விருதுநகர் தந்த விருது
முகில் தினகரன்
கர்ம வீரரே!
கருப்பு காந்தியே!
சொந்த நலனைச் சுட்டெரித்துவிட்டு
இந்திய நலனைச் சிந்தையில் தேக்கிய
சிவகாமிச் செல்வரே!
நீர் விருதுநகர் உலகுக்களித்த
விலையிலா விருது!!
கல்வித்தாயின் கடைக்கண் பார்வை
உமக்குக் கிட்டாத உள்ளார்ந்த தவிப்பிற்காய்
கன்னித் தமிழ் நாட்டையே கல்விக்களமாக்கி
வியப்புக்குறியையே வியக்க வைத்த
வித்தைக்காரரய்யா நீவிர்!!
பள்ளிக்குச் செல்லாமலேயே
பாடத்திட்டத்தில் இடம் பிடித்த
ஆச்சரியக்குறியின்
அருஞ்சொற் பொருளய்யா நீவிர்!!
இந்திய மகுடம் இன்னாருக்கென்பதை
இங்கிருந்தே தீர்மானித்த
மன்னாதி மன்னரய்யா நீவிர்!!
ஆடு மேய்க்கும் சிறுவருக்கும்
ஆத்திச்சூடியை அரங்கேற்றி
மதிய உணவு மழையில் அவர்தம்
வறுமைத்தீ அணைத்த
ஏழைப் பங்காளனய்யா நீவிர்;!!
நதிகளைத் தடுத்துக்கட்டி
நாட்டினுள் திருப்பிவிட்ட
நன்னம்பிக்கை முனை நீவிர்
விதிகளைத் திருத்தியெழுதி
ஏழை வீடுகளில் வெளிச்சமிட்ட
தன்னம்பிக்கைத் திலகம் நீவிர்!!
படிக்காதவர்தான்
சுரண்டலை…சுயநலத்தை
வன்முறையை…வர்க்க பேதத்தை
படித்தவர்தான்
சத்தியத்தின் தத்துவத்தை
உண்மையின் உன்னதத்தை!!
கருத்திருக்கும் உடலுனக்கு…
நல்ல கருத்திருக்கும் உள்ளமுனக்கு!!
கதராடை உன்றன் உடலணைக்கும்
கதறுகின்ற ஏழையை உன்றன்
உள்ளமணைக்கும்!!
அதிகம் பேச மாட்டீர;…அதனால்
அதிகம் பேசப்பட்டீர;!!
ஆகட்டும் பார்ககலாம் என
அமைதிப்பரணி பாடி
அகிலம் விட்டு அகன்று விட்டீர;…
என்று வருவீர்?
இன்னொரு அவதாரமெடுத்து!!
படத்திற்கு நன்றி :
http://nadarsanghamkarnataka.blogspot.in/2011/01/blog-post.html