உத்தியோகம் பெண்கள் லட்சணம்-வசுந்தரா

0

மலர்சபா

வாசலில் விசாலமான திண்ணை. அங்கிருந்த பிரம்பு ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் வசுந்தரா. நடந்ததை எண்ண எண்ண அலுப்பாயும் இருந்தது. களைப்பாயும் இருந்தது.

“போதும் பாப்பா.எந்திரிச்சு உள்ள வா. ஆஸ்பத்திரிலருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்து ஒரு நாள் கூட ஆகல. பனி வேற கொட்டுது. சீக்கிரம் உள்ள வா..”

சொன்னதோடு நிற்காத ருக்மணி, அவளைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக, உள்ளே அழைத்துக்கொண்டு போய் வரவேற்பறை சோபாவில் அமர வைத்து விட்டுத் தொலைக்காட்சியை இயக்கினாள்.

“கண்ட கருமத்தையும் நெனக்காம ஆகுற வேலையைப் பாரு. நாசமாப் போறவனுங்க…வேற வேலயே இல்லாத போக்கத்த பயலுக… காபி கொண்டாரட்டா?”

“இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சுக் குடு ருக்கு. இப்போ வேண்டாம்..” சோபாவில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள் வசுந்தரா.

ருக்கு பணிப்பெண் மட்டுமல்ல..வசுந்தராவுக்குத் தூரத்து உறவு..வசுந்தராவின் அப்பா அம்மா இறந்து விட்டார்கள்; தம்பி குடும்பத்துடன் ஹைதராபாத்தில் இருக்க, தங்கை தன் குடும்பத்துடன் சென்னையில் இருக்கிறாள்.

ருக்குவின் கணவன் இறந்துவிட, அவள் மகள் சென்னைக் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கிப் படிக்கிறாள்.இருவரும் ஒருவருக்கொருவர் துணை

மதுரையில் புகழ் பெற்ற கல்லூரி ஒன்றில் துணை முதல்வர் பொறுப்பு வசுந்தராவுக்கு. இயற்பியல் துறையில் விரிவுரையாளராகத் தன் பணியைத் துவங்கி, தற்போது துணை முதல்வர் பதவி.

அப்பா, அம்மா இறந்த போது தம்பி தங்கையின் வாழ்க்கைப் பொறுப்பு இவள்தம் கடமையாகிப் போக, பொருந்திய வயதில் திருமணத்தைத் தள்ளிப் போட்டாள். திருமணம் செய்ய நினைத்த போது, காலமும் கடந்து விட, அதில் ஆர்வமும் இன்றி இந்த வாழ்க்கை பழகிப் பிடித்துப் போய் விட்டது.

மறக்க முயன்றவுடன் நினைவுகள் மட்டும் மறைந்து விட்டால்தான் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஒருவேளை அப்படி இருந்தால் அதுவும் வெறுமைதானோ?! நீண்ட பெருமூச்சுடன் மீண்டும் அச்சம்பவத்தை அசை போடலானாள் வசுந்தரா..

சென்ற வாரம் ஒரு நாள் கல்லூரிக்கு வழக்கம் போலவே சென்றாள். முதல்வர் நீண்ட விடுமுறையில் சென்றதால், இவளுக்குப் பணிச்சுமை அதிகம்.

வழக்கம்போலவே வழியில் வந்த மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் முகமன் கூறிச் செல்ல, புன்சிரிப்புடன் தலையை அசைத்தவள், அவர்கள் முகங்களில் காணப்பட்ட ‘அய்யோ..பாவம்..’ என்ற ரீதியிலான குறிப்பைக் கவனிக்கவில்லை.

அறையில் நுழைந்து, கணினியை இயக்கி, கல்லூரியின் தளத்துக்குச் சென்று, மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தவளுக்கு அதிர்ச்சி. அசிங்க அசிங்கமான கார்ட்டூன் பட இணைப்புகளுடன், அவளையும் ரவியைப் பற்றியும் ஆபாசத் தகவல்கள்..

ரவி எம்.ஃபில் ஆராய்ச்சி மாணவன். அவன் ஆராய்ச்சி முடியும் தருவாயில் இருக்க, அடிக்கடி கல்லூரியில் லேபிலும், நூலகத்திலும், அவள் அறையிலும், அவள் வீட்டிலும் அடிக்கடி சந்திப்புகள் நிகழ்வதுண்டு. ரவி மட்டுமல்ல, இன்னும் இரு மாணவிகளுக்கும் அவள் கைடுதான். ஒவ்வொரு வருடமும் இது போன்ற மாணவ மாணவியர்க்குக் கைடாக இருக்கும் பொறுப்பு வரும்தான்..

மிகவும் கண்டிப்பானவள் வசுந்தரா..3 மாணவர்கள் சஸ்பென்ட், 2 ஆசிரியர்களுக்கு மெமோ என்று வழக்கமாக அந்தக் கல்லூரியில் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டதால், இந்தத் தண்டனையா? யார் இப்படிச் செய்திருப்பார்கள்?

கல்லூரித் தளத்தின் பாஸ் வேர்டைக் கூட ஹேக் செய்திருக்கிறார்களே.. காலம் மாறினாலும் வக்கிரங்கள் மாறவில்லை…நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் நவீன வக்கிரம்….

அய்யோ..மின்னஞ்சல் யார் யாருக்குப் போகுமோ…அவள் அதிர்ச்சியில் குழம்பிக்கொண்டிருக்க,

“மே ஐ கம் இன், மேடம்?” சக ஆசிரியை மஞ்சுளாதான்.

“யெஸ்..வாங்க மஞ்சுளா..”சுதாரித்துக்கொண்டு தண்ணீரை எடுத்துக் குடித்தாள் வசுந்தரா.

“நானும் பார்த்தேன் மேடம். வெரி ஸாரி..”

“என்ன பாத்தீங்க..எதைப் பத்திப் பேசுறீங்க..”நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. குடித்த தண்ணீர் மொத்ததையும் மீறி மீண்டும் நாக்கு வற்றி விட்டது..

“நம்ம காலேஜ் சுவத்துல, கண்ட கண்ட இடத்துல எழுதி வச்சுருக்காங்க..”

அய்யோ இது வேறயா..”என்ன எழுதிருக்கு..”

“அது வந்து மேடம்…உங்களையும் ரவியையும் பத்தி…” அவள் செல்லாமலே எல்லாம் புரிந்தது.

என்ன கருமம் இது..அப்பா ஊட்டிய தைரியம் எல்லாம் நொடிப்பொழுதில் எங்கே போனது? பள்ளிக்காலத்தில், பஸ்ஸில் சில்மிஷம் செய்த ஒருத்தனை அத்தனை பேரும் வேடிக்கை பார்க்கத் தைரியமாய்க் கை நீட்டி அடித்த வசுந்தரா,

கல்லூரி மாணவியாய் இருந்த போது, இவளைப் பற்றித் தாறுமாறாக மைதானச் சுவற்றில் எழுதியிருக்க, கரித்துண்டைக் கொண்டு ‘போடா பொறுக்கி, தைரியம் இருந்தால் நேரில் வந்து எழுதுடா..” என்று எழுதிய வசுந்தரா,

அதிர்ச்சியின் அடிகள் தாங்காமல், அவமானம் தாங்காமல், இரத்தக் கொதிப்பு ஏறி, மயங்கி விழுந்து……

“இந்தா பாப்பா…காபி குடி…ராத்திரிக்கு என்ன சமைக்க..”

“சப்பாத்தியும் ஏதாவது குழம்பும் பண்ணு ருக்கு..கொஞ்சம் காரமாப் பண்ணு ..ஆஸ்பத்திரி டயட்ல நாக்கே செத்துப் போச்சு…”

சர்க்கரை வியாதியும் இருப்பதால், சர்க்கரை இல்லாத காபி..அதை உறிஞ்சியபோது தோன்றியது..வயசுக் காலத்தில் போதுமான சர்க்கரை இல்லாவிட்டால் குடிக்கவே முடியாது..இப்போது சர்க்கரையே இல்லை..அது அப்போதைய பழக்கம்..இப்போது ஆரோக்கியம் வேண்டி இப்போது பழகிக் கொள்ள வேண்டிய கட்டாயம் …

ம்ம்ம்….வயசுக்காலத்தில் பதவிகள் இல்லை..பொறுப்புகளும் இல்லை..தட்டிக் கேட்க முடிந்தது உடனுக்குடன்..இப்போது? உயர்ந்த பதவி..அது தந்த பொறுப்பு….அவள் மானத்தைப் பங்கப் படுத்தியவர்களைத் தேடிப்பிடித்து உடனடியாகத் தண்டிக்கும் அதிகாரம் வேகம் எல்லாம் உண்டு, என்றாலும் பொறுப்பான பதவிக்காய்க் கடைப்பிடிக்க வேண்டிய நிதானங்கள்..எல்லைகள்…வேகங்களைக் கட்டுப் படுத்தத்தான் செய்கின்றன..

ஆடிப்போய்விட்ட ரவியின் பெற்றோரைச் சமாதானப்படுத்த…

மாணவ மாணவியர் மத்தியில் சகஜ நிஐயைத் துரிதமாக மீட்டெடுக்க.

எல்லாவற்றுக்கும் மேலாகக் கல்லூரியின் பெயர் அளவுக்கதிகமாய் ஊடகங்களில் அடிபடாமல் பாதுகாக்க…..

வாழ்க்கையும் சர்க்கரை இல்லாத காபி போலத்தான்..சூழலின் ஆரோக்கியம் கருதி, பிடிக்கிறாதோ பிடிக்கவில்லையோ காம்ப்ரமைஸ் செய்து கொண்டு போக வேண்டிய கட்டாயம்.

மெதுவாகப் புன்னகைத்தபடி, செல்பேசியை எடுத்து ரவிக்குச் சுழற்றினாள்..”ரவி..கடைசி சாப்டெர் பத்தி டிஸ்கஸ் பண்ணனுமில்ல … நாளைக்குக் காலைல 11 மணிக்கு வீட்டுக்கு வந்துடு..” என்றாள் வசுந்தரா..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *