சீனா, கஜகஸ்தானில் மன்மோகன் சிங்
பிரிக்ஸ் நாடுகளின் 2011 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், 2011 ஏப்ரல் 12 அன்று சீனா சென்றார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்குப் பின் பிரதமர் கஜகஸ்தான் நாட்டிற்குச் செல்லவுள்ளார்.
பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், சீனா மற்றும் கஜகஸ்தான் நாட்டிற்கு மேற்கொள்ளும் பயணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சீனா, கஜகஸ்தான் நாடுகளுக்கு 2011 ஏப்ரல் 12 அன்று பயணிக்கிறேன். சான்யா நகரில் சீனக் குடியரசுத் தலைவர் திரு. ஹூ ஜிண்டா ஏற்பாடு செய்துள்ள பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டில் பங்கேற்கவுள்ளேன். 2009ஆம் ஆண்டு தொடங்கிய இந்த அமைப்பின் 3ஆவது மாநாடு, இது. இம்மாநாட்டில் தென்னாப்பிரிக்கா முதல் முதலாக கலந்துகொள்வது வரவேற்புக்குரியதாகும்.
உலகப் பொருளாதாரப் பங்களிப்பு குறித்து பிரிக்ஸ் தலைவர்களுடன் விரிவான பேச்சு வார்த்தை நடத்தும் சூழலை எதிர்நோக்கியுள்ளோம்.
இன்றைய பிரிக்ஸ் நாடுகள் ஜி-20 அமைப்பிலும், ஐ.நா. பாதுகாப்பு சபையிலும் அங்கம் வகிக்கின்றன. இந்த ஒவ்வொரு அமைப்பிலும் இவர்கள் கொண்டுள்ள பணி அனுபவம், ஓர் இணக்கமான சூழலை உருவாக்கும். ‘பறந்த நோக்கும் வளங்களை பகிர்தலும்’ என்பதே இம்மாநாட்டின் மையப் பொருளாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சான்யாவில் தங்கியிருக்கும் போது, சீனக் குடியரசுத் தலைவருடன் தாம் மேற்கொள்ள இருக்கும் சந்திப்பை எதிர்நோக்கியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கஜகஸ்தான் அதிபர் திரு. நூர்சுல்தான் நசர்பெயிவ் அழைப்பின் பேரில் பிரதமர் கஜகஸ்தான் செல்வது முதலாவது பயணமாகும்.
====================================================
தகவல்: பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை
படத்திற்கு நன்றி: விக்கிப்பீடியா

அவருக்கு வேறு வேலையில்லையா? கஜகஸ்தான் போக வேண்டிய அவசியம்தான் என்ன?