முருகன் வரவிலே..
செண்பக ஜெகதீசன்
இடரும் பகையும் விலகிடுமே -நம்
இறைவன் முருகன் வரவினிலே,
சுடராய் ஒளிரும் பேரழகே -கொடும்
சூரனை வென்றிடும் வேலழகே..
–இடரும்..
கடற்கரை செந்தில் சுடரொளியே -நம்
கந்தக் கடவுள் அருளொளியே,
இடரினை அகற்றிடும் இன்னமுதே -வான்
இந்திரன் மருகன் சுந்தரனே..
–இடரும்..
வள்ளிக் கணவா வேல்முருகா -எம்
வாட்டம் போக்கிடும் மால்மருகா,
அள்ளி அருள்தரும் வள்ளலோனே -நம்
அன்னை உமையவள் பாலகனே..
–இடரும்..
தினம்தினம் விழாவரும் செந்தூரிலே -உனைத்
தேடி வந்திடில் நலம்வருமே,
வனத்தினில் வள்ளி மணவாளா -உனை
வணங்கிடில் வராதே பேரிடரே..
–இடரும்..
வரவர அருள்தரும் திருமுருகா -உனை
வழிபட வந்திடும் திருவருளே,
சிரமது ஆறுடை சிவன்மகனே -உனை
சிந்தையில் கொண்டே சிறப்படைவோம்..
முருகா உனை
சிந்தையில் கொண்டே சிறப்படைவோம்..
–இடரும்..
படத்துக்கு நன்றி
http://www.halfbakery.com/idea/Peacock_20Hair_20Fanning_20Clip
இறையருள் பொங்கும் நல்லதொரு கவிதை. வாழ்த்துக்கள் ஐயா!
அன்புக்கினிய இளங்கோ
அவர்களின் பாராட்டுரைக்கு
அளவிலா மகிழ்ச்சி…!
நன்றியுடன்,
-செண்பக ஜெகதீசன்…