங்கேயிருக்கற மொத்த நேரமும் நீங்க மட்டும்.. நீங்க மட்டுமே பேசிக்கிட்டிருக்கறீங்க. அதை டிவியில் பாதிக் கவனமும், உங்க கிட்ட பாதிக் கவனமுமா கேட்டுட்டிருக்காரு உங்க நண்பர். 

இடைக்கிடையே, உங்க பேச்சுக் குரல் தனக்கு இடைஞ்சலா இருக்குன்னு சொல்லிக் காட்டுற மாதிரி உச்சுக் கொட்டிக்கிட்டேயிருக்காங்க அந்த வீட்டுப் பெரியவங்க. நல்லவங்களுக்கு அடையாளம் சொல்லிக்காமக் கிளம்புறதுதான்னு, நீங்க கிளம்புறப்ப, ‘சரி’ன்னு ஒத்தை வார்த்தையில் தலையாட்டிட்டு மறுபடியும் டிவியில் மூழ்கிடறாங்க. அதுக்கு மேலும் நீங்க அங்க நிப்பீங்களா என்ன??  

இப்ப சொல்லுங்க,.. இந்த ரெண்டு வீடுகள்ல எந்த வீட்டுக்கு அடிக்கடிப் போகணும்ன்னு தோணும்?.. உங்க கருத்தை விட்டுத் தள்ளுங்க. உங்க ஃப்ரெண்ட் எது செஞ்சாலும் அதுல ஒரு நியாயம் இருக்குன்னு நட்பைப் பெருசா நினைக்கிற “நண்பேண்டா”. அதுவே, உங்க குடும்பத்தாரைக் கேட்டுப் பாருங்க. நிச்சயமா முதல்ல போன ஃப்ரெண்டு வீட்டுக்குத்தான் அவங்க ஓட்டுப் போடுவாங்க. வீட்டுக்கு வந்தவங்களை அதுவும் நல்ல நாளும்  அதுவுமா குடும்பத்தோட வந்துருக்கறவங்களை ‘ஏன் வந்தே?’ன்னு சொல்லாம சொல்ற மாதிரி நடந்துக்கறவங்க வீட்டு வாசப்படியை மிதிக்காம இருக்கறதே நல்லது. இதைத்தான் நம்ம முன்னோர்கள், ‘மதியார் தலைவாசல் மிதியாதே’ன்னு சொல்லி வெச்சுட்டுப் போயிருக்காங்க. 

கோடி ரூபா கொடுத்தாக் கூட உன்னை மதிக்காதவர் வீட்டுக்குப் போகாதே,  அவங்க அன்பில்லாம கொடுக்கறது அமிர்தமேயானாலும் அதைச் சாப்புடாதேன்னு நம்ம நாவப்பழப் பாட்டி, அதாங்க ஔவையாரே பாடி வைக்கலையா,..

“மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று

மிதியாமை கோடி பெறும்.

உண்ணீருண் ணீரென் உபசரியார் தன்மனையில்

உண்ணாமை கோடி பெறும்”ன்னு சொல்லி வெச்சிருக்காங்க.

ஏன்னா,.. அவங்களும் அப்படித்தான் ஒருத்தர் வேண்டா வெறுப்பா ஒப்புக்காகக் கொடுக்கறதை சாப்புட மாட்டாங்க. மீறிச் சாப்பிட நேர்ந்தா அவங்க மனநிலை எப்படி இருக்கும்ங்கறதையும் சொல்லி வெச்சிருக்காங்க.

“காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே

மாணொக்க வாய்திறக்க மாட்டாதே – வீணுக்கென்

என்பெல்லாம் பற்றி எரிகின்ற தைய்யையோ

அன்பிலாள் இட்ட அமுது.” 

இது ஔவையாருக்கு மட்டுமல்ல, நமக்கும் பொதுவானதுதான். “‘வா’ன்னு ஒரு வார்த்தை சொல்லலை பார்த்துக்கோ. இனிமே அவன் வீட்டுப் படியை மிதிப்பேனா?.. செத்தாலும் மிதிக்க மாட்டேன்..”ன்னு எத்தனை பேர் வீரசபதம் எடுத்திருப்போம். எத்தனை விஷேச வீடுகள்ல, “சாப்பிடுன்னு ஒரு வார்த்தை சொல்லலை”ன்னுட்டு உறவுகளுக்குள்ளே சண்டைகள் நடக்கறதைப் பார்த்திருப்போம். 

இதெல்லாம் எதுக்குங்க?..தேவையா?. மனுஷனாப் பிறந்தவர்கள் ஒருத்தரையொருத்தர் மதிக்கவும், அன்பா நடத்தவும் தெரிஞ்சுக்கணும். எடுத்திருக்கறது ஒரு பிறவி. அடுத்த பிறவின்னு உண்டா இல்லியான்னே மொதல்ல யாருக்கும் தெரியாது. அது அவங்கவங்க தனிப்பட்ட நம்பிக்கைகள். அப்டியே இன்னொரு பிறவி எடுத்தாலும், மறுபடியும் இதே உறவு முறைகளோடப் பிறப்போம்ன்னோ ஒருத்தரையொருத்தர் சந்திச்சுக்குவோம்ன்னோ நிச்சயமில்லை. அப்றம் எதுக்காக ஒருத்தரையொருத்தர் தேவையில்லாம காயப்படுத்திக்கணும். 

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்”ன்னு வள்ளுவர் தாத்தா பாடி வெச்சுருக்கறதைப் பின்பற்றி நம்மை மதிக்காதவங்களா இருந்தாலும், இந்த நல்ல நாளும் அதுவுமா நம்ம வீட்டுக்கு வந்தா, அவங்களையும் நல்லபடியா நடத்துவோம். பழையன கழிக்கும் போகிப் பண்டிகையில் பொறாமை, போட்டி மனப்பான்மை, கெட்ட எண்ணங்கள்ன்னு எல்லாத்தையும் எரிச்சுட்டு, புதியன பெருகும் பொங்கல் பண்டிகையில் சந்தோஷங்களை மட்டுமே பொங்க வைப்போம். 

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 🙂

 

படத்திற்கு நன்றி: http://salasalappu.com/?p=46559

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “தாத்தா பாட்டி சொல்லைக் கேளுங்கள்

  1. நன்றாகச் சொன்னீர்கள். மனித உறவின் அருமைகளை புரியாதவர்களைக் கண்ணுறும் போதெல்லாம் மனம் பதைக்கிறது. பொங்கல் வாழ்த்தாக தங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ! அதே சமயம், பேச்சுத் தமிழில் எழுதியிருந்தாலும், “பிறப்போம்ன்னோ “, “எண்ணங்கள்ன்னு ” என்றெல்லாம் வார்த்தைகள் வருவது நெருடுகிறது.. கவனத்தில் கொள்வீர்களா? தங்களை குறை சொல்வது என் நோக்கமில்லை. இருப்பினும், மனதில் பட்டதை சொல்வதில் தவறில்லையல்லவா?

  2. சகோ,

    விமரிசனங்கள்தான் ஒரு படைப்பாளியை இன்னும் செம்மைப்படுத்தும் ஆகவே, தங்கள் கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்தமைக்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

    எழுதப்படும் கட்டுரைகளை வல்லமையில் கட்டுரைத் தமிழிலும், என்னுடைய வலைப்பூவில் வழக்குத் தமிழிலும் வெளியிடுவது வழக்கம். 

    http://amaithicchaaral.blogspot.com/2012/01/blog-post_15.html

    இந்த முறை பரிசோதனை முயற்சியாக, இங்கேயும் வழக்குத் தமிழிலேயே வெளியிட்டேன். அவ்வளவே. அதே சமயம் சோதனைகள் தொடராது என்பதால் தமிழ் தப்பித்துக் கொண்டது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் 🙂

  3. சாந்தி மாரியப்பனுக்கு ,என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்,மனோதத்துவமான கதை ,ஒருவர்க்கு கேலி மற்றவருக்கு ,அது வேதனை ,
    இதயமற்ற மனிதருக்கு,இது வாடிக்கை தானே,விருந்தோம்பலை மிக அழகாக உங்கள் கைகளால் செதுக்கபட்டிருக்கிறது,வாழ்த்துக்கள்.***தேவா***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *